Friday 24 November 2017

கட்டுரை: புதுக்கவிதை- ஒரு வரலாற்றுப்பார்வை




பாரதிக்குப்பிறகு தனி வளர்ச்சி காட்டிய வசன கவிதை சிலரின் முயற்சியோடு குன்றி 1940களுக்கப்பிறகு ஒரு தேக்க நிலையை எய்திருந்தது. பல வருடங்களுக்குப்பின் “எழுத்து”இலக்கிய ஏடு தொடங்கியதும் புதுக்கவிதை புத்துயிர்ப்பும்,புது வேகமும் பெற்று ஓங்கி வளர்ந்தது.

புதுக்கவிதை என்ற பெயர் அனேகருக்கப்பிடிக்காத சொல்.இதன் உருவத்தையும் ,உள்ளடக்கத்தையும் பார்த்துக்குழப்பம் அடைகிறவர்கள் பலர்.
தமிழ்க்கவிதையில் மலர்ச்சி பெற்ற இப்புதுமைக்கு “புதுக்கவிதை” எனும் பெயர் 1960களில்தான் சேர்ந்தது. New poetry, Modern poetry  என்றும் ஆங்கிலத்தில் கூறப்படுவதை ஒட்டி,தமிழில் புதுக்கவிதை என்ற பெயர் இம்முயற்சிக்கு இடப்பட்டது.

எனினும் ஆரம்பத்தில் யாப்பு முறைகளுக்குக்கட்டுப்படாமல் கவிதை உணர்வுகளுக்கு சுதந்திரமான எழுத்து உருவம் கொடுக்கும் இப்படைப்பு முயற்சி வசன கவிதை என்றே அழைக்கப்பட்டது.பின்னர் யாப்பில்லாக்கவிதை,இலகு கவிதை ,கட்டிலடங்காக்கவிதை (Free verse) போன்ற பெயர்களை இது அவ்வப்போது தாங்க நேரிட்டது.

புதுக்கவிதை என்பதில் மிரட்சிக்கோ பரிகாசத்திற்கோ குழப்பத்திற்கோ எதுவும் இடம் இல்லை. முன்பு பழக்கத்தில் இருந்துவருகிற- மரபு ரீதியாக அமைந்த ஒன்றிலிருந்து மாறுபட்டு (அல்லது அதை மீறித்)தோன்றுவது புதுசு.(புதிய) மரபு ரீதியான,யாப்பு இலக்கணத்தோடு ஒட்டிய கவிதைகளிலிருந்து மாறுபடும் இக்கவிதைப்படைப்பு புதுக்கவிதை எனப் பெயர் பெற்றது பொருத்தமே ஆகும். பாரதி தனது எல்லாக்கவிதைகளையும் புதுக்கவிதை என்றே குறிப்பிடுகிறார்.

சுவை புதிது,பொருள் புதிது,வளம் புதிது,
சொற் புதிது,சோதிமிக்க
நவ கவிதை” 

என்று பாரதியார் தன் கவிதைகளைப்பற்றிப்பெருமையோடு பேசுகிறார்.
பாரதிக்குப்பிறகு புதுக்கவிதை முயற்சியில் ஆர்வத்துடன் முதன் முதலாக ஈடுபட்டவர் ந.பிச்சமூர்த்திதான்.

“சம்பிரதாயமான யாப்பு முறைகளுக்கு உட்படாமல்  கவிதையைக்காணும் புதுக்கவிதை முயற்சிக்கு யாப்பு மரபே கண்டிராத வகையில் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் எழுதிய ‘புல்லின் இதழ்கள்’ என்ற கவிதைத் தொகுப்புத்தான் வித்திட்டது.அதைப்படித்த போது கவிதையின் ஊற்றுக்கண் எனக்குத்தெரிந்தது.பின்னர் பாரதியின் வசன கவிதையை படிக்க நேர்ந்தது.  என் கருத்து வலுவடைந்தது.இவற்றின் விளைவாக என் உணர்ச்சிப்போக்கில் கவிதைகளை எழுதினேன் என ந.பிச்சமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு அதற்கும் அணி அலங்காரம் உண்டு. அதற்கும் தளையுண்டு, மோனையுண்டு. செய்யுள் எழுதுவதைக்காட்டிலும்  வசன கவிதை எழுதி வெற்றி பெறுவது சிரமம். செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைக்கும் ஒர் இசை இன்பத்தை ஊட்டி விடும். ஆனால் வசன கவிதையின் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் சொல்லில் தட்டினால்தான் கொஞ்சமாவது கவர்ச்சி கொடுக்கும்.சொல்லில் கவிதையின் அம்சம் இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது.வெறும் வசனம்தான்.

இந்த முறையில் வசன கவிதையைத்தமிழில் முதன் முதலாக கையாண்டவர் சுப்ரமணிய பாரதிதான். ‘காட்சிகள்’ என்று அவர் எழுதியிருக்கும் சித்திரங்களைப்படிப்பவர்கள் வசனம் எதுவொன்றும் வசன கவிதை எதுவென்றும் தெளிவாக அறியலாம்.எட்வெட் கார்ட்பெண்டரும்,வால்ட்வில்ட்மனும் ஆங்கிலத்தில் பெற்ற வெற்றிக்குப்பிறகு பாரதியே தமிழில் வெற்றி பெற்றான் என்பது மறுக்கவியலா யதார்த்தம்.

கவிதைக்கும் வசனத்திற்கும் உள்ள வித்தியாசம் உருவத்தினாலேயே ஏற்படுகின்றது என்பது பலரின் கருத்து. அக்கருத்தை மறுதலிக்கிறது எதிர்க்கட்சி.தத்துவ ரீதியாகப்பார்த்தால் மனிதனிடம் பல படிகள் இருக்கின்றன. ஊண்,உறக்கம்,புணர்ச்சி இவை ஒரு படியைச்சார்ந்தவை. உடல் அவைகளுக்கு வேர்.இவைகளைப்பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவது உள்ளம்.அது ஒரு படி.

இச்செய்கைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட உலக இரகசியத்தை அறியத்துடித்து நிற்கும்  அறிவு வழி ஒன்று உண்டு.உணர்ச்சி வழியும் ஒன்றுண்டு.வசனத்தின் வழி அறிவு நிலை சார்ந்தது.கவிதையின் தர்க்கப்பாதை உணர்விலேயே ஒடும். அறிவின் வரம்பை மீறி வசனம் போகுமானால் அந்த நிமிசத்திலேயே அது கவிதையாகி விட்டது என்று நிச்சயிக்கலாம். 

“தீ இனிது” என்று பாரதி சொல்கிறான்.இனிது என்ற சொல் ருசியைசார்ந்தது. ‘தீ சுடும்’ என்பது வசனம். தீ இனிது என்பது கவிதை.உவமைப்போல் உணர்விடம் பேசுமானால் கவிதை பிறந்து விடும்.
இதனை கம்பனிடமும் காணலாம்.

“அமுதம் நிறைந்த பொற்கலசம்
இருந்தது இடை வந்து எழுந்த தென
எழுந்த தாழி வெண் திங்கள்.”

இதை வசனம் என்று நோக்கினால் பொற் கலசம் கடலில் மிதக்குமோ ? நினைத்த போது கடலில் அது எழுந்து வருமோ என்ற ஐயங்கள் எழும்.இந்த வார்த்தைகள் உணர்ச்சியின் வெளியீடு. உணர்வின் உலகிற்கு சமர்ப்பிக்கப்பட்டவை. ‘கடலில் முழுமதி எழும்பொழுது உணர்வு வயப்பட்ட மனிதனின் மகிழ்ச்சிப்பெருக்கைத்தான் கம்பன் அப்படிச்சொல்கிறான்.’ 

-2-
புதுப்புது உருவங்களை தோற்றுவித்தல் புதிதல்ல.இதுவரை வெளி வந்த சந்தப்பாடல்கள் எத்தனையோ புதிய உருவங்களைத்தந்துள்ளன.எனவே புதிய உருவத்தில் எழுதுவதும் மரபானதே! ஒரே படைப்பில் பல்வகை உருவங்களைப்புகுத்துவதும் புதிதல்ல . இணைக்குறள்,ஆசிரியப்பா,வஞ்சி விருத்தம்,வெண்டுறை,கட்டளைக்கலித்துறை,என்னும் பல உருவங்களால் இயல்வது கலம்பகம். எனவே இதுவும் மரபானதே! இக்கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும் போது புதுக்கவிதை மரபானதே!

ஒரு மொழியோ ஒரு காலமோ இலக்கியச்சிறப்பு மிக்கதாக ஆக வேண்டும் என்றால் அந்த மொழியிலோ காலத்திலோ நிறைய செய்யுள் தோன்றிப்பயனில்லை.நிறைய பாடல் தோன்றியும் பயனில்லை.நிறைய கவிதை தோன்ற வேண்டும்.ஏனென்றால் பாவகை மூன்றிலும் தலை சிறந்தது கவிதைதான்.

இன்று கவிதை வடிவம் எப்படி அமையவேண்டும் என்ற வினா எழுகிறது.உணர்வை ஊட்டும் ஒரு நிகழ்ச்சியானது அந்த நிகழ்ச்சி பொருட்களால் இயன்ற காரணத்தால் ஒரு வகை ஒலி நயம் கொண்டே இருக்கும் இந்த ஒலி நயமானது மிக நுட்பமாக இருப்பினும் அதை கவிஞன் மனம் கிரகித்துக்கொள்ளும். இதனால் உணர்வு வெளிப்பாட்டில் இவ்வொலி நயமும் இணைந்து கொள்கிறது. 

இவ்வொலி ஓட்டமே புதுக்கவிதையின் ஒலி ஒழுங்காக அமைகிறது எனலாம். செய்யுள் நடையானது ஓசையோடிருக்கும் காரணத்தால் படிப்பவன் உள்ளத்தில் பரவசத்தை ஏற்படுத்தும் சக்தி படைத்ததாக இருக்கிறது. இதற்கீடான மேலான சக்தியை புதுக்கவிதை எப்படி பெறுகிறது எனவும் நோக்க வேண்டும். 

விழிப்புலப்படிமங்கள் பழைய நினைவோவியங்கள் குறியீடுகள் மூலம் உணர்வு வெளிப்பாடு நிகழ்ந்து படிப்பவன் மனதில் பரவசத்தை உண்டாக்குகிறது.படித்து முடித்த பின்னரும் மனக்கண்முன் நிலைபெற்று நினைதொரு நயம் பயப்பது,நவில்தொறும் நயம் பயப்பது யாப்பு வழிக்கவிதை, நினைதொறும் நயம் பயப்பது புது வழிக்கவிதை
சொற்களைக்கையாள்வதில் புதிய முறைகளை ஆக்கிக்கொண்டால்தான் இன்று கவிதை வளர முடியும்,வாழ முடியும்.

இன்றை பிரச்சினைகளை தீர்க்கும்பணியில் கவிதை ஈடுபடாத வரை புதுக்கவிதையும் முழுமைபெற முடியாது. கருத்து இன்னதென்று புலப்படாத வெறும்படிமப்படையல்கள் பெரும் புதிராக அமைந்து சமுதாயத்திற்கு பெரும் புதிராக அமைந்து விடும்.

பழைய உவமானங்கள், உருவகங்கள்,குறியீடுகள்,படிமங்கள் ஆகியவற்றை கடன் பெற்று கவிதை அதன் சீர்குலைவையே எடுத்துக்காட்டும். சமுதாயத்தில் அவ்வப்போது நிகழும் செயல்களும் , நினைவுகளும் பேச்சு மொழியுமே கவிஞனுக்கு கை கொடுக்க வேண்டும்.

கவிதை கனவு மாத்திரமல்ல,கனவுப்பார்வை மாத்திரமல்ல.அது கனவு காணும் மனசின் வாழ்வு.
மனித ஜாதியின் வாழ்க்கை தனக்குத்தானே வகுத்துக்கொண்ட சட்டதிட்டங்களை மீறி, அணையுடைத்து வெள்ளம் போலப்பெருகி ஓடிக்கொண்டு வருகிறது. மேலும் பெருக்கெடுத்து ஓடப்பார்க்கிறது. மனிதன் தனக்குள் ஏற்படுத்திக்கொண்ட கட்டுப்பாடுகள்  வழி வந்த மரபுகள் எல்லாம் ஒவ்வொன்றாக தகர்ந்து கொண்டிருக்கின்றன.தன் சரித்திரத்திலேயே அனுபவத்தறியாத சுதந்திரத்தைப்பல்வேறு துறைகளில் இன்று மனிதன் அனுபவித்துக்கொண்டிருக்கின்றான். அதில் ஒரு அலை புதுக்கவிதை.

மனிதன் புற உலகத்தையும் பிற மனிதர்களின் செயல்களையும் கனவுப்பார்வையாகக்கவித்தது போதாதென்று தன் அகத்தூடும் அப்பார்;வையை பிரயோகிக்கத்தொடங்கியிருக்கின்றான். அறிவுலகத்தில் இதை செய்து கொண்டு வருவதைப்போல கலையுலகத்திலும் செய்யப்பார்க்கிறான்.

 இவ்வாறு செய்யும் போது,சில சமயம் பழைய முறைகள் தடையாக இருப்பதாலோ அல்லது அவைகளால் இவனுக்கு தேவையானபடி செய்ய இயலாமல் போவதாகவோ உணர்கிறான். புது வழிகளை வகுத்துக்கொள்ளப்பார்க்கிறான். இதில் ஒர் அலைதான் புதுக்கவிதை.

பல பக்கங்கள் கொண்ட  வைரக்கல் போன்றது புதுக்கவிதை. ஒரு பக்கம் புது மாதிரியான அழகு. வியக்கும் அழகு. ஒரு பக்கம் ஏக்கம், மனமுறிவு, பெருமூச்சு காதல், தத்துவம், கோபம், சந்தேகம், அறைகூவல்,சமகால விமர்சனங்கள், தன் மனத்தையே தேர்ந்தெடுத்து ஆராயும் நேர்மை, இப்படி பல பக்கங்கள் உண்டு. சுருங்கச்சொன்னால் இன்று நம்மிடயே இருக்கும் உணர்ச்சிகள் அனைத்தின் பிரதிப்பையும் நாம் புதுக்கவிதையில் காண்கிறோம்.

வரைமுறையற்ற தன்மை, நூதனப்படிமங்கள், மயக்க நிலையையும் வெளிப்படுத்தும் நிலை,கொச்சை மொழிப்பிரயோகங்கள் எப்படி புதுக்கவிதைக்கு வலுவேற்றுகின்றனவோ, அதைப்போல அவை புதுக்கவிதை பலவீனப்படுத்தும் சாதனங்களாவும் அமைவதற்குச் சந்தர்ப்பங்கள் உண்டு என்பதை உணர்ந்து கவிஞன் விழிப்போடு இருக்க வேண்டும்.

இவ்வாறு எழுதப்பட்டுள்ள கவிதைகளில் பல வடிவங்களில் உள்ள கவிதைகள் காணப்படுகின்றன.முக்கியமாக கருத்து எதையும் சொல்லாத வேடிக்கை எழுத்துக்கள். குழப்பம் உண்டாக்குபவை.எளிதில்புரிந்து கொள்ள முடியாதவை. இரு பொருள் கொண்டவை, நடப்புப்பாங்கானவை. கனவுகள் மன வக்கிரங்களை உணர்த்துபவை போன்றவை.

புதுக்கவிதைக்கு கிடைத்த வரவேற்பையும்,புதுக்கவிதை என்று எழுதப்பட்ட எதையும்  பிரசுரிக்கத்தயாராக இருக்கின்ற பத்திரிகைகளின் போக்கையும் கண்டவர்கள் எதையாவது எழுதி எப்படியாவது அச்சில் தங்கள் பெயரைப்பார்த்து விட வேண்டும் என்ற ஆசையும், அரிப்பும் கொண்டவர்கள் மூன்று வரிகளும் நான்கு வரிகளும் ஒரு சில வரிகளும் எழுதி சுலபத்திலேயே பெயரும் கவனிப்பும் பெற்றுவிட முனைந்தார்கள்.சிரமமும், பயிற்சியும் பாடுபடலும் இல்லாமலே         ‘எழுத்தாளர்’ என்ற கீர்த்தியை அடைந்து விட விரும்பியவர்களுக்கும்  புதுக்கவிதை எழுதுவது லட்சியப்போக்கு சுலப மார்க்கமாகத் தோன்றியது. கவிதைகளில் ஆங்கிலச்சொற்களையும், வார்த்தை அலங்காரங்களையும் இணைத்து கவிதை என்ற பெயரில்  கோமாளித்தனம் செய்தனர்.

இதற்கு மின்னல் என்ற கவிதை ஒரு பதச்சான்று
‘……பூமியெனும் காதலி
மழையெனும் Shower ல்
குளிப்பது கண்டு
வானமெனும் காதலன்
மின்னலே கடயளா டiபாவ ஆக
‘கிளிக்’ என்றே ஒரு flash light  எடுத்தான்.”

சாதரண நடப்புக்களையும் சந்தேகங்களையும் சில பிரச்சினைகளையும் உரை நடையாக நேரிடையாக எழுதாமல் வார்த்தைக்கு கீழ் வாhத்தையாக அடுக்கி ஒரே வாக்கியத்தை “புதுக்கவிதை”யாகக்காட்ட முயல்கிற வேலைகளும் நடைபெற்றுள்ளன.

புதுமையாக எழுத வேண்டும் கருத்து -கற்பனை –அழகு ஆழம் முதலியன அமையக்கவிதை எழுத வேண்டும் என்ற உணர்வு பத்திரிகைகளுக்கு கவிதை எழுதும் அனேகரிடம்  இல்லை.நாமும் கவிதை எழுதுகிறோம். நம் பெயரும் அச்சில் வர வேண்டும். என்ற எண்ணத்துடனேயே மிகப்பலர் எழுதுகிறார்கள். முன்பு பலர் எழுதிய விடயங்களையே திரும்பத்திரும்ப பலரும் எழுதுகின்றார்களே தவிர புதிதாக சிந்திக்க தவறிவிடுகிறார்கள். 

சாரமற்ற உணர்ச்சியற்ற உரை நடையிலேயே கவிதைகள் வருகின்றன. அவை கவிதை என்று சில பத்திரிகைகளால் அடையாளமிடப்படுவதுதான் வேதனையும் வேடிக்கையும்.
இதனால் கவிதைக்கலை ஒரு தேக்க நிலையை அடைந்து விட்டது போல் தெரிகிறது.


புதுக்கவிதையை பாதிக்கும் காரணிகள் பல :

முன்னொரு கால் பத்திரிகையுலகின் வேண்டாத பெண்டாட்டியாக இருந்து வந்த புதுக்கவிதை இன்று ‘இடம் நிரப்பி’யின் இடத்திற்கு இறங்கி விட்டமை.
புதுக்கவிதை மொழி பெயர்ப்பில் வரும் பொழுது கவித்துவ வீர்யத்தை இழந்து மூலக்கவிஞனின் உள்ளடக்கத்தை மட்டுமே வாக்கிய அமைப்பில் பேணி வருதல் புதுக்கவிதைப்படைப்பாளியின் வெளியீட்டு நிலை அதுவெனக்கொள்ளும் மயக்கம். அவ்வழியே தம் கவியனுபவங்களையும் வெளியிட முயலுதல்.

ஓவ்வொரு காலகட்டத்திலும் மேனாடுகளில் அல்லது தாய்ட்டில் உச்ச நிலை பெறும் அரசியல்,பொருளாதார சமூக நடத்தைகளும் அவற்றினடியாக எழும் தத்துவப்பார்வைகளும் அவர் தம் கவிதைகளில் இடம் பெற்றிருக்கும். அவற்றை தற்போது தமிழில் படிப்போர் அக்கவிதைகள் எழுந்த நாடுகள்-காலங்கள் என்பவற்றை மறந்து விட்டுப் படிப்பதால் தமக்கும் தமது வாழ் நாள் அனுபவங்களுக்கும் இக்கவிதைகளுக்கும் இடையில் பொருத்தப்பாடு ஏற்படாமை.

எனினும் இவற்றையெல்லாம் மீறி தமிழ்க்கவிதை வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.மெது மெதுவாக சில நல்ல கவிதைகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன என்ற வகையில் கவிதைகளை நேசிப்போர் ஆறுதலடையடைவோம்.



உசாத்துணை நூல்கள்:

புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும்- வல்லிக்கண்ணன்
‘கவிதை’ இதழ்கள் 1994 ஆனி-ஆடி,ஆவணி- புரட்டாதி,ஐப்பசி-கார்த்திகை 
அ.யேசுராசா


நன்றி : 
தமிழ் நயம் இலக்கிய சஞ்சிகை
கொழும்பு ரோயல் கல்லூரி 125 வது கலைவிழா சிறப்பு மலரில் பிரசுரம் பெற்றது 


சிறுகதை - ஒரு மாலையும் சில காகங்களும்


ஒரு மாலையும் சில காகங்களும்


சல்மா ஒரு பூனையைப்போல் பதுங்கியபடி வீட்டுக்குள் நுழைந்த  தருணம் உம்மா மாலை நேரத்தூக்கத்தில் ஆழ்ந்திருந்திருந்தாள்.பக்கத்தில் தங்கை ரேஷ்மாவும் தாயின் வயிற்றுக்குள் ஒடுங்கியபடி தூங்கிக் கொண்டிருந்தாள்.சல்மா குர்ஆனையும் ‘ஸ்காபை’யும் ஒரு சேர சுருட்டி  ‘பிளாஸ்ரிக் பக்கற்’றினுள் எறிந்தாள். அழுக்கடைந்த ஆடைகளை போடும்படி உம்மா வைத்திருந்த ‘பக்கற்’ அது. பரபரவென உள்ளறைக்குள் ஓடினாள். அவசரமாக உடை மாற்றிக் கொண்டாள். சிலமன் கண்டு உம்மா எழும்பினால் தன்னையும் கூடவே படுக்கவைத்து விடுவா  என்ற பயம் அவளை கவ்விக்கொள்ள பதற்றம் வந்து தொற்றிக்கொண்டது. 

அவளுக்கு மாலையில் தூங்குவதென்றால் கசாயம் குடிப்பதைப்போல. உம்மாவை பார்ப்பதும் ஆடைமாற்றுவதிலுமாய் கண்ணாய் இருந்தாள்.   ‘நானா’மார் அறைக்குள் கழற்றிப் போட்ட ஆடைகள் மூளைக்கொன்றாய் தாறுமாறாக வீசிக்கிடந்தன. அதில் தன்னுடையதும் கலந்துள்ளது  என்பது சல்மாவுக்குத் தெரியும். ஒழுங்குபடுத்த வேண்டும் என நினைத்துக் கொண்டாளாயினும் இது தகுந்த நேரமல்ல என உள்ள மனம் கூவியது.டீவியில் ஆன் (on) லைட் எரிந்து கொண்டிருந்தது.ரேஷ்மாவுக்கு உம்மா பொம்மை படம் போட்டுக்காட்டியபடி சோறு ஊட்டியிருப்பதன் அடையாளமாக  சி.டி. பிளேயரும் ஆன் (on) னில் மினுக்கம்  காட்டியது. 

கால்களின் ஓசை கூட நிலத்திற்கு கேட்டுவிடாமல் பதுங்கி பதுங்கி பின் கதவால் நழுவி சல்மா முற்றத்திற்கு வந்தாள்.குப்பைகளை கிளற தினமும் வரும் பூனை வாழை மர மறைவில் உடலை புகுத்தி காத்திருந்தது.

பின் வளவில் காகங்கள் கத்தியபடி பகல் வீசியெறிந்த மீன் கழிவுகளில் குறியாய் இருந்தன. காகங்கள் உச்சஸ்தாயில் கரைந்தால் உம்மா எழும்பி விடுவா. கல்லொன்றை எடுத்து ஓசைப்படாமல் வீசுமாற் போல் காகங்களை நோக்கி ‘பாவ்லா’ செய்தாள். அவை கூட்டமாக கத்திக்கொண்டு மேல் நோக்கிப்பறந்து சென்றன.  

சாத்தப்படாத கதவிடுக்கினுள்; தலையை நீட்டியபடி  அவள் வகுப்புத்தோழி சஹ்ரா நின்றிருந்தாள்.அவள் விழிகளிலும் கள்ளத்தனம் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. ‘உம்மா எங்க’? என்பது போல் சைக்கினையால் கேட்டாள். தூங்குவதாக சல்மா பாவனை காட்டியதும் விழிகளில் மினுக்கம் தெறித்தது.ஓசைப்படாமல் கதவினை சாத்திவிட்டு சல்மா வீட்டின் பின்னால் உள்ள வெற்றுக்காணிக்குள் சென்றாள்.

சஹ்ரா அவள் சைக்கிள் கூடைக்குள் இருந்த புளியங்காய்களை கொடுத்தாள். உப்புக்கல்லும் மிளகாய்த்தூளும் வைத்து சுத்தி அடித்து துகளாகி இருந்தது.  மருதோன்றி மரத்தின் கீழ் அமர்ந்தபடி சாப்பிட்டார்கள்.நாக்கில் மசமசவொன்று புளியேறி உச்சுக்கொட்டியது. 

‘நல்லா இரிக்கிடி ஏது புளியங்கா? ’ 

என்ற சல்மா இன்னுமொரு துண்டை எடுத்து வாயில் போட்டு மெல்லத்தொடங்கினாள்.கருக் புறுக்கென்ற ஓசையுடன் புளியம் துவையள் அவர்களின் கொடுப்புக்குள் ஊறி ஊறி உள்ளிறங்கி;க்கொண்டிருந்தது.

 ‘எங்கட மாமா வயலுக்கு போகக்குள்ள இடையில இருந்த புளியமரத்துல ஆஞ்சயாம், இன்னும் வூட்ட இரிக்கி , நாளைக்கும் கொண்டுவாரன்’ என்றாள் .
சஹ்ரா அவள்  கடை வாயில் எச்சில் ஊறி  நனைந்திருந்து. புறங்;கையால் துடைத்தபடி பொடி கற்களை எடுத்து குருவிகளை நோக்கி எறியத்தொடங்கிளாள்.

எதிர் வீட்டு மாமியின் மதிலில் இரண்டு பூனைகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபோட்டபடி சென்றன. இவர்களை கண்டு கொள்ளவே இல்லை .கீழே கிடந்த ‘பிளாஸ்ரிக்’; போத்தல் ஒன்றினால் ஸஹ்ரா அவைகளை நோக்கி எறிந்து வைத்தாள். அப்போதும் அவைகள் ‘போங்கடி நீங்களும் உங்கட போத்தலும்’  என்பது போல் எதிர்வினைகள் ஏதுமின்றி வீட்டுக்கூறையின் மீது தாவியேறி போய்க்கொண்டிருந்தன. 

‘எறியாதடி உம்மா முழிச்சிறுவா’ 

 மறுபடியும் கல்லொன்றால் பூனைகளை குறிபார்த்த ஸஹ்ராவை அடக்கினாள் சல்மா .

சாவகாசமாக நடந்தபடி தோழியர் வீதியைக்கடந்து அடுத்த தெருவுக்குள் நுழைந்தனர். எதிரே உள்ள வீதியில் ‘நானா’மார் ‘கிரிக்கட்’ விளையாடிக் கொண்டிருந்தார்கள்.உம்மா எழும்பினா தேடுவா என்ற அச்சம் நிழலைப்போல் சல்மாவின் பின்னால் நகரத் தொடங்கியது. வீட்டை விட்டு , சொல்லாம போகக்கூடாது என்ற குரல் பிடரியை அழுத்தியபடி அவளை நெருக்கியபடி இருந்தது. 

எதிரே நானாமார்களும் கண்டு விட்டார்கள் உம்மாவிடம் சொன்னால் இன்றைக்கு செம அடிதான் நினைக்கையில் நெஞ்சுக்குள் புறாக்கள் எழுந்து சிறகடிப்பது போல் தடதடவென அடித்துக்கத் தொடங்கியது. அவர்களைக் கடந்து ஐஸ்கிரீம் வேன் ஒன்று சென்றது. அதன் மியூசிக் சல்மாவை வசீகரிக்கும்.வாப்பா அந்த ஐஸ் கிரீமை திண்ணக்கூடாதென்பார். அடியில் கித்துள் பாணி மிதக்கும் சாம்பல் நிறத்திலானான ஐஸ் கிரீமை வாப்பா வாங்கிக்கொண்டு வருவார்.அதுவும் அலாதியான சுவைதான். உம்மாவுக்கும் அதென்டா நல்ல விருப்பம்.

‘சல்மா அங்கடி நெருப்புக்கோழி’ 

சஹ்ரா எதிர்த்திசையில் கையைநீட்டி கத்தினாள். 

‘ஓம்டி ‘

என்றபடி சல்மாவும் கத்தினாள். சுபைதா மாமியின் வீட்டில் தீக்கோழி இருப்பதாக நானாமார் கதைப்பதுண்டு. அவளுக்கும் அதனை பார்க்கும் ஆவல் உந்துவதும் அடங்குவதுமாய் கடந்த பல நாட்களாக தாப்புக்காட்டியபடிதான் இருந்தது. இப்படி திடீரென அதனைபார்ப்பேன் என கனவிலும் நினைத்திலேன் என வியந்தபடி கோழிக்கும் அவர்களுக்கமாக ஒரு பத்தடி தள்ளி நின்று வியப்புடன் பர்hத்துக்கொண்டிருந்தார்கள். அதன் தாடையில் தணலின் நிறத்தில் சதைகள் வழிந்து தொங்கின. கொக்…. கொக்……. என புறு புறுத்தபடி அது மண்ணைக்கிளறிக்கொண்டு இரை தேடிக்கொண்டிருந்தது.
 ‘உண்மையா நெருப்புத் தணலை விழுங்குமாடி’? 

சஹ்ரா  நம்ப முடியாதவளாய் கேட்டாள்.
’ஓம்டி பெரிய தணலாய் பார்த்து விழுங்குமாம்’.அதற்கு ஒன்டும் செய்யாதாம், நாம ஐஸ் திண்னுற மாதிரி நெருப்ப விழுங்கிப்போட்டு சும்மா இருக்குமாம்’.

 ‘ நீ பார்த்திருக்கியா?’ 

சல்மா இன்னும் நம்ப முடியாதவளாய் துருவத் தொடங்கினாள். 

‘இல்ல எங்கட வாப்பா சென்ன.’ 

கோழி இவர்களை பொருட்படுத்தாமல் கிளறிக்கொண்டிருந்தது.

பஸ்மியாவின் வீட்டை அண்மித்ததும் கேற்றில் நின்று அவளைக்கூப்பிட்டார்கள். பஸ்மினாவும் அவர்களின் வகுப்பில்தான் படிக்கின்றாள். அவள் நேற்று பாடசாலைக்கும் வரவில்லை .
’ஆரது ? ‘ 
என்றபடி பஸ்மியின் ராத்தா எட்டிப்பார்த்தா இவர்களைக் கண்டதும் சிரித்தபடி கேற்றை திறந்து 

‘ உள்ள வாங்க பொண்டுகள்’ என்றா.

வெட்கத்துடன் மருகியபடி இருவரும் உள்ளே சென்றார்கள். பஸ்மியா உள்வீட்டில் ஊஞ்சலில் ஆடியபடி டீ குடித்துக்கொண்டிருந்தாள் இவர்களைக்கண்டதும் எழுந்து வந்து ‘இருங்கடி ‘என்றாள் .பின் குசினிக்குள் குரலை நீட்டி  உம்மா ரெண்டு டீ தாங்க என்று கத்தினாள் .அவள் கடைக்குட்டி என்பதால் கொஞ்சம் செல்லம் அதிகம்  என சல்மாவின் உம்மா சொன்னது உண்மைதான் எனப்பட்டது. அவள் கேட்ட உடன் உம்மா வந்து மண்டபத்தினுள் தலை நீட்டிப் பார்த்தா இவர்களைக் கண்டதும் சிரித்தபடி 
‘ என்ன கூட்டாளியாக் காணல்லண்டு கிளம்பினயாக்கும்’ என்றபடி குசினிக்குள் சென்ற ஐந்து நிமிடத்தில் டீயுடன் வந்தா.

 பஸ்மியின் ராத்தா தலையை வாரிக்கொண்டு கதிரையில் இருந்தா. சற்று நேரத்தில்  கண்ணாடி முன்னால் நின்று கூந்தலை நீவி விட்டபடி அதனை உற்றுப் பார்த்தபடி நின்றா ஊஞ்சலில் இருக்கும் மூவருக்கும் உள்ளறைக்குள் நடக்கும் விடயங்களை துல்லியமாக காணக்கூடியதாக கதவு சற்று அகலத்திறந்து கிடந்தது. 

பஸ்மியின் ராத்தாவின் கூந்தல் அவவின் இடுப்பை விட்டும் நழுவி தரையை தொட்டுவிடுவேன் என போக்குக்காட்டியது. ஆச்சரியத்துடன் அவர்கள் அதனை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.கருகருவென்று மினுங்கியபடி அலை அலையென வசீகரமாய் ஆடிக்கொண்டிருந்தது. ஒரு ஸ்டுடிலில் அமர்ந்தபடி அதனை சடை போடத்தொடங்கினா. அவவின் விரல்கள் மடிவதும் தாழ்வதுமாக … பார்க்கப்ரவசமாகவும் வித்தை போலவும் இருந்தது. பஸ்மியாவோ  அதுவெல்லாம் எனக்கு அலுத்து விட்டது என்பது போல் பிரக்ஞையின்றி ஊஞ்சலி;ல் இருந்தாள் .

 சல்மா தன் கூந்தலை நீவிப்பார்த்துக்கொண்டாள் அது எலி வாலைப் போல அவள் கைக்குள் அடங்காமல் இருந்தது.  இப்படித்தான் நாமும் முடி வளர்க்க வேண்டும் மனசில் அவளுக்கும் நீண்ட கருங்கூந்தல் ஒய்யாரமாக ஆடிக் கொண்டிருந்தது. 

சற்றெக்கெல்லாம் அவள் முதுகின் பரப்பின் மேல் நீண்ட கரு நாகமொன்று படுத்து நெழிவதைப்போல் இருந்தது. கூந்தலை பின்னி முடித்தபின் ராத்தா ஹோலுக்கு வந்து இவர்களுடன்; கதைக்கத்தொடங்கினா. படிப்பு உம்மா வாப்பா எல்லாவற்றையும் கேட்டு விட்டு முற்றத்தில் இறங்கி ஆகாயத்தைப்பார்த்தபடி நின்றா .அவ அப்படி நிற்கையில் கதைகளில் படிக்கும் இளவரசிகளை நினைவூட்டியது. 
பஸ்மியா நேற்று பாசிக்குடாவுக்குப்போனதாக சொன்னாள். தன் பாடப்புத்தகத்தினுள் ஒழித்து வைத்துள்ள மயிலிறகை எடுத்து வந்து காட்டினாள் மூவரும் மிக இரகசியாக தங்களுக்கே  உரிய கவனத்துடன் அதனை பார்த்தார்கள் . 

‘ மூனு நாளைக்குப் பொறகுதான் குட்டி போடுமாம், அதுவரைக்கும் கையாலயும் தொடப்படாது.’ 

 கை வைக்கப் போன சஹ்ராவை இடைவெளியில் தடுத்து நிறுத்தினாள் பஸ்மி.சஹ்ரா முன் சென்ற விரல்களை அவுக்கென இழுத்துக்கொண்டாள். 
‘ மூனு இறகு போட்டா ஆளுக்கொன்று தாரன் என்ன ?’  

என்றபடி புத்தகத்தை மூடிக்கொண்டு போய் உள்ளறைக்குள் பத்திரப்படுத்தி விட்டு வந்தாள் .முற்றத்தில் இறங்கி மூவரும் மாமரத்தை அண்ணாந்து பார்த்தபடி நின்றார்கள் இரண்டு அணில்கள் துரத்தியபடி கிளை விட்டு கிளைதாவி ஓடித்திரிந்தன. வெளவால்கள் வந்து போன தடம் மரத்தில் தெரிந்தது. மாம் பிஞ்சுகளை நறுக்கிவிட்டு பாதியில் கைவிட்டுச்சென்றுள்ள வெளவாலின் மீது ஆத்திரம் வந்தது.குருட்டு வெளவால் மனசுக்குள் திட்டிக்கொண்டார்கள்.

பஸ்மியின்  அயல்  வீட்டில் சத்தமாக பாட்டு வந்தது. சகிக்க முடியவில்லை. பின்பக்கம் மூவரும் சென்றார்கள் .நேற்று பொறுக்கி வந்த சிப்பிகளை பஸ்மி பின் வளவில் ஒரு வாளிக்குள் போட்டு வைத்திருந்தாள். அதனை கவிழ்த்துக் கொட்டி காட்டினாள். பாசிக்குடாவில் இப்போது சிப்பிகள் இல்லை என்பது போல் அவள் கதை தொடர்ந்தது. இருவரும் ஆளாளுக்கு தமக்கு விருப்பமான சிப்பிகளை எடுத்துக் கொண்டனர். பாசிக்குடாவுக்கு  அடுத்த கிழமை போனா இன்னும் கொண்டு தாரன் என பஸ்மி வாக்களித்தாள். 

மதில்களின் மேல் காகங்கள் வரிசையாக குந்தியிருந்தன.நிவாரணம் எடுக்க வந்த ஏழைகளைப்போல்  நிற்கும் காகங்களைப்பார்த்து சிரிப்பாக வந்தது. ஒன்றுக் கொன்று ஏதோ பேசியபடி அவை குந்தியிருக்கும் அழகே அழகு. அதனை விரட்ட மனமின்றி மூவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் .
சல்மா பின் வளவிற்குள் இருந்த குழாயில் தண்ணீர் மொன்று குடித்தாள் . கைகனை குவித்து வாயைவைத்து குடித்ததில் நெஞ்சுப்பகுதி நனைந்திருந்தது. கால்களையும் கழுவிக் கொண்டாள். பின் வளவில் மூவரும் அமர்ந்து விளையாடத் தொடங்கினார்கள்.

சற்றைக்கெல்லாம்  விளையாட்டும் அலுப்புத்தட்டி விட்டது. ஜே மரத்தின் கீழிருந்து அண்ணாந்து பார்த்தார்கள். ஐதாக பழங்கள் தூரத்தில் இருந்தன.சல்மா நீளமான தடியொன்றால் அவற்றை அடித்து விழுத்தினாள். மண்ணில் விழுந்ததை ஊதியபடி வாய்க்குள்வைத்து மென்று துப்பினார்கள்.சல்மாவுக்கு ஒண்ணுக்கு முட்டியது .வீட்ட போகலாம் என அடக்கி;க்கொண்டாள்.மற்றவர்களின் பாத்றூமை பாவிப்பதில் அவளுக்கு கூச்சமாகவும் இருந்தது.பஸ்மியின் பின் வளவு விசாலமானது. தென்னை மா,மாதுளை ,தேசி, விழா,கொய்யா என வளவு கொள்ளா மரங்கள்.நிழல் விழுந்து மணல் குளிர்ச்சியாக இருந்தது. கதையளந்தபடி தோட்டத்தின் மறு முனைவரை சென்று விட்டார்கள். 

அன்னமின்னா மரத்தில் குருவி கூடு கட்டடியிருந்தது. சற்றே அவதானத்துடன் எட்டிப்பார்த்தார்கள். கண் விடுக்காத சிறிய குருவிகள் தலையை எம்பியபடி கத்திக்கொண்டிருந்தன.தாய்க்குருவி இவர்கள் சிலமன் கண்டு உயரப்பறந்து போய் வட்டமிட்டபடி கத்திக்கொண்டிருந்தது. ஒண்டும் செய்திடாதீங்க என்பது போல் அதன் கேவல் .சராலென மூவரும் விலகி பாவம்டி என்றார்கள் .தன் குஞ்சுகளை விட்டு நீங்கிய மறு கணத்தில் தாய் பறவை கூண்டுக்குள் வந்து குந்திக்கொண்டு தலையினை வெளியே நீட்டிப்பார்த்தபடி  படுத்துக்கிடந்தது.

கொக்குகள் தங்கிப்போவதாக விழாமரத்தை சுட்டிக்காட்டினாள் பஸ்மி.கொக்கின் எச்சம் கீழே வெள்ளைத்தீந்தை சிந்திக்கிடப்பதைப்போல் இருந்தது.குமட்டலெடுக்கும் வாடையும் கூடவே உதிர்ந்த வெண் இறகுகளும்.உச்சியில்  குச்சியிலான கூடொன்றும் தெரிந்தது.

வளவு முழுக்க தென்னை ஓசைகளும் சருகுகளும், சுள்ளிகளும்,பறவைகளின் எச்சமும் நீக்கமற இரைந்து கிடந்தன.எல்லாவற்றையும் மிகைத்தபடி பெரும் நிழல் அந்த தோட்டத்தினை போர்த்தியபடி சதா படுத்துக்கிடந்தது.

சல்மாவுக்கு வயிறு கடுப்பெடுத்து முட்டியது.’பஸ்மி பாத்றூம் போகனும். ‘ தயங்கியபடி காதுக்குள் கிசுகிசுத்தாள்.  சஹ்ராவும் எனக்கும் முடுக்குதுடி என்றாள். மூவரும் பாத்றூமை நோக்கி விரைந்து சென்றனர்.

கழுவி சுத்தம் செய்யப்பட்ட பாத்றூமில் பஸ்மியின் ராத்தாவின் கவுனொன்றும் பாவாடையும் ஈரம் சொட்டச்சொட்ட கிடந்தது. இப்பதான் மேல் கழுவியிருக்காப்போல. சல்மா பள பளவொன்று மாபிளின் மேல் கால்களை கவனமாக வைத்து முன்னேறத்தொடங்கினாள். கண்ணுக்குத்தெரியாத நறுமணங்களின் வாசம் மூக்கைத்துளைத்தது. பேஸ்வாஷ்,சிக்னல்,பிரஸ் ,மணக்கும் சோப்புக்கள் , முதுகு தேய்க்கும் பஞ்சு என பொருட்கள் நேர்த்தியாக  அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

‘ டீயேய் என்னடி செய்றாய் வாடி எனக்கும் முடுக்குது’ 

தட தடவென கதவைத்தட்டினாள் சஹ்ரா.

‘இந்தா வாரன் பொறுடி’  என்று விட்டு பேஷனின் மேல் குந்திக்கொண்டாள். வயிறு காலியாகி சாசுவதமாவதை உணர்ந்தாள். 

சற்றைக்கெல்லாம்  உம்மாவின் குரல் காட்டமாய் ஒலித்தது.

 ‘சல்மா நேரம் பெய்த்து ஸ்கூல் போறலியா எழும்பு’.

 தன் இடுப்புக்கீழ் ஈரலிப்பின் சொத சொதப்பு ஊர்ந்து இறங்கியது.  உம்மா அவளன்டை வந்து மோப்பம் பிடிப்பது போல் மூக்கை சுண்டினா. முதுகின் மேல் சுர்ரென்று உறைத்தது. உம்மா பிரம்புடன் நன்றிருந்தா.

 ‘இந்தப்பெரிய கிளட்டுப்பிள்ள  பாயில சூ அடிக்கிறதே வேலயாய்ப்பெய்த்து’.

‘ஒழும்புடி வெளியால கொண்டு போய் எல்லாத்தயும் கழுவிப்போடு’

 முதுகை தேய்த்தபடி ஈரலிப்பான ஆடைகளுடன் பாயை சுருட்டத்தொடங்கினாள்.விடியலின் பிரகாசம் உள்ளறைக்குள் எட்டிப்பார்த்தது. சல்மா கண்களை ஆயாசமாக கசக்கிக்கொண்டு ஜன்னலின் ஊடாக வானத்தைப்பார்த்தாள்

பஸ்மியின் தோட்டத்தில் சற்று  முன் பார்த்த காகங்கள் அவள் மதிலில்  குந்திக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தன.

2017.10.02 
விடி வெள்ளி பத்திரிகை 17.11.2017



Saturday 8 April 2017

ரெயில்வே ஸ்ரேஷன்.


2000ம்ஆண்டில் எழுதிய சிறுகதை தற்போதுள்ள வாழைச்சேனை புகையி நிலையம் யுத்த காலத்தில்  இப்படித்தான் இருந்தது.முடிந்தவரை அதன் வலிகளை இந்த புகையிரத நினைவுகள் மூலம் கதையாக்கியுள்ளேன்.அன்றைய சரி நிகர் பத்திரிகையில் பிரசுரம் பெற்றபோது வெகுவாகப்பேசப்பட்டது.

ரெயில்வே ஸ்ரேஷன்.


திடுதிப்பென்று வருவாரென்று இவன் எதிர்பார்க்கவில்லை. உம்மாவுக்கும் ஆச்சரியம் தான். மூத்தப்பா நம்ப முடியாதவராய் கண்களை இடுக்கியபடி சாய்மணக்கதிரையில் ஆவென்றிருந்தார். 

ஆங் அஹமது ஐயா, நான் தான் கருணாரட்ண, 

ஓவ் ஸ்ரேஷன் மாஸ்ரர், எப்படி சுகமா?|| 

அவர் குசலம் விசாரித்தும், பளிச்சென்று சிரித்ததும்  இவனுக்கு உறைக்கவில்லை. அவரைக் கண்டதில் அப்படியொரு அதிர்ச்சி. 

வாங்க மாஸ்ரர்|| என்ற உம்மாவின் குரலில் அதீத பரிவும், அன்பும், நெகிழ்வதை அவதானித்தான்.

இவன் கருணாரட்ணாவை விழித்தபடி நின்றான். மனிதர் எப்படி மாறிப் போய்வி;ட்டார். மூப்பும், மரணமும், காலங்களை வென்றபடி தன்பாட்டிற்கு ஓடிக்கொண்டுதானிருக்கின்றன. மூப்பும், நரையும், மேவிய கருணாரட்ணாவை பார்க்கும் போது இனம்புரியா அச்சம் மனசில் ஊறிப்பரவுகின்றது. முதுமையின் ஆக்கிரமிப்பை திண்மையுள்ள எந்தவொரு இளமையும் எதிர்த்திடவியலா கடுமவஸ்தை. இவனையும் அக்கணத்தில் தொற்றிக் கொண்டது. 

தன் மிருதுவான முகத்தில் சுருக்கங்கள் விழுவதான பிரேமை. கருகருவென்ற தாடியும், படியப்படிய வாரியிடப்பட்டு கண்ணாடி முன் நின்று அழகு பார்க்கும் கேசமும் திடீரென வெண் பஞ்சு மேகமாய் காற்றிலாடி திக்கொன்றாய் பறப்பதான உணர்வு. விரிந்த நெஞ்சின் திண்மையும், புஜங்களின் குறுகுறுப்பும் ஒடுங்கிப் போய், மூன்றாவது காலொன்றின் துணையுடன் நிதானித்து நடப்பதான தளர்வு. என்னவாயிற்று இவனுக்கு. இப்படி பேயறைந்தவன் போல் நிற்கிறானே!
 உம்மாவின் பார்வையில் அச்சம் விரவியது. சுதாகரித்துக் கொண்டான். கருணாரட்ணா ஐயா ஓலைப்பாயில் அமர்ந்தபடி சிங்களப் பிரதேசத்திற்கேயுரிய பண்டங்களை பகுத்து உம்மாவின் கையில் கொடுத்தபடி இருந்தார். 

சாபிர் தம்பி இந்தாங்க ஒங்களுக்கு என்றபடி ஒரு பெட்டியை நீட்டினார். இவன் கலைகளை ஆராதிப்பவன். என்ற வகையில் மரத்தினால் செதுக்கப்பட்ட ஓவியமொன்றை  இவனுக்கென கொணர்ந்திருந்தார். பல தடவை நன்றி கூறிக்கொண்டான். இரு மகளிர் நீர்க்குடமேந்தி செல்லும் அற்புதமான கலை வண்ணம். முலையின் முனைவு தொடக்கம் அதரங்களில் தேங்கி நின்ற இளஞ்சிரிப்பு வரை நுணுக்கமாக செதுக்கப்பட்ட சிற்பியின் புத்திசாலித்தனத்தை மெச்சிக் கொண்டான்.

கருணாரட்ணாவின் காலத்தில்தான் ஊருக்குள் சீராக ரெயில் ஓடியது. பிளாட்பாரத்தில் இவனினதும், இவனையொத்த வாண்டுகளினதும், வாழ்க்கை ஓரளவு சீராக ஓடிக்கொண்டிருந்ததும் இவர் காலத்தில்தான். மனசுக்குள் தூர்ந்து கிடக்கும் ரெயில்வே நினைவுகள், இந்த முதியவரால் கிளறப்பட்டுவிட்டது. வறுமையும், பிணியும், மிகுந்த அவலத்தனமான இவ்வாண்டுப்பருவத்தின் காயங்களும், அதனை மீறி நிற்கும் சமூகப்பிணைப்பும் இந்த சிங்களக் கிழவரின் வருகையால் மனக்குளத்தில் எகிறி வந்து மிதக்கத் தொடங்கின.

குடும்பத்தில் இவன் இரண்டாவது. மூத்தவன் தண்டச்சோறுண்டு, இந்திரியம் புடைக்க, கடலைவிற்கும் அயலூர் காரியை இழுத்துக் கொண்டு போய் அவள் ஊரிலேயே குடும்பம் நடத்துவதாக பின்னாளில் தெரிந்து கொண்டான். கழுதையாக பிறந்தாலும் மூத்ததாய் பிறக்கக் கூடாதென்பது இவனவில் மெய்த்துப் போயிற்று. வாப்பாவுக்கோ நிரந்த ஜீவனோபாயமில்லை. கூலிக்கென அங்குமிங்கும் ஆலாய் பறந்தார். அடுக்கடுக்காக தாம்பத்தியத்தில் காட்டிய அக்கரையை ஒரு தொழிலில் காட்டியிருந்தால,; எட்டுப் பிள்ளைகளுக்குப் பதிலாக பெயர் சொல்லிக் கொள்ளும் படி தலை நிமிர்ந்து நின்றிருக்கலாம். 

அவருடைய கனவு யாழ்ப்பாணத்து பாணிச்சுருட்டும், கட்டித்தயிரும், பழம்சோறும், அதப்பிக் கொள்ள வெற்றிலையும், தொட்டுக் கொள்ள உம்மாவுமாக கழிந்து போயிற்று. இதைத்தவிர வேறொரு கனவும், அவருக்குள் விரிந்திருக்காது. ஒரு நாள் கருவாக்கேணிக்கு முருங்கைக்காயும், கருவாடும், விற்கப் போனவர் கண்கள் தோண்டப்பட்டு கைகள் கட்டப்பட்டு இரண்டு நாட்களின் பின் ஒரு சிங்களப் பொலீஸ்காரனால் கண்டெடுத்து முன்றலில் கிடத்தும் வரை அவர் கனவு இப்படித்தான் மலர்ந்திருக்கும். 

வால் முறுக்கும் அந்த வயதில் காய்ந்துலர்ந்து கருவாடென சைக்கிளில் ஏறிச்சென்ற வாப்பா, ஒரு கொத்துக்காற்றூதி கொழுத்துக் கிடப்பதை இவன் பிரமிப்புடனும் மிகுந்த அச்சத்துடனும், பார்த்து நின்றான்.அன்று மயக்கம் போட்டு சரிந்த உம்மா. இத்தாவிலிருத்தி, மூன்று நாட்களின் பின் கண் திறந்தாள். மறு நாள் இவன் தலையில் ஏறிய அப்பச்சட்டி பிளாட்பாரத்தில் இவனை தள்ளிற்று. 


பனிவிசிறும் காலம் முருங்கைப்பூக்கள் முற்றம் முசிய சோளகப்பொறியாய் சொரிந்து கிடக்கும்;. ஆடாதோடை பதிமருந்தின் ஒளடதக் கமறல் நாசியில் கமறும். வெள்ளி நிலாவின் குளிர்ந்த சிரிப்பில் ஊரே கிறங்கிக் கிடக்கும். சூரியன் கதிர்கள் வீசா வைகரையில் இவன் அப்பப்பெட்டியுடன் வெளியேறுவான். வாசலில் உம்மா வந்து நிற்பா. தலை குணிந்து இவனுக்கு ஒரு இச்தருகையில் இவன் கழுத்தில் உம்மாவின் விழிநீர் கரிக்கும்  இவன் மயிர்களும் சிலிர்த்து நெஞ்சு புடைக்கும். இவன் தேயும் வரை படிக்கட்டில் வெறித்து நிற்பாள்உம்மா. அவள் விழிகளின் ஈரம் இவன் பிடரியைக் கவ்வியபடி பின் தொடரும்.

இந்தக் கருணாரட்ணாதான் அன்றைய ஸ்ரேஷன் மாஸ்ரர். ரெயில் வண்டியில் கடலை வியாபாரம், பீடி, சிகரெட், டொபி, விற்போர். கஞ்சியும், டீயும், விற்போர் அப்பம், இடியப்பம், பிட்டு, விற்போர் என ஓர் உணவுச்சாலையே நடமாடித்திரியும். பத்து நிமிஷம் உதய தேவி தரித்து நிற்கும்.அதற்குள் கூவித்திரியும், பொடியன்களும், பெட்டைகளுமாக ரெயில் பெட்டிகள் திணறும்.

”ஆ .....அப்பம் .. பாலப்பம், அம்மா எடுங்க. ஐயா திண்டு பார்த்து காசிதாங்க.”

 அவரவர் தொணியில் கூவித்திரிவர். கண்ணகி கிராமத்திலிருந்து கோமதி வண்டப்பம் கொண்டுவருவாள். அவள் கூவி விற்கும் அழகே தனி அழகு.
 வண்டப்பம், வண்டப்பம், என அவள் கூவிக் கொண்டு வருவாள். தயிர் விற்கும் குத்தூஸ் காக்கா அவளருகில் மெல்ல வந்து ”ஆ என்டப்பம் என்டப்பம்”  என சத்தம் வைப்பார். கோமதிக்கு நெஞ்சில் தேசிப்பழ அளவில் மொட்டு விரியத் தொடங்கிய வயது. சற்று எடுப்பாக இருப்பதால் குத்தூஸிக்கு அவளில் ஒரு கண். 

ரெயில் புறப்பட்டுச் சென்ற பின்பும் பிளாட்பாரம் ,கொப்பிலிருந்து தேனீக்களை கலைத்து விட்டது போல் இரைச்சலில் இருக்கும். அடுத்த ரெயில் வரும்வரை அரட்டைகள் நீளும். ஸ்ரேஷன் மாஸ்ரர் கோமதியை கூப்பிடுவார். 
என்ன கோமதி உன்டப்பம் நல்ல இனிப்போ, 
இஞ்ச ஒன்டு தாரும் திண்டுபாப்பம்.|| 

பொடி வைத்து அவர் பேசுகையில் மூக்கின் கீழ் மச்சம் விழுந்த பையன்கள் களுக்கென சிரிப்பர். அவளுக்கோ இதுவெல்லாம் அத்துப்படி. வியாபாரத்திலும் விண்ணி 
ஓம் ஸேர் அம்மா சீனி போட்டுத்தான் சுட்டவ.

 இந்தாங்க கணக்குல எழுதட்டா,கைக்காசா என்பாளே கருணாரட்ணாவின் முகத்தில் சிக்னலின் மினுமினுப்பு நூர்ந்து விடும்.

 பின்னாளில் இந்தக் கோமதி ஊருக்குள் நெஞ்சு நிறைய குண்டுடன் சீருடையணிந்து யமஹா பைக்கிள் வந்து இறங்கிய போது இவன் பிரமித்துப் போய் உறைந்து போனான். அவள் முகத்தை ஏறிடப்பயமாக இருந்தது. இந்த இறுக்கம் எப்படி இவளில் தொற்றிக்கொண்டது.

அக்காலத்திற்கென ஒரு ஐஸ்வர்யம் இருந்தது. தமிழன் முஸ்லிம் என பாகுபாடு காட்டாத காலம். பொடியன்களுடன் காக்காமாரும் சேர்ந்து போராடித்திரிந்த காலம். காக்காமாரின் வீடுகளில் வீரர்கள் துவக்கை சாத்திவிட்டு நித்திரை செய்த காலம். ஊருக்குள் வண்ணானும் மருத்துவிச்சியும் குடில் போட்டு சேவை புரிந்த காலம். நாசிவன் தீவிலும் கிரான் குளத்திலும் காவடியும், திருவிழாவும், பாhக்கச் சென்ற காக்காமார் கோயில் முற்றத்தில் உறங்கியெழுந்து வெயிலேறிச்சரிய சாவகாசமாக வீடேகிய காலமது.

அந்தக் காலத்தை சபித்த முனிவன் யாரென யோசிக்கையில் மர்மங்கள் விரிகின்றன. அதை சிறை பிடித்த கொடியவன் மூட்டிய தீயில் எரிந்து போன மானசீக உறவுகளின் பிரலாபம் காற்றில் அலைவதான பிரேமை இவனை நெடுநாளாகவே தொற்றிக் கொண்டு வதைக்கிறது. சரித்திரங்களும், வரலாறும், இவன் வளர்ச்சியுடன் திடீரென முத்துப்பெற்றதைப் போல் சகலதும் ஒரு திருப்பத்தில் வந்து ஸ்தம்பித்துவிட்டது.

துயரங்களின் ஓட்டுமொத்த சரிதங்களை சுமந்தபடி- வரலாற்று நதி தன்பாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவனுடன் ரெயில்வேயில் விளையாடி வியாபாரம் செய்தவர்களை ஆயுதம் தூக்க  வைத்ததும் இந்த வரலாறுதான். அந்த ஆயுதங்களால் அவர்களுடன் பிரியமான மனதுடன் உறவாடியவர்களை துன்புறுத்தும்படி தூண்டிய வரலாறு எது. யோசிக்கையில் எல்லாமே குழம்பிக் கொண்டு வந்தது இவனுக்கு. நினைவுகள் நெக்குருகி மயங்குகின்றன.

கருணாரட்ணா மக்கிப்போன கூரையை வெறித்தபடி மூத்தாப்பாவின் சளப்பலில் ஐக்கியமாகியிருந்தார். உம்மா காச்சி வைத்த குரக்கன் கூழ் அவர் முன் ஆறிப்போய் உறைந்திருந்தது. 

தம்பி ஸ்ரேஷன் வரை போய் வருமா|| என்றார். கூழக்குடியுங்கோ ஸேர் போவம் என்று விட்டு இவன் உடைமாற்றத்தொடங்கினான்.

ஜே ஜேவென சனங்கள் வழிந்த ரெயில்வே ஸ்ரேஷன் ஓவென்று வெறிச்சோடிக்கிடந்தது. ஒன்றிரெண்டு நாய்கள் பிளாட்பாரத்தில் படுத்துக்கிடந்தன. இவர்களின் சில மங்கண்டு ஒரு நொண்டி நாயைத் தவிர மற்றெல்லாம் சடுதியாக எழுந்து முறைத்து விட்டு அப்பால் சென்றன. மாடுகளின் தங்குமிடமாய் கென்ரீன்|| இருந்தது. எந்தச்சாதனங்களுமற்று சிக்னல் றூம்|| வயர்களை மட்டும் துறுத்தியபடி பரிதாபமாகத் தெரிந்தது. 

ஸ்ரேஷன் மாஸ்ரரின் அறையிலிருந்த தகவல் கருவிகளும், டெலிபோனும், டிக்கற் ட்றக்கும், காணாமல் போயிருந்தன. மொத்தத்தில் தண்டவாளங்களற்ற ரெயில் பாதையின் தடம் மட்டும் எங்கள் முன் வியாபித்திருந்தது.

பயணிகள் தங்குமிடத்தில் ஒரு பைத்தியக்காரனின் சொத்துக்கள் இறைந்து கிடந்தன. அவன் எந்நேரமும் திரும்பி வரலாம் என்றுமாற் போல் கதவு உடைக்கப்பட்டு படுக்கையாக கிடந்தது. ஜன்னல்கள் மிகுந்த சிரமத்துடன் கழற்றப்பட்டிருந்தன. மேற் கூரையின் முன் பகுதி பெயர்த்தெடுக்கப்பட்டிருந்தது. நீர்த்தாங்கி வெடிப்பு விழ ஆரம்பித்து விட்டது. ஸ்ரோர்ரூமிலிருந்த இரும்புத்தளபாடங்கள், காகிதாகிகள், எதுவுமின்றி ஆவென்று கிடந்தது.

 கருணாரட்ண ஐயா ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவது முகம் இறுகிப்போயிருந்தது. நெஞ்சின் வலி முகத்தில் விழுந்து அவர் விழிகளில் இறங்கி கோடிடுவதை இவன் அவதானித்தான். 

அந்தக் காலத்து ஸ்ரே~னில் நின்றபடி ஏகாந்தமாய் மன உளைச்சலுடன் சுற்றுமுற்றும் பார்த்தபடி நின்றான். ஸ்ரேஷனின் முன் சடைத்து நின்ற வேப்பமரத்தில் வெசாக் கூடுகள் தொங்கின. காற்றிலாடும் அக்கூடுகளின் நர்த்தனம். இவனுக்கு மிகுந்த அச்சத்தை தந்தது. பழுது பார்க்கவென தரித்து நின்ற ரெயில் பெட்டிகளிற் சிலதில் இராணுவம் முகாமிட்டிருந்தது. அந்தப்பெட்டிகள் நிற்கும் தண்டவாளங்கள் மட்டும் காப்பாற்றப்பட்டிருந்தன. 

நீர்த்தாங்கியின் வலப்புறத்தில் ஒரு காட்டு மரம் .கொத்துக் கொத்தாய் காய்த்து கிடக்கும் அக்காலம். இப்போது மனித சஞ்சாரமற்று பட்டுவிடுவேன் பயங்காட்டியபடி உம்மென்றிருந்தது. வாண்டுப் பருவத்தில் கள்ளன் பொலீஸ் விளையாட தோப்புக்குள் இதுவொன்றுதான் தோதான மரம். புளி மாங்காயும், உப்புக்கல்லும், சேர்த்து நாவூற தின்ற பொன்னந்திகள் இவன் முன் பளிச்சிட்டன. நா நீரில் மிதந்தது. 

பிட்டுக்காரி சரஸா மரம் ஏறுவதில் வலு கெட்டி. சரசரவென ஏறுவாள். கட்டை பாவாடையும், சட்டையும், அணிந்து வரும் அவளில் சிக்னல் ராஹலாமிக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. இவளை குவார்ட்சுக்கு கூப்பிடுவதும், கதைப்பதுமாக இருந்தார். 
 அவர் ஏன் சதாபிட்டு திண்னுரார். உடம்பு கட்டியாயிடுமோ என்று குத்தூஸ் காக்கா நக்கலடிப்பார். சரஸா கொப்பிலிருந்த படி கந்துகளை பலம்கொண்ட மட்டும் உசுப்புவாள். மாங்காய் பொலபொலவென உதிர்ந்து சிதறும். அண்ணார்ந்தபடி இவன் கத்துவான்.

 ஏய் சரஸா உண்ட அது தெரியுதுடி மூடிக்க.
 இவன் தலையை குறிவைத்து அவள் எறியும் மாம்பிஞ்சு மட்டும் அதிகம் புளிப்பில்லாமல் இருக்கும். சீ வளிசல் ஹராங்குட்டி உள்ளுக்க எல்லாம் போட்டிருக்கண்டா.|| 

இனி ஒரு நாய்க்கும் பழம் பறிச்சித்தரமாட்டேன்.

 கொல்லென்ற சிரிப்பினிடை அவள் பொய்கோபத்தின் சௌந்தர்ய அழகுடன் எத்துனை அந்திகள் கடந்து போயிற்று. 

கருணாரட்ண மலசலகூடம் வரை எட்டிப்பார்த்துவிட்டு வந்தார். நீர்த்தாங்கியின் நிலவரை உடைக்கப்பட்டு அதற்குள் பொருத்தியிருந்த பம்செட்டை இராணுவம் எடுத்துச் சென்ற தகவலை இவன் தெரியப்படுத்தினான். மோட்டார் ரூமில் பெண்களின் உள்ளாடையும், உடைந்த கண்ணாடி வளையல்களும், சிதறிக்கிடந்தன. சுவர் முசிய குருதியின் சீந்தல். இவனுக்கு சர்வாங்கமும், ஒடுங்கிற்று. கருணாரட்னாவோ தான் அவமானப்பட்டு சிறுத்து விட்ட குற்ற உணர்வில் திணறிக் கொண்டிருந்தார். அழியாத சப்பாத்துத் தடங்களில் அவர் விழிகள் கிடந்து துடித்தன. இவன் இதுவெல்லாம் சகஜம் என்பதாய் சுவர்களை அலசத் தொடங்கினான். 

கரித்துண்டும், கள்ளிப்பாலும்;, கொண்டு சுவர்களில் கிறுக்கிய கிறுக்கல்கள் இன்னும் மனசின் ஆழத்தில் கோணல் பக்கங்களாக உறைந்திருக்கின்றன. இவன் பிரமிப்புடன் அந்த கிறுக்கல்களை பார்த்தபடி நடந்தான். 
சரசு ராஹலாமி காதல் ஒழிக. 
கமலினி அக்பர்|| 
பாலப்பமும் கடலை பருப்பும் தொடர்பை நிறுத்து||
 ஆயி~h நீ நைஸா||
ரயிலப்போல கைரிய்யா நீ ஆத்துப்பக்கம் வாரியா||

இவனுக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. இவனும் புஹாரியும் சேர்ந்து எழுதிய சில கிறுக்கல்களும் சுவரில் அப்படியே சற்று நிறம் மங்கி அழியாமல் துலங்கின. தனது பெயர் முதல் தடவையாக பத்திரிக்கையில் வந்ததைப் போன்ற ஆனந்தப் பரவசம் பால்யத்தின் கிறுக்கல்களில் புளகித்துப் போனான். 

கென்ரீன் நடத்திய சஸரா அக்காவையும் ஸ்ரேஷன் மாஸ்ரரையும் இணைத்து இவன் எழுதிய வாசகங்களும் புறச்சுவரில் நிறம் மங்கித்தெரிந்தன. குறும்பட்டியின் வலிமையை மனதார மெச்சிக் கொண்டான். மாம்பிஞ்சினால் அவை அழிக்கப்பட்டாலும் கூர்ந்து பார்க்கும் ஒருவரால் அதை முழுமையாக படித்துவிடலாம். கருணாரட்ணா இப்போது அதை பார்த்து விடுவாரோ என்ற சங்கடம் திடீரென இவனைக் கவ்விக் கொண்டது.

இவன் கடைசியாக ரெயிலேறிய நாள் நினைவின் நுணியில் துருத்தியது. 83ம் ஆண்டின் துவக்கத்தில் கொழும்புக்கு போகவென சாச்சாவுடன் இந்த ரெயில் ஸ்ரேஷனுக்கு வந்தது தான் நினைவில் நிற்கிறது. அப்போது ஆட்டோக்கள் அதிகம் ஊருக்குள் வராத காலம். ஒன்றிரண்டு வாடகைக் கார்கள். ரெயில்வே வளாகத்தில் தவமிருக்கும். 
இவன் கடைசியாக ஏறிய ரஜனி ரயிலின் சனக் கும்பலும் சிக்குபுக்கும் இன்னும் மூச்சில் முட்டுகிறது. அப்போது கருணாரட்ணா 20வரு~ங்களுக்குப் பின் இந்த கிராமத்தை விட்டும் ஓய்வு பெற்று சென்று விட்டார். இவனும் வியாபாரத்திற்கு முழுக்குப் போட்டு விட்டு படிப்பதில் ஆர்வமாகிய வயது.

வெலிக்கந்தையில் ரயிலுக்கு குண்டு வைத்து, ஏதுமறியா சனங்களின் இனிமையான  கனவுகளையும், உயிர்களையும், தகர்த்த போது தொடர்ந்தும் ரயிலை பார்க்க முடியவில்லை. பின்னர் காகித ஆலைக்கருகில் ஓடிவந்த ரெயிலை மரம் தரித்து தடுத்து ஏதுமறியா தமிழர்களை இந்தியன் சுட்டுப்பொசுக்கிய போது அந்தப் புகையின் கமறலில் ஒருவாரம் ஆகாரம் ஏதுமின்றி இவன் மயங்கிக் கிடந்ததும் இந்த ரெயிலால்தான். அதற்குப் பின் ரெயில்களின் சிக்குபுக்கு சங்கீதத்தை வெறுக்கத்தொடங்கிற்று மனது. இதற்குப் பின் ஊருக்குள் ரெயிலே ஓடவில்லை. ஸ்ரேஷனை மூடிவிட்டு ஊழியர்கள் தத்தம் கிராமங்களுக்கு சென்று விட்டனர். அவர்களின் படி மாதாமாதம் போய்க்கொண்டுதானிருந்தது.

இந்த ரெயில்வேயின் ஒவ்வொரு தூணிலும், சுவரிலும், இளமைக்காலத்தின் இனிய நினைவுகள் உறிஞ்சப்பட்டு உறைந்திருக்கின்றன. முடிவுறாத்துயரங்கள் இவனளவில் பொய்த்துப் போகவில்லை. சிந்தனையின் இடைவிடாத சங்கிலிகளை கோர்த்தபடி காலங்கள் கடந்து விட்டன. எதிலும் சிக்கிக் கொள்ளாமல் ஒவ்வொரு ஸ்தலத்திலும் உராய்ந்தபடி நினைவுப் பெருவெளியில் கணீரென்ற ஓசையெழுப்பியபடி அவை நீள்கின்றன. இறைக்க இறைக்க ஊறும் எண்ணெய்க்குதமென,அதன் ஊற்றுக்கள் கணக்கிறது. ஊற்றுக்களின் அடர்த்தியும், வீச்சமும், அச்சம் தரும் வீர்யத்துடன் பீறிட்டெலுகின்றன.

 இந்த வேட்கை இனி ஓய்வதற்கில்லை. கல்வெட்டுக்களென அவை மனசில் கவிழ்ந்து போயிற்று. கல்யாண மண்டபமாய் களிப்புற்றிருந்த ரெயில்வே ஸ்ரேஷன் சுடுகாடாய் ஆழ்ந்த மவுனத்துள் சிதிலமாகி சிதைவடைந்து நிற்பதை இவன் வெகுநேரமாக விம்மலுடன் பார்த்தபடி நின்றான்.


                                சரி நிகர் 2000-06-03.
                                 .  

Tuesday 4 April 2017

கதை -40 (சிறுகதை )


50வது சிறப்பிதழாக கனடாவிலிருந்து  வெளிவந்துள்ள காலம் சஞ்சிகையில் பிரசுரம் பெற்றுள்ள எனது சிறுகதை 
நன்றி- காலம் 


40 வயதிற்குப்பின் ஒன்றும் எழுத முடியாது என்றார் 1. எஸ்.எல்.எம்.அவரை மகா பொய்யராக்க வேண்டும் என்று பல தடவைகள் முயன்றும் முடியவில்லை.இன்று எல்லாம் கை கூடி வந்துள்ளது.ஒரு கதை எழுதித்தர வேண்டும் என்ற  இலக்கிய  இதழ்களின் இடைவிடாத நச்சரிப்பில் என் கணினியின் முன் அமர்ந்துள்ளேன்.

கதைக்குரிய கருவும் வந்து விழுந்து மனசுக்குள் ஊதி ஊதிப்பெருக்கெடுத்து பிரவகிக்கின்றது.வீடும் மௌனப்பரப்பில் அமைதியின் உருவாய் கிடக்கின்றது.பிள்ளைகள் விடுமுறை விளையாட்டுக்காய் திடலுக்குச் சென்றுவிட்டனர்.மனைவியின் மாலை நேர உறக்கம்.தொல்லை பேசியின் உதடுகளை தைத்து அதனையும் மௌனிக்க செய்தாகிவிட்டது.

கடவுளே இப்படியொரு தருணம் வாழ்க்கையில் லயித்து எத்துனை காலமாகிவிட்டது. எழுது எழுது என்று கைகள் வேறு பரபரக்கத்தொடங்கிற்று. 
ராஜாதி ராஜன் கதை

முன்னாரு காலத்தில் எங்கள் கிராமத்தை ஓர் சிற்றரசன் ஆண்டு வந்தான். தேசத்தின் மன்னனுக்கு ஆண்டுக்கு ஒரு தடவை திறை செலுத்தி தன் ஆட்சியை நெடுங்காலமாய் தக்கவைத்துக்கொண்டிருந்தான். அவனுக்கு இரு மந்திரிமார்கள். மகா புத்திசாலிகள். அரசனுக்கு ஒத்தோதுவது அவர்களின் பிரதான பணி. அவன் செல்லுமிடமெங்கும் நிழலைப்போல் தொடர்வதும் அவர்களின் பிறவிக்கடன். ‘ஒரோயொரு ஊரிலே ஒரோயொரு ராஜா போன்ற  தத்துவப்பாடல்களை தேடித்தேடி குழல்களில் ஊரெங்கும் ஊதி விடுவதற்கென்று ஆள்பிடிப்பது உட்பட மந்திரிமார்களின் கடமை பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. 

அரசன் இரு மாடுகளும் வளர்த்து வந்தான். கொம்புகள் சீவப்பட்ட மதர்த்த கடாய்கள்.முன்பெல்லாம் ‘மறிக்கடா’க்கள் நளமடிக்கப்பட்டு சகட்டுமேனிக்கு ஊருக்குள் உலாவிய காலமிருந்தது.அரசனின் கடாய்களுக்கு கன்னிராசி. அந்தப்புரத்தில் மந்திராலோசனைகளை நடாத்தும்படி அரசனுக்கு மதியுரைப்பதுமுண்டு. கடாய்கள் நள்ளிரவுக்குப்பின் பட்டிகளுக்குள் புகுந்து மன்மத வித்தைகளை காட்டி  விட்டு சூ+ரியோதத்திற்கு முன் தம் இருப்பிடங்களில் வந்து அசை போட்டபடி படுத்துக்கிடக்கும் மிக அப்பாவியாக. 

கதையின் பீடிகை இப்படித்தான் அமைய வேண்டும். இடைநடுவில் ஊரின் வரலாற்றிலிருந்து சில துண்டுகளைப்போட்டு கதைக்கருவின் போக்கை திசை திருப்ப வேண்டும்.பின் நவீனத்துவம் போல்  திடீரென்று கதையின் மூலக்கருவை மாற்றி அரசனை மந்திரியாக மாற்றி, மந்திரியை அரசானாக்க  வேண்டும்.அல்லது கதையில் சில விடயங்களை உட்புகுத்தி அதிரடி திருப்பங்களை உருவாக்க வேண்டும். கதையைப் படிப்பவர்கள் அரசனை விட கதாசிரியனின் அறிவினை மெச்சிப்புகழ்ந்து சிலாகிக்க வேண்டும். இப்படியொரு கதை என் வாழ்நாளில் படிக்கவே இல்லை என்று முகத்திற்கு நேரே விரல் நீட்டி சொல்லும் பொய்களுக்காக மனம் கிடந்து தவிக்க வேண்டும். 

இனி மனக்குரங்கின் நுனி வாலில் இக்கதை தொங்கிக்கொண்டு தாவித்தாவி குதித்துப்பாவும்.பயணத்தில், தொழுகையில்,இறைவனை நெருங்கி நிற்கும் நடு நிசியில் என நீக்கமற கதை வந்து தொல்லைப்படுத்தும். அணைந்து விட்டுத்தான் ஆறுவேன் என அடம்பிடிக்கும் காமத்தீயின் தாண்டவம் கதைக்குள் வந்து விட்டது.

கதையை எழுதத்தொடங்கு முன் சில குறிப்புகள் தேவை. அரச மந்திரிகளின் மதியுரைஞர்களின் வாழ்க்கை வரலாற்றை தேடித்தேடி ஊரின் அறிவாலயங்களுக்குள் நடந்தேன். ‘நெசசல’ நிலையங்களிலும் ஒரு துரும்பும் இல்லை.இணையத்தளங்களின் இடைவிடாத தேடல்களில் சலிப்புற்றேன்.

மகா வெள்ளத்தில் அள்ளுண்டு போகையில் கையில் அகப்படுமே ஒரு துரும்பு அவ்வாறாயினும் ஒரு நறுக் பந்தியாவது இல்லை என்பது என்னை சோர்வடையச்செய்துவிட்டது.கதையை  எப்படி  ஆரம்பிப்பது நகர்த்துவது உச்சத்தில் வாசகனை திக்குமுக்காட வைப்பது முற்றுப்புள்ளியிட்டு திணறடிப்பது.
மனம் அல்லாடத்தொடங்கிவிட்டது.
குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட பிரபலங்களின் ஆய்வில் ஈடுபட்டுள்ள எனது நண்பன் எனக்கு  உதவுவதாக வாக்களித்தபடி வெள்ளவாய பொலிஸ் நிலையத்தில் குற்றப்புலனாய்வுப்பிரிவின் பேரேட்டிலிருந்து   நகலெடுத்து  சில குறிப்புகளை அனுப்பியிருந்தான்.

சின்ன காக்கா
மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று கல்குடா தொகுதி: சிறப்பு பெயர்: சின்ன காக்கா . இயற்பெயர் ஆதமலி சீனி முஹம்மது. தொழில். அரசனின் அந்தரங்க இணைப்புச் செயலாளர். அயல் கிராமத்திலிருக்கும் சிற்றரசர்களின் எடுபிடியாகவும் உளவாளியாகவும் அவ்வப்போது செயற்படுதல். குற்றத்தின் வகை : காரயடிப்பட்டியில் வயல்காரனின் மனைவியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்தல்.கை கூடாத போது உயிர் அச்சுறுத்தல்.மேலும் மனைவியின் மீதுள்ள மோகம் கை கூடாத ஆற்றாமையால் வயல்காரனை வேலை பார்க்க முடியாதவாறு கெடுபிடிகளை ஏற்படுத்தி அவன் தாமாகவே நின்று கொள்ள தூண்டியது.

தண்டனை ஆறுமாத ஒத்திவைக்கப்பட்ட சிறை.இரண்டு சரீரப்பிணை.எனினும் அரசனின் பரிந்துரையின் பேரில் உடன் விடுதலை.

அலிமா 

பெயர் இசுமாலெப்பை அலிமாக்கண்டு பட்டப்பெயர் : இழவு வீட்டின் இல்லத்தரசி

குறிப்பு: சிறப்பு பெயருக்குரிய காரணங்கள். பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடைவிடாத புலனாய்வு மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள். இழவு வீடுகளுக்கு வரும் அலிமாக்கண்டு பேரழகி இல்லாவிட்டாலும் வசீகரமானவள். கருப்பழகி.கருப்பி என்று கிண்டலடிப்பவர்களுக்கு ‘தொதல் கருப்பா இருந்தாலும் இனிப்பு இனிப்புதான் ’ என்று வாயை அடைத்துவிடுவதில் சமர்த்து.அப்படிச்சொல்லும் போது கிறக்கமாய் ஒரு பார்வையால் சிரித்தும் வைப்பாள்.

 இழவு வீடுகளில் தனித்து விடும் ஆண்களை போசிப்பதுதான் அலிமாவின் பணி.அரசனின் விருந்தினர்களில் பாதிப்பேர் இப்படித்தான் ‘இழவு வீட்டு’க்குப்போகிறேன் என்பார்கள். சங்கேத மொழி புரிபவர்களுக்கு கொடுப்பிற்குள் சிரிப்பு முகிழும். நிறைய ஆண்களிடம் அரை மணி நேரத்திற்காக பலகோடி சொத்துக்களை கைமாறியவள் என்ற பெருமையும் அலிமாவுக்கு உண்டு.

அரசவையில் மன்னன் துதி பாடி கரகோசங்களை குவிப்பவள் 

சிலர் இந்தியாவில் மனையும் வாழ்வும் வழங்கி அலிமாவை அம்மாவாக்கி பார்த்திருக்கின்றார்கள். குற்றத்தின் வகை ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் ஏக காலத்தில் வாழ்ந்து குடும்பங்களில் கலவரங்களை தூண்டியது.

தண்டனை: ஒரு வருடத்திற்கு குறையாமல் பொதுச்சேவை செய்தல். ஐம்பதினாயிரம் தண்டப்பணம் செலுத்தல். முறையாக திருமணம் செய்து குடும்ப வாழ்வில் ஈடுபடல். 

பிற்குறிப்பு : அலிமாவை யாரும் திருமணம்  செய்ய முன்வராததால் தற்கொலைக்கு முயற்சித்து காப்பாற்றப்பட்டு தற்கொலை முயற்சிக்கான வழக்கு மாவட்ட நீதி மன்றத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. வழக்கு எண்:  மட்சி/என்/2331/2/  அறிக்கை: முதியான்சலகே முதுகெட்டிகம மஞ்சுள 23459.

28.4.2011 இல் ஊர்க்குருவியால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்.

யார் இந்த கொடி சுறா ?

அரசனின் கொந்தராத்து வேலைகளில் பங்கெடுக்கும் முக்கிய புள்ளி.ஊருக்குள் வரும் அபிவிருத்தித்திட்டங்களில் பாதிக்கு மேல் கொடி சுறாவின் வங்கிக்கணக்கில் ஏறும்.மிச்சமிருப்பதில் அபிவிருத்தி என்ற பெயரில் பணிகள் தொடரும்.உதாரணமாக கிறவல் வீதிக்கு ‘கிறவள் துகள்’களை பரவுதல்;,தார் வீதிக்கு ‘தார் தெளித்தல்’,கொங்கிறீட் வீதிகளுக்கு சீமெந்து கற்களான கலவயினை தெளித்து கொங்கிறீட் வீதியாக மாற்றம் செய்தல் செப்பனிடப்படாத சிற்றொழுங்கைகளின் பெயரில் காசோலைகளை எழுதி எடுத்தல்.கமிசனாக கிராமிய அபிவிருத்திச்சங்கங்களின் தலைவர்களுக்கும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களுக்கும் ரூபாய்களை வீசுவதன் மூலம் அடுத்த ஆண்டுக்குரிய கொந்தராத்துக்களையும் முற்பதிவு செய்தல்.இவர்தான் இந்தக்கிராமத்தின் அபிவிருத்தியின் பிதா மகன்.ஊர் மக்களின் பணத்தில் அவர் சேகரித்துள்ள சொத்துக்கள்.

கட்டுவன்விலயில் 50 மாடுகள் காரமுனையில் 125 ஆடுகள்,குப்புழாக்கொடியில் 75 ஏக்கர் நெற்காணி,ரெஜிதென்னயில் 5 ஏக்கர் காணி (இரு போகம் விளைச்சல்) ஒரு ஹைப்பிரட் கார். ஒரு உழவு இயந்திரம்,மனைவியின் பெயரில் காத்தான்குடி கடற்கரையில் ஒரு வீடு.இது போக வங்கிகளில் நிரந்தர வைப்புகள்.

இது மட்டுமா இந்த கொள்ளைக்காரன் இவ்வருடமும் நமது ஊரின் வடிகானை கொந்தராத்து எடுத்துள்ளான்.இதை தடுத்து நிறுத்த ஒன்றுபடுவோம்.அரசனின் இந்த எடுபிடியை விரட்டியடிப்போம்.இன்று மாலை நலன்விரும்பிகளால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.பாதுகாப்பு காரணங்களுக்காக இடம் குறிப்பிடவில்லை.கூட்டம் ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடங்குளுக்கு முன் முக நூலை பாருங்கள்.நாரே தக்பீர் அல்லாஹ{ அக்பர்.

இதைத்தவிர வேறொன்றும் கதைக்குரிய குறிப்புகளாக கிடைக்கவில்லை.
மேற்குறித்த குறிப்புகளை வைத்துக்கொண்டு பின்நவீனத்துவக்கதையை வீச்சாக எழுதி முடிக்கலாம் என்று தெரியவில்லை.அரசனின் வரலாற்றை தனியொரு அத்தியாயமாக சேர்க்க வேண்டும். அதற்கு குறைந்தது இரண்டு வாரங்கள் தேவை. நெடுங்கதையாகவும்  எழுதலாம்.

மந்திரிகளின் பிரதானியின் வாய்மூலக் கதைகளை சேகரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

பல் தேய்க்கப்போய் ‘கறள்’ பிடித்த கதையாகப்போய் விட்டது.வாய்மொழி சாட்சியம் கூற யாரும் முன்வரமாட்டேன் என்கிறார்கள். 

இடை விடாத நைச்சியத்தில் கலந்தர் சாஹிப் என் பிடிக்குள்.

தம்பி அங்க இஞ்ச பேசி எழுதிப்போடாதீங்க…நாம ஏன் தம்பி வேலில போற ஓணானப்புடிச்சி காதுக்குள்ள உடுவான் நீங்க கேட்டிங்க நான் சொல்லுரன்.
நம்மட உசன்ட மகள் நேத்து பிள்ளயப்பெத்து கண்டியில வித்துப்போட்டு வயித்த கழுவிட்டு வந்திரிக்காள். ஆறு வாப்பான்டுதானே கேக்குறீங்க? நம்ட ராசாட எடுபிடிதான். 

ஆள் வெள்;ளயும் சுள்ளயுமா இருக்கான் எண்டு இவளும் புடவய தூக்கி காட்டினா வுடுவானா ? ருசி கண்ட பூன.

இது மட்டுமா தம்பி.  என்ட பேரனுக்கிட்ட ரெண்டு இலட்சம் சுளையா வாங்கிட்டு இன்னும் வெளிநாட்டுக்கு அனுப்பல்ல.கரியாவோ கிரியாவோ என்ன நாடோ வாய்க்கு வரனுமே தம்பி. கொரியா என்றேன். அதான் தம்பி அதான் .ஒரு நாளக்கி அஞ்சு ஆறு புள்ளயள் வந்து போகுதுகள். இவன தேடி எல்லாருக்கிட்டயும் லட்சக்கணக்கில்தான் வாங்கி இருக்கான், எல்லாம் ‘அவரு’ குடுக்குற இழக்காரம்தான் சலித்துக்கொண்டார்.

கலந்தர் சாஹிபின் கதையில் சுவாரஸ்யம் இல்லை.மனிதர்களின் அந்தரங்க இடுக்குகளில் தாவித்தாவிப்பாயும் புலிகள் வேண்டும். உள் மனதில் வக்கிர நகங்களால் கிழித்து கீறி காயப்படுத்த வேண்டும். கலந்தரின் கதையில்  என்னதான் உண்டு.

வாய் மூலக்கதைகளும் அருகி விட்டதா? கதைப்பதையும் சிந்திப்பதையும் முகநூலும், வாட்ஸ்அப்பும் கையகப்படுத்;தி விட்டதா?இல்லை ஓயாமல் கதைக்கும் அலங்காரிகளும்,வாய் ஜால மன்னர்களும் இந்த மண்ணில் ஒரு மூளையில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.

ஒரு பகற்பொழுதில் முற்றத்து ஊஞ்சலில் நான் சாவகாசமாக அமர்ந்திருந்து ஓரான் பாமூக்கின் ‘பனி’ யில் நனைந்து கொடுவிக்கிடந்தேன். இபெக் போலொரு நாயகி கிடைத்தால் இரண்டாம் தாரமாக மஹர் கொடுக்க வங்கி இருப்பு இருக்கின்றதா என மனக்கணக்குப் போட்டுப்பார்த்தேன். பரவாயில்லை. சமாளிக்கலாம். நானும் இஸ்தான்புல்லின் பனிமலைகளில் உலாவிக் கொண்டிருக்கும் தருணம்  வீட்டுக்கு வீடு நாட்டு மரக்கறி விற்கும் அக்காவின் குரல் முற்றத்தில் ஓங்கி விழுந்தது. ‘புடலங்கா வேணுமய்யா’?

‘புடலங்கா, தோடங்கா எல்லாம் இருக்கட்டும் உங்கட ஊரு கதைகள சொல்லுங்க வாங்க க்கா! என்றேன் .

‘தம்பி கதை கேக்குர நேரத்தப்பாரு ‘ என மறுகி விட்டு 

எங்கய்யா அம்மா, அக்கா வந்திருக்கன் என்டு சொல்லு. உள்ளே இருந்த மகனை நோக்கி  அக்கா கூவினாள்.

அக்கா அந்த காஞ்சிலங்குடா வீட்டப்பத்தி சொல்லுகங்களேன். வீட்டுக்காரி வரும் வரை அக்காவிடம் கதை கேட்கலாம்.

‘இப்ப அது பாழடைந்து கிடக்குது தம்பி. ஆமி இருந்து விட்டுட்டு பொய்த்தானுகள். அதுக்கு முதல் இயக்கம்.இயக்கம் வராதுக்கு முதல் இந்தியன் ஆமி.நல்ல ராசியான இடமென்று எங்கட ஊருல சொல்லுவாங்க.ராசின்டா கொலை ராசி.எலும்புக்கூடுகளின் பிரலாபங்கள் இடைவிடாமல் ஒலித்த வீடு. கற்புக்கரசிகளின் கெஞ்சல்களாலும் கேவல்களாலும் முலாம் பூசப்பட்ட அந்த வீட்டில் உயிர்களின் கசிவை இப்போதும் கேட்கின்றோம்.பூசாரி கந்தவர்மாவின் மனைவியும் அங்கதான் தூக்கில் தொங்கினவ. அவ்வளவு பாதுகாப்பான வீட்டுக்குப்போய் அவ தூக்கில் தொங்கிய மர்மம் துலங்கவே இல்லை.

இந்தியன் ஆமி சடலத்தை பூசாரியிடம் கொடுத்த போது முகம் நிறைய நகக்கீறல்களை கண்டதாகவும் சப்பித்துப்பிய கரும்புச்சக்கையென அவள் கசங்கியிருந்ததாகவும் கதையுண்டு தம்பி.இதுகள் பழைய கதை.இப்ப புதிசா உலாவும் கதைகள் நிறைய இருக்கு.பாழடைந்த வீட்டில் இளவட்டங்களின் களியாட்டம் நடக்குதாம். இயக்கத்துல இருந்து துவக்க தூக்கிப்போட்டுட்டு வந்த முன்னாள் பொடியன்களின் கூட்டங்களும் இங்கதான் தம்பி நடக்குதெண்டு எங்கடவரு சொன்னவரு. 

காசி கைமாறுவதும்,வேலை கொடுப்பதும் கொடுத்த வேலைய பிடுங்கி எடுப்பதும்,ஆளை மாற்றுவதும், தூக்கி தண்ணி இல்லாத காட்டுக்குள் அனுப்பவுதும் கள்ளப்பொஞ்சாதியோட மணிக்கணக்காக பேசுவதும் என்டு பத்துக்கும் பலதுக்கும் இந்த வூடுதான் தம்பி அடைக்கலம்.அக்கா மேற்கொண்டு கதை சொல்லும் மனோ நிலையில் இல்லை. கதையை நிறுத்தி விட்டு புடலங்காயுடன் மல்லுக்கட்டப்போய்விட்டா.

இந்தக்குறிப்புகளை வைத்துக்கொண்டு எந்தக்கதையும் எழுத முடியாது.கதையை இம்மியளவும் நகர்த்தும் எண்ணமும் இல்லை.அரசனின் கதையை முழுமையாக எழுதும் முஸ்தீபுகளில் இனி இறங்க வேண்டும்.எழுதி வைத்த குறிப்புகளை படிக்கத்தொடங்கினேன்.புதிதாக தகவல்கள் மனதில் முளைவிட வேறொரு புத்தகத்தில் குறிப்பெடுத்துக்கொண்டேன்.குறுந்தகடுகளை பிளேயரில் ஓடவிட்டு அரசனின் இறந்தகால நடவடிக்கைகளை அவதானிக்கத்தொடங்கினேன்.
பழைய சஞ்சிகைகள்,புத்தகங்கள்,பத்திரிகை குறிப்புகள், நேர்காணல்கள்,

       நினைவுமலர்கள், கையெழுத்து சஞ்சிகைகள், ஒலி நாடாக்கள், நினைவுக் குறிப்புகள்,கடிதங்கள்,அரச அபிமானிகளால் அவ்வப்போது வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் என அனைத்தையும் திரட்டி என்னைச்சூ+ழவும் பரத்தி வைத்துக் கொண்டேன்.இனி கதையை எழுதலாம் என்ற ஓர்மம் வந்து விட்டது. 

40க்குப்பின் கூடவே இருக்கும் வியாதிகளில் ஒன்று மறதி. கைப்பேசியை மூடி வைத்த நான் ‘ஐ பேட்டை’ மூடவில்லை.வைபரில் இலண்டனிலிருந்து நண்பர் அழைத்தார். ஒரு மணி நேரம் பேசுவார். தவிர்க்க முடியாது. ஏக காலத்தில் வீட்டின் அழைப்பு மணியும் ஒலித்தது. இனி அரசனின் கதை பாதியில் நிற்கப்போகிறது. பதற்றத்தில் கால்கள் தள்ளாடின.

மனதில் இருந்த கதை கதவிடுக்கால் எனக்கு முன்   நழுவிச்செல்வதைப்பார்த்தபடி  வாசலை நோக்கி  நடந்தேன். 

1. எஸ்.எல்எம். ஹனீபா பிரபல மூத்த எழுத்தாளர்.ஓட்டமாவடி

”மூத்தம்மா”

இன்று காலை மட்/ ஏறாவுர் அலிகார் தேசிய பாடசாலையில் விஷேட செயலமர்வொன்றில் கலந்து கொண்டேன். க.பொ.த சா.தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எனது “மூத்தம்மா“ சிறு கதை தொடர்பாக விரிவுரை நிகழ்த்துமாறு கேட்டிருந்தனர். 
கதைக்கான பின்புலம், கதையின் உள்ளடக்கம், கதையின் முடிவு மற்றும் அதில் இடம்பெற்றுள்ள பாத்திரங்கள் மண்வாசனை சொற்களின் அரும்பத விளக்கம். போன்ற தலைப்புகளில் மாணவர்களுக்கு விளக்கமளித்தேன்.

இலக்கியப்பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள ”மூத்தம்மா” கதை குறித்த மாணவர்களின் ஐயங்களுக்கும் விளக்கம் சொல்லப்பட்டது .

.இன்றைய நிகழ்வை பாடசாலையின் அதிபர் மற்றும் தமிழ் பாட ஆசிரியர்கள் ஒழுங்கு செய்திருந்தாலும் கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மவ்ஜீத் அவர்கள் என் வருகைக்கு பின்புலமாய் அமைந்தவர் என்பதனை நன்றியுடன் நினைவு கூறிக்கொள்கின்றேன்.

ஆசையில் ஓர் கடிதம்

மக்கத்துச்சால்வையார் 99 களில் எனக்கு எழுதிய கடிதம். சுவையும் பதிவும் நறுமணமும் கமழும் அவரின் எழுத்தின் தீரா பித்தன் என்ற வகையில் இக்கடிதம் முக்கியம் பெறுகின்றது.



அன்புள்ள அறபாத்

இன்று காலையில் இருபத்தி ஏழு சென்றிகளில் ஏறி இறங்கி ஊரை வந்தடைந்தேன். சுபஹ் தொழுத கையோடு கடைக்கு வந்து விட்டேன். உன்னோடு கழித்த இரண்டு பொழுதுகளும் மனதுக்கு ரொம்ப சந்தோஷம்.

எல்லோரும் என்னிடம் கேட்பது போல் நீயும் கேட்கிறாய் கதை சொல்வதை விட்டுவிட்டு கதையை எழுதலாமே என்கிறாய் எல்லோருக்கும் சொல்லும் பதிலை உனக்கு சொல்ல முடியாது. என்னை சுற்றி எவ்வளோ பிரச்சினைகள்.
எழுத்து என்பது மாவலி போல் நுங்கும் நுரையுமாக பிரவாகித்து பொங்கி வர வேண்டும் பேனாவும் நாமும் அதில் அள்ளுண்டு போக வேண்டும் அங்குதான் கதை மிளிரும் நாமோ இருநூறு அடியில் குழாய்க்கிணறு தோண்டி சிரட்டையில் அள்ளிய நீரில் நீச்சல் அடிக்கப்பார்க்கிறோம்.


என்னை விட்டா எவன்டா என்று குஸ்தி போடுகிறோம். எழுத்துக்கு தவமிருந்தவர்கள் பலரையும் நான் அறிவேன். இன்று பொன்னாடை பொற்கிழி காப்பியக்கோ என்று அரசியல்வாதிகளின் பதவிகளுக்கும் கடைக்கண் பார்வைகளுக்கும் தவமிருக்கும் இழி நிலையை காண்கிறோம்.

பட்டங்களும்,அங்கீகாரங்களும் வரும்போது வரட்டும். அதற்காக அலைய வேண்டாம். நமது முன்னோடிகள் பலரையும் ஏற்றுக்கொள்ள மறுத்த இவர்கள் நம்மை மட்டும் அணைத்துக்கொள்வார்கள் என்று எண்ணுவது மகா முட்டாள்தனம்.



தளைய சிங்கம் எஸ்.பொ,அ.யேசுராசா போன்றவர்களுக்கு இன்றுவரை உரிய இடம் கிட்டவில்லை. இவற்றையெல்லாம் கடந்து நீ வரவேண்டும் என்பதுதான் எனது ஆசை.தமிழின் முக்கியமான படைப்பாளிகள் பலரையும் நான் காட்டியது மட்டுமல்ல நீயாகவும் சிலரை கண்டடைந்து இருப்பதை அறிந்து மகிழ்கிறேன். 

இன்று நமக்குள்ள ஒரே கலைஞன் உமாதான் ‘அரசனின் வருகையை’ அவன் எப்படி எழுதிப்போட்டான் பார்த்தாயா? கதையை படித்ததும் எனக்கு ஒரே பயம் அவன் பாதுகாப்பு ? என்ன நடக்கிறது என்ற பொறுத்திருந்து பார்ப்பம்.
அறபிகளுக்கு சமைத்த ஆட்டுக்கறி பிரியாணி வெகு ஜோர். அந்த சமையல் காரரின் கையைப்பிடித்து கொஞ்ம் வேண்டும் போல் இருந்தது. எழுத்துக்கலையும் சமையல் கலை போன்றதுதான் எல்லாம் செட்டாக வந்து அமைய வேண்டும். அந்த நாட்களில் எனது குருநாதர் எஸ்.பொ மாமியின் சமையல் பற்றி சுவாரஸ்யமாக பிரஸ்தாபிப்பார். அவர் வரும் நாளில் நாங்கள் பல்லுக்குத்தி பிரட்டல் போடுவோம் சமையல் என்பது பாகத்திலில்லை ‘பண்’ணில் என்பார். அவள் பெரிய பண்ணைக்காரி என்போமோ ‘பண்’ என்ற சொல்லுக்குள் ஏராளம் சுவைகள் உண்டு.



உன்னுடைய ‘ஸ்ரேஷன் கதை’ சரியாக வந்திருக்கிறது அந்தக்கதை பற்றி நிறையப்பேசலாம் .நமது மொழியை சரியாகப்பிடித்து விட்டாய். இதுதான் சரியான பாட்டை.பயணம் சிறப்பாகட்டும். 

மெய்தான் என்னைப்பற்றி லா.ச.ராமாமிர்தம் ‘சங்குபுஷ்பம்’ என்று ஒரு கதை இருக்கின்றார் தினமணிக்கதிரில் பிரசுரமாகி இருக்கிறது. நண்பர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் நீண்ட நாட்களுக்குப்பிறகு நேற்று அனுப்பி இருக்கிறார். இந்த சிவகுமார் பற்றி நேரில் உன்னிடம் பேச வேண்டும் . லாசரா சங்குப்புஷ்பம் கதையில் என்னுடைய உரையாடலை அப்படியே பதிவு செய்கிறார். 
உங்கள் நாட்டு இலக்கியம் எப்படி இருக்கிறது ? 
உரை நடையைக் காட்டிலும் கவிதை நன்றாக இருக்கிறது
அங்கே புதுக்கவிதை மிகப்செழிப்படைந்திருக்கிறது.
அப்படியா?லாசரா
இதோ பாருங்கள் ஒரு புதுக்கவிதை 
‘துப்பாக்கியை தூக்கிவிட்ட ஒரு குழந்தையின் வாயில் கவிஞன் தன்னுடைய வார்த்தைகளை வைக்கிறான்” 
‘என் விரோதிகளை என் நண்பர்களை 
எனக்கு காட்டுவார்கள் 
அப்போது நான் சுடுவேன் ‘

இதில் பாருங்க அந்தப்பிள்ளக்கு தன் விரோதிகள் யார் என்று கூட தெரியாது. ஆனால் துப்பாக்கியை தூக்கிவிட்டது இதை விடப் பரிதாபம் என்ன வேண்டும் .எங்க நிலையே இப்படித்தான் இருக்கிறது. நண்பர் கூட யார் என்று அறியோம் இந்தக்கவிதையில் அதுவும் சூசகமாக உணர்த்தப்பட்டிருக்கிறது இவ்வாறு அந்தக்கதை எங்கள் இருவரின் உரையாடலின் உள்ளடக்கத்தைப் பதிவு செய்து கொண்டு செல்கிறது ஊருக்கு வரும்போது அதைப்படித்துப்பார்க்கலாம்.
மாளிகாகந்தையில் நீங்கள் இருக்கும் இடம் ரொம்ப அழகானது. அடேயப்பா சிங்கள கலாச்சார நிலையத்தை சுற்றிலும் எவ்வளவு மரங்கள். அன்று காலையில் நானும் நீஞ்களும் நடந்து பொரல்லை வீதியை அடைந்த நேரம் மனதுக்கு எவ்வளவு மலர்ச்சி எவ்வளவு பரவசம். நான் அறிந்தவரை மரங்களில்லாத பகுதி என்றால் நமது மக்கள் வாழும் பகுதிதான்;. நமக்கு மரங்களுடனான இடைவெளி கூடிப்போனது.மகான் வைக்கம் முஹம்மது பஷீர் ‘மரங்கள்’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். ஊருக்கு வரும் நாளில் படித்து ப்பார்க்கலாம்.

நேற்றிரவு தூங்கும் போது உன்னிடம் ஏரரளம் கதைகள் சொன்னேன் அதில் ஒன்று ரெண்டாவது எழுதப்பாரேன். கதை சொல்லிச்சொல்லி எனது காலம் போய்விட்டது.மாமியின் தேவைகளின் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது. ‘சின்னப்பணிக்கனயாவது இந்த ஜன்மத்தில் எழுதி முடிப்பேனா நான் அறியேன்.

நௌபலுக்கு அவன் விரும்பிய பெண்ணையே திருமணம் செய்து கொடுத்து விட்டேன் . மாமியோ மற்றப்பிள்ளைகளோ திருமண நிகழ்வில் கலந்து கொள்ள மறுத்து விட்டார்கள். தந்தை என்ற வகையில் என்னால் செய்யக்கூடியது அதுதான். உன்னைக்கூட அழைக்க முடியவி;ல்லை. கொஞ்ச காலம் போனால் எல்லாம் சரிப்பட்டுவிடும். நான் எனது தாய் தந்தையருக்கு செய்ததை எனது பிள்ளைகள் அச்சொட்டாக அப்படியே எனக்கு செய்திருக்கிறார்கள். இதில் மனம் நோக எதுவும் இல்லை இது இப்படித்தான் நடக்கும் என்று நபி (ஸல் ) அவர்கள் எப்போதோ சொல்லி விட்டார்கள்.
நவ்பலின் பிள்ளைகள் அவருக்கு கண் குளிர்ச்சியாக அமைய வேண்டும் நானும் பிரார்த்திக்கின்றேன் நீங்களும் பிரார்த்தியுங்கள்.

இப்பொழுது எங்களின் கடைக்குட்;டி மாஜிதாவும் காதலில் விழுந்திருக்கிறாள் பொடியன் ரொம் நல்ல பையன் என்று கேள்வி .மாஜிதாவைவிடவும் பல மடங்கு நல்ல பையன் என்று கேள்வி. எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் எதில் ஒற்றுமை இல்லையோ இந்த விடயத்தில் மாமாவும் பிள்ளகைளும் நல்ல ஒற்றுமை. காதலே நீ வாழ்க!

மெய்தான் நமது ஈழத்து இலக்கிய உலகில் மீண்டும் காப்பிய காலம் மலர்ந்திருக்கிறது. நண்பர் ஜின்னா சரிபுத்தீன் அவர்கள் தமிழ் நாட்டு நாவலான மஹ்ஜபீனை காவியமாக்கி இருக்கின்றார்.

1960களின் கடைசிக்கூறில் முஸ்லிம் முரசில் சிந்து நதிக்கரையினிலே நாவலாக எழுதப்பட்டு பின்பு நூலாக வந்து இன்று காப்பியமாகி முப்பரிமாணமடைந்திருக்கிறது. இன்னும் படிக்கவில்லை என்றாவது படித்து நானும் அதைப்பற்றி நாலு வரி எழுத வேண்டும என்று எண்ணியிருக்கின்றேன். என்னிடம் இருக்கும் புத்தகங்களை எனது வாழ்நாளில் நிச்சயமாகப் படித்து முடிக்கவும் முடியாது. இருந்தாலும் புத்தகங்களை வாங்கி அலுமாரியில் அடுக்குவதில் பெரும் பைத்தியமாகவே இருக்கிறேன்.

ஊருக்கு வரும்போது என்னுடைய எக்ஸ்பேர்ட் சச்சியின் ‘நுகம்’ மற்றும் கண்மணி குலசேகரத்தின் ‘ஆதண்டாள் கோயில் குதிரை’ இரு தொகுதிகளையும் மறக்காமல் எடுத்து வாருங்கள். கடந்து பத்து வருடங்களில் தமிழி;ல் வெளிவந்த சிறுகதைத்தொகுதிகளில் இவ்விரு தொகுதிகளுக்கும் ;சிறப்பான இடமுண்டு. அதில் வரும் ‘பீ ‘ கதை எப்படி?
கடிதம் நீண்டு போகிறது இந்த இடத்தில் ‘பிரேக்’ போடுகிறேன் வரும் போது பூபாலசிங்கம் புத்தக கடைக்கும் ஒரு நடை போய் வாருங்கள். இரண்டு நாட்களாக நாவுக்கு ருசியாக சமைத்து போட் அந்த சமையல்காரருக்காகப் பிரார்த்திக்றேன் 
இவ்வண்ணம் 
எஸ்.எல்.எம் மாமா

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...