Friday 25 May 2012

“ உடைந்த கண்ணாடி அல்லது ஏவாளின் தோட்டம் ”


ஓட்டமாவடி அறபாத்தின் “ உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி ”

 சிறுகதைத்தொகுதியை முன்னிறுத்தி 
சில குறிப்புகள்.

எல்லா அழகியலும் மறுக்கப்பட்ட புனைவுக்குள்ளிலிருந்து மொழியை பிரித்தெடுப்பது அசாதாரண முயல்வு.அதை அதுவாகப்பார்த்து விட்டு நகர்ந்து விடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது. மொழிக்கற்றைகளின் திரட்சி என்னிடம் தரப்பட்டிருக்கிறது.உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கம் குருவி –முட்களாலான கீரிடமொன்றினுள் பிளவுபடாமல் இறகொன்றினை தொட்டெடுக்கும் கவனிப்புடன் அறபாத்தின் பிரதியை அணுகினேன்.

இருள் என்ற பிரக்ஞை பூர்வமான காதல் வரிகளால் என்னிடம் அறியப்பட்டவர் அறபாத். உணர்வுகளின் மிகச்சிதிலமான நிலையியலை காட்சிகளாக படிமப்படுத்தப்பட்ட கவிதையது. எனது 13 வயதில் படித்த ஞாபகம்.

மிகநீண்ட இடைவெளியின் பின்னர் அடிக்கடி என்னுள் எட்டிப்பார்க்காத பிரதிகளிலிருந்து “ நீக்ரோவின் மனைவி ” வாசிக்கக்கிடைத்தது.பெண் உணர்வு சார்ந்த கட்டமைக்கப்பட்ட கருத்தியல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பிரதியது. மிக இயல்பான தருணங்களிலிருந்து மீள நினைக்கும் ஆண் பற்றியதான போர் மன நிலையும் தன்னை முழுமையாய் நீக்ரோவிடம் ஒப்படைத்து விட்டு உணர்வுகள் மறுதலிக்ப்பட்ட பெண்ணைப்பற்றியதாயும் கதை பின்னப்பட்டுள்ளது. “ நான் ” என்ற பாத்திரத்தேர்வை கதைக்குள் எட்டி நிற்கும் நபராகவும் வெறும் பார்வையாளராகவும் காட்டும் முயற்சியது.

 எனினும் அறபாத்தின் விடுபட முடியாத மன நிலையும் மௌனமான அந்தப்பெண்னின் பேசும் விழகளுமே கதையின் களமும் நிகழ்வுகளெனலாம். துன்பியலை மனதிலேற்றி காணும் நபர்களிடமெல்லாம் வாழ்ந்து விட்டு வரும் என் பாழ்பட்ட ரசனையை தொட்ட இடங்கள் நீக்ரோவின் மனைவி முழுக்க விரவியுள்ளது. சொந்த வீட்டுக்குள்ளேயே வாடகை கொடுத்து வாழும் பெண் மனதின் ஆற்றாமையை இதில் குறிப்பிட்டு நிற்கிறார்.

நேரங்களும், வாழ்வும் தரும் அவகாசத்தில் அடுத்து என்னை ஆகர்ஷித்த பிரதி “ ஓணான் ” கதைக்களம் ஜனரஞ்சகத்தனமான அரசியலின் இருண்ட பக்கங்களை தோலுரித்துக்காட்டும் முயல்வுகளெனினும் வயது ரீதியாக பரம்பரை இடைவெளி கொண்ட இரண்டு பெண்களைப்பற்றிய கதையிது. அறபாத் நிஜத்தன்மைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் கதை மாந்தர்களை நேரடியாக தரிசிப்பதிலிருந்து விடுபடவும் பிரதான பாத்திரங்களை கழுதையாகவும், ஓணானாகவும், ஆமைகளாகவும், மரமாகவும் உருவகித்து விடுகிறார். 

இது ராம கிருஷ்ணனின் அஃறிணைப்பொருட்கள் மீதான படிவை ஞாபகப்படுத்துவதால் இவரது அழகியல் புனைவுகளை அவையே நிரப்பி விட வேண்டிய தேவையும் உள்ளது. இருப்புக்கொள்ள முடியாமல் தளம்லுறும் கஸ்ஸா மூத்தம்மா தனது பசுவைத்தொலைக்க ஒவ்வொரு ஓணானுமே காரணம் என கலங்கி எனது பசு எங்கேடா ? என்ற வினாவுடன் மூர்ச்சையாகி விடுவதும் “சிரித்தால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என யாரோ எச்சரித்து நிற்பாட்டி இருக்க வேண்டுமென்ற” எள்ளல் நடையிலும் ஒன்றுக்கொன்று முரணாண கதை சொல்லும் பாங்கு அறபாத்திற்கு லாவகப்பட்டிருக்கிறது.

இதன் பிறகு உதிரியாக படிக்கக்கிடைத்தது “அரங்கம்”  பெத்தாக்களின் ஊடாக பழமையின் திரட்டுகளால் புள்ளி தொடுத்து புது உலகின் விம்பங்களை காண முனைகிறார் போலும். எடுத்தாளத்துணிந்த பொருளுக்கும், கதையாடலுக்குமான தொடர்பின்மை அங்கங்கே ஒட்டியும் கொள்கிறது. “ஓணானை” மீண்டும் படித்தது போலிருந்தது.

கட்டிருக்கமான மொழி நடையிலிருந்து தளர்வான நடையை நோக்கி வேர் விடும் தருவாயிலும் சில கதைகளை காண முடிகிறது. மிக எளிமையான மொழியாடல்கள் ஊடாக எந்தப்படைப்பும் அழகுபடுத்தப்படவும் அதிலுள்ள செறிவான தன்மையில் விடயங்கள் இலகுபடுத்தப்படவும் ஊடுபாபவும் வழியுண்டு. இயல்பான கதையாடல்களை விபரிக்கும் “வன்மம்” சிறுகதை பண்பாடுகளோடு இணைந்த ஒரு பொழுது சில்லாய் சிதறும் கடந்த நிகழ்வுகளை பதிகிறது. “சோமாவின் தனிமை” கலகத்தன்மையான பதிவு.

 உறவு நிலைகளிக்கிடையிலான சிதம்பல்கனை சொல்கிறது. பதப்படுத்தப்படாத நிலமொன்று எல்லா வகையான பயிரிடல்களுக்கும் எற்றது. அது தவறாக பயன்படுத்தப்படும் போது பச்சை மனமும், ஈரப்பதமும் உலரும் தன்மையை சோமா குறித்து சொல்லலாம்.

 “மூத்தம்மா”வில் தசாப்தங்களுக்கு முன்புள்ள எமது சுதேசிய கிராமிய பெண்களிடமிருந்த தீரமும், கலப்பற்ற சுயத்தையும் தனித்துவத்தையும் கட்டியெழுப்பிய விதம் பற்றிக்கூறுகிறார்.   “பிரமை” - இன்மையில் உயிர்ப்பான உணர்வுகள் தூண்டப்பட்டதில் உண்டான இயலாமையை பேசுகிறது. நிர்மலமான ஆண் மன நிலையில் இளம் பெண்னின் கரிசனையான அசைவுகளால் ஏற்படும் சலனங்களையும், தோல்விக்கணங்களையும் பதிகிறது “பிரமை.”

“துறவிகளின் அந்தப்புரம்” எதிர்பார்த்த அல்லது சர்ச்சைப்பட்ட அளவு ஆகர்~pக்கவில்லை.  இருந்தும் ஒரு பெண் பற்றி எழுந்த ஆண் குரல் என்பதனால் முக்கியப்படுகிறது . அத்துடன் ஆண் உடல், ஆண் சதையின் உள்ளடக்குகளும், கிளர்வுகளும் எனும் விடயத்தில் பரிச்சயமற்ற என்னிடம் இந்தக்கதைகளின் அன்னியத் தன்மை ஓர் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கலாம்.

 எனினும் புனிதத்துவமான கற்பிதங்களை நோக்கி விரல் நீட்டியமையிலும், குரல் எழுப்பியமையிலும் அறபாத் முக்கியப்படுகிறார். அத்துடன் இவற்றை பிரித்தறிவதில் அவருக்குண்டான தெளிவு பற்றியும் மிரமிக்கின்றேன். “மோட்சம்” பிரதியின் இறுதிப்பகுதி முக்கியப்படுகிறது கதை நகர்த்தல் முறையிலும் பெண்ணுடல் சார்ந்த மிகைபடாத இயம்புதல் நியாயப்படுத்தலிலும்  அறபாத்தின் மேவுகை அவரை தனித்துக்காட்டுகிறது.

நாட்டாரியலின் அழகுச்சுவை வாய் மொழிப்பாட்டுக்குள் தேங்கிக்கி;;டக்கிறது. நாடோடிப்பாடல்களும், தெருப்பாடல்களும் தரும் அனுபவம் பல வேளை புத்தக அடுக்குகளுள் கிடைப்பதில்லை. “மூத்தப்பாவின் மாட்டு வண்டி” பிரதி முழுவதும் விரவிய கிராமியமும், கதை நபர்களின் யாதார்த்தப் பாங்கும் அழகு தருவன. 

சிறுவர் மன நிலையும் அவர்களின் வண்ணமயமான (ஒளி நிறைந்த கண்களைப் போல) உலகின் உளவியலும் கூர்மைபெற்வறு வரும் நிலையில் அலியின் தெறிப்புகள் நிறைந்த அப்பாவித்தனமான நம்பிக்கைகள் பரிதவிப்பை சொல்கின்றன. “ஜின்” சிறுகதை பரிதாபம் நிறைந்த ஒன்று “திசைகளின் நடுவே” ,மிகத்தீவிரமாக அரசியல் பர்ர்வை. “தனிமை” துறவு நிலையின் அபத்தம் குறித்தும் பெண்ணின் ஆற்றாமையில் உள்ள வழிகளையும் விரவுகிறது.

“ஏவாளின் தோட்டத்தில் கனிகள் இன்னும் மிச்சமிருக்கின்றன.” உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி தொகுப்பின் சிம்ம சொப்பணம் இதுவெனலாம். மிகையான அழகியலும், அறபாத்தின் மொழியியலின் புதிய பரிமாணத்தையும் வெளிக்காட்டுகிறது. அவரது புனைவின் தொடர்ச்சியின் நீட்சியை குறிப்பதாய் இதைச்சொல்லலாம் தனது அக உலகு சார்ந்த அந்தரங்கமான உணர்வுகளின் கிளர்வை பெண்னை பாம்பாக உருவகித்து கூற முற்பட்டிருக்கிறார் இதிலுண்டான காமத்தையும் அது சார்ந்த தேடலையும் இருளின் வர்ணம் கொண்டு தீட்டிய ஓவியம் போல புலனின்றி காட்சி தருகின்றது.

 அவரது “இருள்” கவிதையைப்போல. இரவும் அதன் அலாதியான இன்பங்கள் குறித்தும் எப்போதும் பிரமிப்புடன் இருக்கிறார். “அதன் மேல் பாந்தம் கமழ அருகில் சென்றேன். பொறுக்குவாரற்ற நாவற்பழங்கள் சிதறிக்கிடந்த மரத்தின் நிழலை மிதித்தபடி பாதங்கள் நகர்ந்தன. நாகத்தின் ஸ்தூல வாசம் என் நாசியில் விடைத்தது. நாக ரசம் நாவில் ஊறித்திளைத்தது…..” மிகத்தேர்ந்த சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

தனது மொழியை விரவ விடும் துணிவு இருக்கிறது. தான் சார்ந்த அனுபவத்திலும் உறுதியாய் இருக்கிறார். ஆனாலும் உள் மன உணர்வுகளை பதிவு செய்ய தவறுகிறார். காதல் வர்ணனைகளில் வார்த்தைகள் சலிப்பூட்டக்கூடியனவாயுள்ளன. 

உடைந்து விழும் நுண்ணனர்வு கொண்ட பிரதிகளுக்கு முயற்சிக்கலாம். மிக மென்மைனயான இயற்கை வர்ணணை உணர்வுத்தளம்பல் பற்றி ஆண்களால் எதிர்கொள்ள அல்லது முகம் பர்ர்க்க முடிவதில்லை. அது அவர்களின் இயலாமையின் வெளிப்பாடு. ரமேஷ் பிரேம் தமது காதலியை வர்ணிக்க மறுக்கின்றனர். வாசிப்பவர்கள் அவள் மேல் காதல் கொண்டு விடக்கூடுமென. இத்தகைய பலவீனமான நுண் இழையங்களாலும் ஆண்கள் உள்ளனர்தான். 

- சலனி 

1 comment:

  1. இறைவனின் திருப்பெயர் கொண்டு

    தங்கள் மீது அவனின் சாந்தி உண்டாக

    என்றும் நலமோடு,

    ஓட்டமாவடி அறபாத்திற்கு!

    இறைவன் நலம் நாடுவானாக, தங்களைத் தொடர்பு கொள்ள முயன்று நவீன உலகில் தோற்றுப் போனேன், இதையாவது படிப்பீர்களே என்பதால், எழுதுகிறேன். ஒஹ் ஒரு கொலைகாரனோடு பேச இஸ்டமில்லையோ என்னவோ! சரி அதை விடுவோம், காலம் அதைத் தீர்மானிக்கட்டும், குறையறிவு மனிதர்களுக்கு என்ன தெரியப் போகிறது, ஒன்று முஸ்டீனை அவ்வளவு எளிதில் யாரும் புரிந்து கொள்ள முடியாது.

    சிறைச்சாலை வாழ்க்கை என்பது இறைவன் எனக்களித்த வரம், பெரும் பேறு, எனது வாழ்வில் அது பொற்காலம், அங்குதான் நிறைய எழுதக் கிடைத்தது, மௌனப் போரும் புன்னகை ஆயுதமும் எனது முதல் தொகுதி கவிதையில், அடுத்து ஒரு சிஞகதைத் தொகுதி 'ஹராங்குட்டி' 14 சிறுகதைகள், பெரும்பாலும் பிரதேசம் சார்ந்தது, ஆத்மாவிடம் கேட்டேன் 'வீச்சுள்ள ஒரு எழுத்தாளன் எனது சிறுகதைத் தொகுதிக்கு குறிப்பெழுத வேண்டும்' என்று அவர் சொன்னார் 'ஓட்டமாவடி அறபாத் நல்லம் அவரிட்ட குடுங்க' என்று, தங்களின் நினைந்தழல், ஆண்மரம் ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் வாசித்திருக்கிறேன், ஆக ஆத்மா சொன்னது மிகப் பொருத்தம். ஆதலால் எனது சிறுகதைத் தொகுதிக்கு தாங்கள் ஒரு குறிப்பெழுத ஒப்புதல் பெறவே தங்களை அழைத்தேன், பிரதேசம் சார்ந்த கதைகள் என்பதால் தங்களுக்கு இலகுவில் புரியும், ஓகே என்றால் சொல்லுங்கள் ஆனுப்பி வைக்கிறேன், முடியாவிட்டாலும் சொல்லுங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காதல்லவா! ஜுலை மாதமளவில் வெளியிடும் எண்ணமிருக்கிறது

    என்றும் அன்புடன்

    முஸ்டீன்
    25.05.2012

    ReplyDelete

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...