Wednesday 14 March 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

 தொடர்- 10


விடுமுறையில் செல்லும் போதெல்லாம் நல்ல கவனிப்பு.விறால் கருவாடு பசும்பால்,கோழிறைச்சி, கெலுத்தி மீன்,ஜப்பான் மீன் பொரியல் , திறாய் சுண்டல்,ஆம்பல் மீன்,விறால் மீன்,கொக்கு,விலாங்கு மீன் வறுவல் என வகைவகையாய் நான் உண்டு ருசித்தது இக்காலத்தில்தான்.உம்மாவின் கைப்பக்குவத்தில் இன்னுமொரு எனக்குப்பிடித்த உணவும் இருக்கும்.

இலுப்பைப்பூ கொலுக்கட்டை.அதை  அவித்து மண் பானைக்குள் வைத்து உம்மா மூடி வைத்திருப்பா.நானும் அதிகாலையில் பனிப்புகாரிடை எழுந்து உம்மாவுக்குப்பின் இழுபட்டு சென்றிருக்கின்றேன். இலுப்பை மரங்கள் பெரும்பாலும் ஆற்றோரம் வானுயர்ந்து ஓங்கி நிற்கும். பூக்கத்தொடங்கும் காலம் சுற்றமெங்கும் நறுமணத்தை பரப்ப ஆரம்பித்து விடும்.

 இரவிலே பூமியில் அதன் மலர்கள் உதிர்ந்து கிடக்கும். ஆற்றுநீர் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும்.

சலனமின்றி ஓடும் அதிகாலையின் அழகு அற்புதமாக இருக்கும்.உம்மா கால் வைக்க விடமாட்டா.

முதலைகிடக்கும் முதலை கிடக்கும் என்று அடிக்கடி எச்சரித்தபடி இருப்பா கொண்டு போன உர சாக்கில் இலுப்பைப்பபூக்களை பொறுக்கிக்கொண்டு திரும்பும் போது சூரியன் மேலேறி உருகிகிக் கொண்டிருப்பான்.

பூக்களை கழுவி,சுத்தமாக்கி வெய்யிலில் காய வைப்பா.பின் உரலில் இட்டு இடித்து மாவாக்கி வைத்துக்கொள்வா. அதனுடன் அரிசி மாவையும் கலந்து சர்க்கரை உப்பும் சேர்த்து கலவையாக்கி உள்ளங்கையில் சின்ன சின்னக் கொழுக்கட்டையாய் பிடித்து வண்டில் வைத்து புளுக்கி எடுப்பா. இலுப்பைப்பூ கொளுக்கட்டை உடனே திண்பதற்கு ருசியாக இருக்காது.

அவித்து மண் பானைக்குள் மூடி வைத்து நாள்பட நாள் பட அதன் ருசியோ அலாதி.அந்தக்கொளுக்கட்டையை இப்போது நினைத்தாலும் குட்டி நாக்கு ஸலாம் போடுகிறது. உம்மா எது சமைத்தாலும் அதில் அற்புதமான சுவைகள் மலிந்திருக்கும்.

எனக்கு முருகக்காய்ச்சிய பசும்பால் அலாதி விருப்பம். மூத்தாப்பாவின் பட்டியிலிருந்து பசும்பால் காலையில் கடைக்கு வந்து விடும்.உம்மா முருகக்காய்ச்சி  கற்கண்டும், கோப்பிப்பொடியும் கலந்து கொடுப்பா.

மணமும் ருசியும் சொல்லில் மாளா. மாட்டுப்பட்டிக்கு மூத்தாப்பா சில நேரங்களில் என்னையும் தம்பியையும் அழைத்துப்போவார். அவருக்கு இரண்டு பட்டிகள்  இருந்ததைப் போல் எனக்கு இரண்டு மூத்தம்மாவும் வாய்த்து விட்டார்கள்.

எருமை மாட்டுப்பட்டி,பசு மாட்டுப்பட்டி என்று இரண்டு பட்டிகள். தயிருக்கு எருமைப்பால் குடிப்பதற்கு பசுப்பால். இரண்டு பட்டிகளையும் பார்ப்பதற்கு கிருபை என்ற ஒருவர் இருந்தார். மூத்தப்பாவுக்கு விசுவாசமான பணியாள் போடியார், போடியார் என வார்த்தைக்கு வார்த்தை பவ்யமாக அழைக்கும் அவர் குரல் மாடுகளின்  வால் விசுக்குகளை மீறியும் கேட்டுக்கொண்டே இருக்கும்.

காலையில் பசுவின் மடியிலிருந்து பால் கறப்பதை பார்க்க விரும்பினேன். கிருபைதான் மாடுகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பட்டிக்கு அழைத்துச்சென்றான். கூடவே தம்பியும். கன்றுகள் சிறு நாற்சதுர கம்பி வேலிக்குள் அடைபட்டு நிற்கும். அவற்றினது  அம்மாக்கள் வெளியில் நின்றபடி குரல் கொடுக்கும்.அம்மாக்களின் வருகையால் கன்றுகளின் குதியாட்டத்தில் வேலிகள் திணவெடுக்கும்.

கிருபை ஒவ்வொறு பசுவாக இழுத்து வந்து கனுவில்  கட்டுவார். பின்னங்கால்களையும் இணைத்துக்கட்டியபின் கன்றுகள் அடைபட்டுக் கிடக்கும் வாயிலைத் திறந்து லட்சுமி..லட்சுமி என்பார்.

 வானத்துக்கும் பூமிக்குமாக எகிறிக்குதித்தபடி கன்றுக்குட்டி ஓடிவரும் தாயின் பெயரைச்சொன்னவுடன் கன்று அந்தக்கூட்டத்திலிருந்து பிரிந்து வெளியே வந்து தாயின் முலையில் முட்டி முட்டிக்குடிக்கும்.

தாய்ப்பசு ஆதுரமாக பின் பகுதியை நாவால் தடவியபடி அன்பைச் சுரக்கும். கிருபை ம்..லட்சுமி வாவென்று கன்றை இழுத்து அருகில் இருக்கும் கனுவில் கட்டுவார். வாளியை தொடையில் இடுக்கியபடி பசுவின் மடியை கழுவி நீவி விட்டபடி ஒவ்வொரு முலைக்காம்பிலும் விரல் வைத்து அழுத்தி விடுவார்.

வாளிக்குள் சர்சர்ரென நுரை தள்ளி பால் நிறையும்.பின் கன்றை அவிழ்த்து விடுவார். பிறகு இழுத்துக்கட்டி பால் கறப்பார். பெரிய அண்டாக்களில் பால் நிரம்பித் ததும்பும். இரண்டு வியாபாரிகள் சைக்கிளில் வந்து பாலை எடுத்துப் போவார்கள்.

இளங்கன்றின் கறந்த பாலை ஒரு கோப்பையில் ஊற்றி கிருபை தம்பி குடிச்சிப்பாருங்க நல்லா இருக்கும் என்றார். எனக்கு அருவருப்பு. முருகக்காய்ச்சாவிட்டாலே மொச்சை மணக்குது என்று பால் குடிக்காதவன். பச்சை பாலையா குடிப்பது?

 தம்பியோ எனக்கு நேர் எதிர். எனக்குத்தாங்கண்ண குடிப்பம் என்றவன் கறந்தவுடன் வாயில் ஊற்றி சுவைத்துக் குடித்தான். அவனை அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்தேன். காக்கா ருசியா இருக்கு குடிச்சிப்பாருங்களேன் என்றான் . கிருபை மறுபடியும் கறந்து என்னிடம் நீட்டினார். ஒரே மடக்கில் குடித்து முடித்தேன். இளம் சூடு,கொஞ்சம் சர்க்கரை போட்டது போல் இனிப்பு. முருகக்காய்ச்சிய மணம்.

இதன் பிறகென்னவோ கறந்தவுடன் பால் குடிக்கும் மனப்பக்குவம் எனக்குள் வரவில்லை.

பிற்கால சனி ஞாயிறுகள் ஆற்றிலும், குளத்திலும் காடுகளிலும் கழிந்தன.
தூண்டில் போட்ட மீன்களை நண்பர்களுக்கே தாரைவார்த்து விட்டு வீட்டுக்குத் திரும்புவேன்.

இப்போதும் ஆற்றோரம் சென்றால் திராய் செடி தேடுவதைக்காணும் நண்பர்கள் ‘ஞானச்செடி தேடுகிறார்’ என்ற கிண்டல்கள் அக்காலங்களுக்குள் புதையுண்டு போய்விடும்.

உளுவ மீன் போட்டு துவைத்து தரும் திறாய் சுண்டல் எங்கே நட்ஷத்திர ஹோட்டல்களில் வகை வகையாக பண்டங்களையும்,உணவுகளையும் ருசித்தாயிற்று.

அந்த பொன்னங்கன்னி கீரையும், திராய்சுண்டலும், கோல்டன் மீன் பாலாணமும், முருங்கைக்காயுடன் சுங்கான் கருவாட்டுக்கறியும் புளியாண ருசியும் நாக்கில் ஊறிக் கொண்டிருப்பதை நிறுத்த முடியவில்லை.

இந்த சௌந்தரியங்களை அனுபவிக்க முடியாத ஒரு கைங்கரியத்தை உம்மாவும் வாப்பாவும் எனக்குச்செய்தனர்.12மைல் தொலைவில் உள்ள மாமாவின் வீட்டில் தங்கவைத்து படிப்பதற்கான சதிதான் அது. பல சதிகளை முறியடித்த எனக்கு அந்த நல்ல சதியை தோற்க முடியவில்லை.


ஊஞ்சல் இன்னும் ஆடும் .........
எங்கள் தேசம் 217

Tuesday 6 March 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


 தொடர் - 09

 34அடியாழமுள்ள கிணற்றில் கப்பியில் நீர் அள்ளுவதும்,சைக்கிளில் இரு மருங்கிலும் குடத்தைக்கட்டிக்கொண்டு ஆற்றில் நீர் மொண்டு தளும்பாமல் இலைகளை உடைத்து சொருகிக் கொண்டு ஒற்றையடிப் பாதையில் சைக்கிள்  உழத்தி வருவதும்  ஒரு சவால். அதை ஒவ்வொரு வார விடுமுறையிலும் நான்தான் செய்தேன்.

நான் முதலில் சைக்கிள் மிதிக்கப் பழகிய அந்த நாள் ...

சாச்சாவின் சைக்கிளில் புளிமரத்தடி மேட்டிலிருந்து குளத்திற்கு செல்லும் பள்ளத்தில்தான் முதல் சவாரி. சாச்சா சைக்கிளை பிடித்துக்கொண்டு கூடவே வருவார்.பாருக்கு கீழ் கால்களை தெத்தித்தெத்தி உழத்திக்கொண்டு போவேன்.சாச்சா பிடித்துத்தானே வருகிறார் என்ற தெம்பு.

சற்று ஊன்றி மிதித்து விட்டேன் .பள்ளத்தில் கிறவல் வீதியில் சைக்கிள் சரிந்து விழ கெக்கலித்துச் சிரித்தபடி சாச்சா ஓடி வந்தார். அவர் கண நேரம் கைகையை விட்டு விட்டு என்னை சுயமாக ஓட விட்ட செய்தி அப்போதுதான் உறைத்தது. வலது காலில் சைக்கிள் பழகி வாங்கி அந்த விருது இன்னும் தழும்பாக இருக்கிறது. 
இலக்கிய விருதுகளை விட கால் தழும்பை தடவிப்பார்க்கையில் நெஞ்சு நிரம்பித்ததும்பும் நினைவுகளே நித்ய விருதுகளாக என்னை  உசுப்பி விடுகின்றன.

(அண்மையில் மோட்டார் சைக்களில் கிறவல் வீதியில் நாயொன்றுடன் மோதிப்பட்டு விழுந்த போதும் அந்த நினைவுகள் சட்டென நெஞ்சில் விழுந்து நினைவுகளைக் கோதிவிட்டன)

மோட்டார் சைக்கிள் பழகியது விழுந்து விடாமல் என்றால் அதில் ஒரு மர்மம் இருக்கின்றது. எனது தோழரின் வாப்பா அலியார் ஹாஜியாரிடம் ஒரு  ‘செலி’பைசிக்கிள் இருந்தது.நாங்கள் அதை செல்லமாக தும்பி என்போம். அவர் சனிக்கிழமை வயலுக்குப்போகவென மூட்டைமுடிச்சுக்களுடன் வந்து விடுவார்.

ஆற்றைக்கடந்து பைசிக்கிள்கள் செல்ல முடியாது என்பதால் வியாழக்கிழமை வரை எங்கள் கடையில் விதம்விதமான சைக்கிள்கள் குவிந்து கிடக்கும்.

அலியார் போடியாரிடம் ஒரு நாள் கேட்டுவிட்டேன்.

'நான் உங்கட சைக்கிள எடுத்துக்கிட்டு ஊருக்கு (ஓட்டமாவடி குறுக்குப்பாதை எட்டு மைல்,பிரதான வீதி 12 மைல்) போகவா? '

என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு கேலியாகக் கேட்டார்.

'ஓடுவியளா'?

'ஓம் 'என்றேன்

சத்தியமாக கண்களாலே தவிர கைகளால் ஓடிப்பார்த்ததில்லை. அந்த தைரியத்தில் ஓம் வந்து விட்டது. முதலில் வாப்பாவுக்குத் தெரியாமல் தும்பியைக் கிளப்ப வேண்டும். எப்படியோ கிளப்பியாகி விட்டது. முதலில் காவத்தமுனையில் இருக்கும் மூத்தம்மாவின் வீட்டிற்குச்செல்வது. குறுக்கு வீதியில் வாகனங்களும் மனிதர்களும் அவ்வளவாக புழக்கமில்லை.

கண் கண்டதை கை செய்யும் என்பார்களே எப்படியோ வாப்பா வயலுக்கச்சென்று வருவதற்கிடையில் சென்று வந்து விட்டேன்.லைசன், இன்சுரன்ஸ் தலைக்கவசம் எல்லாம் தெரியாத காலம்.புலிகளின் ஆட்சி உச்சத்தில் இருந்த காலம்.

சில நாட்களின் பின் பிரதான வீதியால் தும்பியை எடுத்துக்கொண்டு செல்வது என்று தீர்மானித்தேன்.ஆறாங்கட்டையில் உள்ள புலிகளின் பிரதான கேம்பில் நிறுத்தினார்கள். 

‘சின்னப்பொடியன்கள் சைக்கிள் ஓட்டப்படாது சைக்கிள கொண்டு போய் உள்ளுக்க வை’  என்றான் ஒருவன்.

எனக்கு கைகால்கள் உதறத்தொடங்கின. வாப்பாவுக்குத் தெரிந்தால் பாடு சம்பல்தான்.

கடைப்பக்கம் வரும் சின்னவன் தூக்க முடியாத பாரத்துடன் ஏ.கே. 47 டன் நின்றிருந்தான். என்னைக் கண்டதும் என்னவென்றான். விடயத்தைச்சொன்னேன்.அவன் பெரியவனிடம் போய் கதைத்தான்.

‘ஆர்ர சைக்கிள் என்றான் ‘ பெரியவன்.

'அலியார் போடிர’ என்றேன். அவரின் வீடொன்றில்தான் புலிகளின் பிராந்தியக்கிளை ஒன்று ஊருக்குள் இயங்கிவந்தது. இரு தரப்பு பிணக்குகளைத்தீர்த்து வைக்கும் சமாதான தூதராகவும் புலிகளின் மதிப்பு மிகு மனிதராகவும் அவர் இருந்தார் என்பது பிற்காலத்தில் தெரிய வந்தது.

‘எந்த அலியார் போடி ‘? என்றான்

நான் ஊரைச் சொன்னேன்.பயத்தில் ஆள் அடையாளத்தையும் சொன்னேன்.
சைக்கிள தந்து வந்த வழிய போ என்றான்.

அன்று மனதில் பதிந்த வடு ஆறுவதற்கு பல காலம் எடுத்துக் கொண்டது கூடவே ஒரு சபதமும். சொந்தமாக பைசிக்கிள் வாங்கித்தான் இனி ஓடுவது.

காயங்கள் மட்டும்தான் இடம் மாறி இருந்தன. நினைவுகள் என்னவோ அந்தக்குளக்கட்டின் கிறவல்  வீதியில் விழுந்து அவதிப்பட்டுக்கொண்டு துடிக்கின்றன.
ஆற்றிலிருந்து தண்ணீர் தாங்கிய சைக்கிள் ஒற்றையடிப்பாதையில் அலுங்காமல் வருவதென்றால் எத்துனை 'தில்' வேண்டும் என்பதை அந்தப் பாதையில் ஓடிப்பார்த்தால்  தெரியும்.
இது ஒரு விளையாட்டு. தற்போது நினைக்கையில் ஆச்சரியமாகவும் சாகசமாகவும் இருக்கின்றது.

என்னுடன் சைக்கிள் விட பல நண்பர்கள் இருந்தார்கள். ஓற்றை வயல் வரம்பில் சைக்கிள் ஓட்டுவதில் எங்களுக்குள் போட்டி நடக்கும். காட்டுப்புதரில் ரயர் படாமல் மிதிக்க வேண்டும். சில நேரம் நான் சறுக்கி விடுவேன். சில நேரங்களில் ஜெயிப்பதுண்டு.
ஊஞ்சல் இன்னும் ஆடும்.........
எங்கள் தேசம் 216

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...