Thursday 15 August 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்.

                                                 தொடர்- 45

எனது எழுத்துலகில் நிறைய சுவாரஸ்யங்கள் உண்டு.
91.06.15ம்திகதி எழுச்சிக்குரல் பத்திரிகையில் ‘மச்சானே அழைத்திடுங்க’ என்ற கவிதை வெளிவந்தபோது ஒரு சம்பவம்.பத்திரிகையை தூக்கிக்கொண்டு ஒரு ஆசிரியர் ஓடிவந்தார்.நான் சைக்கிளை உழத்திக்கொண்டு ஓட்டமாவடி மையவாடிக்கு பக்கத்து தெருவில் போய்க்கொண்டிருந்தேன்.

அவர் மூச்சுவாங்க என்னெதிரே நின்றார்.நான் சைக்கிளை நிற்பாட்டி என்னவென்றேன்.விடுமுறையில் வந்து நின்ற என்னிடம் சுகம் விசாரிப்பார் என்று நினைத்திருந்தேன்.எழுச்சிக்குரலை உயர்த்திப்பிடித்தபடி
‘இந்தக்கவிதய நீங்களா எழுதினது ?’
‘ஓம்’ என்றேன்.
‘என்னத்துக்கு இந்தக்கவிதயெல்லாம். இதெல்லாம் விட்டுப்போட்டு வேலையப்பாருங்க என்றார்.ஒர் ஆசிரியராக இருந்தும் எழுத்தில் தடம் பதிக்க ஆரம்பித்துள்ள என்னை அவர் ஊக்கப்படுத்தவில்லை.நெஞ்செல்லாம் கருகியது.

 முஸ்லிம்களுக்கெதிரான பிரபாகரனின் பாசிசத்தை பகிரங்கமாகவே எதிர்;த்து எழுதியபோது உண்மையில் என் மீது அக்கரையுடன் சிலர் புத்தி சொன்னதுண்டு.இப்படி பகிரங்கமாக சொந்தப்பெயரில் எழுதாமல் புனைப்பெயரிலாவது எழுதுங்களேன் என்று. அவர்களின் அன்பையும், கரிசனையையும் இன்றும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கின்றேன்.அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

அந்த ஆசிரியர் படித்து விட்டு இதயெல்லாம் எழுதாதீங்க என்று புத்தி சொன்ன அந்த நெடுங் கவிதையிலிருந்து சில வரிகள்.

……….. சின்னனவள் சாமத்தில்
உங்களை கேட்டழுதாள்.
‘இத்தா’வுக்குள் ‘இரி’யென்று ஏன் மறந்து போனீங்க?
இருட்டான என் வாழ்வில்
இனி வருமா விடிவெள்ளி?

பிள்ளைகள் அடம் பிடித்தால்
பிடிச்சோறு ஊட்டிட
தொல்லைகள் அதிகரித்தால் / தோளில் கிடத்தி உலாத்திட
ஏந்திழை நான் காத்திருந்தேன்.
கனவுகளை கபனிட்டு
என் நினைவை புதைத்திட
புலி அடித்துக்கொன்றதோ ?

பள்ளிக்குள் துப்பாக்கி / படபடத்து தீ கக்க
நெஞ்செல்லாம் அனல் அடிச்சி  /   எதிர்காலம் சாம்பலாச்சி
பட்ட கடன் தீர்க்க நான்  /  அப்பம் சுட்டு வாழுறன்
பார்ப்பதற்கு யாருண்டு?
பாரினிலே அழுகிறேன்.
கண்மனிகள் இருவரும் பட்டினியால் வாடுவதை
என் விழியால் பார்த்திட்டு /  எப்படி நான் துயில் கொள்வேன்.?
…………………………………………

இரண்டு வருடத்திற்கு முன் அதே ஆசிரியர் என் முன் நிற்கிறார்.எனக்கு ஒரு கவிதை எழுதித்தாங்க நான் ஒரு அமைச்சர வாழ்த்த வேண்டும்.
எனக்கு அழுவதா சிரிப்பதா? தெரியவில்லை.எனக்கு அப்படிக்கவிதை எழுதிப்பழக்கமில்லை என்கிறேன்.நிஜமாகத்தான் சொன்னேன்.

இது வரை யாரையும் வாழ்த்தியும் தூற்றியும் எழுதவே இல்லை.நிச்சயம் அவர் பழி தீர்த்திருக்கின்றேன் என்று நினைத்திருப்பார்.இயலாத ஒன்றை எழுதப்போய் வம்பில் மாட்டுவதை விட இயலாது என்று ஒப்புக்கொள்வது வாத்சல்யம்.

அரசியல்வாதிகளுக்கு சாமரம் வீசுவது  இலேசுப்பட்ட  காரியமா? அதற்கென்று பச்சோந்திக் கவிஞர்கள் நிறையப்பேர் இருக்கின்றார்கள்.

எனது ‘வேட்டைக்குப்பின்…’ கவிதைத்தொகுதிக்குப்பின் கவிதை எழுதுவதை முற்றாக நிறுத்திவிட்டேன். நல்ல கவிதைகளை படிப்பதுடன் நின்றுவிடுவதுண்டு. பிற்காலங்களில் சிறுகதையில் மட்டுமே கவனம் குவித்து வந்தேன்.அதுதான் எனக்கு இலகுவாக வசியப்படுகிறது. (கவிதையை இலகுவான கலை என்பவர்கள் மன்னிக்க வேண்டும் )

வேட்டைக்குப்பின்…என்றவுடன் அந்த தொகுதி தொடர்பான சில அனுபவங்கள் நினைவில் வந்து தொலைக்கின்றன.என்னை புத்தகம் போடும் அளவிற்கு வளர்த்து விட்டது ஒருவரின் துரோகமே என்றால் ஆச்சரியமாக இருக்கும் இல்லையா?



ஊஞ்சல் இன்னும் ஆடும்..

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...