Tuesday 7 February 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

எங்கள் தேசம் பத்திரிகையில் தொடராக வெளிவரும் நினைவுக்குறிப்புகள் 
 
தொடர் -07

பின்பும் இரண்டொரு தரம் கனவில் வரும் பாம்புகள் நிஜத்திலும் என் முன்தோன்றி ஆச்சரியப்படுத்தியதுண்டு. கனவில் பாம்புகள் தோன்றி மறைந்த  இடத்தை நான் எப்போதாவது கடந்து போகும் தருணத்தில் அதே பாம்புகள் என்னை ஊடறுத்துச் சென்ற தருணங்கள் அதிகம். எனக்குள் தெறிக்கும் படைப்பார்வம் மெதுவாக அவைகளின் பின் ஊர்ந்து கொண்டே செல்லும்.

"ஏவாளின் தோட்டத்தில் கனிகள் இன்னும் மிச்சமிருக்கின்றன" என்ற எனது சிறுகதையில் வரும் பாம்பின் வர்ணிப்பும் பாம்பு பற்றிய கதை உத்திகளும் இந்தக்கனவு நிஜத்தின் நிழல் தவிர வேறொன்றுமில்லை.

புனானை ஸ்ரேஷனைக் கண்டதும் ஒரு சம்பவம் நினைவின் நுனியில் எட்டிப்பார்க்கின்றது என்றேன் இல்லையா? எனது சிறுபராயத்து ரெயில்வே பாந்தத்தை நான்காவது அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

வாழைச்சேனை ஸ்ரேஷனில் தரித்து நிற்கும் ரெயிலில் ஏறி ஓட்டமாவடி பாலம் அல்லது பெக்டரி ஸ்ரேஷனில் நாங்கள் இறங்குவதுண்டு. இது தினமும் மாலை நேரங்களில் களவில் நடக்கும் திரு விளையாட்டு.

நாங்கள் மூன்று நண்பர்கள். அவர்கள் ரெயில்வே ஸ்ரேஷனில் என்னுடன் வியாபாரம் செய்பவர்கள். மாலையில் வரும் ரெயில்கள் பெரும்பாலும் சரக்கு ரெயில்களாகவே இருக்கும்.இரண்டொரு பெட்டிகளை இழுத்துக்கொண்டு வரும். வியாபாரம் இருக்காது.

இந்தப்பெட்டிகளுக்குள் எங்கள் குதியான் பருவத்து சேட்டைகள் அரங்கேறும். ரெயில் கார்ட் கடைசிப்பெட்டியில் இருப்பார். அடிக்கடி எங்களை காண்பதால் ஸ்ரேஷன் மாஸ்ரர் கருணாரெட்ன கண்டுகொள்ளவேமாட்டார்.அவரின் சிநேகிதர்கள் பட்டியலில் நாங்களும் சேர்த்தி.

நாங்கள் எப்போதாகிலும் புனானையில் வந்து இறங்குவதுண்டு. பின்வழியால் குதித்து, மேம்பாலத்தைக்கடந்து பாதைக்கு அப்பால் இருக்கும் குளத்திற்கு வருவோம். நீர் விiயாட்டுத்தொடரும்.

திராய் பிடுங்குவோம்.அத்தாங்கில் மீன் பிடித்து மடியில் கட்டிக்கொள்வோம்.விறால் மீன்களும்,கெலுத்தியியும் தாப்புக்காட்டும். காடைக்குருவிகளைத்தேடி காடுகளுக்குள் அலைவோம். புனானை காடுகளில் மிதி வெடி முளைக்காத காலம்.

தோணிகள் சகட்டுமேணிக்கு கரையில் ஒதுங்கிக்கிடக்கும்.அதை தீ வைப்பதற்கும் கொத்தி சேதமாக்குவதற்கும் அரக்கர்கள் இல்லை. அடுத்த கோச்சி வரும் வரை குளத்தின் அமைதி இழந்து குதியாட்டமிடும்.

பின்பு டிக்கற் எடுக்காமலே அடுத்த ரெயிலில் பின் கதவால் ஏறி டிக்கற் பரிசோதகர்களின் கண்களில் மண்னைத்தூவி வாழைச்சேனை ஸ்ரேஷனில் வந்து இறங்குவோம்.

ரெயிலில் சும்மா போவதெல்லாம் கிடையாது. ஒரு பெட்டியின் ஆட்கள் இறங்கும் வழியால் ஒரு காலை வைத்து,அடுத்த பெட்டியின் நுழைவு வாயிலை மிக இலாவகமாக கடப்போம்.இது ஓடுகின்ற ரெயிலின் வெளிப்புறத்தில் அரங்கேறும் காட்சிகள்.அல்லது ஓட்டமாவடி பாலத்தைத் தாண்டுகையில் குதித்து பாலத்தின் இரும்புக்கேடர்களை அணைத்தபடி நிற்போம். ரெயில் சென்றவுடன் அப்படியே தண்டவாளத்தால் நடந்து மீண்டும் ஸ்ரேஷனுக்கே வந்து நிற்போம்.

ஒரு நாள் வாழைச்சேனை ஸ்ரேஷனில் ஏறியவுடன் விளையாட்டை ஆரம்பித்தோம். பேப்பர் பெக்டரி வரை ரெயில் மிக மெதுவாகவே செல்லும். நான் தான் முதலில் பெட்டிக்குத்தாவும் விளையாட்டை ஆரம்பித்தேன்.

வழமைபோல் ரெயிலின் வெளிப்புரத்தில் நான் தாவி அடுத்த பெட்டிற்குள் கால் வைக்கவும், ஓட்டமாவடி பாதுகாப்பு கடவை வரவும் சரியாக  இருந்தது. அங்கே வாப்பா நின்றதும்,கடவையில் மற்ற ஆட்கள் நின்றதும் தெரியவே தெரியாது. வியாபாரத்திற்குச் சென்ற வாப்பா வீட்டிற்குத் திரும்புகையில் நான் குப்பிலாம்பின் வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருந்தேன்.

வந்த வேகத்தில் திண்ணையில் 'ஸ்டான்ட்" போட்டு சைக்கிளை நிறுத்தியவர். முகட்டிலிருந்த கம்பை உருவி எடுத்து விளாசும் வரை உம்மா மலைத்துப்போய் நின்றா.பின்பு சுதாகரித்தபடி என்னை அவரின் அதிரடித்தாக்குதலிருந்து காப்பாற்றப்போராடினா.

அவர் அடித்து ஓய்ந்து,கிணற்றடிக்குப்போனார். போகும் போதே 'ஓடிப்போர கோச்சிக்கு வெளியால மகன் வித்த பழகுறாரு. தவறி வுழந்தா மண்ட ஓட்டயும் பொறுக்கேலா".என்று கத்திக்கொண்டே சென்றார். உம்மா தலையை தடவி இனி அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்றா.
 
கொழும்பிலிருந்து வந்த கோச்சியிலிருந்து ஆட்களை ஓட்டமாவடி பாலத்தருகே இறக்கி தீவைத்து அட்டூழியம் புரியும் வரை இந்த விளையாட்டை நாங்கள் விடவே இல்லை.
 
எனது படைப்பூக்கத்திற்கான அனேக களங்களை புகையிரதப்பயணங்கள் தந்திருக்கின்றது என்பது பேரின்ப ஆனந்தமாக இருக்கின்றது.பாம்புகளுடன் இந்த ரெயில்களுக்கும் ஒத்திசைவுகள் உண்டு.இரண்டும் ஊர்ந்து ,நெழிந்து செல்லும் இலாவகத்தில் நினைவுகள் சிதறிப்பிரகாசிக்கின்றன. 
 
ஊஞ்சல் இன்னும் ஆடும்......
எங்கள் தேசம் இதழ் : 214

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...