Saturday 18 February 2012

சிறுகதை: மண் புழு

மாலையில் பள்ளிக்கூடம் விட,வீட்டுக்குள் நுழைந்தான் தம்பி.
‘டைகர்’ வாலைச்சுருட்டி கவட்டுக்குள் நுழைத்துக்கொண்டு முற்றத்தில் படுத்திருந்தது.முற்றத்து முகப்பில் வரவேற்புக்கு அமர்த்தி வைத்த ‘சைனா பொம்மை’ போல் முன்னங்காலில் மேவாயைத்தேய்த்தபடி மிகுந்த அவதானத்துடன் அதன் விழிகள் படலையின் முகப்பில்  பதிந்திருந்தன. அது படுத்திருக்கும் தோரணை தம்பிக்கு பிடித்திருந்தது.

 வானம் தலை சிலுப்பி நட்ஷத்திரங்கள் உதிர்ந்து கிடப்பதைப்போல் கச்சான் காற்றின் உக்கிரத்தில் முருங்கைப்பூக்கள் வாசலெங்கும் தூவிக்கிடந்தன. கச்சான் காற்றை கீதா டீச்சர் திட்டிக்கொண்டு போனதை தம்பி நினைத்துப்பார்த்தான். அவவின் குட்டைப்பாவாடையை சந்தியில் நின்றவர்களின் விழிகளுக்கு தூக்கி காட்டி விருந்தாக்கியதில் அவவுக்கு காற்றின் மேல் கடுப்பாய் இருந்தது.


வீடு மௌனத்துள் புதைந்திருந்தது. தம்பி முன் கதவில் கை பதித்தான். மெல்லிய முனகலுடன் அது வழிவிட்டது. மாலையிருள் விறாந்தையின் முகத்தில் முகப்பூச்சுப்புவுடராய் அப்பிக்கிடந்தது.

‘ ராத்தா……………… ராத்தோய்........

 ராத்தாவின் சிலமனில்லை. மாமரத்தில் சைக்கிள் சாத்தியிருந்தது. ‘டபிள் போக்கு’கள் பொருத்திய பழைய ‘ரெலி’ சைக்கிள். முன் ' ரிம்'  மட்டும் சற்று மட்கிப்போய்  தெரிந்தது.மச்சானின் சைக்கிள் போலவுமிருந்தது.

‘ராத்தா எங்கரிக்காய் ?’

தம்பி  சத்தம் வைத்தபடி வீடு முழுக்க சுற்றி வந்தான்.

உள்ளறையில் கட்டில் கிரீச்சிடும் சத்தம். ராத்தா படுத்து எழும்புறா போல.. தம்பி குர்ஆனை மேசையில் கிடாசி விட்டு தொப்பியைக்கழற்றி ஆணியில் கொழுவினான். உள்ளே தாழ்ப்பாள் விலகியது.

 ராத்தாவின் விழிகள் தூக்கம் கலையாத மயக்கத்தில் மிதந்தன.சேலையை தாறுமாறாக சுற்றியிருந்தா அது நழுவி நழுவி தரையில் விழுந்து சரிய தூக்கிப்பிடித்து மார்புகளை மறைத்துக்கொண்டா. “சே என்ன இவ சட்டை போடாம சேலை மட்டும் சுத்தியிருக்கா ,நித்திர வந்தா ஒன்டும் விளங்காது போல ’. 
 
தம்பி மனசுக்குள் கறுவிக்கொண்டான். செழுமையான மார்புகளின் மத்தியில் தலை புதைத்து ராத்தாவிடம் ஒண்டிக்கொண்டு தூங்குவதை  நினைத்துக்கொண்டான்.

‘என்னடாம்பி?’

அவவின் குரல் கிறக்கத்தில் ததும்பியது.

‘நான் விளயாடப்போறன்.’என்றான்.

‘சரிடா மகுரிபுக்குள்ள  வந்திடு:’

‘தம்பியிரிக்கான் விடுங்களன்’

சிணுங்கியபடி ராத்தா கதவை தாழிடுவதை தம்பி காதில் போட்டபடி பறந்தான்.


குறி பார்த்துப் பாய்வதற்கு எத்தனிக்கும் பூனைப்போல் பதுங்கிக்கொண்டு  ராத்தா முற்றத்தில் நின்றா.தெருவில் சனத்திரள் வடிந்து கொண்டிருந்தது.  அவள் விழிகள் தெருவில் அங்குமிங்கும் அலைந்து திரிந்தன. பழைய ரெலி சைக்கிள் படலையைத்தாண்டவும்  தம்பி கிறவல் ஒழுங்கையால் காரோட்டியபடி வீட்டுக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

சைக்கிளில் முட்டிய தம்பி  ஆளைப்பார்க்காமலே சரேலென பிறேக் போட்டு நிமிர்ந்து பார்த்தான். அந்தியில் மாமரத்தில் சாத்தியிருந்த சைக்கிளில்தான் முட்டியதை தம்பி நினைத்தபடி ஒரு பீப் போட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

ராத்தா கிணற்றடியில் குளித்து விட்டு தலையை துவாயால் சுற்றியபடி வந்தா.

“என்னடாம்பி விளயாடினியா ? என்ன நேரத்தோட வந்திட்டாய்?”என்றா.

ராத்தாவின் கண்கள் கன்றிச்சிவந்து கதீஜா மாமி வீட்டு ஜே ம் பழம் போலிருந்தது. ஜன்னல்களை சாத்தி கொளுக்கி போட்டா.ஏழு மணிக்கெல்லாம் ஜன்னல்களை சாத்திவிட வேண்டும் என்ற வாப்பாவின் கட்டளை அரங்கேறிக்கொண்டிருந்தது. அவர் இஷாவுக்கு பாங்கு சொல்ல வீட்டுக்குள் வந்து விடுவார்.

மச்சான் புகையிலை வாடிக்கு சாமான் கட்டிக்கொண்டு ஓரு மாதத்திற்கு முன்தான் கெக்கிராவைக்குப்போனார்.தம்பிதான் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் பேக்கைத் தூக்கிக்கொண்டு போனான்.

ராத்தா மச்சானிடம்  பேசவில்லை. “போய்ட்டு வாரன் புள்ள” .வாசற்படியில் நின்று மச்சான் குரல் கொடுத்த போதும் ராத்தா வெளியே வந்து அவரை வழி அனுப்பவில்லை. மச்சான் காத்திருந்து விட்டு நடையைக்கட்டினார். இவன் பின்னால் இழுபட்டு ஓடினான்.

மச்சானின் சுருட்டுப்புகை வயிற்றைக் குமட்டும். கரிக் கோச்சி போவதை போல் மச்சான் தெரு முழுக்க புகையை ஊதி விட்டபடி பஸ்சுக்கு காத்து நிற்பார்.அவரின் காவி படிந்த பற்களும் வெற்றிலை மென்று துப்பிய வாயும் பார்ப்பதற்கு வயிற்றைப்பிசையும். இன்று மாலையில் முற்றத்தில்  பார்த்த ‘ரெலி’  சைக்கிள்காரரை  நினைத்து தம்பி மனசுக்கள் அழகுபார்த்தான்.

வாப்பா சைக்கிளை தள்ளியடி வீட்டுக்குள் நுழைந்தார். ராத்தா அடுப்படியில் வேலையாக இருந்தா. அவவின் கூந்தலிருந்து  வடிந்த நீர் சொட்டுக்கள் திண்ணை முழுக்க கோலம் போட்டிருந்தன.முதுகும் பின்பகுதியும் ஈரத்தில் தகதகத்தன. நெருப்பின் நிழல் ராத்தாவின் முகத்தில் படிந்திருந்து.அவவின் முகம் தக்காளிப்பழம் போல் கனிந்திருந்தது.கள்ளச்சிரிப்புடன் புகைக்குள் ராத்தா பழுத்திருந்தா.

ராத்தா எவ்வளவு அழகு.தம்பி மனசுக்குள் ஓதியபடி  ராத்தாவின் கட்டிலில் போய் குப்புறப்படுத்தான்.சிகரெட்டின் வாசம் அறை முழுக்க கவிந்திருந்தது. தம்பி மூக்கைப்பிடித்து அதை இழுத்துப்பார்த்தான். இதமாக இருந்தது.

விழிகளை கசக்கியபடி ராத்தா வேகமாக அறைக்குள் நுழைந்தா.கையில் ஒரு பேப்பர் துண்டுமிருந்தது.கட்டிலின் அடியில் எறும்புகள் மொய்க்கத்
தொடங்கிய அதை  விரலால் நுள்ளி எடுத்து பேப்பரில் அள்ளிப்போட்டா. பரபரப்புடன் கொல்லைப்பக்கம் ஓடினா.  ஓடிய வேகத்தில் ஒரு சொட்டு தரையில் ஒழுகியது. தம்பி கால் பெரு விரலால் தேய்த்துப்பார்த்தான்.கிழிந்த போன புத்தகத்தை ஒட்டுவதற்கு காதர் ஸேர் பீச்சித்தரும்  'அற்லஸ் 'பசை போலிருந்தது.

‘என்ன ராத்தோய் இது ‘ ? 

தம்பியின் உதடுகள் அருவருப்பாய் நெளிந்தன.ராத்தாவின் முகம் மஞ்சளித்துக்கனிந்ததை தம்பி முன்னெப்பேதும் கண்டதே இல்லை. புன்னகையின் ஈரம் சொட்டச்சொட்ட ராத்தாவின் அதரங்கள் துடித்தன.

‘அது மண் புழுவின்ர எச்சம்டா’என்றா. தம்பி எதுவும் புரியாமல் பேவென விழித்துக்கொண்டிருந்தான். 
 
தம்பின் பிருஷ்டத்தில் ராத்தா செல்லமாகத்தட்டினா. ஓர விழிகளால் அவனைப் பார்த்தா. அவவின் விழிகளுள் ஓராயிரம் மின்மினிகள் சிறகடிப்பதை அவன் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

30.09.09

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...