Tuesday 10 January 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


எங்கள் தேசம் பத்திரிகையில் தொடராக வெளிவரும் நினைவுக்குறிப்புகள்  
 
 
தொடர் - 5
 
நான் எப்போது எழுதத்தொடங்கினேன் என்பது நினைவில் இல்லை. வாசிக்கத் தொடங்கியது படிந்திருக்கின்றது. கடைகளின் முன்றலில் தொங்கும் விளம்பரப் பதாகைகளை எழுத்துக்கூட்டி வாசித்ததில் ஆரம்பித்தது.

அவசரமாக கடைக்குச்சென்றாலும் நாலு கடையை அண்ணாந்து பார்த்து வாசித்து விட்டு வருவதற்கிடையில் போதும் என்றாகிவிடும். கீழே கிடக்கும் துண்டுக்காகிதங்கள்,போஸ்டர்கள் அறைகுறை வாசிப்பின் தீனிகளாயின.

எனக்கு தூரத்து சொந்தம் பல்கீஸ் மாமி. அவவின் கையில் எப்போதும் குமுதம் ஆனந்த விகடன் இருக்கும். தலைப்பையும் படங்களையும் பலமுறை வாசிப்பேன்.

மாமி அசந்து தூங்கும் தருணங்களுக்காக காத்திருந்து தலைமாட்டிலிருந்து அந்தப்புத்தகங்களை உருவியெடுத்து வாசித்ததுண்டு. எதையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் ததும்பிய அந்த வயதில் பள்ளிப்புத்தகங்கள் மட்டும் கசந்தது எப்படி என்ற வித்தை இன்று வரை புரியமாட்டேன் என்கிறது.

ஆறாம் ஆண்டில் படிப்பதற்கு என் மாமா கபூர் மௌலவியின் வீட்டிற்கு உம்மா அனுப்பி விட்டா. அவரின் புத்தக அலுமாரிக்குள் நிறைய புத்தகங்கள் கட்டுக்கட்டாக இருக்கும். பெரிய பெரிய அட்டைகள். இஸ்லாமிய புத்தகங்கள், கதைப்புத்தகங்கள். புரிந்ததோ இல்லையோ அங்கிருந்து அக்கரைப்பற்றுக்கு செல்லும் வரை அந்தப்புத்தகங்களை வாசித்தேன்.

அப்துர்ரஹீமின் புத்தகங்கள் அங்குதான் அறிமுகமாயின. லைலா மஜ்னு,மஹ்ஜபீன் காவியம்,மும்தாஜ் சாஜஹான் வரலாறு மிக இலகுவாக புரிந்து கொள்ளும் மொழியில் இருந்தன. அக்காலத்தில் வாசித்ததில் மனதில்  நின்ற பாத்திரங்கள் அவை.

1984 என் நினைவில் படிந்திருக்கின்றது. தமிழரும் முஸ்லிம்களும் இரண்டறக்கலந்து வாழ்ந்த பொற்காலம். பிட்டும் தேங்காய்ப்பூவும் என்பார்களே அதை விடவும் நெருக்கமான உறவுக்காலம்.

ஒருவரோடொருவர் பின்னிப்பிணைந்து வாழ்ந்தது என்றால் மிகப்பொருத்தம்.
 மாமாவின் வீட்டிலிருந்து அவருக்கு தெரியாமல் எட்டு மைல்கள் நடந்து வந்தேன்.தன்னந்தனியே வனங்களை தாண்டி இருட்டில் நடப்பதென்பது ஆரம்பத்தில் தெம்பாக இருந்தது. நேரம் செல்லச்செல்ல மிருகங்களின் பறவைகளின் வினோத ஒலிகளும் குளத்திலிருந்து எழும்பும் அலைகளும் என்னை உறைய வைத்தன. 

அச்சத்தில் பெருங்குரலெடுத்து அழுதபடியே வாப்புப்பாவின் கடைக்கு வந்து சேரும் போது உம்மா இஷாத்தொழுகைக்கு வுழச்செய்ய செம்புடன் நின்றா.

எனது வாப்புப்பாவுக்கு ஒரு தோட்டமிருந்தது. ஐந்து ஏக்கர் விசாலமுள்ள தோட்டம் தோட்டம் முழுக்க பலா, தோடை,கொய்யா, மாதுள,அன்னமினா,என மரங்கள் அடர்ந்த பழமுதிர்சோலை.

வலது கோடியில் சின்னதாக ஒரு ஆட்டுப்பட்டி, வகிடெடுத்து விட்டாற்போல் மையத்தில் கோழிகளின் உறைவிடம். நாட்டுக்கோழிகளின் கும்மாளம் செக்கலுக்குள் கூடடைந்து குதூகலிக்கும்.

இரவில் பாம்புகள் கோழிகளை குறி வைத்து வரும், பகலில் நரியும் கீரிப்பிள்ளையும். வாப்பா அடிக்கடி எழுந்து ஆட்டுப்பட்டியையும், கோழிக் கூண்டையும் லைட் அடித்துப்பார்த்து விட்டு வருவார். 

அவரின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு ஒரு கோழியையோ ஆட்டையோ பாம்பு தீண்டியிருக்கும். இது எப்போதாகிலும் இடம்பெறும்.

ஒரு நாள் இரவு படுத்து கண்ணயரும் நேரம்.கோழிகளின் கூப்பாடு காதைக் கிழித்துக்கொண்டு வாடிக்குள் விழுகிறது. வாப்பா எவரெடியை எடுத்துக்கொண்டார். பக்கத்தில் அயர்ந்து தூங்கிய முத்து மாமாவையும் எழுப்பிக்கொண்டார்.அவர் கையில் பெரிய தடி.

கோழிக்கூண்டுக்குள் எவரெடியின் கண்கள் துளாவி ஒரு மூலையில் குத்திட்டு ஸ்தம்பித்து நின்றன.மறு மூலையில் கோழிகள் ஒடுங்கி அஞ்சி நின்றன.அவைகளின் கண்கள் மருட்சியில் மின்னின.ஒரு பேடு சிறகுகள் உதிர்ந்து செத்துக்கிடந்தது.

அடுத்த மூலைக்கு எவரெடி திரும்ப விரிந்த படத்துடன் நாகம்.கண்கள் ஜ்வலித்து நிலத்திலிருந்து இரண்டடி எழுந்து நின்றது.அதன் அகன்ற படம் அன்று பார்த்த முதல் நாக தரிசனம் பாம்பின் மீதிருந்த அபரித அசட்டு தைர்யங்களை துடைத்து எரிந்தது அதன் சீற்றம்.

சரியான மொத்தம் மச்சான் இதுக்கு நாம மட்டும் போதாது. மம்மலியயும் கூப்பிடுவம்.

உம்மாவை நான் எழுப்பி மம்மலிமாமாவை எழுப்பிக்கொண்டு வரும் மட்டும் படம் விரிக்கப்பட்டு சினத்துடன் சீறிக்கொண்டு மூலையில் நின்றது நாகம். 
வாப்பா கூண்டை  திறப்போம் என்றார். கூட நின்றவர்கள் வேண்டாம் என்றனர்.கோழிகள் பயத்தில் முனுமுனுத்தபடி கரைந்தன.

வாப்பா என்ன நினைத்தாரோ உம்மாவிடம்  ‘லாம்பெண்ண’ போத்தல தா என்றார். உம்மா ஓடிப்போய் ஓடி வந்தா .வாப்பா மண்ணெய் திரவத்தை அண்ணாந்து பார்த்தபடி தன் வாய்க்குள் ஊற்றினார். பின் பாம்பின் படத்தை நோக்கி ஆக்ரோஷமாய் சீறித்துப்பினார். பீய்ச்சியடிக்கப்பட்ட மண்ணெய் அதன் வழவழப்பான மேனியெங்கும் தகதகவென ஓடி இறங்கி முடிவதற்குள் படத்தை சுருட்டிக்கொண்டு பின் வழியால் நழுவியது.

மச்சான் லாம்பெண்ண பட்டது இனி பயமில்ல ஓடாது அடியுங்க முத்து மாமா கத்தினார். டோர்ச் வெளிச்சங்கள் ஏகத்திற்கும் பின் வழியால் திரும்பின.இருவரின் கையில் ஓங்கிய தடி.

வாப்பா உள்ளே சென்று தாப்புக்காட்ட அது பின்வழியால் நழுவவும் சட்சட்டென அடிகள் விழுந்தன. கயிற்றில் கட்டி மரத்தில் தொங்கப்போட்டு விட்டுப்படுக்கப்போயினர்.விடிந்ததும் வீரக்கதைகள் பேச அது சாட்சியாக அவர்களுக்கு தேவைப்பட்டது.

ஒரு நாள் இரவு ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த மலைப்பாம்பு ஒன்றை இப்படித்தான் இரண்டாக வெட்டி இரு வேறு இடங்களில் வெட்டிப்புதைத்தார்கள். பிற்காலத்தில் எழுதப்பட்ட பாம்பு குறித்த என்னுடைய  பாத்திரங்களின் விபரிப்பும் அவை கதைகளில் ஊடுறுவியதற்கு காரணியாகவும் அமைந்தது இந்தச்சம்பவங்களே.

பாம்பை இப்போது பார்த்தாலும் அழகும் பிரமிப்பும் இருக்கிறது. அதன் அமைதியான ஊர்தலில் பொதிந்திருக்கும் மரணத்தின் மௌனம் இரகசியமாக கிலி கொள்ளச்செய்வது.அழகிய விஷத்தை அடக்கிக்கொண்டு அது எவ்வளவு ஆர்ப்பாட்டமின்றி ஊர்ந்து செல்கிறது.

மௌனமே ஆபத்து நிறைந்தது என்பதை பாம்புகளிடம் கற்றுக்கொள்ள வைத்தது.இந்த பருவத்தில்தான்

ஊஞ்சல் இன்னும் ஆடும்......

எங்கள் தேசம் இதழ் : 212


  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...