Saturday 6 July 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

                                                                   தொடர் - 42

 திஹாரியில் வசித்து வந்த திருகோணமலை நண்பர் பாரிஸ் பொருளாதார உதவியை  பத்திரிகைக்காக செய்து வந்தார்.நான் சில நேரங்களில் பத்திரிகை  வேலைகள் அதிகம் இருந்தால் 'மிலேணியம்' புத்தக நிலையத்தின் ஒரு மூளையில் சுருண்டு படுத்துக்கொள்வேன்.

 அதிகாலை மீண்டும் பம்பலப்பிட்டியிலிருந்து பொரல்லைக்கு வந்து அலுவலகப்பணிகளில் மூழ்கிவிடுவேன். ஒரு சோற்றுப்பார்சலை இரண்டுபேர் அல்லது மூன்று பேரும் சாப்பிட்டு விட்டு வேலைகளை கவனித்திருக்கின்றோம்.

ஒரு கப் டீ குடிக்க வேண்டும் போல் தோன்றும் அவ்வளவு அயர்ச்சி.நள்ளிரவில் பம்பலப்பிட்டியில் டீ வாங்க கடைகள் இருக்காது. இருந்தாலும் கிழக்கு மாகாண முகத்துடன் வீதியில் சுற்றித்திரிய ஓர்மம் வேண்டுமே!.    டீ போட்டுக்குடிக்கவும் நேரம் இருக்காது.

வெறும் தண்ணீரை மட்டும் அருந்திக்கொண்டு நள்ளிரவு வரை முஸ்லிம் குரலின் வளர்ச்சிக்கு உழைத்தவர்களிடம் சமூக உணர்வு தவிர வேறொன்று இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.

'சுயம்' பத்தரிகை எதிர்பார்த்த எழுச்சி அலையை மக்களிடையே தோற்றுவித்தது.வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகள் தோறும் விற்பனை செய்வதென்ற கொள்கைக்கு ஏற்ப அனைவரும் உழைத்தோம்.

 கட்டுரைகளில் உள்ள ஒரு வார்த்தை அல்லது வசனத்தைக்கூட பல கோணங்களில் விவாதித்து சேர்ப்பதா நீக்குவதா என்பதில் கூட அவதானமாக செயற்பட்டோம்.ஒரு வசனத்தின் சரியான புரிதலுக்காக ஒரு மணி நேரம் கூட விவாதித்திருக்கின்றோம்.

 உதாரணமாக வடகிழக்கு என்று இணைத்து எழுதுவதைக்கூட நண்பர் பவ்சர் விரும்பமாட்டர்.வடக்கு கிழக்கு என்று பிரித்தே எழுதி வருவார்.முஸ்லிம் தனித்துவ அரசியல், கலை, கலாச்சார சொற்களை கையாள்வதில் மற்றவர்களுக்கு பிடி கொடுக்காமல் பதிவு செய்வதில் நாங்கள் மிகக்கவனமாக செயற்பட்டோம்.

 சில சமூக ஆர்வலர்கள் பத்திரிகை விற்ற பணத்தை திருப்பிச்செலுத்தாமலேயே காலத்தை தள்ளி சுயத்தின் கழுத்தினை நெரித்து கொன்று விட்டனர்.

பஸ் பிடித்துக்கொண்டு ஊர் ஊராய் போய்  கடன் வசூல் பண்ண வேண்டிய நிலை. ஒரு பத்திரிகை நடாத்துவதன் சிரமத்தையும்,எதிர்கொள்ளும் சவாலையும்  'சுயம்'  விடயத்தில் அனுபவ ரீதியாகப்புரிந்து கொண்டேன். புலிகளின் அச்சுறுத்தல்கள் தலை நகரில் உச்சத்தில் இருந்த காலத்தில்தான் முஸ்லிம் குரலை தைர்யமாக வெளியிட்டு வந்தோம். அக்காலத்தில் பத்திரிகையின் தொடர்புகளுக்கு ஒரு தொலைபேசி இலக்கம் தேவைப்பட்டது.மற்றவர்கள் தயங்கிய தருணத்தில் என்னுடைய குரல் ஓர்மமாக ஒலித்தது. ஈற்றில் என்னுடைய தொலைபேசி இலக்கத்தைத்தான் பத்திரிகையில் போட்டோம்.

பத்திரிகை நின்ற பின்னும் மிரட்டல்கள் ஓயவில்லை. சில காலம் அந்த தொலைபேசியை துண்டித்துவிட்டு ஒரு வருடத்திற்குப்பின் இணைப்பில் வந்தேன். ஒரு வருடத்திற்குப்பின் நண்பர் பவ்சரின் புத்தக நிலையத்தை மூடிவிட பத்திரிகை காரியாலயம் மருதானை ஆனந்தக்கல்லூரிக்குப் பின்னாலுள்ள மாளிகாகந்தை வீதிக்கு மாற்றப்பட்டது.

ஆனந்தக்கல்லூரியின் வெளி விளையாட்டு மைதானம் அலுவலகத்திற்கு முன் காணப்பட்டது. 

பிற்காலத்தில் பாழடைந்த பத்திரிகை காரியாலத்தை ஏக்கத்துடன் பார்த்தபடி அந்த மைதானத்தில் ஒரு வருடமாக தினமும் வாக்கிங் போவேன். தற்போது அல்குத்ஸ் சர்வதேசப் பாடசாலை இயங்கும் கட்டடம். 

இவை மிக முக்கியமான பதிவுகள் என்பதால் சொல்ல வேண்டிய தேவை உள்ளது.

முஸ்லிம்களின் தனித்துவ ஊடகத்தின் முக்கியத்துவம் பற்றிப்பேசப்படும் இத்தருணத்தில் அதனை வளரவிடாமல் முளையிலேயே கிள்ளி எறிந்த பெருமைக்குரியவர்கள் சில பத்திரிகை ஏஜென்டுகள் என்பது கசப்பான யதார்த்தமாகும்.

இஸ்லாம், சமூகப்பணி என்று தத்துவம் பேசும் இப்படியானவர்களை நிற்பாட்டி வைத்து கன்னத்தில் அறைந்தாலும் அடிக்கின்ற நமது கைகள்தான் 'தீட்டுப்படும்'.இத்தகைய சமூகத்துரோகிகள் இன்றும் வாயைப்பிளந்து கொண்டு சமூகத்தைப்பற்றி அக்கரையுடன் பேசிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

உண்மையில் இயக்கம் அல்லது கொள்கை சார் பத்திரிகைகளின் படுகொலைக்கு பின்புலமாக இருப்பவர்கள் அந்த இயக்கத்தின் பற்றுதிகொண்டவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் நபர்கள்தான்.இவர்கள்தான் இயக்கத்தின் அல்லது கொள்கையின் வளர்ச்சிக்கு தடையாக நிற்கும் அல்லது தோல்விக்கு துணைபோகும் நம்பிக்கை துரோகிகள்.

நண்பர் பவ்சர் பிற்காலத்தில் ஊர் ஊராக பத்திரிகை ஏஜென்டுகளைத்தேடி அலைந்திருக்கின்றார். அவரின் பெரும்பாலான பொருளாதாரத்தையும், நேரத்தையும் இந்த முஸ்லிம் குரல் விழுங்கியிருக்கின்றது.அவரைப்போல பலரின் கனவுகளையும் இந்த ஏஜென்டுகளும் கொள்கைவாதிகளும் ஏப்பமிட்டுள்ளார்கள்.அவர்களின் வயிறுகளில் முஸ்லிம் சமூகத்தின் தீ சப்பதமில்லாமல் எரிந்து கொண்டிருக்கின்றது.

ஒரு சமூகத்தின் ஊடகத்தின் இறப்புக்கு காரணமான இவர்கள் நிம்மதியாக வாழ்தல் என்பது சாத்தியமற்ற செயல்.நிச்சயம் அவர்களின் மன சாட்சி அவர்களை குதறிக்குதறிக்கொல்லும். கொல்ல வேண்டும்.  

எங்கள் தேசம் -248                                                                                                           ஊஞ்சல் இன்னும் ஆடும்.......







  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...