Monday 24 December 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


 தொடர் : 30
 ண்மைக் காலத்திலும் காட்டில் தங்கியது நினைவில் நிற்கிறது.அது காஞ்சிலங்குடாக்காடு. மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிபாய்ந்த கல் வீதியில் இருபது மைல்களாவது பயணிக்க வேண்டும்.முன்னர் புலிகளின்  தனி இராட்சியமாக இருந்த பூமி முஸ்லிம்களின் பல்லாயிரக்கணக்கான வயல் நிலங்கள் இங்குதான் உண்டு.

 இருபது வருடமாக இந்த வயல்களில் விதை விதைத்து அறுவடை செய்து அனுபவித்த புலிகளும் அவர்களின் அருவருடிகளும் கடைசி வரைக்கும் முஸ்லிம்களுக்கு குத்தகை கொடுக்காமலேயே செத்து மடிந்தனர். இப்போது அதைவிடவும் கொடுமை. ஆதி அந்தமாய் காடு வெட்டி வயல் செய்து வந்த அந்த மக்களின் வயல்களுக்கு சட்டப்படி ‘பேர்மிட்’ தரமுடியாது என்று மிரட்டுகின்றார்கள்.இருபது வருடம் ‘ஓசியில்’ வயல் செய்த கூட்டத்திற்கு அதனை சூரையாட வேண்டும் என்ற பேராசை வந்து விட்டது. சில அதிகாரிகளின் பேருதவி இவர்களுக்கு துணை உண்டு.

 உரம் எடுப்பதற்கும் வயல் செய்கை பண்ணுவதற்கும் நாய் ஓட்டம் ஓட வேண்டியுள்ளது. .தங்களது பூர்வீக நிலன்களை பாதுகாக்க இன்று பெரும் போராட்டமொன்று மௌனமாக அரங்கேறியுள்ளதை அறிந்தவர் அறிவர். மாட்டுப்பட்டிகளும் அனந்தம். முன்பு அங்கிருந்த மாடுகளை விட்டுவிட்டுத்தான் ஓடிவந்தனர். அதையெலல்hம் தமிழீழம் கேட்டு துவக்கு தூக்கியவர்கள்

 எடுத்துக்கொண்டார்கள். ஆட்டுப்பட்டிகள்,கோழிப்பண்ணைகள் என ஏகப்பட்ட கால்நடைகளை அபகரித்துக்கொண்டுதான் விரட்டினார்கள். 

சுற்றி வர ஆறும், வயலும் சார்ந்த ரம்யமான காடு. சைக்கிள் செல்ல முடியாத இடம் வரை சைக்கிளில் சென்றோம். ஒரு புளிய மரத்தடியில் சைக்கிள்களைப் போட்டுவிட்டு கால்நடையாக நடக்கத்தொடங்கிய போதுதான் தூரம் தெரிந்தது. தூரத்தில் காடு எம்மை இரு கரம் விரித்து அழைப்பது போன்ற உணர்வு. நடக்க நடக்க வயல்வெளிகள் பெருகிச்செல்ல காடு பின்நோக்கி ஓடிப்போனது. 

கையில் பொதியுடன் இரண்டு மைல்கள் நடப்பதென்பது மகா கொடுமை.   அதுவும் இரவில் தங்கியிருந்து வேட்டைக்குப்போகவென்று புறப்பட இருந்தோம். யானைக்கூட்டம் பற்றி அழைத்துப்போன நண்பர் எதுவும் சொல்லவில்லை.நாங்களும் புறப்படும் அவசரத்தில் அது பற்றிக்கேட்கவில்லை .

 இரவு உணவுக்கு முயல் கறி சமைக்க முடியுமா என்பதிலேயே குறியாக இருந்தோம். வயற்காடுகளில் கதைத்துச்சிரித்து கும்மாளமிட்டபடி நடந்தோம் .ஈற்றில் பாதுகாப்பற்ற ஒரு வாடியில் கொண்டு போய் விட்டார்கள் . அப்போது நேரம் மாலை ஐந்தரை மணி இருக்கும். சூரியன் சடுதியாக மேற்கு வானின் அடிவாரத்தில் சரிந்து கொண்டிருந்தான். கால்கள் வலியெடுத்தன. காட்டிற்குள் செல்லும் எண்ணம் ஈடேறவில்லை. தெரியாத்தனமாக ஆர்வக்கோளாறினால் நிலவு காலத்தில் வந்திருக்கின்றோம்.ஒரு உடும்பைத்தானும் பிடிக்க முடியாத காலம். அந்த வாடியில் சமைத்து சாப்பிட்டவுடன்,நண்பர் ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.

 நாம தங்கியிருக்கிற வாடியிலிதான் போன மாசம் ஒருவர யான அடிச்ச. ஒரு ஆள் மௌத்து மத்தவர்ற கால் உடைஞ்சிட்டு .ஏனென்றா அவர் செத்த மாதிரி படுத்திருக்கிறார். ஊரில் பரபரப்பாக பேசப்பட்ட விடயம். அது நிகழ்ந்த களத்தில் நாம் பொறியில் அகப்பட்டது போல் நிற்பது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.உடைந்த காலுடன் வீட்டில் படுத்தவரை நான் பார்த்து விட்டு வந்திருந்தேன். யானை எப்படி வந்தது அதன் மூர்க்கம் நெல் மூட்டைகளை அது உறிஞ்சிக்குடித்த இலாவகம் உள்ளிட்ட எல்லாவற்றையும் அவர் ஒரு திகில் படம் பார்ப்பதைப்போல சொல்லி முடித்தபோது அது பெரிதாக என்னில் தாக்கம் செலுத்தவில்லை.முகம் குப்புறப்படுது;திருந்த அவரைக்காப்பாற்றியது அந்த நெல் மூட்டைதான் என்றார்.

இடுப்புக்ழன்று போனது வயல்  அறுவடைக்காலம் என்பதால் தூரத்தில் வாடிகளில் லாந்தர் விளக்குகளில் மினுக்கம் தெரிந்ததது.நுளம்புகள் புழுதியைப்போல் வந்து அப்பிக்கிடந்தன.சித்தாலேப தைலத்தை கால் முழுக்க பூசிக்கொண்டு உறவுக்காரர் சொன்ன திகில் படத்தின் காட்சிகள் அரங்கேறுவதான பிரேமை என்னைத்தொற்றிக்கொள்ள கால்களுக்குள் தலையை புதைத்தபடி இரவைக்கழித்தேன்.

 இடைப்பட்ட பகுதியில் கும்மிருட்டு யானை அருகில் வந்து ஸலாம் சொன்னால்தான் தெரியும்.யானைவரும் வழியில் வயற்காரர்கள் காவல் நின்றார்கள்.விடிய விடிய நெஞ்சைப்பிடித்தபடி அந்த வாடிக்குள் குந்தியிருந்தோம்.சிலர் முயல் வேட்டைக்குப்போய் ஈற்றில்  அரைக்கிலோ பெறுமதியான முயலொன்றுடன் வந்தார்கள். 

காலையில் ஆற்றுக்குப்போய் ஒரு குளியல் போட்டோம். முன்பு குளித்த ஏனைய ஆறுகள் போல் ரசித்துக் குளிக்க முடியாத நீரோட்டம். என்றாலும் பகற்பொழுது வரை நீர் யானைகளைப்போல் நீந்திக்களைத்து கரையில் படுத்து,மறுபடியும் ஆற்றில் குதித்து, தூண்டிலில் மீன் பிடித்து அந்தக்காட்டை அதிர வைத்தோம். மாலையானதும் வரிந்து கட்டிக்கொண்டு காட்டை விட்டு கிளம்பிவிட்டோம்.

காடுகள் திகிலையும் ஆச்சரியத்தையும் மரணவலியையும் பாதுகாப்பையும் தந்தன என்பதை நினைக்கையில் எவ்வளவு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது.


எங்கள் தேசம் 235                          ஊஞ்சல் இன்னும் ஆடும்….

Friday 14 December 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்



29

நடுக்காட்டில் திடீரென ஒரு ட்ரக்டர் சேற்றில் புதையுண்டது.இறங்கித் தள்ளிப் பார்த்தோம். முடியவில்லை. பெட்டியின் இரு ரயரும் ட்ரக்டரின் முன் ரயரும் முழுமையாக சேற்றினுள் அமிழ்ந்திருந்தன.அச்சம் தொற்றிக்கொண்டது. யானைகள் வந்து போன கால் தடங்கள் சேற்றில் புதையுண்டிருந்தன. 

இராட்சத இலைகளாக அதன் காலடிகள் பூமியில் அச்சடித்து காய வைத்தது போல் எங்கும் நிறைந்திருந்தது. திரும்பிச்செல்லவும் இயலாத தூரத்திற்கு வேறு வந்து விட்டிருந்தோம்.ரைவர் மிகவும் சாமர்;த்தியமானவர்.புதையுண்ட ரயரை வெளியே எடுக்க மிகுந்த பிரயத்தனமெடுத்தார். குழுப்பணி செய்யப் பயிற்றுவிக்கப்பட்ட நாம் காடுகளில் அலைந்து நாறும் கம்புகளும் வெட்டி வந்து மெசின் ரயரை மேலெழுப்பி பயணத்தைத்தொடர்ந்தோம்

.வில்பத்துக்காட்டின் தொடர்ச்சி என்றார்கள் புத்தள நண்பர்கள்.புத்தளத்தில் ஆற்றுக்குப்போவதற்கு ஒரு நாளை ஒதுக்கிவிடுவார்களாம்.உடுத்திருக்கும் ஒரு சாரம் மட்டும்தான். காலையிலிருந்து மாலை வரை நீருக்குள்ளேயே நேரம் கழியும்.சாப்பிடுவதும் நீருக்குள் அமர்ந்தபடி. ஈரச்சாரனுடன் கரையில் வந்து தொழுது விட்டு மறுபடியும் நீர்க்காகம் போல் தண்ணீரில் குதித்து விடுவார்கள்.ஆற்றைக்கண்டவுடன் எங்களுக்கும் அப்படித்தான் தோன்றியது.

காடு பெருகியபடிச்சென்றது.அதன் போக்கில் நாங்களும் அள்ளுண்டு சென்றோம். ஈற்றில் அழகான ஆற்றோரம் இறக்கி விட்டு காடு அவ்விடத்திலேயே அமர்ந்து கொண்டது.

மாலை வெய்யிலில் ஆற்றின் முதுகில் சிற்றலைகள் ஆரோகணித்துச்செல்லும் அழகே தனி அழகு.ஆற்றின் மறுகரையிலும் அடர்ந்த வனாந்திரம் விரிந்து கிடந்தது.இரு மருங்கிலும் இராட்சத மரங்கள். கூடாரங்களை அடித்து பொருட்களை இறக்கி வைத்தோம்.

 மாலைக்குள் ஒரு குளியல் போட்டு ஆளுக்கொரு வேலையாக இழுத்துப்போட்டு சமையல் வேலைகளில் ஈடுபட்டோம். விறகு பொறுக்க சிலர் சென்றனர்.விறகுக்கா பஞ்சம். நெருங்கி வரும் இரவை சமாளிக்கவும் அது கொண்டு வரும் குளிரை எதிர்க்கவும் விறகு தேவை.குவியலாக கொண்டு வந்து குவித்தார்கள்.பனி மழை பொழியத்தொடங்கியவுடன் தீ கங்குகள் மேலெந்து அதை உலர வைத்தன. கூடாரத்தைச்சூழவும் நடுக்காட்டில் அமர்ந்தபடி நள்ளிரவு வரை கதையளந்தோம்.

ஆற்றில் நீண்ட நேரம் விளையாடியதால் களைப்பு மேலிட்டது.அடிக்கடி ஒரு பிளேன்றீ தேவைப்பட்டது.இந்தக்கால சுற்றுலாக்களில் மதுவும்,இசையும் வாஜிபு என்பது போல் நம்மவர்கள் மாற்றிவிட்டார்கள்.

ஆடம்பரமில்லாமல் இறைவனின் அற்புதங்களை அனுபவிக்கவும் இரசிக்கவும் இயலாத நவநாகரீக மோகத்தினுள் நாம் விழுந்து இறங்கிக்கொண்டிருக்கின்றோம்.பார்ப்பதற்கும் அனுபவிப்பதற்கும் இந்தப்பூமியில் இயற்கை கொட்டிக்கிடக்கின்றது. 

வீதிகளில் கும்மாளமிட்டு ஆடிப்பாடி தெருக்களில் குடித்து மிருகங்களைப்போல் அலைவதைத்தான் பெஷன் என்கிறார்கள்.சுற்றுலா என்கிறார்hகள்.காலிமுகத்திடல் குடைக்காட்சிகளும்,காலி வீதியின் கடற்கரை காட்சிகளும், ஹம்பாந்தோட்டை வரையிலான இறுசல் காடுகளின் நிழல்காடுகளில் அரங்கேறும் அசிங்கங்களும் படைத்தவனை மறந்த சுற்றுலாக்களாக மாறிவிட்டதை நமக்குக்காட்டுகின்றன.

தூங்கிய சற்றைக்கெல்லாம் காவலுக்கு நின்றவர்கள். அலறியபடி வந்தார்கள்.நெருப்புக்கங்குகள் ஓவொன்று எழுந்து நின்றன.என்னவென்று எழுந்து வந்தோம். ஆற்றின் மறுகரையில் யானையின் பிளிறல். செவிட்டில் அறைந்தாற்போல் விழுந்தது.மங்கிய நிலவொளில் கருப்பனின் அசைவு தெரிந்தது.

 அமைதியான அதன் வாழிடத்தை குலைக்க வந்த குளவிக்கூட்டமாய் எங்களை அது பார்த்திருக்க வேண்டும். நாங்கள் என்ன  சும்மாவா இருந்தோம்? பதினைந்து இள இரத்தங்களின் கொண்டாட்டக்கூச்சலில் அமைதியின் இப்பிடமான  வனத்தின் அவஸ்தை யானையின் உருவில் வந்து நின்றது.  காடே அதிரும்படி பிளிறியது. மரங்களை சகட்டு மேனிக்கு உரசியபடி சன்னதம் ஆடும்  அதன் மூர்க்கம் எங்களை கிலி கொள்ளச்செய்தது.

 எரியும் நெருப்புக்கட்டைகளை தூக்கி காட்டி போவென்று ஒருவர் சைக்கினை செய்தார்.யானைக்கு தீ என்றால் பயம். புத்தளம் நண்பரிடம் ஒரு துவக்கும் இருந்தது.ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். என்றார்.வனவிலங்கு திணைக்களத்தின் பாதுகாவலர் அவர்.யானைக்கும்  எமக்குமிடையே தடையாக இருப்பது ஆறு மட்டும் தான் அது தன்பாட்டில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்து.

கூடாரத்திற்குள் சிலர் நடுங்கியபடி ஒடுங்கிக்கிடந்தனர்.தொடை நடுக்கம் என்பார்களே அதை அன்றுதான் அனுபவித்துப் பார்;த்தோம். கூடாரத்தை சுற்றிலும் நெருப்பு அரணாக பச்சை விறகுகள் எரிந்து கொண்டிருந்தன. யானையின் கோபம் தனி வதாக இல்லை. அவ்வவ்போது அதன் எதிர்ப்பை மறு முனையில் நின்றபடி வெளிப்படுத்தியது.அடர்ந்த வனத்தின் கிளைகள் மூர்க்கமாக ஆடியதை நிலவொளியில் பார்த்தபடி நின்றிருந்தோம்.

 மனதை விட்டும் அகலாத ரம்யமாக காட்சி அது. அமைதியாக ஓடும் பிரமாண்டமான ஆறு.அதன் மறுகரையில் சன்னதம் ஆடும் யானைக்கூட்டம்.குளிர்ச்சியான நிலாக்கீற்றின் மினுக்கம் ஆற்றின் முதுகில் ஜிகினா காட்டியபடி…மிக இளமையான காற்று. 

அச்சத்திலும் மலைக்க வைத்த இறைவனின் விந்தையான படைப்பின் இரகசியம் என்னை மெய் மறக்கச்செய்த தருணங்களில் இதுவும் ஒன்று. மறுநாள் பொழுது புலரும் வரை தூங்கவில்லை.அறுப்பதற்கு கொண்டு வந்த ஆடு மட்டும்  எந்தக்கவலையுமின்றி ஆற்றோரம் அசைபோட்டபடி நின்றிருந்தது.

எங்கள் தேசம் : 235                                                                 ஊஞ்சல் இன்னும் ஆடும்……..



Sunday 2 December 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்



                      28


ருவர் மட்டும் வரும்படி சைகையில் காட்டினார்கள்.நான்தான் சென்றேன். ட்ரவலின் பேக்கை வைத்து விட்டு வரும்படி  மறுபடியும் கத்தினான். கைகளை உயர்த்தும்படி மற்றொருவன் கூச்சலிட்டான்.கைகளை உயரே தூக்கியபடி இராணுவ முகாம் அண்டையில் சென்றேன். 

துருவித்துருவி விசாரித்து விட்டு அலசி அலசி சோதனையிட்ட பின்பு மற்றவர்களையும் கைகளை உயர்த்தியபடி வரும்படி சைகை காட்டினார்கள்.எல்லோரையும் சோதித்து விட்டு ம்.. ஏறுங்கள் ஜீப்பில் என்றார்கள் .

 மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் ஆறு மைல்கள் நடக்க வேண்டும் என்ற மனக்கஷ்டம் மறந்து போனது. ஆர்வமுடன் பாய்ந்து ஏறினோம். இரானுவத்தினர் திறந்த ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வாழைச்சேனைக்கு வந்தார்கள்.

ஓட்டமாவடி பசாரில் சில கடைகளில் நிற்பாட்டி எங்களை தெரியுமா என அடையாளம் கேட்டார்கள்.ஓம் எங்கட ஊ+ருப்பொடியன்கள் என்றவுடன், சாவன்னாட சந்தியில் இறக்கி விட்டுப்போனார்கள்.தெரியாது என்றால் இருக்கவே இருந்தது வெற்று ரயர்கள், போட்டு எரித்து விட்டுத்தான் மறு வேலை

.ஏனெனில் அக்காலங்களில் புலிகள் முஸ்லிம்கள் போல் வேடமிட்டும் ஊருக்குள் நுழைந்து வேவு பார்த்து வந்தனர்.இராணுவத்தினதும் புலனாய்வுப்பிரிவினதும் கண்களில் மண்னைத்தூவி விட்டு அடிக்கடி வந்து போவதால் தொப்பி போடுவதும் முஸ்லிம்கள் தம் அடையாளங்களை பின்பற்றுவதும் பெரும் சவாலாய் இருந்தது.ஜீப்பில் பாய்ந்து ஏறிய மகிழ்ச்சியை இந்த விசாரணைகள் துடைத்தெறிந்தன.

வீட்டுக்கு வந்தவுடன் மரணத்திற்குத்தப்பி வந்தவர்கள் என்ற பிரமிப்புடன் ஊரே திரண்டு வந்து வியப்புடனும் ஆறுதலுடனும் பார்த்து விட்டுச்சென்றது.

மரத்தால் விழுந்தவனை மாடு முட்டியது போல் ,அன்று மாலையே அபத்தமான செய்தி காட்டுத்தீ போல் பரவத்தொடங்கியது. முள்ளிவெட்டவான் கடைக்கு முன்னுள்ள புளியமரத்தில். வாப்பாவும் தம்பியும் தொங்குவதாகவும் முஸ்லிம் ஆக்கள் காட்டுப்பாதையால் தப்பி புனானைக்கு வந்து கொண்டிருப்பதாகவும் அந்த வதந்தீ வேகமெடுத்தது 

இந்தக்காலம் புலிகள் முஸ்லிம்களின் இரத்தத்தால் யாகம் நடாத்திய துர்க்காலம்.உறவினர்கள்,ஊர் மக்கள் என பெரும் படை பொலிஸ் இரானுவத்தின் உதவியுடன் முள்ளிவெட்டவானுக்கு புறப்பட ஆயத்தமானோம்.

வாப்பாவுக்கும்,தம்பிக்கும் அப்படியொன்றும் நடக்கவில்லை என்றும் காட்டுவழியால் தப்பி வருகிறார்கள் என்றும் பிந்திய செய்தி கிடைத்து.அலைந்துழல்தலின்  முதல்படி இங்கிருந்துதான் ஆரம்பமாயிற்று.

நாங்கள் நேசித்த தோட்டத்தை, கடையை, கதைக் களமான புளியமரத்தை, ஆடுகளை,மாடுகளை,நீந்தி விளையாடிய ஆற்றை, வயல் வெளியை, ஓடையை,கோல்டன் மீன் நீந்தும் குளத்தை,திராய் செடி நோண்டும் வயல் வெளியை  பனை மரங்களை,காடுகளை தலை தாழ்த்தி மேயும் கோழிகளை,அவ்வப்போது எட்டிப்பார்க்கும் பாம்புகளை,முற்றத்தில் கூட்டமாய் இறங்கி மேயும் மணிப்புறாக்களை இனிய புல் வெளிக்கனவுகளை இழந்து வெறும் கோதுகளாக திரும்பினோம்.

காடு என்றவுடன் மற்றுமொரு நினைவுகளையும் மனம் உசுப்பிப்பார்க்கிறது.
காடுகள் மனிதனுக்குத்தரும் படிப்பினைகள் அனந்தம்.

அற்புதமான,ஆனால் அழகான அனுபங்களை காடுகள் நமக்குத்தருகின்றன.அப்படியொரு இனிமையான நினைவுகளை  யுத்தம் நின்றவுடன் காடு எனக்கு வழங்கியது.

2006ம்ஆண்டு என நினைக்கின்றேன்.கொழும்பில் வேலை பார்த்தபோது எனது நிறுவனத்தினால் ஒரு சுற்றுலா செல்ல ஏற்பாடுகள் நடந்தேறின

.நுவரெலியா,ஹம்பாந்தோட்ட பொத்துவில், பாசிக்குடா, காலி,என இடங்களை தெரிவு செய்த போது எல்லாமே சென்று இடங்கள் என ஓரங்கட்டப்பட்டன.ஈற்றில் புத்தளம் தெரிவு செய்யப்பட்டது.

மூன்று நாள் பயணம்.புத்தளத்திலிருந்து எலுவான்குளத்திற்குச்சென்றோம். எலுவான் குளம் வரை எமது வாகனத்தில் செல்வதென்றும் அங்கிருந்து காட்டுவழிப்பயணத்திற்கு இரண்டு ட்ரக்டர்களில் செல்வதென்றும் தீர்மானித்தபடி எலுவான்குள நண்பர் ட்ரக்டர்களுடன் தயாராக இருந்தார். ஆற்றுக்குப்போக ஒரு எட்டு மைல் இருந்தது. பொருட்கள் ஏற்றப்பட்ட ட்ரக்டர் காட்டுப்பாதையால் உறுமியபடிச்சென்றது. 

யானைகளின் விட்டைகளும் காலடித்தடங்களும் அவ்வப்போது கண்களில் பட்டன. வனத்தின் அடர்த்தி நீக்கமற எங்கும் நிறைந்திருந்து.கண்ணுக்கெட்டிய தூரம் வரை இறுசல் காடே எம்மை அழைத்துச்சென்றது.இப்படியொரு வனத்திற்குள் வருவது இது தான் முதற்தடைவ. இதற்கு முன்பு சென்ற காடுகளில் இவ்வளவு அடர்த்தியும் விசாலமும் இல்லை.சூரியக்கண்களால் பூமியை பார்க்கவே முடியாதபடி சில இடங்களில் மரங்கள் பிண்ணியபடி காட்சியளித்தன.  புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

எங்கள் தேசம் : 234                                                               ஊஞ்சல் இன்னும் ஆடும்……..



Friday 23 November 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


தொடர்- 27
தைக்காப்பள்ளியில் வேன் நிற்கும் வரை பாதரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். முகத்தில் பிறை வடித்தில் அழகிய அம்சமான தாடி,சாந்தம் தவழும் புன்னகை பூசிய முகம்.மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் திடகாத்திரமான பார்வை.பாதர்  பள்ளி நிறுவாகத்தினரிடம் எங்களை ஒப்படைத்துவிட்டு எங்கள் கரங்களை பற்றிக்குலுக்கினார்.

 வழியில் ஒரு கூட்டம் முஸ்லிம் ஆக்கள வெட்டுவதற்கென்று கத்தியுடன் நிற்பதாக தகவல் கிடைத்துள்ளது. எங்களையும் கண்டு அப்படியே விட்டால் பெரிய இனக்கலவரம் வெடிக்கும் என்ற நல்லெண்ணத்தினால் இவ்வளவு பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்திருக்கின்றார்.அவர்தான் பாதர் ரொபர்ட் கிங்ஸ்லி.

 நினைவுத்தடங்களில் அழிக்க முடியாத நன்றியுடன் நினைவில் மணக்கும் பெயர்.பிற்காலங்களில் மட்டக்களப்பு மண் ரோசா இல்லத்தில் அவர் இருப்பதாக சொன்னார்கள்.

 சில வருடங்களுக்குப்பின் மட்டக்களப்பிலிருந்து வந்த மைக்கல் கொலின் அவர்களை ஆசிரியராகக்கொண்டு  வெளிவந்த தினக்கதிர் பத்திரிகையில் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். அதைப்படித்து விட்டு அவர் என்னைத்தேடி வீட்டுக்கு வந்ததும்,அளவளாவிச்சென்றதும் இன்று போல் உள்ளது.

 ஆனால் பதினைந்து வருடங்களைத்தாண்டிவிட்டது என்பதை நினைக்கும் போது காலத்தின் அசுர வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத கையறு நிலை நெஞ்சில் பாறாங்கல்லாய் அழுத்துகின்றது.
  
எங்களுடன் வந்த காத்தான்குடி நண்பர்கள் நின்றுவிட்டார்கள். சுகைப் ஹாபிழின் வீட்டில் பகலுணவு தந்தார்.மிகவும் மென்மையானவர்.எங்கள் பயணத்தின் வழிகாட்டியும் மூத்தவரும் அவர்தான். சதா வுழுவுடன் இருப்பார். கல்லூரியில் எப்பொழுதும் குர்ஆனுடன் இருப்பவர். வுழுவை அடிக்கடி புதுப்பிக்கும் அவரின் நீள் சட்டையின் கை ஓரங்களில் மஞ்சல் படர்ந்திருக்கும்.

 ‘பள்ளிக்குருவி’ என்றுதான் நாங்கள் அவருக்கு செல்லப்பெயர் வைத்தோம். அவரை வீதியில் கடைத்தெருவில் கடற்கரையில்,மைதானத்தில் எங்குமே காணமுடியாது நீக்கமற பள்ளியில் இருப்பார். கூச்ச சுபாவம் உள்ளவர். மஞ்சந்தொடுவாயிலுள்ள அவரின் வீட்டிற்குப்பக்கத்தில் உள்ள பள்ளியில் இரண்டு நாள் கழித்து சுஜுதில் இருக்கும் போது அவரையும் சுட்டுக்கொன்று விட்டதாக தகவல் கிடைத்தது.

பாதை நெடுகிலும் பயணத்தில் ஒரு வார்த்தையேனும் வீணாகப்பேசாமல் குர்ஆனை ஓதியபடி அவர் நடந்து வந்தது என் நினைவில் காலத்தால் அழியாமல் நிற்கிறது.

அன்று பகலுணவுக்குப்பின் அங்கிருந்து புறப்பட்டு மாலை ஏறாவூரில் நண்பர் ஜாபிரின் வீட்டில் தங்கினோம்.இருள் பரவ ஆரம்பித்து விட்டது மனித நடமாட்டங்களற்ற வீதியில் நாய்களைத்தவிர துப்பாக்கி ஏந்திய பொலிஸ் மற்றும் இரானுவத்தைத்தவிர வேறொன்றையும் காணவில்லை. இன்னும் எட்டு மைல்கள் நடக்க வேண்டும். கால்கள் வீங்கி கொப்பளித்துவிட்டன. அவர் விண்டோஜன் வாங்கித்தந்தார்.இரவு முழுக்க பூசினோம்.

மறுநாள் காலையில் வாழைச்சேனை நோக்கி நடந்தோம். கூட்டமாக வந்த போது இருந்த தெம்பு மறைந்து விட,காத்தான்குடியிலும்,ஏறாவ+ரிலும் நண்பர்கள் உதிர்ந்து விட,எஞ்சியவர்கள் அச்சம் மேவிய மனங்களை பொத்தியபடி நடந்தோம்.காத்தான்குடியில் நரவேட்டையாடிய புலிகள் ஓரிரு தினங்கள் கழித்து ஏறாவூரிலும் சுட்டும் வெட்டியும் வேட்டையாடினர்.நண்பர் சபீக்கின் குடும்பத்தில் எல்லோரையும் இழந்திருந்தான்.

அவனும் அவனது சகோதரர் அமீனுத்தீன்(முன்னால் அரசியல் துறை விரிவுரையாளர் பேராதனை பல்கலைக்கழகம்) அவரும்தான் தப்பிப் பிழைத்ததாக கேள்வியுற்றேன். நண்பர் அதன் பின் ஆமியில் இணைந்து புலிகளை அழிக்க திடசங்கற்பம் பூண்டு புறப்பட்டுச்சென்றார்.இப்படி கல்வியை இடைநடுவில் முடித்துக்கொண்டவர்வர்கள் பலர்.ஜாபிரின் குடும்பத்திலும் இந்த இழப்புக்கள் அவனையும் கல்லூரியை விட்டு நிறுத்தியது. நண்பர் ஜாபிரை பிற்காலங்களில் கொழும்பில் சந்தித்தேன். அங்கேயே திருமணம் முடித்துள்ளதாக சொன்னார். 

வழியில் மனிதர்களின் நடமாட்டம் அவ்வளவாக இல்லை.கும்புறுமூலை சந்தியில் மறு ஆபத்து காத்திருந்தது.வழி நெடுகிலும் இராணுவம் துப்பாக்கியுடன் நின்றிருந்தாலும் இளவட்டங்களான எங்களில் கரும்புள்ளியாய்; அவர்களின் பார்வை தொடர்ந்து வந்திருக்க வேண்டும்.முகாம் அருகில் நெருங்குவதற்கு முன் இராணுவத்தினர் கத்திக்கொண்டு எமை நோக்கி ஓடிவந்தனர்.ஓரடி முன் நகர்ந்தாலும் ரவை மழை பொழியக் காத்திருந்தது.

அசைவற்று கால்கள் அப்படியே தரித்து நின்றன.வியர்வையில் உடல் தெப்பமாயிருந்தது.மரணத்தின் தப்பிக்கமுடியா சுறுக்குக்கயிறு எங்களின் தலைக்கு மேல் தொங்கியது. கைகளை உயர்த்தும்படி அங்கிருந்து கத்தினார்கள். 
எங்கள் தேசம்     233                                                                                                     ஊஞ்சல் இன்னும் ஆடும்.....

Tuesday 13 November 2012

கௌரவத் திருடர்கள்


கடந்த மாதங்கள் களப்பணிகளில் ஈடுபட்டிருந்தேன்.வறுமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.

 சமுர்த்திக் கொடுப்பனவு,திவிநெகும,கமநெகும, புரநெகும போன்ற திட்டங்கள் கிராமங்கள் தோறும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அடிமட்ட மக்களின் பொருளாதார மேம்பாட்டு எழுச்சிக்கு இத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்;படாலும்,மேற்படி திட்டங்கள் தகுதியான மக்களுக்கு சென்றடைகின்றதா என்பது கேள்விக்குறி. 

கிராம சேவகர்கள்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புறம்பாக அண்மையில் பொருளாதார அமைச்சினால் உள்ளீர்க்கப்பட்ட பட்டதாரி பயிலுநர்களும் இச்சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மனைப் பொருளாதாரத்தை வீடுகள் தோறும் அறிமுகம் செய்யும் திவிநெகும திட்டத்தின் ஊடாக பயனாளிகளுக்கு அரசின் உதவிகள் சென்றடைவது கேள்விக்குரியாகவே உள்ளது.

சில கிராம சேவகர்களும்,சமுர்த்தி உத்தியோகத்தர்களும் இந்த உவிகள் தகுதியான மக்களை சென்றடைவதில் பெரும் முட்டுக்கட்டையாக இருந்ததை அவதானித்தேன்.அவர்களுக்கு நெருங்கியவர்களின் வாசலுக்கு வலிந்து செல்லும் உதவிகள்,ஏழைகளின் குடிசைகளை திரும்பிப்பார்க்கவில்லை என்ற யதார்த்தம் என்னை விசனப்படுத்தியது. மக்களின் மனக்குமுறல்கள் என் முன் சிதறி வெடித்தன.

வீடற்றவர்களுக்கென அரசாங்கம் உதவி செய்தது.வீடுகளை அமைத்துக்கொள்ள ஓர் இலட்சம்  மானிய அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட்டன.எமது பிரதேசத்தில் நானறிந்தவரை மூன்று கிராம சேவகர்களைத்தவிர மற்றவர்கள் ஏழைகளின் வயிற்றில் தாராளமாக அடித்திருக்கின்றார்கள். ஓர் இலட்சம் ரூபாயில் ஆளாளுக்கு அவர்களின் வசதிகளுக்கேற்றபடி பணத்தைப்பிடுங்கியதை நினைக்கும் போது இவர்களை விட கல் நெஞ்சக்காரர்கள் யாருண்டு என நினைக்கத்தூண்டியது. 

ஒருவர் இருபதாயிரம், இன்னொருவர் பத்தாயிரம்,இன்னொருவர் ஐயாயிரம் என பறித்தெடுத்துள்ளார்கள்.வங்கிக்கணக்கில் பணம் வந்தவுடன் உரியவர்களுக்கு செய்திகளை இவர்களே கொண்டு சேர்ப்பிப்பார்கள்.வீடு கட்ட மானியத்திற்கு விண்ணப்பித்தவர்கள் வங்கிக்கு வந்தவுடன் கிராம சேவையாளரின் ஆள் வங்கியில் காத்திருப்பார். அல்லது நேரிடையாக கிராம சேவையாளரின் அலுவலகத்திற்கு சென்று பேரம் பேசிய தொகையை கொடுத்து விட வேண்டும்.

அரசாங்கத்தின் எண்ணக்கருக்களுக்கு தடையாக நிற்பவர்கள் இத்தகைய இலஞ்சப்போர்வழிகள்தான்.வீடுகள் முடிக்கப்படாமல் அரையும் குறையுமாக காட்சி தருவதைக்கண்டேன். கேட்டால் ஜி.எஸ்மார்கள் மீது அப்பாவிச்சனங்கள் சாபம் விடுகிறார்கள். வீடுகளுக்கு கப்பம் பெறுவது மட்டுமல்ல அந்த வீட்டை நிருமாணிக்கும் கொந்தராத்துப்பணியையும் சில கிராம சேவகர்கள் மேற்கொண்டுள்ளது தெரிய வந்தது. 

மலிவு விலைக்கு பொருட்களை வாங்கி வீடுகளை முடித்துக்கொடுத்திருக்கின்றார்கள். தரமற்ற பொருட்கள், பழைய இற்றுப்போன மரக்குற்றிகளை சில வீடுகளில் அவதானித்தேன். ஏனிப்படி ஏழைகளின் வாழ்வில் விளையாடுகின்றார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களிடம் கேட்டேன். நீங்கள் ஏன் இவர்களுக்கு எதிராக மேலிடத்திற்கு புகார் தெரிவிக்கக்கூடாது?  அதற்கு அவர்கள் சொன்ன பதில் 
‘என்ன செய்ய புலி வால புடிச்சதப்போல எங்கட நில, மேலிடத்திற்கு சொன்னா எதிர்காலத்தில் எங்களுக்கு கிடைக்கும் நிவாரணங்கள் மட்டுமல்ல பொதுத் தேவைகளுக்கு ஒரு கையொழுத்துக்கூட போட்டுத் தரமாட்டார்கள்.பலி வாங்குவார்கள்” என்று குமுறினார்கள்.

மேலிடங்களுக்கு தேனும் கருவாடும் கொடுத்து மடக்கி வைத்துள்ளார்கள்.இங்குள்ள மேலதிகாரிகள் கூட இத்தகையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத்தயங்குவதையும் மக்கள் கூறி விசனப்பட்டனர்.

 மேலதிகாரிகளுக்கு எழுத்து மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சி சொல்ல அஞ்சுவதால் அவர்களாலும் இந்த இலஞ்சப்பேய்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவோ, விசாரணை செய்யவோ முடியாது என்பதை பொது ஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்பாவிகளுடைய இந்தப் பலவீனங்களை பயன்படுத்தி சில விதானைமார்கள் இலஞ்சத்திலும் முறைகேட்டுப்பங்கீட்டு விளையாட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர். எதற்கெடுத்தாலும் இலஞ்சம் எதிர்பார்ப்பு என்ற நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கும் இந்நிலை கிராமங்களிலிருந்துதான் ஆரம்பிக்கப் படுகின்றது.

 சில கிராம சேவகர்கள் குறு நில மன்னர்களாக செயற்பட்டு வருகின்றர். சில கிராம சேவகர்கள் தாம் நியமிக்கப்பட்டிருக்கும் பிரிவுகளுக்கு வருவதே இல்லை என மக்கள் என்னிடம் முறையிட்டனர். எப்படி உங்கள் பணிகளை நிறைவேறு;றுகின்றீர்கள் எனக்கேட்டேன் .சில  கிராம சேவகர்களால் நியமிக்கப்பட்ட  உதவியாளர்கள். இவர்கள்தான் உத்தியோகப்பற்றற்ற கிராம நிலதாரிகளாக கடமையாற்றுவதையும் அவதானித்தேன்.

இது அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணான செயற்பாடாகும்.அரசியல் செல்வாக்குத்திமிறினால் ஆளும் கட்சியினரின் ஆதரவு என்ற மமதையினால் சில கிராம சேவகர்கள் பொது மக்களின் வயிற்று நெருப்பை ஊதி ஊதி அணல் எழுப்பி சூடேற்றுவதை எதில் சேர்ப்பது. மக்கள் எழுச்சி கொண்டு இத்தகையவர்களுக்கு எதிராகப்போராடமல் இந்த திருடர்களின் அட்டகாசத்தை அடக்கவோ ஒழிக்கவோ முடியாது. ஏழைகளின் வயிற்றில் அடித்து தின்று பழகியவனுக்கு இதுவெல்லாம் ஒரு பெரிய கதையாக இருக்காது. 

நான் சந்தித்த பல ஏழைத்தாய்மார்களின் முடிவற்ற பிரார்த்தனை அநியாயம் செய்த கிராம சேவகர்களையும் சமுர்த்தி உத்தியோகத்தர்களையும் உடனடியாக தாக்காவிட்டாலும் நின்று கொல்லும் என்பது வலுவான நம்பிக்கை. சில நேரம் அவர்களின் மனைவி மக்களைக்கூட தெருவில் நின்று அந்தப்பிரார்;த்தனைகள் பிச்சை எடுக்க வைக்கலாம்.

 இறைவனின் விதியை நாம் எப்படி சொல்ல முடியும்.ஏனெனில் அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனைகள் இறைவனிடம் எந்தத்திரையுமின்றி நேரிடையாக சென்றடைகின்றது என்பதை இந்த இலஞ்ச மகா பாதகர்கள் புரிந்து கொண்டால் மட்டுமே சமூகத்திற்கு உய்வு உண்டு .

Monday 29 October 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்



தொடர்- 26

எது நடக்கக்கூடாது என்று ஆசைப்பட்டோமோ அது ஈற்றில் நடப்பதற்குரிய அட்டவணைகள் நடந்தேறின.யுத்தம் எழுப்பிய புழுதி சனங்களின் முகங்களில் மரணமாய் அப்பிக்கிடந்தது.தெருவெங்கும் மூட்டை முடிசு;சுகளுடன் ஓடிக்கொண்டிருந்தனர்.சிலர் எங்களை நின்று நிதானித்துப்பார்த்து விட்டு ஓடினர்.சிலர் தன்னையும் உறவினர்களையும் காப்பாற்றும் நோக்கில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஓடினர்.

பிள்ளைகளின் குய்யோ குய்யோ என்ற இரைச்சல் வேறு விதியை அடைத்தபடி நீக்கமற எங்கும் பரவியிருந்தது. வாகனங்கள் எதுவும் பாதையில் தென்படவில்லை.முஸ்லிம் கிராமமான காத்தான்குடியை அண்மித்து விட்டதாக எங்களுக்குள் இருந்து சத்தம் வந்தது. 

அந்தக்குரலில் மிகுந்த உற்சாகம் கரைபுரள்வதைக் கேட்டேன். காத்தான்குடிக்கு முன் ஆரையம்பதி இருக்கின்றது.தேற்றாத்தீவு இருக்கின்றது. மனம் கணக்குப்போட்டபடி கால்கள் விரைய தேற்றாத்தீவு வந்து விட்டது. 

  தேற்றாத்தீவுக்குள் நுழைந்தவுடன் சில இளைஞர்கள் எங்களை சுற்றி வளைத்தனர். மனம் அந்தரமாய் அடிக்கத்தொடங்கியது. முஸ்லிம்களின் நிழல் கூட வெளியில் உலவாத மரண நேரமது. எங்களை வழிமறித்த இளைஞர்களின் முகத்தில் எந்தச்சலனமும் இல்லை. 

“உங்கள சேர்ச்சுக்குள்ள கூட்டிவரச் சொன்னார்கள் வாங்க’ என்றனர்.மறுப்பதற்கும் ஓடித்தப்பிப்பிழைக்கவும் எந்த முகாந்திரமும் இல்லை.அல்லாஹ்வையன்றி காப்பாற்றும் அனுக்கிரகமும் இல்லை. எங்கள் மனங்களில் வாழ்வின் முற்றுப்புள்ளி இடப்பட்டதான அச்சம் மேலேக அதரங்கள் கலிமாவால் துடித்தன. மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பென நடந்தோம். சேர்ச்சுக்குள் மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது.

மரங்களால் நிரம்பியிருந்த சேர்ச்சில் வழி நெடுக பூமரங்கள் தலையாட்டியபடி நின்றன.வானத்தை மறைத்தபடி எழுந்து நிற்கும் மரங்களை இரசிக்க மனமின்றி உயிரைப்பாதுகாக்க என்ன வழி என்ற சிந்தனையில் நடக்கத்தொடங்கினோம். 

சேர்ச்சுக்குள் அகதிகள் என்பது சற்று நேரத்திற்குப்பின் தெரிய வந்தது. எங்களையும் ஒதுக்குப்புரமாக உள்ள ஓர் இடத்தில் அமரச்சொன்னார்கள். யார் எம்மை அழைத்தது? ஏனிந்த இரகசிய ஏற்பாடு ? இதற்குள் எங்களை ஏன் அடைத்து வைத்துள்ளார்கள்? ஆளையாள் ஐயத்துடன் கேட்டு விடை தெரியாமல் திருதிருவென்று தரையில் அமர்ந்திருந்தோம். 

தொப்பிகளை கழற்றுங்கள் என்றார்கள்.பின்னர் தேனீர் தந்து விட்டுப் போனார்கள்.

குடிக்கும்போது ஜாபிர் சொன்னார். இது கடைசி சொட்டு தேனீர் நம்மள ஆற்றங்கரைக்கு கொண்டு போய் வெட்டப்போறானுகள். …

அதைக்கேட்டு சிறியவர்கள் அழுதார்கள்.சிலர் சமாதானப்படுத்தினாலும் மனம் அடித்துக்கொண்டது.

எமக்கு முன் இலைகுழையால் மூடப்பட்ட ஒரு வேன் நின்றிருந்ததை அப்போதுதான் பார்த்தோம். 

சுடாரென அந்த வேனில் இருந்து கொத்துக்கள் உருவப்பட்டன.வெள்ளை வேன் பளிச்சென எமது கண்களில் பீதியாய் நின்றது.

அந்த வேனில் எங்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்கள்.பாதரும் கூடவே வந்தார். அப்பபோதுதான் அவரைப்பார்;த்தோம் எங்களை வேனிலிருந்து தலையை மேலே உயர்த்தாமல் இருக்கும் படி சைகை காட்டினார். ஏதோ விபரீதம் நடந்திருக்கின்றது. அல்லது நடக்கப்போகிறது.வழியில் யாரும் பேசவில்லை. மௌனமாய் வேனுக்குள் புதைந்திருந்தோம்.கடைசி சொட்டு உயிர் வாழ்தலின் அர்த்தம் மகா யுகமாய் எம்முன் விரிந்து சென்றது.

இளமையின் கனவுகள் எங்கேயோ ஒரு வனாந்திரத்தில் மண்ணில் புதையுண்டு போவதை நினைக்கையில் மனம் ஓவென்று அலறத்தொடங்கியது. எமது பிரிவால் கதறியழும் உம்மாக்களின் கண்ணீர்.

உறவினர்களின் தவிப்பு.நண்பர்களின் பதகளிப்பு.கிராமத்தின் சோக்காட்சி இதற்காகப் பலிக்குப் பலிவாங்க அப்பாவிகளை குறிவைத்துக்காத்து நிற்கும் எமதூரின் சில இளைஞர்களின் கோபாக்கினி எல்லாமே மனசுக்குள் வேகமாய் ஓடிக்கொண்டிருக்க கண்கள் என்னை அறியாமல் நீரை உகுத்தன. 

ஆறையம்பதி தாண்டியதும் வேனை நிறுத்தி, இரும்புத் தைக்காப் பள்ளிவாயலுக்கு விடும்படி சாரதியை பணித்தார்.அப்போதுதான் சுயநினைவுக்குத்திரும்பினோம். காத்தான்குடியை அண்மித்து விட்டோம். 

இதோ கண்தொடும் தூரத்தில் மினாராக்களில் எங்கள் உயிர் பறக்கவாரம்பித்தது.பாதரின் குரலில் மலக்குள் மௌத் இல்லை. கருணையும் அன்பும் ததும்பிய மனிதத்தின் குரலினைக்கேட்டோம்.

எங்கள் தேசம்     232                                                                                                     ஊஞ்சல் இன்னும் ஆடும்.....

Monday 15 October 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்



தொடர்- 25

நோன்பு காலத்தில் சாமத்தில் எழுப்ப வரும் பாவாமார்களை அச்சமூட்ட அக்காலத்தில் சில இளைஞர்கள் இருந்தனர்.சில்மிசம் செய்வதே இவர்களின் தொழில்.சில பாவாமார்களுக்கு நள்ளிரவில் நடமாடுவது அச்சம் என்பதை இவர்கள் எப்படியோ கண்டு பிடித்து  விடுவர்.ஆளரவமற்ற தெருக்களில் இந்த இளைஞர் கூட்டம் வெள்ளைத்துணியால் தங்களை முழுமையாக போர்த்தியபடி  நள்ளிரவில் மறைந்திருப்பர்.

ரபானை தட்டிக்கொண்டு வரும் பாவாமார்களின் முன் இவர்கள் திடீரென எழும்பியவுடன் ரபானை வீசி விட்டு விழுந்தடித்து ஓடிய பாவாமார்களின் கதைகள் அனந்தம். நோன்பு முடியும் வரை இந்தக்கதைகள் சுவாரஸ்யமாக தெருக்களில் பேசப்படும்.

2011 இல் முஸ்லிம் கிராமங்களில் கிறீஸ் மனிதனின் நடமாட்டம் பாவாமார்களின் பிரசன்னத்தை சற்று குறைத்து விட்டது.கிறீஸ் மனிதனின் பெயரால் பல தில்லுமுல்லுகள் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

பாவாவையும்,அப்துலையும் சுட்டுக்கொன்ற பின் இந்திய இராணுவம் பசாருக்கு வந்து காதர் டெக்ஸ்சின் முன் வராந்தாவில் சதா தைத்தபடி இருக்கும்  சீனட்டி டைலரையும் சுட்டுக்கொன்றது.   

அவர் ஜீவிதமே சாரம் மூட்டுவதிலும் பொலிதீன் தைப்பதிலும் போய்க்கொண்டிருந்தது. அவரையும் தையல் மெசினில் இருக்க சுட்டுக்கொன்றார்கள்.

வெறிபிடித்த மிருகங்களைப்போல் இந்திய இராணுவம் அந்நாட்களில் நடந்து கொண்டது. சொந்த தேசத்தின் மக்களை வேட்டையாடும் அந்திய படையை தடுக்கவியலா கையகலாத்தனத்தில் இலங்கை இராணுவமும் பொலிசும் முகாம்களுக்குள் முடங்கப்பட்டிருந்தனர்.

91 இலும் இப்படியொரு திகிலை எதிர்கொண்டது நினைவில் ஆடுகிறது.
கிழக்கில் பொலிஸ் நிலையங்களையும் இராணுவ முகாம்களையும் ஏக காலத்தில் புலிகள் முற்றுகையிட்டனர்.நிராயுதபாணியாக்கிவிட்டு பொலிசாரை சரணடையச் செய்தனர்.சரணடைந்த சிங்கள மற்றும் முஸ்லிம் பொலிசாரின் கதைகள் இன்னும் எந்த ஆணைக்குழுவிலும் கணக்குக் காட்டவில்லை.

முஸ்லிம் பொலிசாரில் சிலர் தப்பி வர, சிலருக்கு என்ன நடந்திருக்கும் என்பது சர்வதேசத்தின் ஊகத்திற்கு விட்டுவிடுவோம்.புலிகள் மனித குலத்திற்கு ஏதாவது நல்லது செய்திருப்பார்களா என்று நினைத்துப்பார்க்கின்றேன்.தமிழ் மக்களுக்கும் செய்யவில்லை,முஸ்லிம் மக்களுக்கும் செய்யவில்லை.இந்த நாட்டிற்கும் அப்பாவிகளுக்கும் தீயதைத்தவிர எதையும் செய்யவில்லை என்பதே மகா உண்மை.30 வருட போராட்டத்திற்கு அவர்கள் பெற்றுக்கொண்டது ஒரு முதலமைச்சர் ஒரு பிரதி அமைச்சர்.

முற்றுகை கலவரத்தில் நாடே கொதித்துக்கொண்டிருந்தது. நான் அட்டாளைச்சேனை விடுதியில் இருந்த காலம். எங்களுக்கு உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு இரண்டு நாட்களாக கடைகள் திறக்கவில்லை. விடுதியில் 100க்கு மேற்பட்ட மாணவர்களை சமாளிப்பதில் நிருவாகம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியது. தலையை பிய்த்துக்கொள்வதைத்தவிர இரண்டு நாட்களும் வேறொன்றும் செய்ய முடியவில்லை.

வாகனங்கள் ஓடவில்லை. வெளிமாவட்டங்களில் இருந்து சாமான்கள் கொண்டு வரும் லொறிகளும் வரவில்லை.அம்பாறைக்கு சென்று சாமான்கள் வாங்கி வரவும் எவ்வித முகாந்திரமுமில்லை. மூன்று நாட்களின் பின் விடுமுறை வழங்குவதென்ற தீர்மானத்திற்கு நிருவாகம் வந்தது. தென்னிலங்கை,மலைநாட்டு நண்பர்கள் அம்பாறை வழியாக ஊருக்குப் போவதென்று தீர்மானித்தாயிற்று.அவர்களை இரண்டு ட்ரக்டரில் ஏற்றி அம்பாறை டவுணில் கொண்டு போய் விட்டார்கள்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் விசிக்கும் எங்களுக்கு ஆபத்து காத்திருந்தது. கல்முனைக்கு  ஒரு வேனில் அடைப்பட்டு பதினைந்து பேர் புறப்பட்டுச் சென்றோம். காத்தான்குடி.ஏறாவூர், வாழைச்சேனை,மீராவோடை ஓட்டடாவடி என பல ஊர்களும் ஐக்கியப்பட்டு கல்முனையில் வந்து இறங்கினோம்.கல்முனை வெறிச்சோடிக் கிடந்தது.

மட்டக்களப்புக்கு வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. அங்கிருந்து மருதமுனைக்கு நடப்பதென்று முடிவாயிற்று. மருதமுனையிலிருந்து வாகனங்கள் கிடைக்கவில்லை. அன்றிரவு மருதமுனை எங்களை வரவேற்று பள்ளியில் உறங்குவதற்கு இடமும் ,உணவும் தந்து உபசரித்தது.அங்கும் இரவில் பதற்றம் நிலவியது எந்நேரமும் புலிகள் ஊருக்குள் ஊடுருவக்கூடும் என்ற அச்சம்.

இராணுவம் முன்னேறி வந்து கொண்டிருப்பதாக தகவல்.வந்தது. களுவாஞ்சிக்குடி இராணுவத்தின் கையில் விழுந்து விட்டதாக இரவில் பேசிக்கொண்டார்கள்.

மறுநாள் காலை சுபஹ் தொழுது விட்டு புறப்படுவதென்று தீர்மானித்தாயிற்று.காலையில்  களநிலையை கவனித்து வர நீலாவணை வரைக்கும் பள்ளி நிருவாகிகளில் ஒருவர் போய் பார்த்து விட்டு வந்தார்.

புலிகளின் நடமாட்டம் இல்லை. இருந்தாலும் சண்டை நடப்பது இப்ப ராணுவத்திற்கும் அவங்களுக்கும்தான் நம்மல ஒண்டும் செய்யமாட்டாங்க..நீங்க கவனமா போங்க தம்பியள் என்று வழியனுப்பி வைத்தார்கள்.

மூட்டை முடிச்சுக்களுடன் நடந்தோம்.அறுபது மைல்களை நடக்கவேண்டும் என்பதெல்லாம் அந்த வயதில் பெரும் சுமையாக அழுத்தவில்லை. ஊருக்குப்போக வேண்டும் என்பதே குறிக்கோள். இடையில் பதுங்கியிருந்த ஆபத்துக்களை சிந்தித்துப்பார்க்காத  பருவம்.

பெரிய நீலாவணை தாண்டியதும் மனிதர்களின் நடமாட்டத்தைக் காணவில்லை. ஆமியும் இல்லை புலியும் இல்லை சண்டையும் இல்லை.மௌனத்துள் புதைந்திருந்தன எல்லைகள். சண்டை நடந்து ஓய்ந்து களைத்துக் கிடந்தன கிராமங்கள்.வீதிகளில் ஷெல்கள் குத்திய பள்ளங்கள்.சாமான்கள் சிதறிக்கிடந்த கடைகள் திறந்தபடி ஆவென்று தெரிந்தன.

வீடுகளும் திறந்தபடி மின்விசிறிகள் சுழன்றபடி, தொலைக்காட்சிகள் சனல்கள் ஓடியபடி மக்கள் மட்டும் இல்லை.தெருவில் சில உயிரற்ற உடல்கள் கிடந்தன.பெரும்பாலும் ஆண்களுடையது. எங்களுடன் வந்த காத்தான்குடி தோழர் இம்தியாஸ்தான் மிகச்சிறிய வயதினர்.இந்தப் பேரழிவுகளைக்கண்டு அவர் ஓப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டார் .அவரை சமாதானப்படுத்தி நடந்தோம்.

வழியில் ஒரேயொரு கிராமத்தில் களுவாஞ்சிக்குடிக்கு அப்பால் சில தமிழ் சனங்கள் பாதையில் நின்று எங்களை வழிமறித்து கதை கேட்டனர்.தண்ணீர் தந்தனர்.

ஒரு வயோதிகத்தாயின் குரல் என் பின்னால் விழுந்தது. ஓங்களுக்கு தேத்தண்ணி தாரதுக்கு ஒரு சுரங்கச்சீனியும் இல்லயே தங்கம்காள்…

அந்தக்குரலின் மனிதத்துவத்தைத்தான் எரித்து சாம்பராக்கி புலிகளும் அவர்களின் அருவருடிகளும் குளிர்காய்ந்தனர்.என் செவிகளில் அந்தக்குரல் இன்னும் இதமாகவும் , ஏக்கமாகவும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

களுவாஞ்சிக்குடியிலிருந்து ஒரு மைல் தொலைவில் முதல் படையை சந்தித்தோம். மேஜர் மஜீத் என்பது இன்னும் நினைவில் உள்ளது. அவர்தான் இராணுவத்தை வழிநடத்தி முன்னேறிக்கொண்டு வந்தார்.கூட்டமாக எங்களைக்  கண்டதும் இராணுவம் அரண்டு போனது. துவக்குகள் எமை நோக்கி உயர்ந்தன.கைகளை உயர்த்தியபடி ஏறாவூர் ஜாபிர்தான் சென்றார்.அவர் ஆமியுடன் கதைத்தார்.பின்பு கைகளை கீழே விடும்படி கட்டளை வந்தது.

 மேஜர் மஜீத் அருகே வந்து ஆறுதலாக கதைத்து  வழியில் கவனமாக போங்கள் இனிப்பயமில்லை என்றார்.வழியில் சைக்கிள் கடைகள் திறந்து கிடக்கின்றன. ஆபத்துக்கு பாவமில்லை.இன்னும் பல மைல்கள் நீங்கள் போக வேண்டும். ஐசக்கிள்களை எடுத்துக்கொண்டு போங்கள் என்றனர்.

களுவாஞ்சிக்குடியில் சைக்கிள்கள் நிறைந்து கிடந்தன. சைக்கிளை மட்டுமல்ல ஒரு துளியளவு மண்ணைக்கூட கொண்டு செல்வதில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.கடைசிவரை நடப்பதென்று முடிவெடுத்தாயிற்று. நாய் வேசம் போட்டால் குரைத்துத்தானே ஆகவேண்டும்.

உச்சிவெயில்,மரண பயம், ஆள் அரவற்ற வீதிகள் மேலே சுழன்றபடி கண்கானிக்கும் ஹெலிகள்.தாழப்பறப்பதும்,மேலேகுவதுமாக ஹெலிகள் அச்சத்தை தந்தன. அச்சத்தில் நடந்தோம் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு.

அது நடந்தது விட்டது.  

எங்கள் தேசம்  -231                                                      ஊஞ்சல் இன்னும் ஆடும்..........

Tuesday 2 October 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


 தொடர்- 24

ஒவ்வொரு காலையும் இந்திய இராணுவம் வீதியில் ரோந்து செல்வது வழக்கம். 1987.12.03 இல் காலையில் புறப்பட்ட இராணுவம் ஓட்டமாவடிப் பாலத்திற்குள் நுழைந்தது.அங்கே ஜாவான்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் கிளைமோர் பாலத்திற்கப்பால் இருந்த வேப்ப மரத்தில் காத்திருந்தது.புகையிரதமும்,ஏனைய வாகனங்களும் போக்கு வரத்துச்செய்ய ஒரேயொரு பாலம்தான் அப்போது.2010 இல்தான் புதிய பாலம் திறக்கப்பட்டது. இப்போது புகையிரதத்திற்கு தனிப்பாலம்.

பாலத்திற்குள் பட்டாளம் நுழைந்ததும் எதிரே இருந்த வேப்ப மரத்திலிருந்து சீறி வந்த கிளைமோரில் துடிதுடிக்க அவ்விடத்திலேயே 15 இராணுவத்தினர் மாண்டனர். பலருக்கு காயம். ஊரே திகிலில் உறைந்து போய்விட்டது. கடைகள் அவசரமாக சாத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கொண்டனர்.

சி.இ.பி அமைந்துள்ள மாவடிச்சேனை சந்தியிலிருந்து இந்திய இரானுவத்தின் துப்பாக்கிகள் சகட்டுமேனிக்கு சுட்டுக்கொண்டு வந்தது.கண்ணில் அகப்படுவர்களை கண்மூடித்தனமாக சுட்டபடி வந்தனர்.இப்போது வாழைச்சேனை பொலிஸ் நிலையம் அமைந்துள்ள இடத்தில்தான் இந்திய இராணுவத்தின் பிரதான முகாம்.

முதல் பலி (உலக்க பாவா)  என்றழைக்கப்படும்.நூர் அலிஷா பிச்சை முகைதீன்,உசனார் அப்துல் லதீப்,ஆகிய இருவரையும் ரெயில்வே வீதியில் வைத்து இந்திய இராணுவம் சுட்டுக்கொன்றது. பாவாவும் அவர் குடும்பமும் ரெயில்வேக்கு பக்கத்தில்தான் வாழ்ந்தனர். ஏழைகள் வாழ்ந்த இடம். சத்தம் வந்தவுடன் என்னவென்று பார்ப்பதற்கு தலையை நீட்டியிருக்கிறார். தலையில் சுட்டிருக்கின்றார்கள். பாலம் வரை சுட்டபடி வந்ததில் கடைகளும் வீடுகளும் சேதாரம் ஆகின. 

எங்களுரில் பாவாமார்கள் குறிப்பிட்ட பகுதிகளில்தான் வாழ்ந்து வந்தனர். மாவடிச்சேனை,பிறைந்துறைச்சேனை,போன்ற இடங்களில் செறிவாக வாழ்ந்து வந்தனர். குறிப்பிட்ட தொழில் என்று அவர்களுக்கு கிடையாது. மக்கள் இவர்களுக்கு நிறைய தர்மங்களைகொடுத்து வந்தார்கள். வெள்ளிக்கிழமை பள்ளிகளில் கண்களுக்கு சுர்மா இடல், அத்தர் திரவியத்தை பஞ்சிலே நனைத்து காதுகளின் இடுக்கில் திணித்து விடல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருப்பர் பஞ்சிலே நனைத்த அத்தர் என் காதில் இரண்டு தினங்களுக்கு மணக்கும் சுர்மாவும் கண் வளையங்களின் கீழ் அசர் தொழுகை முதல் ஜொலிக்கும். 

சைக்கிள் கம்பியின் முனையை கூராக்கி சுர்மா டப்பாவுக்குள் தேய்த்து கண்களின் கீழும் இமைகளின் மேற்பரப்பிலும் ஒரு கோடு போடுவர் சில சமயம் கோடு போடும் போது இலேசாக கண்களுக்குள்ளும் சுர்மா தூள் சிதறி விழும் கண்கள் எறிந்து பின்னர் குளிர்ச்சியாக இருக்கும். சுர்மா இடுவது கண்ணுக்கு குளிர்ச்சி .

சில பாவாக்கள் கையில் ஈட்டி போன்ற வேலுடன் ஊருக்குள் வீடுவீடாக வருவார்கள் கையில் செம்பு தஸ்பீஹ் மாலை கழுத்தில் உருத்திராட்ச மாலையை நிகர்த்த மாலைகள் ஜடா முடி. பச்சைத்தலைப்பாகை,என அவர்களின் ஆடை அலங்காரங்கள் ஆர்ப்பாட்டமாக இருக்கும்.

பாவா வருகிறார் என்றால் ரபானும் கூடவே வரும்.தட்டி தட்டி இனிமையான குரலில் வாசலில் நின்று பாட்டுப்படிப்பார்கள்.நாகூர் ஹனீபாவின் பாடல்கள்,ஞானப்பேழையிலிருந்து சூபித்துவப்பாடல்கள் தூள் பரக்கும்.

தவிர நோன்பு காலங்களில் அதிகாலை இரண்டரை மணிக்கெல்லாம் பாவாமார்கள் எழுந்து ஊருக்குள் நுழைந்துவிடுவார்கள்.அலாரம்,மின்சாரம் இல்லாத காலத்தில் லாந்தரை ஏந்திக்கொண்டு தெருத்தெருவாய் சஹருக்கு மக்களை எழுப்புவார்கள்.கூட்டமாக வந்து ஒவ்வொரு தெருவிலும் ரபானை ஓங்கி அடித்து சஹருக்கு எழும்புங்கோ என சத்தம் வைப்பார்கள்.அந்தச்சத்தத்தில்தான் மக்கள் சஹருக்கு எழும்புதுண்டு.

ரமழானில் இருபத்தியேழில் வீட்டுக்குவீடு பாவாக்கள் ஆஜராகி விடுவர்.லாம்பென்ன காசிக்கு வந்து விடுவார்கள்.சஹருக்கு எழுப்பிய அன்பளிப்பாக பணமும் அரிசியும் வழங்கி மக்கள் மகிழ்விப்பர். லாம்பென்ன காசி என்பது அர்த்த சாமத்தில் லாந்தருடன் அவர்கள் வருகை தருவது வழக்கம். அதற்கு மண்னெய் ஊற்ற வேண்டுமே அதற்குத்தான் முழு ஊரையும் வடித்தெடுப்பார்கள். மிஞ்சிப்போனால் ஒரு மாதத்திற்கும் ஒரு இரண்டு போத்தல் என்ணெய் தீர்ந்து போகலாம். 

பாவாமார்கள் காதிரிய்யா தரீக்காவை பின்பற்றுபவர்கள்.முகைதீன் அப்துல் காதர் (ரஹ்) அவர்களின் சீடர்கள் என தங்களை சொல்லிக்கொள்பவர்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை முன்மாதிரிக்கும் அவர்களின் வாழ்வு முறைக்கும் துளியளவும் சம்பந்தம்  இருக்காது. 

முகைதீன் அப்துல் காதருக்கு நேர்ச்சை கேட்டு ஜெயிலானிக்கு போகவென வசூல் நடக்கும்.

இந்தக்காலங்களில் சிலர் பாவாமார்களை சீண்டிப்பார்ப்பதுண்டு. ‘ஜெயிலானிக்கு நேர்ந்து வச்சிருக்கிறன்’ பாவா என்றவுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் சொன்னவரின் வீட்டுக்குள் பாவா செல்வார்.அங்கே பெரிய பாறாங்கல்லை வெள்ளைத்துணியில் சுற்றி இதை கொண்டு ஜெயிலானிக்கு கொண்டு போய் குடுங்க பாவா என்பார்கள் பாவாவும் சந்தோசமாக குணிந்து தூக்குவார்.கல்லை இனங்கண்டவுடன் இயலாமல் தூசணம் பறக்கும். வெள்ளிக்கிழமைகளில் வெள்ளையுடுத்தி பளிச்சென அவர்கள் தென்படுவார்கள்.

பாவாமார்களின் வெட்டுக்குத்து சீனடி நிகழ்வுகள் அக்காலத்தில்    பிரபல்யமாக இருந்தது.இரவு நேரங்களில் முற்றவெளியில் இது நடக்கும்.பல விதமான வித்தைகளை செய்து களிப்பூட்டுவர். ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என பெருந்திரள் குழுமியிருக்கும்.வாண்டுகளான நாங்கள் பெரியவர்களுக்கிடையில் ஆட்டுக்குட்டிகள் போல் நுழைந்து முன் வரிசையில் நிற்போம். பாவாக்கள் கையில் ரபானுடன் கூட்டத்தின் நடுவே ஆடிப்பாடி நடனமிடுவர். எல்லோரும் பச்சைத்தலைப்பாகை கட்டியிருப்பர்.

 மல்லுக்கு நிற்கும் முரட்டுக்காளைகள் போல் பாடல்கள் உச்சஸ்தாயில் ஒலிக்கும். கைகளில் கூராயுத்தால் குத்தியபடி வலம் வருவார் சிலர் சிறு கம்பிகளால் கண்களில் குத்திக்கொண்டும் சிலர் நாக்கை இழுத்து அறுத்தபடியும் வித்தைகள் காட்டுவர். எப்படி வெட்டினாலும் இரத்தம் வராது.

 அப்படி வந்தால் வித்தையில் பிழை இல்லை.தொடக்குக்காரிகள் நிற்கிறாங்க என்ற கூச்சல் எழும். பெண்கள் ஆளையால் முகத்தைப்பார்த்தபடி நின்றிருப்பார்கள் பாவாமாருக்கு வித்தை வசியமாகாது. கூட்டம் அவதிப்படும். அவசரமாக வசூல் நடக்கும்.அன்றைய தினம் பாவாமார்களின் காட்டில் மழை பெய்வதை பார்த்தபடி வீடுகளுக்கு திரும்புவோம்.

பாவாமார்களை கண்டு பயப்படுவதற்கு இந்த குத்து வெட்டும் ஒரு காரணமாயிருந்தது. இரத்தம் சிந்தாமல் வலியெடுக்காமல் அவர்கள் ஆயுதத்தால் வெட்டுவதை சொல்லியே உம்மா பயம் காட்டுவா.போதாக்குறைக்கு வாசலில் வந்து நிற்கும் பாவா   “ஹேல்" என்று ஒரு சத்தம் வைத்து ரபானை உலுக்கி ஓங்கி அடிப்பார். இதயம் சாய்வுத்தம்பி மோதினார் அறுத்துப்போடும் கோழிபோல் கிடந்து துடிக்கும்.

அக்கரைப்பற்று நண்பர் அப்துல் ஹமீது மௌலவி மேடையில் ஏறி இந்த பாவாக்களின் வித்தைகளை புட்டு புட்டாக அவிழ்த்து விட்ட போது அட நம்மள ஏமாத்திட்டாங்கய்யா என்று மனம் வெட்கிப்போனது. 

காலவோட்டத்தில் பாவாமார்களின் சந்ததிகள் கல்வி கற்று பதவிகளில் அமர்ந்து கொள்ள சிலர் வியாபாரம், கைத்தொழில் என்று வளர்ந்து வர பாவாமார்களின் பராம்பரியங்கள் மங்கிப்போயின. சஹருக்கு எழுப்புவதற்கு பாவாவின் ரபானுக்கு முதல் செல்போனின் அலாறம் அலறுகிறது.விடியவிடிய தூங்காமல் இருக்கும் எப்.எம்களில் ரீங்காரமிடும் விசேட சஹர் நிகழ்ச்சிகள் மக்களை அடித்து எழுப்பி விடும்.

தராவீஹ் தொழுகைக்கு பள்ளிக்குப்போகும் இளைஞர்களின் வீடு திரும்புதல் பெரும்பாலும் சஹர் நேரத்தில்தான் நடக்கும் . கொழும்பில் புதுக்கடைபோல் கிராமங்களிலும் ரமழான் கடைகள் நோன்பு காலத்தில் களைகட்டும். சும்மா கிடக்கும் வீதியில் கிரிக்கெட்டும் பந்துமாக இளைஞர்கள் இபாதத்துக்களில் ஈடுபட்டு தூங்குபவர்களின் கண்ணியமான தூக்கத்தை கலைத்தபடி இருப்பர். சஹர் வரைக்கும் தெருவில் நின்றபடி வீட்டுக்குள் இருக்கும் யுவதிகளுக்கு இரவு வணக்கமாக செல் போனில் விளக்கம் நடக்கும்.

 நோன்பு காலங்கள் பெரும்பாலும் தலை நகரிலும் கிராமத்திலும் இப்படித்தான் கழியும். பாவாமார்கள் இக்காலத்தில் ரபானை தூக்கிக்கொண்டு  லாந்தருடன் வந்தால் ஓட ஓட விரட்டும் கூட்டம் முளைத்து விட்டது.

எங்கள் தேசம் 229                                                                          ஊஞ்சல் இன்னும் ஆடும்.....


Friday 14 September 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


  தொடர்- 23


இப்படித்தான் ஒரு நாள் வாப்பாவையும் மாந்துறை ஆற்றில் கொண்டு போய் நீரில் அமுக்கி அமுக்கி விசாரித்தார்கள்.தண்ணீருக்குள் தலையை அமிழ்த்தி தோளில் ஏறி நின்று சித்திரவதை செய்தார்கள். புலிகளுக்கு கடையில் தேனீர் ஊற்றிக்கொடுத்த ஒரேயொரு பாவம்தான் வாப்பா செய்த பாவம்.

தேனீர் ஊற்றிக்கொடுக்காவிட்டால் அவர்கள் கொல்வார்கள். ஊற்றிக்கொடுத்தால் இவர்கள் கொல்வார்கள். ஏறச்சொன்னால்  எருதுக்கு கோபம்.இறங்கச்சொன்னால் முடவனுக்கு கோபம் என்பது முஸ்லிம்களின் விடயத்தில் மிகப்பொருத்தமாக இருந்தது.

அவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் போதும் வீதியில் செல்லும் எங்களை அழைத்து முழங்காலில் நிற்க வைத்து வராத புலி வந்ததாக விசாரணை செய்து அடிப்பார்கள். 

அவர்களையும் நண்பர்களாக்கி சில சலுகைகளை நாங்கள் பெற்றுக்கொண்டோம்.குண்டு சட்டிக்குள் குதிரை ஓடுவதில் நம்மை விட கில்லாடிகள் யார்.

இருக்கவே இருந்தது சையது பீடி. அதில் ஒரு கட்டை வாங்கி வழியில் இருக்கும் செக் பொயின்ட்களில் நிற்கும் ஜாவானுக்கு நீட்டினால் போதும் "அச்சா அச்சா ஜலோ ஜலோ என்பான் சிரிப்புடன்.

ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமிற்கிடையில் தொடர்பாடலுக்காக நீண்ட வயர்களை இழுத்துக்கொண்டு போவார்கள்.அந்த வயர்களை இடையில் கட் பண்ணி நம்மவர்கள் சுருட்டிக்கொண்டு போவார்கள். அது நல்ல கணதியான வயர். கார் பற்றரியிலிருந்து கனெக்ஷன் எடுத்து சின்ன குண்டு பல்புகளை எரிய விட அந்த வயரை பயன்படுத்துவோம்.

மின்சாரம் இல்லாத பகுதிகளுக்கு அந்த வயரின் மூலம் மின்சாரமுள்ள இடத்திலிருந்து மின்சாரத்தைக் கடத்தலாம். அல்லது கார், லொறி பற்றரியிலிருந்தும் மின்சாரத்தை அந்த வயர் மூலம் இலகுவாகப்பெறலாம்.

பெற்றோல் செட் சந்தியிலிருந்து பேப்பர் பெக்டரியில் இருக்கும் இந்தியன் ஆமியின் கேம்புக்கு தொடர்பாடலுக்காக  சாவன்னாட சந்தியை தாண்டி வரும் புகையிரத பாதையை ஊடறுத்துச்செல்லும் உள் பாதையால் வயர் இழுக்கப்பட்டிருந்தது.

ஓர் இரவு நானும் நண்பர் நியாசும் அந்த வயர்களில் கொஞ்சம் வெட்டுவதென்று தீர்மானித்தோம். “ கொறட்டு ” டன் நியாஸ் வந்தார். நான் இந்தியன் வருகிறானா என்று ஒழுங்கையில் நின்று வேவு பார்த்தேன். 20 அடி இருக்கும் வயரை நறுக்கிக்கொண்டு அதை முள்ளிவெட்டவானுக்கு கொண்டு சென்றோம்.

 நான் ஒரு சையது பீடி கட்டு வாங்கிக்கொண்டேன்.ஓட்டமாவடி பாலத்தடியில் இருக்கும் ஒரு 'சென்ரிப்பொயின்ட்.' பின்பு இடையில் சில முகாம்கள் எல்லேரையும் ஒரு பீடி கட்டால் சமாளிக்க வேண்டும்.வயரை இரண்டு பேரும் பிரித்து தொடையில் சுற்றினோம். பதற்றம் இல்லாமல் துவிச்சக்கர வண்டியில் ஏறி உழத்தினோம் .பாலத்தடியில் இரண்டு சையது பீடி. ஜலோ என்றான்.

இடையில் அகப்பட்டவர்களுக்கு நாங்களாகவே மனமுவந்து அன்பளிப்புச் செய்தோம். என்னே அக்கரை. 'அச்சா அச்சா பலே பலே' என்றார்கள். எப்படியோ இருபது யார் வயரும் முள்ளிவெட்டவானுக்கு போய்விட்டது.

அக்காலத்தில் சில பொருட்களை வயலுக்குச்செல்பவர்கள் கொண்டு செல்ல முடியாது. புலிகளுக்கு அது தேவைப்படும் என்ற முன்னேற்பாடு. எங்களுக்கு சிரிப்பாய் வரும். அரசாங்கமும்,இந்திய இரானுவமும் எதையெல்லாம் அவர்களுக்கு இலகுவில் கிடைக்கக்கூடாது என்று தடைவிதித்ததோ அந்தப்பொருட்கள் புலிகளிடம் மிகத்தாரளமாக இருக்கும். ஒரு கிராமத்திற்கே வினியோகிக்கக்கூடியதாக குவிந்திருக்கும்.

விவசாயிகளுக்கு டோர்ச்சும் பெற்றரியும் இல்லாவிட்டால் இரவில் காவலுக்கு நிற்க நாதியில்லை.அதனால் பொயின்ட்டுகளில் சையது பீடிகளும்,லக்ஸ்,சந்தண சவர்க்காரமும் பரிமாறப்பட்டன. பொதியில் என்ன இருக்குது என்பதைக்கூட பிரித்துப்பார்க்க மாட்டார்கள்.

இப்படித்தான் புலிகளும் சில சாமான்களை கடத்திப்போவார்கள்.

இந்தியன் ஆமி அவர்களை அண்டிய முகாம்களில் சகாய விலைக்கடைகளையும் அமைத்தனர்.இந்திய சாமான்களை சகாய விலையில் சனங்கள் வாங்கிச்செல்வதுண்டு.அப்போது நாங்கள் இரண்டு ரூபாயக்கு 10 சிகரெட் வாங்கியது நினைவில் உள்ளது.இந்திய இராணுவம் சென்றாலும் அவர்கள் விட்டுச்சென்ற கடையை இலங்கை இரானுவம் தொடர்ந்து செய்கிறது.மஹரகமயில் மரக்கறி வியாபாரமும்,கட்பீசும் சில நேரங்களில் பெற்றோல்,டீசலும் சலுகை விலையில்  கிடைப்பதுண்டு.

இந்திய இராணுவம் எங்கள் மண்ணில் மறக்க முடியாத வரலாற்றை இரத்தத்தால் எழுதிச்சென்றது.


எங்கள் தேசம் - 228                                                                                                           ஊஞ்சல் இன்னும் ஆடும்......


Monday 3 September 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


தொடர்- 22

மறு கேள்வி என் காதில் விழுந்தது.

நீ புலிக்கு சாப்பாடு குடுத்தியா

ஓம் சேர்

வந்தது. வினை முழந்தாளில் நின்ற எனது முகத்தில் வாகாக அவன் கையை மடக்கி விட்டான் ஒரு குத்து.

சர்வாங்கமும் ஒடுங்கி கண்களின் வழியே பட்டாம் பூச்சி பறக்க ஆரம்பித்தது,
அவன் துவக்க காட்டி கேட்டா எப்படி சேர் குடுக்காம இருக்க முடியும்.
மறுபடியும் ஒரு குத்து

இனி வந்தா குடுக்கப்படாது என்றான்
சுரி சேர் என்றேன்.

சகாயம் எந்தச்சேதாரமும் இன்றி சிரித்துக் கொண்டிருந்தான் அவனிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு அவன் அந்தக் காண்டத்திலிருந்து தப்பித்து நின்றான்.போராட்டத்தில் உங்களுக்கு எந்தப்பங்களிப்பும் இல்லை என்பவர்களுக்கு இதுவெல்லாம்  சொல்லிப் புரியவைக்க முடியும் என்று நினைப்பது தவறு.அது செவிடன் காதில் ஊதிய சங்கு.

தமிழ்  தேசிய படையும் ஈபிடியியும் இணைந்து என்னை குடையத் தொடங்கினர். உடற்பயிற்சி செய்து உடம்பும் திரட்சியாக இருந்தது அவர்களுக்கு என்னில் சந்தேகத்தை உண்டாக்கியிருக்க வேண்டும்.அத்துடன் முஸ்லிம் இளைஞர்களும் புலிகளின் முகாமில் இருந்தார்கள்.முஸ்லிம் பகுதிகளில் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடல்,முன்னணியில் நின்று இராணுவத்திற்கெதிராக தாக்குதல் நடாத்துதல் போன்ற பணிகளில் அவர்கள் போராடி வந்தார்கள்.தாக்குதலில் அடிபட்ட புலிக்கொடி போர்த்திய  உடல்கள் எங்கள் வீடுகளுக்கும் வந்து சேர்ந்தன.

விடுதியில் மாணவர்களுக்கு காலையிலும் ,மாலையிலும் உடற்பயிற்சி வழங்குவதும் நான்தான்.முன்னர் ஈ.ப்p.டி.பியில் ஆயுதப்பயிற்சிபெற்று பிறகு அதிலிருந்து விலகிய தோழர்களின் புண்ணியத்தால் மேலதிகமாக கடின பயிற்சிகளும் அப்போது எனக்குத் அத்துப்படி.

கல்லூரியின் அடையாள அட்டையை காட்டினேன். மறுநாள் ஓ.எல் பரீட்சை அனுமதி அட்டையையும் காட்டினேன்.

தமிழ் தேசிய படையின் வீரன் என்னை நோக்கி கத்தினான்.
இஞ்ச ஏன்டா வந்து நிற்கிறீங்க.உங்கட அஸ்ரபுக்கிட்ட போங்களன்டா' .

இந்ந நூற்றாண்டில் இப்படித்தான் சில காவியு தரித்த இனவாதிகள் கூப்பாடு போடுகின்றார்கள். .இந்த நாட்டில் நீங்கள் இருப்பது என்றால் இருங்கள் இன்றேல் அறபு நாடுகளுக்கு செல்லுங்கள்.அதையும் கேட்டுக்கொண்டு வாய்ச்சொல்லில் வீரர்களும் ,அறிக்கை மன்னர்களும் சும்மாதான் முதுகு சொறிந்தபடி இருக்கின்றார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் கொடி கட்டிப்பறந்த காலம். கல்முனையில் போராளிகள் தீவிரமாக இயங்கத்தொடங்கி நாரே தக்பீர்கள் முழங்கத்தொடங்கிய பொற் காலம். முஸ்லிம் பகுதிகளில் காங்கிரசுக்காக நோன்பிருந்து தாய்மார்கள் அழுது புலம்பி அல்லாஹ்விடம் மன்றாடிய காலம்.

 குர்ஆனும் ஹதீசும் ஏந்தி வந்த முஸ்லிம் கட்சியின் ஸதாபகரை இறைத்தூதர் என்று போற்றாத குறை. அவரை தோளில் வைத்து உலா வந்து எழுச்சி அலைகள் பல நூறடி எழுந்து ஆர்ப்பரித்த அக்காலத்தில் தமிழ் பேரின அரசியல் சக்திகள் காழ்ப்புணர்வில் கருவித்திரிய ஆரம்பித்தனர்.இப்போது தனித்துவம், முஸ்லிம் கட்சி என்பதெல்லாம் அரசியல் வெற்றுக்கோசங்களாகவும் உதிரிகளாகவும் பறந்து விட்டன.எவரையும் பணத்தையும் ,பதவியையும் காட்டி இலேசாக வளைத்துவிடலாம் என்ற நிலைக்கு வந்து விட்டனர்.

கட்சிக்காக தியாகமிருந்தவர்கள்,தங்களை அர்ப்பணித்தவர்கள் ஓரமாக நின்று கண்ணீர் வடிப்பபதை தவிர வேரொன்றும் செய்யமுடியாத கையறு நிலை.

எல்லோருக்கும் கட்சி தலைவரு ஆக வேண்டும்  என்ற ஆசை. ஆதனால் இரண்டு பேரு சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பித்து வயிறு வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.எல்லாக்கட்சிகளையும் அறிக்கையில் அணுகுண்டு போட்டு தகர்த்து விடலாம் என்று மனப்பால் குடிப்பதற்கும் சிவப்புக்குல்லாய் போட்டு ஒரு கட்சி.உம்மாவுக்கும் ஒரு கட்சி,வாப்பாவுக்கும் ஒரு கட்சி. ஆளாளுக்கு நியாயங்கள் சொல்ல மட்டும் குறைவில்லை.

அதன் விளைவே எங்களில் எதிரொலித்தது. அவன் என்னை அஸ்ரபின் கல்முனையில் போய் வாழச்சொன்னான்.தென்னிலங்கையில் உள்ள சில சிங்கள பெருந்தேசியவாதிகள் சவூதிக்குப்போய் வாழச்சொல்லுகின்றார்கள். நாங்க ஆர்ர சொல்லுக் கேக்குற பிள்ளைகளா வாழுறது? 

நான்  ஜிஹாத் படை  என்ற சந்தேகம் அவர்களுக்கு. முழங்கைகளையும் கால்களையும் பார்;த்தான். பயிற்சியின்போது அவைகள் கன்றிப்போய் அடையாளம் இருக்கும். ஆயுதப்பயிற்சி எடுத்தவர்களை சில உறுப்புக்களை பரிசோதிப்பதன் மூலம் இலகுவில் அடையாளம் கண்டு கொள்ளலாம். ஆயுதப்பயிற்சி எடுத்தவர்களின் கண்களும் அவர்களை காட்டிக்கொடுத்து விடும்.

 சுண்டு விரலையும் பார்த்தான் பின்பு ஓடு என்றான். வீங்கிய முகத்துடன் நொறுங்கிய நெஞ்சுடன் ஒரு மைல்தூரம் ஓடினேன். அடிக்கடி இந்திய இராணுவமும் தமிழ்தேசிய படையும் இப்படி எங்களை அள்ளிப்போவதும் விசாரிப்பதும் அடிப்பதுமாக பதப்படுத்தப்பட்டோம்.ஓட்டமும், மனப்பதகளிப்புமாக 85க்குப்பின் வாழ்வு மாறிப்போனது. இரு பக்கமும் அடிபடும் மத்தளங்களாக எங்கள் வாழ்க்கை.

ஊஞ்சல் இன்னும் ஆடும்....
எங்கள் தேசம்.229

Wednesday 22 August 2012

ஷைத்தான்களின் தெரு

ரமழானில் தளையிட்டிருந்த ஷைத்தான்கள் சங்கிலிகளை அறுத்துக்கொண்டு தெருக்களில் அலைவதைக்கண்டு அதிர்ந்து போனேன். 

ஆம் நோன்புப்பெருநாள்  தொழுகை முடிந்ததும் இந்த பயங்கர காட்சி எனக்கும் மற்றவர்களுக்கும் துலாம்பரமாகத்தெரிந்தது.

ஒரு மோட்டார் சைக்கிளில் குறைந்தது மூன்று ஷைத்தான்கள் சென்றன.புழுதியை வாரி இறைத்தபடி அதி வேகமாகச்செல்லும் ஒரு ஷைத்தானின் கையில் ஊது குழல் ஒன்றும் இருக்கும் .அது கனரக வாகனங்கள் ஹார்ன் அடிக்கும் ஒலியை மிஞ்சிய ஒலி.மூன்றாவது அல்லது இரண்டாவதாக அமர்ந்திருக்கும் ஷைத்தான் அந்தச்சங்கை பெருங்குரலெடுத்து ஊத தெருவே பெரும் ரகளையாக மாறி இருந்தது. 

ஏக காலத்தில் சில நேரங்களில் பத்துக்கும் மேற்பட்ட பைக் ஊர்வலங்களில் இந்த ஹார்ன் ஒலி கர்ண கடூரமாய் தெருவின் அமைதியை துவம்சம் செய்தன. 

முறையான சாரதி அனுமதிப்பத்திரமோ, தலைக்கவசமோ இருக்காது.
இது பெருநாள் தினங்களில் சில சமூகத்தலைமைகளால்  எங்களுக்கு கிடைத்த விஷேட அலவன்ஸ்.

அநாகரீகமான கலாச்சாரப்பிறழ்வில் வளர்க்கப்பட்ட ஒர் இளம் சமூகம் உருவாகி வருவதை இது போன்ற அண்மைகக்கால நிகழ்வுகள் நமக்கு அதிர்ச்சியை தருகின்றன.

நாட்டின் சட்டங்களை அடாத்தாக மீறுவதில் இவர்களுக்கு உள்ள ஆர்வம் நம்மை பயங்கொள்ளச்செய்கிறது.

இத்தகைய விஷேட தினங்களில் சலுகைகளை வழங்குமாறு பணிப்பவர்கள் அரசியல்வாதிகள். தங்கள் பவரை நாட்டுச்சட்டங்களை மீறுவதற்குப்பயன்படுத்த தூண்டும் இவர்கள் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எத்தகைய அடக்கு முறைக்கு எதிராகவும் குரல் எழுப்பத்திராணியற்றவர்கள்.


சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய பொலிசாரின் கரங்களை வலுவிழக்கச்செய்வது சில உள்ளுர் அரசியல் சக்திகள். இதனால்  அவர்களுக்கு கிடைக்கும் அற்ப இலாபம் ஒரு சமூகத்தின் இளந்தலைமுறையினரை காட்டுமிராண்களாகவும் மனிதப்பண்புகளை மதிக்காதவர்களாகவும் உருவாக்குகின்றது  என்பதை இந்த அரசியல் தலைமைகள் சிந்தித்துப்பார்ப்பதில்லை.

இவ்வருட பெருநாள் தினத்திலும் அதற்கு முந்திய தினத்திலும் அவதானிக்கப்பட்ட சம்பவங்களை கவலை கொள்ளச்செய்வதும் வெட்கித்தலைகுனியச் செய்வதுமான துர்ச்செயல்களாகும்.

தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் ஓட்டலாம் என்ற சலுகையை சில இளைஞர்கள் அத்துமீறி பிரயோகித்ததை அவதானிக்க முடிந்தது

. ஒரு சைக்கிளில் மூவர் செல்வது Nபாக்குவரத்துப்பபொலிசாருக்கு அருகில் சென்று உரத்த தொணியில் ஹார்ன் அடிப்பது ஓட்;டமாவடி சுற்றுவட்டத்தில் வேண்டுமென்றே ரவுண்ட் அடிப்பது. பொலிசாருக்கு அண்மையில் சென்று பட்டாசுகளை கொளுத்திப்போடுவது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

உண்மையில் பொலிசாரின் கடமைகளை செய்யவிடாது இவ்வாறான அநாகரீக கலச்சாரத்திற்கு வித்திடும் சமூகத்தலைமைகள் இவற்றின் ஊடாக எதைத்ததான் சாதிக்க முயல்கின்றன என்பது நம்முன் நிற்கும் பெருங்கேள்வி..

வேறெந்த சமூகத்திலும் கிராமத்திலும் இல்லாத இழிவான கலாச்சாரத்தை கல்குடா தொகுதியில் மட்டுமே தரிசிக்க முடியும்.

 இது தொடர்ந்தேர்ச்சியாக பின்பற்றப்படும் ஒரு கேவலத்தை உருவாக்கி விடும். இதனை தடுத்து நிறுத்தி சட்டத்தை அமுல்நடத்த பொலிசாருக்கு இடமளிப்பதுடன் இத்தகைய வரம்பு மீறல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் போது அதில் தலையிடாதவாறு அரசியல் சக்திகள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

தங்களுடைய சுய நல அரசியல் நலன்களுக்கு இளைஞர்களை பகடைகாய்களாக்க முனைவது ஒரு சமூகத்தின் ஒழுக்க விழுமியங்களுக்கு எதிரான சாட்டையாகும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து செயற்படவேண்டும். 

பள்ளிவாயல் நிருவாகங்கள் ஜம்இய்யதுல் உலமா சபையினர் மற்றும் பொது நிறுவனங்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்

வளர்ந்து வரும் அதிவேக சைக்கிள் கலாச்சாரம் விஷேட தினங்களில் மிகப்பெரும் சமூக அவலத்தை வளர்க்கின்றது.

 விலங்கிடப்பட்ட சைத்தான்;கள் அவிழ்த்து விடுவது சமூகத்தின் மானத்தை ஏலம் போடுவதற்கு சமன்.


Sunday 19 August 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்



தொடர்- 21

இந்திய இராணுவம் இலங்கையில் காலடி எடுத்து வைத்தபோது தமிழ் மக்கள் தங்கள் இரத்தத்தால் பொட்டிட்டு வரவேற்றது நினைவில் நிற்கிறது. மாலையிட்டு நெற்றியில் திலகமிட்டு தங்களை மீட்க வந்த மீட்பர்களாக அவர்கள் வணங்கப்பட்டனர்.கிழக்கில் அவர்களின் பிரசன்னம் சில மனங்களில்  அடங்காத்திமிரை விதைத்ததை அறிவேன்.

சுழல்கின்ற காலச்சக்கரத்தில் மீட்பர்கள் இரத்தத்தால் திலகமிட்ட மங்கையரின் கற்பின் சுவையை அறியமுற்பட்டு அவர்களை துவம்சம் செய்தனர்.புலிவேட்டைக்குப்புறப்பட்ட ஜாவான்கள் நரவேட்டையில் இறங்கினர்.

விடலைப்பையன்களின் கன்னங்களும் அவர்களின் பற்களால் காயப்பட்ட சரித்திரங்கள் கிழக்கில் உண்டு.துகிலுரிந்த துச்சாதனர்களால் தமிழ் மக்களின் அழகிய கனவுகள் சிதைந்து கொண்டிருந்ததை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம்.எங்கள் கோவணங்களை பாதுகாப்பதே பெரும்பாடாய் இருந்த காலமது. 

இந்திய இராணுவம் திடீரென முற்றுகையிடும், அதிகாலையில் எழுந்து கதவைத்திறந்தால் எல்லா முற்றங்களிலும் துவக்குடன் நின்றிருப்பார்கள். அன்றைய தினம் அலுவல்கள் எதுவும் நடைபெற அனுமதி இல்லை.வயல் வேலைக்குப் போகவோ,அலுவலகங்களுக்குச் செல்லவோ, பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லவோ முடியாது. பெண்கள் வீடுகளுக்குள் முற்றுகையிடப்பட்டிருப்பர்.

 ஆண்களை பாடசாலை மைதானத்திற்கு அழைத்துப் போவார்கள். கையில் ஒரு பெயர் பட்டியல் இருக்கும் . அது புலிகளின் முக்கியஸ்தர்களின் பெயர்கள். அந்தப்பெயர்கள் உள்ளவர்களை தனியே பிரித்தெடுத்து விசாரிப்பார்கள் .

விசாரணைகள் பெரும்பாலும் ஹிந்தியில்தான் இடம் பெறும் மொழிபெயர்ப்புக்கு தமிழ் நாட்டுக்காரர் ஒருவர் நிற்பார்.

கையில் இருக்கும் பெயர் லிஸ்ட்டை வாசித்து விட்டு 'இவனுகள தெரியுமா? ' என்பான்

'அண்ணே இவன் கிடக்கிறான் தெரிஞ்சாலும் நீங்க இல்லெண்டு சொல்லுங்க.'
மொழி பெயர்ப்பது போல் இனப்பாசம் காட்டுவான் தமிழ் நாட்டு வீரன்.

இந்த முற்றுகை ஒரு நாள் நீடிக்கும். உணவு தண்ணீரெல்லாம் தத்தமது வீடுகளில் இருந்து மனைவிமார்களால் கணவன்மார்களுக்கும். தாய்மார்களால் பிள்ளைகளுக்கும் ,உறவினர்களுக்கும் கொண்டு வரப்படும். மைதானமே திறந்த வெளிச்சிறையாக காட்சி தரும்.

காட்டிக்கொடுக்க முகமூடிகள் தயாராக இருக்கும்.முகமூடிக்கு முன்னால் வரிசையில் செல்ல வேண்டும். புலிகள்,புலிகளின் ஆதரவாளர்,அனுதாபிகள் தனக்கு முன் வந்தவுடன் முகமூடியின் தலை இலேசாக ஆடும்.

மறுகணம் அவன் தலைவிதியை ஜாவான்கள் நிர்ணயிப்பர். நான் ஒவ்வொரு முற்றுகையிலும் பிரார்த்திப்பதுண்டு .முகமூடிக்கு முன் வரும்போது அல்லாஹ்வே ஒரு ஈயைக்கூட அவன் அருகில் அண்ட விடாதே .மூக்கில் மொய்க்கும் ஈக்கும் தலையாடினால் என் நிலை என்ன? அச்சத்தில் உறைந்திருப்போம்.

தனக்கு வேண்டாதவர்களை பகை தீர்த்துக்கொள்ள முக மூடிகளின் தலைகள் ஆடிய வரலாறும் உண்டு.

ஒரு நாள் முள்ளிவெட்டவான் கடையில் நின்றிருந்தேன்.இந்திய இராணுவத்தினர் வந்து முற்றுகையிட்டு என்னையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போய்விட்டனர்.வாப்பா கெஞ்சிப்பார்த்தார்.வாகநேரி சந்தியில் இருக்கும் மில்க்போர்ட்டுக்கு ஐம்பது அடி தூரத்தில் ஒரு ஆல மரம் நின்றது. அதன் கீழ் ஏற்கனவே குவிக்கப்பட்ட சனங்களும் நின்றிருந்தனர்.எங்களை அவர்களுடன் இணையவிட்ட கப்டன் விசாரணையை ஆரம்பித்தான். 

ஆலமரத்தின் கீழ் அவனுக்கு கதிரை போடப்பட்டிருந்தது. விசாரணைக்குட்படுத்துபவர்கள் அவன் முன்னால் முழந்தாளிட்டு நிற்பாட்டப்பட்னர்.எனக்குத்தெரிந்த புலிகளும் இருந்தார்கள்.கையில் அவர்களுக்கு துவக்கு மட்டும் இல்லை.எங்கள் ஏரியா பொறுப்பாளர் சகாயமும் நின்றிருந்தான்.மில்க் போர்ட்டுக்குள்ளிலிருந்து

 'அடிக்காதீங்க எனக்கு தெரியா கடவுளே'

 என்ற கூக்குரல்கள் மரணக்கதறல்களாக வந்து வெளியில் விழுந்தன. பனை மட்டைகள் முறியும் சத்தம் என் காதை அடைத்தது.

எனது முறை வந்தது.

தமிழ் மொழிபெயர்ப்புக்கு இ.பி டி.பி அண்ணர் ஒருவர் நின்றிருந்தார்.தமிழ்தேசிய இராணுவமும் இருந்தது. இது இந்திய இராணுவத்தாலும்,வடக்கு கிழக்கு மாகாண சபையினாலும் தோற்றுவிக்கப்பட்ட கலவை.

ஜாவான் கேட்டான் புலிய தெரியுமா ?
ஓம் சேர் 

காட்டுவியா?
கண்டா காட்டுவன்

துவக்கு வச்சிருந்தானுகளா?
ஓம் சேர்

எப்படி சாமான் ?
உங்கட துவக்க விட பெரிய துவக்கு சேர்

சகாயன் சிரிப்பதை உணர்ந்தேன்.

எங்கள் தேசம் -227                                                                  ஊஞ்சல் இன்னும் ஆடும்...

Thursday 2 August 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


தொடர் - 20

நிச்சயம் புஹாரி காக்காவை சுட்டுக்கொன்றிருக்கமாட்டார். ஒரு நாள் எங்கள் கடைக்கு வந்த புஹாரி உம்மாவிடம் 'ராத்தா அந்தா மேய்ற சாவலைத்தாவன்' என்றார்.

உம்மாவும் சரி பிடிச்சிக்கொண்டு போ என்றார்.கொண்டையில் சிவப்புப்பூவில் ஓய்யாரமாக இரை தேடிக்கொண்டிருந்த பாணிச்சேவலை நோக்கி மெசின் கண்ணை இயக்கினார். ஒரு  கோழிக்கு இருப்பத்தைந்து குண்டுகள் செலவழித்தும் அவரால் அதைப்பிடிக்கவே முடியவில்லை.சேவல் இவரை விட திறமையாக கெரில்லாப்பயிற்சி எடுத்திருக்க வேண்டும்.நாங்கள்   பெருநாளைக்கு அறுத்துச்சமைக்கும் வரை அது பல கோழிகளுக்கு முட்டை வழங்கிக்கொண்டிருந்தது சுவாரஸ்யமான கதை

.  இவர் எப்படி ஆமியைச்சுடுவார் என்பது எனது நீண்ட கால ஐயம்.நிச்சயம் இவர் காக்காவை அடித்துத்தான் கொன்றிருப்பார்.அல்லது கொல்லும்படி கட்டளையிட்டிருப்பார்.(இவர் வீட்டிலிருக்கும்போது பொறி வெடியில் சிக்கவைத்து சிதறடித்தவர் யாரென இன்று வரைப்புலப்படவில்லை,வினை வினைத்தவன் திணை அறுப்பதில்லை என்பதற்கு கண் கண்ட சாட்சி அவரின் சிதறிக்கிடந்த ஜனாசா)

நாங்கள் பொத்தானை புனானை காடுகளில் காக்காவின் ஜனாசாவைத் தேடினோம்.காடு மறைத்து வைத்துள்ள சடலத்தை நாட்கணக்கில் தேடினோம். குளிப்பாட்டாமல்,கபனிடாமல்,தொழுவிக்காமல் அடக்கம் செய்யப்பட்;ட அவனை இந்தக்காடு மறைத்து வைத்துள்ளதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. முதன் முதலாக காட்டின் மேல் உள்ள வசீகரம் அற்றுப்போனது இப்படித்தான். 

இன்றும் பொத்தானை ஆற்றுக்குப்போகும் போதெல்லாம் தேடிப்பார்க்க மனம் அவாவுகின்றது. கேட்பாரற்று கிடக்கும் மனித எலும்புக்கூடுகளுக்குள் எனது காக்கா இருப்பானோ? எனினும் பறவைகளின் மிருகங்களின் ஒலிகள் காக்காவின் ஒப்பாரியாகவும் வாழ்தலுக்கான இறைஞ்சலாகவும் என்னை அலைகழித்துக்கொண்டே இருக்கின்றது.

ஆயுதக்குழுக்களின் விசாரணை என்றவுடன் இன்னொன்றும் சட்டென்று நினைவில் ஆடுகின்றது.

1988 இன் கடைசிப்பகுதி என நினைக்கின்றேன். நான் கிழக்கிழங்கை அறபுக்கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த காலம். கல்லூரி விடுமுறையில் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று அரட்டை அடிப்பது வழக்கம். இப்போது அரட்டை மன்னர்களை கண்டால் ஓடி ஒளிவது வழக்கம்.
அன்றும் அப்படித்தான் காத்தான்குடி நண்பர் அபுல் ஹசனின் ஊரான காங்கயனோடைக்கு போவதென்று தீர்மானித்தோம்

.காங்கயனோடை ஆறையம்பதிக்கு பக்கத்தில் என்பதால் அடிக்கடி இரு இனங்களுக்கும் முறுகல் நிலை ஏற்படுவதுண்டு.அதைத்தூபம் போட்டு வளர்ப்பவர்கள் ஆயுதக்குழுக்கள்.

 என்னுடன் ஏறாவூர் தோழர்களும் இருந்தனர். விடுமுறை விட்டதும் நேரே ஊருக்குப்போகவில்லை காத்தான்குடியில் இறங்கி பிரதான வீதியில் இருந்து காங்கயனோடை நோக்கி நடந்தோம்.

தோழர் அபுல் ஹசனின் வீட்டுக்கு 200 மீற்றர் இருக்கும்.வழியில் ஒரு ஆயுதக்குழுவின் முகாமிருந்ததை நாம் கவனிக்கவில்லை.தோழர்களும் சொல்லவில்லை.

முஸ்லிம்களிடம் தணகிப்பார்க்கும் வல்லமை கொண்ட ஜனநாயக்குழுக்கள் ஆயுதங்களுடன் நடமாடிய காலம். ஆட்கடத்தல், விசாரணை,கப்பம்,சித்திரவதை எல்லாம் ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு முஸ்லிம்களிடம் செயற்படுத்திய காலம்.

நாங்கள் முகாமை நெருங்கியதும் ஒரு அண்ணர் துப்பாக்கியுடன் ஓடி வந்தார்.
'எங்க போறியள்?'
'எங்கட வூட்ட' தோழர் அபுல்ஹசன் சொன்னார்.

அவர் எப்போதும் ஹாஸ்யமானவர்.அவர் பதிலிலும் அது இழையோடியதை நான் கவனித்தேன்.மாணவர் மன்றங்களில் அவர் பாடுவது குறித்த பாடகனை தற்கொலைக்கு தூண்டுவதாய் இருக்கும்.நாங்கள் அப்படித்தான் அவருக்கு கமென்ட் அடிப்போம்.பிரியாவிடைப்பாட்டில் கூட சோகமில்லாமல் சிரித்துக்கொண்டு பாட அவரால் மட்டுமே சாத்தியம் என்றால் நம்புங்கள்.

'வூட்ட போரண்டா இதால  ஏன் வந்த '?
அண்ணர்தான் மறுபடியும்.
'இதான எங்கட ரோட்டு'
மறுபடியும் அபுல்ஹசன் 
உங்களயெல்லாம் விசாரிக்க வேனும் என்று விட்டு நடங்க உள்ளுக்க என்றார்.

இலோசாக குலை நடுக்கம் ஆரம்பித்தாகிவிட்டது. வீட்டுக்குத்தெரியாமல் விடுமுறையை காத்தான்குடியில் கழிக்க திட்டமிட்டதை நினைக்கையில் மனம் பதைக்கத் தொடங்கியது. ஒரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். 

சுவரில் இரத்தக்கரைகள் படிந்திருந்தன. மனிதக்  கவிச்சியின் துர்நாற்றத்தை நாசி நிறைக்கத் தொடங்கியது. நாங்கள் ஏழுபேர்.அவர்கள் ஒரு ஆறுபேர் இருக்கும் ஆளுக்கொரு துவக்கு.துருவித்துருவி விசாரித்தார்கள். கல்லூரியின் அடையாள அட்டையை காட்டினோம்.நீங்களெல்லாம் ஜிகாத் படை எங்கள நோட்டமிட வந்திருக்கியள் என்றார்கள் முடிவில்.எப்படியெல்லாம் துல்லியமாக மோப்பம் பிடிக்கின்றார்கள் என்பதை நினைக்கும் போது நமது நாட்டின் கொலைக்குழுக்களில் பெருமையாக இருந்தது.

'நீதானே அட்டாளைச்சேனையில் நேற்றிரவு நோட்டீஸ் ஒட்டினாய் ? எனை நோக்கி ஒருவன் சுண்டு விரலை நீட்டினான்.

மாலை ஐந்தரைக்கெல்லாம் எங்கள் விடுதியின் இரும்புக்கதவுகள் மூடப்படுவதும் அது மறுநாள் ஏழுரைக்குத்தான் மீளவும் திறக்கப்படுவதையும் தெரிந்தவர்களுக்கு அவன் கேள்வி சிரிப்பைத்தான் சிந்த வைக்கும். ஆனாலும் சிரிக்கவில்லை.சம்சுத்தீன் மௌலானாவின் பார்வைக்குத்தப்பி விடுதிக்குள் இருக்கும் ஒரு சிற்றெறும்பும் முன் கதவால் நழுவ முடியாது என்ற இலட்சணத்தில் நான் நோட்டீஸ் ஒட்டியது என்றால் சும்மாவா சிரிப்பு வரும். 
'இல்லை அண்ண நாங்க யாரும் அப்பிடியானவங்க இல்ல.நாங்க படிக்கிற புள்ளயள்.'

எங்கள் வார்த்தைகள் எங்களுக்கே அன்னியமாகின.சற்றுமுன் போட்ட அட்டகாசமான கூச்சல்களும் கேலியும் அடங்கி உயிர்பிச்சைக்கு மன்றாடும் வார்த்தைகளாக அவை இறைஞ்சுதலாக ஒலித்தன.யாசகத்தனமிக்க வார்த்தைகளில் முழு ஜீவனும் காலடியில் ஒடுங்கி சிறுத்தது.

'அப்ப நீங்க ஓற்றர் படை இல்ல.எல்லாரும் முஸ்லிம் ஆக்கல் என்பதை நாங்க எப்புடி நம்புற காசக்குடுத்தா இதப்போல பல ஐடின்டிகார்ட் எடுக்க ஏலும்'  
ஒருவன் குண்டை தூக்கி தலையில் போட்டான். அது வெடித்துச்சிதற உடல் பயத்தில் வெடவெடத்தது.

'இல்ல அண்ண நாங்க முஸ்லிம் ஆக்கள்தான்.' நான் நடுங்கியபடி கூவினேன்.மேலண்ணத்தில் நாவு ஒட்டிக்கொண்டு அடம்பிடித்தது.வார்த்தைகள் நடுக்கமுடன் வெளிப்பட்டன.

அவன் இதழின் கோடியில் கேலியாய் இளநகை பூத்து மறைந்தது.
'அப்ப சுன்னத்து வச்சிரிக்கா என்டு பார்க்கவேனும்.'
நாங்கள் ஆளையால் மிரட்சியுடன் பார்த்தபடி நின்றோம்.

நாசர் இஞ்ச வா தலைவனின் அழைப்புக்கு வாலைச்சுருட்டிக்கொண்டு காலை நக்கும் நாய்க்குட்டிபோல் நாசர் வந்து அவன் முன் பவ்யமாக நின்றான்.
அவன் கையிலும் ஏ.கே 47 இருந்தது.சுவிங்கத்தை மென்றபடி இருந்தான்.
'இவங்கள செக் பண்ணிப்போட்டு அனுப்பு' தலைவனின் வார்த்தைக்கு மறுப்பேது ? 

'டேய் இஞ்சால வாங்கடா' என்ற சப்தம் ஈயத்தைக்காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது.அவர்கள் தேவல போலிருந்தது.நம்மடவனுக்கு கொம்பு முளைச்சா எப்படி இருக்கும் என்பதற்கு அவன் 'திருக்கவாலன்' நல்ல உதாரணம் மச்சான் என்று பிற்காலத்தில் நாங்கள் நினைத்துப்பார்த்து சிரிப்பதுண்டு.

நாசர் எங்கட சோனக அடையாளச் சின்னத்தை உறுதிப்படுத்தி தலைவனிடம் நல்ல பெயர் வாங்கிக்கொண்டான். பின்னர் எங்களை நோக்கி ஓடுங்கடா இனி இஞ்சாலப்பக்கம் தல வச்சிம் படுக்கப்படாது என்றான். அவமானத்தில் வெட்கித் தலைகுணிந்தபடி வெளியேறினோம். ஏதோ ஒன்றை இழந்து விட்ட அவசத்தில் மனம் பதகளித்துக் கொண்டிருந்தது.


எங்கள் தேசம் : 227                                                                        ஊஞ்சல் இன்னும் ஆடும்..

Monday 16 July 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

       தொடர் -19

ராசாவை சுட்டுக்கொல்ல இன்னுமொரு ராசா வந்தான். அவன்தான் மாணிக்கராசா என்ற பொலிஸ்காரன்.முஸ்லிம்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவன். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டியவன். 

முதன்முதலில் தமிழ் முஸ்லிம் கலவரங்களைத் தூண்டியதற்கு தூபமிட்ட பெருமையும் இவனையே சேரும்.மாஞ்சோலைக் கிராமத்து எல்லையில் தமிழ் முஸ்லிம் கலவரங்களைத்தூண்டி விட்டு அதில் குளிர்காய்ந்த சரித்திர நாயகன்.

கள்ள ராசாவை சுட்டு சாக்கில் கட்டிக்கொண்டு வந்து போட்டார்கள்.துள்ளித்திரிந்த பல ராசாக்களின் சரித்திரம் இப்படித்தான் குரூரமாக முடித்து வைக்கப்பட்டது என்பது நமது காலத்தின் நிஜக்கதை.

கள்ளராசாவில் ஆரம்பித்த காட்டு வாழ்க்கை, இலங்கை இராணுவத்தின் கெடுபிடி,இந்திய இராணுவத்தின் கெடுபிடி, தமிழ் தேசியபடைகளின் கெடுபிடி,ஏன் புலிகளின் கெடுபிடி என எல்லா கெடுபிடிகளுக்கும் தாக்குப்பிடித்தது.

காடுகள் தனக்குள் அடைக்கலம் தேடுபவர்களை காட்டிக்கொடுப்பதில்லை என்பதற்கு எனது வாழ்க்கை முழு சாட்சி. என்னையும் குடும்பத்தையும் அது பொத்திபொத்தி வைத்து வெளியே விட்டிருக்கின்றது. குரங்குகள் கூட உணர்வுகளைப் புரிந்து கொண்டாற்போல ஆர்ப்பாட்டமின்றி மௌனமாக எங்களைக்கடந்து போகும். அற்புதமான மலர்களும் காட்டுச்செடிகளும் மணம் வீச எத்துனை இரவுகளும் பகல்களும் எங்களைக்கடந்து போயின நாமறிவோம்.

எனது பதினெட்டாவது வயதில் இந்த ரம்யமான காடு என்னை அச்சுறுத்தியது. வனத்தின் வசீகரிப்பில் முதன்முதலாக அச்சமுற்றது அன்றுதான். ஒவ்வொரு காடும் என்னை மரணத்தின் எல்லைவரை விரட்டியது.கொடூரங்களை என்னில் துப்பியது.என்னை தத்தெடுத்த காட்டின் கரங்கள் இரத்தக்கரையுடன் வெளியே வீசியடிக்க உண்மையில் நொறுங்கித்தான் போனேன்
.
அது எனது பெரியம்மாவின் தலைச்சன் பிள்ளை சகோதரன் ஹயாத்து முஹம்மதுவை தேடிய பயணம். புணாணையில் வைத்து அவனை புலிகள் கைது செய்தனர். பொத்ததானை ஏரியாவுக்குப் பொறுப்பான புலிகளின் தலைவனை யாரோ வெட்டிப்போட்டு போய்விட்டார்கள். 

இடாப்பர் கடைச் சந்தியில் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தபோது நான் விடுமுறையில் நின்றேன். எனது பெரிய மாமாவின் வயலில் காக்கா காவலுக்கு நின்றான்.அவரின் ஒரு காலும் புலிகளின் மிதி வெடிக்கு காணிக்கையாகியது வேறு கதை.(செல்போன் கதைத்துக்கொண்டு ட்ரக்டர் ஓட்டிய சாரதியின் கவனயீத்தால் அந்த மாமாவும் இரயிலில் அடிபட்டு அண்மையில்தான் மரணடைந்தார்,அவரின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பானாக)  காக்கா ஒர் அப்பாவி. காக்கிச் சட்டையைக்கண்டால் கூட ஓடி ஒளிந்து விடும் வெகுளி.யாருக்கும் உபத்திரவம் செய்யத்தெரியாத வெள்ளை மனத்தினன்.

புலியை வெட்டியது தெரியாமல் வயலில் இருந்து கடைக்கு வந்திருக்கின்றான்.தெருவில் அதிக சனக்கூட்டம் தென்படவே தூரத்தில் நின்று வேடிக்கைபாhர்த்தபடி நின்றவனை பக்கத்து வயற்காரர் கூப்பிட்டு தம்பி நீ மாமாட வாடிக்கு ஓடிப்போ. இஞ்செ தியாகுவ வெட்டிப்போட்டிருக்காம் அவனுகள் வந்தா பிரச்சின வரும் என்று அவர் வாய் மூடுவதற்குள் புழுதிப் படலத்தை இரைத்துக்கொண்டு வாகனங்கள் வந்து நிற்கவும்,காக்கா ஓடவும் சரியாக இருந்தது.

 ஆறாம் கட்டை முகாமிலிருந்து புலிகளின் படைகள் வந்து சுற்றி வளைத்தன. தூரத்தில் நின்றவர்கள் ஓடித்தப்பினர். இவனும் ஓடிக்கொண்டிருந்தான். யாரோ இவனையும் நிற்கும்படி கூப்பிட்டிருக்கினம். இவன் கால்கள் வரம்புகளில் அடிபட்டு சேற்றில் மிதிபட்டு மாமாவின் வாடிக்குள் விழுந்தன.

விசாரித்திருக்கின்றார்கள். முடிவில் அவனை பிடித்து ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போய்விட்டார்கள். தியாகுவை வெட்டியவன் சிரித்துக்கொண்டிருக்க ஒரு நுளம்பைத்தானும் அடிக்க வக்கில்லாதவனை எக்காளச்சிரிப்புடன் பிடித்துக்கொண்டு போனார்கள்.

 எங்களது கடைக்கு முன்னால் புலிகளின் வாகனங்கள் இரைந்து சென்றதையும் சேர்ட்டை கழற்றி பின்னால் கைகள் கட்டப்பட்டு காக்கா ஜீப்புக்குள் குந்திக்கொண்டு செல்வதையும் கண்டேன். அப்போதும் அவன் முகத்தில் அந்த அப்பாவிச்சிரிப்பும் மிகுந்த நம்பிக்கையும் இருந்தது.என்னை ஒன்டும் செய்யமாட்டார்கள் என்ற ஒளிக்கீற்றை என்னால் காண முடிந்தது.

அவர்களின் முகாமிற்கு வாப்பாவுடன் நான் சைக்கிளில் சென்றேன்.கரியரில் ஏறிக்கொண்டு செல்லும் போது வழியில் சனங்கள் கூடி நின்று விவாதிப்பதைக் கண்டேன்.சில புலிக்குட்டிகள் வீதியில் நின்றபடி புலனாய்வு செய்து கொண்டிருந்தார்கள்.அவர்களின் பிஞ்சு மூளைக்குள் கொலை செய்தவன் சிக்குப்படாமல் போக்குக் காட்டிக்கொண்டிருக்க வேண்டும்.ஆளாளுக்கு துயரத்தை பங்கிட்டபடி நிற்பதைக்கண்டேன்.

நாங்கள் முகாமை அடையவும் பெரியம்மா ஆறாம் கட்டை முகாமிற்கு பிரசன்னமாகவும் சரியாக இருந்தது. கல்குடா தொகுதி முஸ்லிம் பகுதிகளுக்கான குறுநில மன்னர் புஹாரி வாசலில் நின்றிருந்தார். எங்களுக்கு தூரத்துச்சொந்தம் கூட. காக்காவைப்பற்றி நன்கு தெரிந்தவரும் கூட. பெரியம்மா மன்றாடிப்பார்த்தா. அவர் மசியவில்லை. நாங்க விசாரிச்சுப்போட்டு விட்டுப்போடுவம் என்றார். 

வாரங்கள் மாதங்கள் வருடங்கள் கடந்தும் பெரியம்மாவால் அவர் அப்பாவி மகனை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வேறு கதை.

சில நாட்களின் பின் பொத்தானை அணைக்கட்டுப் பக்கம் காக்காவை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வந்ததை கண்டவர்கள் எங்களிடம் சொன்னார்கள்.அன்று காலை சென்று விசாரித்ததில் ஒரு பேருண்மை வெளிப்பட்டது.இரவு முழுக்க அந்தக்காட்டில் ஒரு மனித அவலக்குரல் கேட்டதாம். என்னை அடிக்காதீங்க எனக்கு ஒன்டும் தெரியாது அது நள்ளிரவு வரை கேட்டது தம்பி . விடியச்சாமம் நாங்க ஆற்றுக்கு வலை வீசப்போவக்க அவனுகள்ர ஜீப்ப துரையடியில கண்டம்.கழுவிக்கொண்டு இருந்தானுகள்.அந்தப்பொடியன்ர சேர்ட்டு அவடத்ததான் கிடக்குது்

நானும் நண்பர்களும் துறையடிக்குச்சென்ற போது காக்காவின் இரத்தக் கரைபடிந்த சேர்ட்டைக் கண்டோம். காக்கா இருக்கவில்லை. பெரியம்மா புஹாரியிடம் கெஞ்சிப்பார்த்தா மையத்தயாவது தாங்க தம்பி எண்டு .சு.ப. தமிழ்ச்செல்வன் (புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர்,இலங்கை இராணுவத்தின் குண்டுக்கு இலக்காகியவர்) சொல்வதைப்போல அவரும் கையை விரித்து எங்களுக்கு ஒண்டும் தெரியாது விசாரணை நடக்குது விடுவம் என்றார். கூடவே இனி வந்து கரச்சல்படுத்தப்படாது என்ற எச்சரிக்கைவேறு.

எங்கள் தேசம் : 226                                                                         ஊஞ்சல் இன்னும் ஆடும்..



Tuesday 10 July 2012

நினைவுகளில் தொங்கும் ஊஞ்சல்


தொடர் -16

என் சர்வாங்கமும் ஒடுங்கி இதயம் வெடித்துவிடுமாற்போல் அடித்துக்கொண்டது. ஐந்தடி உயரமுள்ள கருத்த நாயொன்று பாய்வதற்கு தயாராக இருந்தது. அந்தக்கண்கள் நெருப்புக்கங்குகள் போல் சுடர்விட்டுக்கொண்டு மின்னிக்கொண்டிருந்தன.தீட்டிய வால் போல் நாக்கு நீண்டு ஈரத்தில் மினுமினுத்தது.திறந்த வேகத்தில் கதவை இழுத்து மூடினேன்

பருந்தின் கால்களில் அகப்பட்ட கோழிக்குஞ்சாக தேகம் நடுங்கிக்கொண்டிருந்தது.வியர்வையில் தெப்பமாகி பிரமையுடன் கட்டிலில் குந்திக்கொண்டிருந்தேன்.காதுகள் இரண்டும் வெளியில் இருந்தன. ஒரு சிலமனுமில்லை. அக்காலத்தில் கையடக்கத்தொலைபேசி வசதிகள் இல்லாத காலம்.எனக்கு ஊரிலிருந்து கடிதம் மட்டும்தான் வரும்.நானும் அப்படித்தான் வாரமொரு முறை தபால் அனுப்புவேன். 

எத்தனை மணிக்குத்தூங்கினேன் என்று தெரியாது.காவன்னா ஹாஜியார் வந்து கதவைத் தட்டு மட்டும் தூங்கியிருந்தேன். காலையில் யாரிடமும் இரவு நடந்த சம்பவத்தை சொல்லவில்லை.மறுநாள் இரவு தனியே தூங்குவதில்லை என்ற முடிவுடன் இருந்தேன். அங்கு பணி செய்த ஒரு வருடமும் நண்பர்கள் புடை சூழத்தான் தூங்கினேன்.எனது உஸ்தாதிடம் கேட்டேன்.

 'மகன் அது ஜின். பள்ளியில் இபாதத்துக்கு வருவது நல்ல ஜின்களின் அன்றாடப்பணி.அது நாய் பாம்பு ரூபத்திலும் வரும் என்பது ரசூலுல்லாஹ்வின் பொன் மொழி' என்றார்.அது சரி பள்ளிவாயலுக்குள் வரும்போதும் நாய் வேசம் எதற்கு என்று ஜின்னிடம் கேட்டிருக்கவேண்டும் அதற்குப்பின் அதைக்கானும் பாக்கியம் கிடைக்கவே இல்லை. மனிதர்களே குதறிக்கடிக்கும் வேட்டைப்புலி வேசத்தில் பள்ளிவாயலுக்குள் நுழையும் போது ஜின் வந்தால் என்ன? நான் தம்புள்ள பள்ளிவாயலுக்குள் (20.04.2012) வந்தவர்களை இப்படி சொல்லவில்லை.

 அவ்வப்போது கருப்பு நாய்களைக்கானும் போது அந்தக்காட்சி மனதை விட்டும் அகலாமல் பயமுறுத்திக்கொண்டுதான் இருக்கிறது.

99 காலப்பகுதியிலும் இப்படித்தான் ஜின்னில் அகப்பட்டுக்கொண்டு திமிறியிருக்கின்றேன். வவுனியா வீதியில் மதவாச்சி நகருக்கு அண்மையில் இருக்கும் கிராமம் இக்கிரிகொல்லாவ.என்னுடன் படித்த இரு நண்பர்களின் கிராமம். ஏ.எல் எடுத்தபின் இங்கெல்லாம் வந்திருக்கின்றேன். வரட்சியான ஊர்.விவசாயம் ,கால் நடை வளர்ப்புத்தான் பிரதான தொழில்.

பெரும்பாலானோர் வீட்டு முற்றத்தில் மாட்டுப்பட்டி இருக்கும்.ஆடுகளும், நாட்டுக்கோழிகளும் சர்வசாதரணமாக முற்றத்தில் கிடந்து மேயும்.பெண்கள் சாணி அள்ளுவதும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவுதிலும் இருப்பதைக் கண்டிருக்கின்றேன்.

புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முல்லைத்தீவுவாசிகளின் அகதி முகாமும் இருந்தது. சுற்றுத்தொலைவில் மன்னார் அகதி முகாம் ஒன்றும் இருந்தது.மன்னார் வேப்பங்குளம்,சாளம்பைக்குளம் நண்பர்களும் இக்கிரிகொல்லாவ அகதி முகாமில் தங்கியிருந்தது எனக்கு வாய்ப்பாக போய்விட்டது. 

யாழ்ப்பாணத்து முஸ்லிம் குடும்பங்களும் தங்கிருந்தார்கள். சில யாழ்ப்பாணத்துப் பிள்ளைகள் எனது மாணவர்களாக இருந்தார்கள்.இக்கிரிகொல்லாவைக்கு சீக்கிரமாக வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.நண்பர்களின் ஊர் என்பதால் வறட்சி வசதிவாய்ப்புகளை மறந்து வந்து விட்டேன்.இங்கு வருவதற்கு இன்னுமோர் காரணம் எனது மச்சான் மன்சூர் அவர்கள் மதவாச்சி மில்போர்ட்; மனேஜராக மாற்றலாகி வந்திருந்தார்.

 இங்கு வந்த பிறகுதான் அன்றாடத் தினசரி கூட இல்லாமல் இருப்பது தெரிந்தது. இரண்டு மைல் தொலைவில் உள்ள ரம்பாவ நகருக்குச்சென்று  பத்திரிகை எடுத்து வந்து படிப்பது என் அன்றாட பழக்கங்களில் ஒன்றாக இருந்தது.அல்லது மதவாச்சிக்குப்போய் மச்சானுடன் கதைத்து விட்டு வருவது. யுத்தம் உச்சத்தில் நின்ற காலம்.இரானுவ நெருக்குவாரங்களும்,புலிகளின் பழிவாங்கள்களும் குறைவில்லாமல் மக்களுக்கு கிடைத்துக்கொண்டிருந்தன. 

அந்தக்கிராமங்களில் பெரும்பாலும் அறையில் தூங்குவதும் ,பேக்கரியில் வேகுவதும் ஒன்றுதான்.நான் அறையில் படுப்பது கிடையாது.இருக்கவே இருந்தது மிகப்பெரிய பள்ளி ஹோல்.முஅத்தினார்,வழிப்போக்கர்கள், என  ஒரு பட்டாளமே பள்ளியில் தங்க தினமும் ஆட்கள் கிடைத்தார்கள்.நானும் அன்று அப்படித்தான் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தேன்.பள்ளிவாயிலில் மிம்பருக்கு எதிரே உள்ள தலைவாயிலில் யாரும் உள்ளே நுழைந்து விடாதவாறு குறுக்காக மரமொன்றை தரித்து வீழ்த்தியதைப்போல் நான் படுத்துக்கிடந்தேன்.வெற்றுடம்பு ஈரமான காற்றுடன் மின்விசிறியின் காற்றும் ஒருசேர தாலாட்டுப்பாடியிருக்க வேண்டும்.நல்ல தூக்கம்.

 நள்ளிரவு 1மணி தாண்டியிருக்கும் என நினைக்கின்றேன்.வலிய இரு கரங்கள் எனது கால்களைப் பிடித்து மேல் நோக்கியவாறு சுழற்றி எடுத்ததை உணர்ந்தேன் .என்ன நடக்குதென்று நிதானிக்க முடியவில்லை அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இரு கால்களும் அசைக்கவே முடியாத அளவிற்கு இரும்புப்பிடி. என்னை அந்தரத்தில் ஒரு பம்பரம் போல் சுற்றிக்கொண்டிருப்பது யார் ?.கனவா என்று யோசித்துப்பார்த்தேன்.பலம் கொண்ட மட்டும் கத்திப் பார்;தேன் இடுப்பிலிருந்த சாரம் நழுவி விடுமாற்போல் இருந்தது. கனவல்ல என்று உணர்ந்தபின் முழுப்பலத்தையும் குவித்து கத்தினேன்.

நான் படுத்த இடத்திலிருந்து சற்று அப்பால் நான் வீசப்பட்டுக்கிடப்பதை உணர்ந்தேன். பள்ளிவாயலுக்குள் படுத்த முஅத்தின்சாப்தான் முதலில் என் காட்டுக்கத்தலைக்கேட்டு ஓடி வந்தார். என்னைப்பார்;த்ததும் அவர் பயத்தில் உறைந்து போய் பின் நிதானித்து அருகில் வந்து அள்ளி எடுத்து குடிக்க தண்ணீர் தந்தார். நடந்ததை சொல்வதற்கு எனக்கு அவகாசம் தேவைப்பட்டது. திக்பிரமை பிடித்தவன் போல் தூங்கிய இடத்தைப் பார்த்தேன் .போர்வையும் தலையணையும் அப்படியே கிடந்தது. அது ஜின்னின் வேலையாக இருக்கும்.ஒதி ஊதிக்கிட்டு படுங்க என்றார். 

பள்ளிவாயலின் தலைவாயலில் படுக்கப்படாது.ஜின் வருகின்ற நேரம் வழியில் படுத்தால் இப்படித்தான் செய்யும்.வருகின்ற ஜின்னுக்கு எவ்வளவோ வாசல் இருக்க என்னை பம்பரமாய் சுற்றி வேடிக்கை காட்டிய மர்மம் என்ன ?மற்றது நான் தூங்கும் போது சொல்லாமல் ஜின்னிடம் என்னை மாட்டிவிட முஅத்தின்சாப் திட்டம் போட்டாரா? எந்த ஜின்னிடம் கேட்கலாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

எங்கள் தேசம் - 223                                                       ஊஞ்சல் இன்னும் ஆடும்.......

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...