Friday 14 September 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


  தொடர்- 23


இப்படித்தான் ஒரு நாள் வாப்பாவையும் மாந்துறை ஆற்றில் கொண்டு போய் நீரில் அமுக்கி அமுக்கி விசாரித்தார்கள்.தண்ணீருக்குள் தலையை அமிழ்த்தி தோளில் ஏறி நின்று சித்திரவதை செய்தார்கள். புலிகளுக்கு கடையில் தேனீர் ஊற்றிக்கொடுத்த ஒரேயொரு பாவம்தான் வாப்பா செய்த பாவம்.

தேனீர் ஊற்றிக்கொடுக்காவிட்டால் அவர்கள் கொல்வார்கள். ஊற்றிக்கொடுத்தால் இவர்கள் கொல்வார்கள். ஏறச்சொன்னால்  எருதுக்கு கோபம்.இறங்கச்சொன்னால் முடவனுக்கு கோபம் என்பது முஸ்லிம்களின் விடயத்தில் மிகப்பொருத்தமாக இருந்தது.

அவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் போதும் வீதியில் செல்லும் எங்களை அழைத்து முழங்காலில் நிற்க வைத்து வராத புலி வந்ததாக விசாரணை செய்து அடிப்பார்கள். 

அவர்களையும் நண்பர்களாக்கி சில சலுகைகளை நாங்கள் பெற்றுக்கொண்டோம்.குண்டு சட்டிக்குள் குதிரை ஓடுவதில் நம்மை விட கில்லாடிகள் யார்.

இருக்கவே இருந்தது சையது பீடி. அதில் ஒரு கட்டை வாங்கி வழியில் இருக்கும் செக் பொயின்ட்களில் நிற்கும் ஜாவானுக்கு நீட்டினால் போதும் "அச்சா அச்சா ஜலோ ஜலோ என்பான் சிரிப்புடன்.

ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமிற்கிடையில் தொடர்பாடலுக்காக நீண்ட வயர்களை இழுத்துக்கொண்டு போவார்கள்.அந்த வயர்களை இடையில் கட் பண்ணி நம்மவர்கள் சுருட்டிக்கொண்டு போவார்கள். அது நல்ல கணதியான வயர். கார் பற்றரியிலிருந்து கனெக்ஷன் எடுத்து சின்ன குண்டு பல்புகளை எரிய விட அந்த வயரை பயன்படுத்துவோம்.

மின்சாரம் இல்லாத பகுதிகளுக்கு அந்த வயரின் மூலம் மின்சாரமுள்ள இடத்திலிருந்து மின்சாரத்தைக் கடத்தலாம். அல்லது கார், லொறி பற்றரியிலிருந்தும் மின்சாரத்தை அந்த வயர் மூலம் இலகுவாகப்பெறலாம்.

பெற்றோல் செட் சந்தியிலிருந்து பேப்பர் பெக்டரியில் இருக்கும் இந்தியன் ஆமியின் கேம்புக்கு தொடர்பாடலுக்காக  சாவன்னாட சந்தியை தாண்டி வரும் புகையிரத பாதையை ஊடறுத்துச்செல்லும் உள் பாதையால் வயர் இழுக்கப்பட்டிருந்தது.

ஓர் இரவு நானும் நண்பர் நியாசும் அந்த வயர்களில் கொஞ்சம் வெட்டுவதென்று தீர்மானித்தோம். “ கொறட்டு ” டன் நியாஸ் வந்தார். நான் இந்தியன் வருகிறானா என்று ஒழுங்கையில் நின்று வேவு பார்த்தேன். 20 அடி இருக்கும் வயரை நறுக்கிக்கொண்டு அதை முள்ளிவெட்டவானுக்கு கொண்டு சென்றோம்.

 நான் ஒரு சையது பீடி கட்டு வாங்கிக்கொண்டேன்.ஓட்டமாவடி பாலத்தடியில் இருக்கும் ஒரு 'சென்ரிப்பொயின்ட்.' பின்பு இடையில் சில முகாம்கள் எல்லேரையும் ஒரு பீடி கட்டால் சமாளிக்க வேண்டும்.வயரை இரண்டு பேரும் பிரித்து தொடையில் சுற்றினோம். பதற்றம் இல்லாமல் துவிச்சக்கர வண்டியில் ஏறி உழத்தினோம் .பாலத்தடியில் இரண்டு சையது பீடி. ஜலோ என்றான்.

இடையில் அகப்பட்டவர்களுக்கு நாங்களாகவே மனமுவந்து அன்பளிப்புச் செய்தோம். என்னே அக்கரை. 'அச்சா அச்சா பலே பலே' என்றார்கள். எப்படியோ இருபது யார் வயரும் முள்ளிவெட்டவானுக்கு போய்விட்டது.

அக்காலத்தில் சில பொருட்களை வயலுக்குச்செல்பவர்கள் கொண்டு செல்ல முடியாது. புலிகளுக்கு அது தேவைப்படும் என்ற முன்னேற்பாடு. எங்களுக்கு சிரிப்பாய் வரும். அரசாங்கமும்,இந்திய இரானுவமும் எதையெல்லாம் அவர்களுக்கு இலகுவில் கிடைக்கக்கூடாது என்று தடைவிதித்ததோ அந்தப்பொருட்கள் புலிகளிடம் மிகத்தாரளமாக இருக்கும். ஒரு கிராமத்திற்கே வினியோகிக்கக்கூடியதாக குவிந்திருக்கும்.

விவசாயிகளுக்கு டோர்ச்சும் பெற்றரியும் இல்லாவிட்டால் இரவில் காவலுக்கு நிற்க நாதியில்லை.அதனால் பொயின்ட்டுகளில் சையது பீடிகளும்,லக்ஸ்,சந்தண சவர்க்காரமும் பரிமாறப்பட்டன. பொதியில் என்ன இருக்குது என்பதைக்கூட பிரித்துப்பார்க்க மாட்டார்கள்.

இப்படித்தான் புலிகளும் சில சாமான்களை கடத்திப்போவார்கள்.

இந்தியன் ஆமி அவர்களை அண்டிய முகாம்களில் சகாய விலைக்கடைகளையும் அமைத்தனர்.இந்திய சாமான்களை சகாய விலையில் சனங்கள் வாங்கிச்செல்வதுண்டு.அப்போது நாங்கள் இரண்டு ரூபாயக்கு 10 சிகரெட் வாங்கியது நினைவில் உள்ளது.இந்திய இராணுவம் சென்றாலும் அவர்கள் விட்டுச்சென்ற கடையை இலங்கை இரானுவம் தொடர்ந்து செய்கிறது.மஹரகமயில் மரக்கறி வியாபாரமும்,கட்பீசும் சில நேரங்களில் பெற்றோல்,டீசலும் சலுகை விலையில்  கிடைப்பதுண்டு.

இந்திய இராணுவம் எங்கள் மண்ணில் மறக்க முடியாத வரலாற்றை இரத்தத்தால் எழுதிச்சென்றது.


எங்கள் தேசம் - 228                                                                                                           ஊஞ்சல் இன்னும் ஆடும்......


Monday 3 September 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


தொடர்- 22

மறு கேள்வி என் காதில் விழுந்தது.

நீ புலிக்கு சாப்பாடு குடுத்தியா

ஓம் சேர்

வந்தது. வினை முழந்தாளில் நின்ற எனது முகத்தில் வாகாக அவன் கையை மடக்கி விட்டான் ஒரு குத்து.

சர்வாங்கமும் ஒடுங்கி கண்களின் வழியே பட்டாம் பூச்சி பறக்க ஆரம்பித்தது,
அவன் துவக்க காட்டி கேட்டா எப்படி சேர் குடுக்காம இருக்க முடியும்.
மறுபடியும் ஒரு குத்து

இனி வந்தா குடுக்கப்படாது என்றான்
சுரி சேர் என்றேன்.

சகாயம் எந்தச்சேதாரமும் இன்றி சிரித்துக் கொண்டிருந்தான் அவனிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு அவன் அந்தக் காண்டத்திலிருந்து தப்பித்து நின்றான்.போராட்டத்தில் உங்களுக்கு எந்தப்பங்களிப்பும் இல்லை என்பவர்களுக்கு இதுவெல்லாம்  சொல்லிப் புரியவைக்க முடியும் என்று நினைப்பது தவறு.அது செவிடன் காதில் ஊதிய சங்கு.

தமிழ்  தேசிய படையும் ஈபிடியியும் இணைந்து என்னை குடையத் தொடங்கினர். உடற்பயிற்சி செய்து உடம்பும் திரட்சியாக இருந்தது அவர்களுக்கு என்னில் சந்தேகத்தை உண்டாக்கியிருக்க வேண்டும்.அத்துடன் முஸ்லிம் இளைஞர்களும் புலிகளின் முகாமில் இருந்தார்கள்.முஸ்லிம் பகுதிகளில் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடல்,முன்னணியில் நின்று இராணுவத்திற்கெதிராக தாக்குதல் நடாத்துதல் போன்ற பணிகளில் அவர்கள் போராடி வந்தார்கள்.தாக்குதலில் அடிபட்ட புலிக்கொடி போர்த்திய  உடல்கள் எங்கள் வீடுகளுக்கும் வந்து சேர்ந்தன.

விடுதியில் மாணவர்களுக்கு காலையிலும் ,மாலையிலும் உடற்பயிற்சி வழங்குவதும் நான்தான்.முன்னர் ஈ.ப்p.டி.பியில் ஆயுதப்பயிற்சிபெற்று பிறகு அதிலிருந்து விலகிய தோழர்களின் புண்ணியத்தால் மேலதிகமாக கடின பயிற்சிகளும் அப்போது எனக்குத் அத்துப்படி.

கல்லூரியின் அடையாள அட்டையை காட்டினேன். மறுநாள் ஓ.எல் பரீட்சை அனுமதி அட்டையையும் காட்டினேன்.

தமிழ் தேசிய படையின் வீரன் என்னை நோக்கி கத்தினான்.
இஞ்ச ஏன்டா வந்து நிற்கிறீங்க.உங்கட அஸ்ரபுக்கிட்ட போங்களன்டா' .

இந்ந நூற்றாண்டில் இப்படித்தான் சில காவியு தரித்த இனவாதிகள் கூப்பாடு போடுகின்றார்கள். .இந்த நாட்டில் நீங்கள் இருப்பது என்றால் இருங்கள் இன்றேல் அறபு நாடுகளுக்கு செல்லுங்கள்.அதையும் கேட்டுக்கொண்டு வாய்ச்சொல்லில் வீரர்களும் ,அறிக்கை மன்னர்களும் சும்மாதான் முதுகு சொறிந்தபடி இருக்கின்றார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் கொடி கட்டிப்பறந்த காலம். கல்முனையில் போராளிகள் தீவிரமாக இயங்கத்தொடங்கி நாரே தக்பீர்கள் முழங்கத்தொடங்கிய பொற் காலம். முஸ்லிம் பகுதிகளில் காங்கிரசுக்காக நோன்பிருந்து தாய்மார்கள் அழுது புலம்பி அல்லாஹ்விடம் மன்றாடிய காலம்.

 குர்ஆனும் ஹதீசும் ஏந்தி வந்த முஸ்லிம் கட்சியின் ஸதாபகரை இறைத்தூதர் என்று போற்றாத குறை. அவரை தோளில் வைத்து உலா வந்து எழுச்சி அலைகள் பல நூறடி எழுந்து ஆர்ப்பரித்த அக்காலத்தில் தமிழ் பேரின அரசியல் சக்திகள் காழ்ப்புணர்வில் கருவித்திரிய ஆரம்பித்தனர்.இப்போது தனித்துவம், முஸ்லிம் கட்சி என்பதெல்லாம் அரசியல் வெற்றுக்கோசங்களாகவும் உதிரிகளாகவும் பறந்து விட்டன.எவரையும் பணத்தையும் ,பதவியையும் காட்டி இலேசாக வளைத்துவிடலாம் என்ற நிலைக்கு வந்து விட்டனர்.

கட்சிக்காக தியாகமிருந்தவர்கள்,தங்களை அர்ப்பணித்தவர்கள் ஓரமாக நின்று கண்ணீர் வடிப்பபதை தவிர வேரொன்றும் செய்யமுடியாத கையறு நிலை.

எல்லோருக்கும் கட்சி தலைவரு ஆக வேண்டும்  என்ற ஆசை. ஆதனால் இரண்டு பேரு சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பித்து வயிறு வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.எல்லாக்கட்சிகளையும் அறிக்கையில் அணுகுண்டு போட்டு தகர்த்து விடலாம் என்று மனப்பால் குடிப்பதற்கும் சிவப்புக்குல்லாய் போட்டு ஒரு கட்சி.உம்மாவுக்கும் ஒரு கட்சி,வாப்பாவுக்கும் ஒரு கட்சி. ஆளாளுக்கு நியாயங்கள் சொல்ல மட்டும் குறைவில்லை.

அதன் விளைவே எங்களில் எதிரொலித்தது. அவன் என்னை அஸ்ரபின் கல்முனையில் போய் வாழச்சொன்னான்.தென்னிலங்கையில் உள்ள சில சிங்கள பெருந்தேசியவாதிகள் சவூதிக்குப்போய் வாழச்சொல்லுகின்றார்கள். நாங்க ஆர்ர சொல்லுக் கேக்குற பிள்ளைகளா வாழுறது? 

நான்  ஜிஹாத் படை  என்ற சந்தேகம் அவர்களுக்கு. முழங்கைகளையும் கால்களையும் பார்;த்தான். பயிற்சியின்போது அவைகள் கன்றிப்போய் அடையாளம் இருக்கும். ஆயுதப்பயிற்சி எடுத்தவர்களை சில உறுப்புக்களை பரிசோதிப்பதன் மூலம் இலகுவில் அடையாளம் கண்டு கொள்ளலாம். ஆயுதப்பயிற்சி எடுத்தவர்களின் கண்களும் அவர்களை காட்டிக்கொடுத்து விடும்.

 சுண்டு விரலையும் பார்த்தான் பின்பு ஓடு என்றான். வீங்கிய முகத்துடன் நொறுங்கிய நெஞ்சுடன் ஒரு மைல்தூரம் ஓடினேன். அடிக்கடி இந்திய இராணுவமும் தமிழ்தேசிய படையும் இப்படி எங்களை அள்ளிப்போவதும் விசாரிப்பதும் அடிப்பதுமாக பதப்படுத்தப்பட்டோம்.ஓட்டமும், மனப்பதகளிப்புமாக 85க்குப்பின் வாழ்வு மாறிப்போனது. இரு பக்கமும் அடிபடும் மத்தளங்களாக எங்கள் வாழ்க்கை.

ஊஞ்சல் இன்னும் ஆடும்....
எங்கள் தேசம்.229

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...