Wednesday 24 September 2014

புத்தரின் நிழல்

சிறுகதை
01

35வருடமிருக்குமா? ஆம் அதை விடக்கூடினாலும் குறைவதற்கு வாய்ப்பில்லை. தயாவதி டீச்சர் வாசலில் நின்றிருந்தா.முகத்தில் சுருக்கம் விழுந்திருந்தாலும் முகம் களையாகவே மின்னியது. இளமையில் அவவின் ‘தெத்துப்பல்’ சிரிப்பில் மயங்காதவர் யாருண்டு. டீச்சரின் அந்தப்பல் இன்னும் விழாமல் வசீகரித்துக்கொண்டிருந்தது.

கிறவல் வீதிகளை ‘காபட்’ சாலைகளாக மாற்றிக்கொண்டிருக்கின்றது கிழக்கின் வசந்தம். அது உருவாக்கிய புத்த விகாரைக்குள்ளிலிருந்து ஒலிக்கும் ‘பன’யில் ‘அபே ரட்ட’ என்ற இறுமாப்பு கசிந்து காற்றில் மிதந்து கொண்டிருந்தது. பிரபாகரன் என்ற மாயை கலைந்த பின் துளிர்க்கத்தொடங்கிய கிழக்கின் வசந்தத்தில் தயாவதி டீச்சர் போன்றோர் தனியாளாய் வந்து நின்று களை கட்டவும் பழைய இடத்தை தக்க வைக்கவும் இயலுமாயிருக்கிறது.

‘ஆயுபோவன் என்றேன்’

‘ஆயுபோவன்’  டீச்சரின் புருவங்கள் ஆச்சரியத்தி;ல் நெரிந்தன. கவுத ? என்றா.

‘மம முபாரக்’

‘என்னத்தெரியுமா டீச்சர்?’

தடுமாற்றத்துடன் ‘நே நே ’ என்றா. 

‘நான் ஒங்களுகிட்ட சிங்களம் படிச்ச டீச்சர்’ .

‘எந்த ஸ்கூல்?’

‘ஓட்டமாவடி ஸ்கூல்’

‘அப்ப நீங்க தாருட கிளாஸ் செல்லிங்க, வயசு பெய்த்துதானே புதா, நினப்பு வரமாட்டன்’

‘நாஸர், நவ்சாத்,பைசால் , கைருன்னிசா இஸ்ஸதீன்..

‘ஓவ் ஓவ் தன்னவா இப்ப தெரியும்’

டீச்சரின் விழிகள் தீபம் போல் ஒளிர்ந்தன. இதழ் விளிம்பில் மந்தகாசம் பிரவகிக்க ‘வாடிவென்ட புதா’ என்றா.

‘எங்க முகமெல்லாம் பெரிசா டீச்சருக்கு நினப்பிருக்காது’ பீடிகை போட்டேன்.
‘எய் புதா ?’ 

‘ஓங்களுகிட்ட படிச்சத விட சிங்கள பாடமென்டா புத்தகத்த தூக்கிட்டு முன்னுக்கிருந்த யாசீன் பாவாட தோட்டத்துக்குள்ள நாவல் பழம் பொறுக்கப்போனதுதான் மிச்சம்’

டீச்சர் வாய் விட்டுச்சிரித்தா.ஆளை கிறங்கடிக்கும் தெத்துப்பல்,குழி விழும் கன்னங்கள். டீச்சரின் இதழ் கோடியில் பூத்த இள நகை வாடாமல் அப்படியே நின்றது.

85க்குப்முன் டீச்சர் நாவலடியில் வாழ்ந்தது என் நினைவில் முட்டியது.நீண்டு வியாபித்திருந்த மரக்கறித்தோட்டம்.வீதியோரக்கடை,கடை முன்றலில் படர்ந்திருக்கும் போகன்விலா. 

புளியந்தீவுக்கு சரக்குகள் ஏற்றிக்கொண்டு வரும் லொறிகள் டீச்சரின் கடையில் தரித்து இளைப்பாறிப்போகும்.  ஓட்டமாவடி,மீராவோடை, வாழைச்சேனைப் பகுதியிலிருந்தெல்லாம் பெரிய நானாமார்கள் டீச்சரின் கடையருகே மாலை நேரம் சைக்கிள் உலா வருவர். 

டீச்சரிடம் கல்வி கற்றவர்கள் டியூசன் எடுத்தவர்கள் எல்லோரும் வருவார்கள். டீச்சரின் மேல் அவர்களுக்கு அலாதியான பிரியம். டீச்சரின் தோட்டத்துப்பசளிச்செடிகள்போல் வீட்டுக்குள் மதமதவென்று வளர்ந்து நிற்கும் இரண்டு பருவக்குட்டிகளுக்காகத்தான் அந்த போக்குவரத்து நிகழும் என்பதும் டீச்சருக்குத்தெரியும். பருவத்தின் விளிம்பில் பார்ப்போர் மனதை நுள்ளி எடுக்கும் கட்டுடல்காரிகள். பிள்ளைகளில் டீச்சரின் விழிகள் கவனத்துடன் இருக்கும். 

‘டீச்சர் எப்ப வந்தீங்க?

நான் டீச்சரின் பழைய தோட்டத்தின் நுழைவாயிலில் நின்றபடி வினவினேன்.
‘நாம வந்து மூனு நாள் ,கடய துப்பரவாக்கனும், பழைய காணிய திருப்பி எடுக்கனும்’ 
டீச்சரின் பழைய காணியில் முஸ்லிம் ஆக்கள் இருபத்தைந்து வருஷமாக குடியிருக்கின்றார்கள். வீடு கட்டி பிள்ளைப்பெற்று குடியும் குடித்தனமுமாக இருப்பவர்களை டீச்சர் எழுப்பி விட்டு காணியை எடுத்துக்கொள்ளப்போகின்றா என்ற நினைப்பே மனதில் தைத்துக்கொண்டிருந்தது.

அவர்கள்தான் இந்தக்கிராமத்தின் இருப்பை  தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள்.ஓடியும் ஒளிந்தும் மீண்டும் உயிர்த்தெழுந்து மண் மீட்புப்போரில் ஜெயித்தவர்கள்.பள்ளியை ஆமி ஆக்கிரமித்து ‘கேம்’ அமைக்கும் வரை உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்தவர்கள்.
பழம் உண்பதற்கு வந்து நிற்கும் பலரில் தயாவதி டீச்சரும் ஒருவர்.

‘இப்ப டீச்சர் என்ன செய்றீங்க?’ பொங்கி வந்த துக்கத்தை மென்றபடி நான்..

‘பென்ஷன் வருது புதா’

‘அப்ப டீச்சருக்கு இஞ்ச இரிக்கிற எண்ணமா?’ 

என் அடி மனசில்  பல வர்ணக்கோலங்கள் சிதறி தாவியோடின.குன்றின் மேல் பட்டுத்தெறித்து குதித்துப்பாயும் நீரோடையின் தாளம் போல் எண்ணங்களும் நிலையின்றி தத்தளித்தபடி..

அதை வடித்து எடுப்பது போல் டீச்சரின் குரல் எனக்குள் அதிர்ந்து அடங்கியது.
‘இஞ்ச வந்து வந்து போகனும். இது நம்மட இடம்தானே’
!
‘நம்மட’ என்பதில் ரீச்சரின் ‘அபே ரட்ட’ மிகைத்திருந்ததை கவனிக்கவே செய்தேன். 

டீச்சரின் கையால் வகை வகையாக உணவுகள் சாப்பிட்டிருக்கின்றோம்.தோட்டத்தில் உட்கார வைத்து சோளகம் உடைத்து அவித்து தருவா. உப்பில் ஊறிய சோளகக்கதிரின் சுவை குட்டி நாக்கில் ஊறித்திளைத்து சலாம் போடும். கச்சான் விளையும் காலத்திலும் அப்படித்தான்.

அந்த தோட்டத்தை துவம்சம் செய்யும் சில பச்சைக்கிளிகள் குருவிகளுடன் எங்களின் குறும்புத்தனங்களும்..

காருண்யம் கசியும் டீச்சரின் விழிகளை ஏறிட்டு அளக்கி;ன்றன என் விழிகள். புத்தரின் மந்தகாசம் போல் சதா மினுங்கும் அந்த விழிகள் சாயம் போய் வெளுத்திருப்பதைப்போல் சோர்வுற்றிருந்தது. கருமணிகளின் பின் மௌன வாளின் கூர்மை பதுங்கியிருப்பதைப்போன்ற பிரமை.

‘சே… என்ன இது டீச்சரைப்பற்றி இப்படியா மட்டமாக…. மனம் அலுத்துக்கொள்ள,டீச்சரைப்பார்க்கிறேன்.
‘புதா தே பொன்ட’ பனங்கருப்பட்டித்துண்டுடன் ஆவி பறக்கும் ‘கஹட்ட’யை நீட்டியபடி நிற்கும் டீச்சரின் வதனத்தில் மலர்ச்சிதான் தெரிந்தது. ‘பொஹம  ஸ்துதி’  டீச்சர் என்றேன்.
என் அருகாமையில் அமர்ந்து கொண்டு டீச்சர் கதைத்துக்கொண்டிருந்தா.

02

ஒரு மழைக்காலத்தின் மாலை நேரம் எனது தோட்டத்திற்கு செல்வதற்காக புறப்பட்டேன். மழையின் சீதள முத்தத்துடன் வீசியது காற்று. மரங்களில் வந்தமர்ந்து குருவிகள் கீச்சிட்டபடி தானிய வயல்களை குறிவைத்திருந்தன.ஈரமும் சகதியுமாக பூமி ஏகத்துக்கும் சொதசொதத்தது. வழமையாக பாவிக்கும் கிறவல் வீதி, மழைக்கு இடிந்து சிதிலமாகிவிட்டது. குன்றும் குழியுமாகி காட்சி தரும் அதில் பயணிக்கவே முடியாது. மெயின் ரோடில் பைக்கை திருப்பினேன். இருபது வருடங்களுக்குப்பின் நாவலடி பள்ளிவாயலை விடுவித்திருந்தது இரானுவம். நான் வயலுக்குப்போகும் தருணங்களில் ஒரு பிளேன்றி குடித்து இளைப்பாறிப்போகும் பெரிய மரங்களைக்காணவில்லை. தறிக்கப்பட்ட அடிக்குற்றிகளில் சில பெரியவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 

லாலும் அங்குதான் இருந்தான். டீச்சரின் தூரத்து உறவினன்.பக்கத்துக்காணியில் மழைக்காலத்தில் சேனை செய்ய வந்திருப்பதாக டீச்சர் அன்று பேச்சு வாக்கில் சொன்னது நினைவில் முட்டியது. எனக்கும் ஒரு பிளேன்றி குடிக்க வேண்டும் போல் இருந்தது. தறிக்கப்பட்ட மரக்குற்றி ஒன்றில் அமர்ந்து கொண்டேன். லால் என்னை அடையாளம் கண்டு கொண்டான் அவனே பிளேன்ரீக்கு ஓடர் கொடுத்தான். 

‘ஆமிகாரங்க உங்கட பள்ளிய தந்துட்டாங்கதானே இனி ஒங்களுக்கு சந்தோஷம் இல்லியா? என்றான் பள்ளியை நோக்கியபடி.
‘ஓம் லால் நாங்க நினைக்கவே இல்ல இது கிடைக்கும் எண்டு குரலில் மகிழ்ச்சி பொங்க கூவினேன்.

‘இப்ப சிவில்தானே. எல்லாம் சட்டப்படி நடக்கும். எங்கட ஆக்கள் முன்னம் இருந்த காணி துண்டுகளுக்கெல்லாம்  இப்ப ‘போமிட்’ வந்திடுச்சி நாங்க இஞ்ச வந்து பிசினஸ் செய்ய நெனச்சி இருக்கம். உங்கட சப்போர்ட் வேனும் லாலின் விழிகளில் இறைஞ்சுதல் மட்டுமல்ல அதையும் தாண்டி ஏதோ ஒன்று உறுத்துவதை கவனிக்கவே செய்தேன்.

‘சரி லால் நீங்க வாங்களேன்’  பாப்பம் என்றேன் ஒப்புக்கு.

 மாதங்கள் உருண்டோடிவிட்டன.நினைவின் நுனியிலிருந்து உதிர்ந்து விழுந்த பல்லாயிரக்கணக்கான இலைகளில் துளிர்த்து மெருகூட்டும் மொட்டாக  டீச்சரும் அவர் குடும்பமும் புதிதாய முகிழ்ந்தபடி எனக்குள் வேர்விடத்தொடங்கினர். டீச்சரின் காணியை சுற்றி அவவின் பிள்ளைகள் குடியேறிவிட்டனர். மூத்தவளுக்கு இரு பிள்ளைகள் இளையவளுக்கோ மூன்று. அக்காவுக்கு முன் அவளின் திருமணம் நிகழ்ந்து விட்டது. காமண்ட்ஸ் ஒன்றில் தையல் வேலைக்குப் போனவள் அங்கு மேற்பார்வை செய்த சிறில் மல்லியை காதலித்து கரம் பிடித்தாள். அக்கா அப்போதும் படித்துக்கொண்டும், மாலைநேர வகுப்புக்குமாக நேரத்தைக்கடத்திக்கொண்டுமிருந்தாள்.
                              
தங்கை இரண்டாவது பிரசவத்திற்கு அம்மா வீட்டுக்கு வந்தபோது அக்காவின் நிலை பரிதாபமாக இருந்தது.அங்கவீனமுற்ற இராணுவ வீரரின் மனைவி என்ற அனுதாபத்தை தவிர வேறொன்றையும் அவளால் பெறமுடியவில்லை.இரு பிள்ளைகளையும் டீச்சரே கவனிப்பதாக அன்று பேச்சுவாக்கில் கூறியிருந்தா. அந்த அக்காவும் டீச்சரின் அயலண்டையில்தான் இருந்தாள்.லாலின் மனைவியும் டீச்சரின் பெண் பிள்ளைகளும் மார்பு குலுங்கித்ததும்ப குளத்தில் நீராடுவதை ஆரம்பத்தில் ஆச்சரியத்துடனும் முகச்சுளிப்புடனும் பார்த்தவர்களின் விழிகளுக்கு, அந்தக்காட்சிகள் இசைவாக்கமடைந்து விட்டது.

 மாலை நேரத்துக்குளியலில் பாதிமாக்களும் தங்கள் முதுகுப்பின் வழியவிட்ட கூந்தலை விரித்து நீரில் அலசிக்குளிக்கவும் வெயில் படாத மார்புகளை மஞ்சல் வெயிலில் காயப்போடவும் அவர்களுக்கு மனம் கூசவில்லை. இள வட்டங்கள் மாலையில் குளக்கட்டில் கூடியிருந்து பொழுதை போக்கவும், அரசியல் பேசவுமான சவுகரியங்களை காலம் நன்கொடையாகத்தந்துவிட்டு வேடிக்கை பார்க்கின்ற அழகே தனி.

தயாவதி டீச்சரும் நானும் பேசிக்கொள்வது அரிதாகிவிட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான மூத்தவளின் கிடைப்பதற்கரிய நட்புக்கு முன் கற்றுத்தந்த டீச்சர் எம்மாத்திரம் ?

இப்படித்தான் ஒரு மாலை வந்தது.பொன்னிறக்கதிர்கள் மேய்ந்து திரிந்த கத்தரி தோட்டத்தில் நீர் பாய்ச்சியபடி அவள் நின்றிருந்தாள்; மாமரத்தில் சாய்ந்தபடி நான் …. என்ன பேசுகிறோம் என்ற இலக்கற்ற பேச்சு. எதற்கு சிரிக்கிறோம் என்ற வகையறியாக் கும்மாளம். மன வயலில் முற்றிய நெற்கதிர்களின் நறுமணமாக எங்கள் நட்பு கொத்துக்கொத்தாக…

சௌந்தர்ய லாகிரியில் மிதக்கும்  தருணங்களை    வெட்டிச்சரித்தபடி லால் வந்து நின்றான். என்னையும் அவளையும் இகழ்ச்சியுடன் பார்த்தவனின் முகம் இறுகிக்கிடந்தது. வலிந்து ஒரு புன்னகையை இழுத்து என்னில் வீசினான்.

அவள் ஒப்புக்கு மண் வெட்டியால் மண்ணைக்கிளறிக்கொண்டிருந்தாள்.என் மனமோவெனில் பசளை ஊறிய செடியாக மதர்த்துச்சடைத்து நின்றது.மாலை வெயில் அவள் சுந்தரங்களை மினுக்கிக்காட்டியபடி சரிந்து போனது.

‘ஒங்கள உதய மாத்தயா வரச்சொன்ன,இப்ப அவசரமா ஒரு மீட்டிங் போட்ரிக்கி லால் தகவலை சொல்லி விட்டு அவளை முறைத்து விட்டுச்சென்றான். 

நான் விடை பெறும் போது அவள் இடுப்புத்துண்டை அவிழ்த்து தலையைத்துடைத்தபடி நாளை சந்திப்பம் என்றாள். ஏகத்துக்கும் பயிர்கள் நிறைந்த பூமி குளிர்ச்சியாக இருந்தது.

03

அறிமுகமானவன் என்பதால் என்னை யாரும் ‘செக்’ பண்ணவில்லை. இராணுவ முகாமைச்சுற்றி போடப்பட்ட முள் வேலிகள் அகற்றப்பட்டு முட்கம்பிகள் மூலைக்கு மூலை குவியலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  காப்பரண்கள் அகற்றப்பட்ட மண் திட்டுக்களில் சாவகாசமாக அமர்ந்து கொண்டு சிப்பாய்கள் அரட்டையடித்துக்கொண்டிருந்தனர். 

உதயா மாத்தையாவின் அறையில் நான்கு இருக்கைகள் இருந்தன.என்னை மட்டும் ஒர் இருக்கை காத்துக்கிடந்தது. ஒன்றில் பள்ளித்தலைவரும் மற்றதில் லாலும், இன்னுமொன்றில் ஆர்.டி.எஸ் செயலாளரும் அமர்ந்திருந்தனர். 

‘குட்வினிங் ஸேர்’  என்றேன். 
‘குட்வினிங் டேக்யுவ சீட்’ என்றார் உதயா. 
‘தேங்யூ ஸேர்’.

அவர் வழக்கம் போல் பீடிகையுடன் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசப்பேச அதன் உள்ளிருக்கும் மர்ம முடிச்சுக்கள் அவிழத்தொடங்கின. அவர் விசம் பொதிந்த மையப்புள்ளியில் இருத்தி எம்மை சிக்க வைக்கப்போகிறார் என்ற பனி மூட்டம் கலையத்தொடங்கியது. உடன் இருந்தவர்களுக்கும் இலேசாக புரிய ஆரம்பித்திருக்க வேண்டும். முகங்களில் செழுமை நீங்கி அவர்கள்  தலை கவிழ்ந்திருந்தனர்.

 இந்த மண்னின் எதிர்காலம் குறித்த அச்சம் பிரமாண்டமாய் என் முன் விரிந்து சென்றது.

எமது மௌனங்களை அவர் அங்கீகாரம் என்பதாய் நினைத்து பேசிக் கொண்டிருந்தார். ஓளிந்திருக்கும் மரணக்கரங்களுக்;கு அஞ்சி நாங்கள் மரண தண்டனைக்கைதிகளாய் மின்சார இருக்கைகளில் அமர்ந்தபடி எங்கள் வினாடிகளை கணக்கிட்டுக்கொண்டிருந்தோம்.

சுருக்கம் இதுதான்;:

 இந்த இராணுவ முகாம் இருபது வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. புலிகளிடமிருந்து இந்தக்கிராமத்தை நாங்கள் பாதுகாத்திருக்கின்றோம். இப்போது சிவில் வந்து விட்டது. இந்த இடம் பொதுமக்களின்  காணிகள். இதை திருப்பிக்கொடுக்க வேண்டும் என்ற அழுத்தம் வந்துவிட்டது.

நாங்கள் இஞ்ச இருந்த போது மத நம்பிக்கைதான் எங்களை வாழ வைத்தது. உங்கட பள்ளியக்கூட விடுவிச்சிப்போட்டம், இப்ப  நீங்க அதுல வணக்கம் செய்றிங்க, நாங்க ஒரு அரச மரம் நட்டி வளர்த்து புத்தரை அதன் அடியில வச்சிருக்கம். இருபது வருஷமாக எங்கட மனதுக்கு நம்பிக்கையும் சாந்தமும் தந்த புத்த பகவான்.சக வீரர்களின் சாவுகளை பார்த்துப்பார்த்து மனம் நொந்து போன புத்தர். அங்கங்களை இழந்து இரத்தக்காயங்களுடன் கதறிக்கொண்டு வந்த வீரர்களை அவர் முன் கிடத்தி சிகிச்சை அளித்த போதும் மந்தகாசப்புன்னகையில் ஆறுதல்படுத்திய பெருமான். 

இந்தக்காணி உங்கட ஆக்கள்ர காணி. அவங்கட காணியில அவங்க இருக்கிற உரிமை இருக்கு. என்றாலும் நாங்க இந்த இடத்த விட்டு போனதுக்குப்பொறகு எங்கட புத்தரையும் அரச மரத்தையும் என்ன செய்வீங்க.. ?

நாங்கள் முகாமை விட்டு வெளியே வந்த பின்பும் அந்தக்கேள்வி எனக்கு முன் ஒரு நாயைப்போல் ஓடத்தொடங்கியது.

2010.02.15
பிரசுரம்  காலம் 44  ஜுன்  - 2014

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...