Thursday 19 November 2020

 

நண்பர் நபீலின் முக நூல் பக்கத்தில்

நன்றி நபீல்

மூத்தம்மா இல்லாத காட்டின் அரசன்

"நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்"
-அறபாத்.
அறபாத்தின் கதைகள் புதிய கதையாடல்களை இன்றுள்ள நவீன சாத்தியங்கங்களை உருவாக்க வல்லன; அதன் ஒரு தொடர்பில் ஒரு துணையெழுத்தாகக் கதா விலாசமாக நான் நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சலைப் பார்க்கிறேன்.
அறபாத் எப்போதும் என் ஊரைக் கடந்து செல்லுகின்ற போது ஓர் அழைப்பாவது எடுப்பார்; ஓயாத வேலைப்பளுவும் துரத்தும் பேரிரைச்சலும் தொடரான ஒரு காலப் பகுதியில் கொழும்பில் அடிக்கடி அவர் காரியாலயம் சென்று பேசிவிட்டு வருவதை வழக்கப்படுத்தியிருந்தேன்.
கோடை மழையில் பெருக்கெடுத்து ஓடும் நீரில் எண்ணற்ற பொருட்கள் மிதந்து செல்வதைப்போல பல விஷயங்கள் அவர் உரையாடலில் இணைந்து வரும்; எழுத்தாலும் வாழ்க்கையாலும் நிகழ் காலத்தோடு மோதியபடி இருப்பார்; வரலாற்றில் வாழக்கூடிய ஆற்றல்களைப் பெற்றவர்கள் இவ்விதமானவர்களே.
வாழ்க்கைக்கும் அவரின் புனைவிலக்கியத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லாதது போலவே இருக்கிறது; நினைவுகளில் தொங்குவதும் அதுதான்; அறபாத் ஒரு புதிய கதை மொழியை இதன் மூலம் உருவாக்க முயற்சி செய்கிறார்; அது படிமமும் உருவகமும் இணைந்த ஒன்று; கவிதையின் கதை மொழியிலிருந்து உருவான கதை மொழியது; எளிமையான கதை சொல்லலில் அவரது சிறுகதைகள் மாறுபட்ட தளங்களில் இயங்குவதற்குக் காரணமான அம்சங்கள் நீர் ஊஞ்லில் இருந்து வெளிப்படுகின்றன.
இதனைப் படிக்கின்றபோது மிக உடற்சாகமாகவே இருக்கின்றது; ஒவ்வொரு அத்தியாயங்களும் ஒரு சவால் அதை எதிர் கொள்ளும் நிமிடத்தில் மனது கொள்ளும் பரபரப்பும் திகைப்பும் பயமும் சந்தோஷமும் முக்கியமானது.
உம்மா அவவின் மச்சி முறையான ராவியாப் பெரியம்மாவிடம் குர்ஆன் ஓதக் கொண்டு போய் விட்டதிலிருந்து நினைவுகள் அகல விரிகின்றன.
சுன்னத் எனப்படும் விருந்தேசன நிகழ்வில் ஒய்த்தா மாமா வருகின்ற காட்சி, உரலில் இருத்துகின்ற நிகழ்வு என்பன மிகச் சுவராஸ்யம் நிறைந்தது.
அந்தக் கல்யாண வீடு ஒரு சிம்பொனி இசைபோல பல்வேறு எழுச்சிகள் மேல்கீழ் நிலைகள் மௌனங்கள் கொண்டது.
அதை நாம் திரும்பத் திரும்ப வாசிப்பதன் வழியே முழுமையாக உணர முடியும்.
கனவுகளில் ஓடும் பாம்புகளை நிஜ வாழ்விலும் நேரே கண்டு வியக்கும் (பக்கம்: 29 - 34) விநோதச் சூழலை நாமும் அனுபவிப்பதுபோல எழுதுகிறார்.
மஞ்சல் வெயில் பரவியிருக்கும் மதியம்; அந்தப் பனை மரத்தின் அடியில் எழுந்திருக்கும் புற்றினுள் சராசரத்து மறையும் நாகத்தின் பார்வை, அந்தக் கண்கள் இன்னும் நீள்கிறது.
வாப்புப்பாவின் கடைக்கு வன்னியனார் கடை என்றால் பிரசித்தம்; புளிய பரத்தடிக் கடையாகப் பின்னாளில் மருவிற்று என்கிறார்; (பக்.36)
சற்றுத் தொலைவில் பரந்து கிடக்கும் வயல் வெளி, வயலையும் குளத்தையும் பிரிக்குமாற்போல் இராட்சதப் பாம்பாய் படர்ந்து நீளும் குளக்கட்டு வயலைத் தாண்டி விழுந்தால் மாந்துறை ஆறு.
உடல் வளராத அவருக்குள் ஓர் உலகம் உடைந்து சிதறி விடாமல் எப்பொழுதும் உரையாடிக் கொண்டே இருந்திருக்கிறது; உம்மா,வாப்பா, முத்தம்மா, வாப்புப்பா, மாமா, சாச்சா, பிள்ளைகள் இப்படி ஒவ்வொருவராக விழுங்கியபடியே நாட்களைக் கடந்து வந்து இப்பொழுது உயர்ந்து பெரியவரானதும் கொட்டியில் போட்ட ஒடியல் நார்களை அசை போடுகிறார்.
இன்றைய மூத்தம்மாக்கள் கச்சான், வடை, விற்பதையெல்லாம் அறியமாட்டார்கள்; (பக்.51) அந்த ஆலமரத்தைப்பற்றி எனது மூத்தம்மா கதை கதையாகச் சொல்லுவா; அதன் விழுதுகள் பேய்களின் ஊஞ்சலாம்; இரவில் அவைகள் கூட்டாக ஆடிக் கொண்டிருப்பதப் பார்த்தவர்கள் மறுநாள் எழுந்திருக்க மாட்டர்களாம்.
முத்தம்மாவின் உறவும் பிரிவும் நேர்ந்திராது போயிருந்தால் இந்தக் கதை வெளியில் ஒர் அரபாத் இல்லாமலே விட்டிருப்பார்.
சிறுvவயதிலிருந்து முத்தம்மாவுடனேயே வளர்ந்து திரிந்து கொண்டிருந்த ஒரு மனிதனுக்கு மூத்தமாவும் அவர் அணிந்திருந்த கிராமமும் அவனுடைய அவயங்களில் ஒன்றுபோல் ஆகிவிட்டிருந்தது.
இப்படியாகப் பல காலம் கழிந்தது;
பின்பு எப்போதிருந்து என்று தெரியாமல் சிறிது சிறிதாகப் பல புதிய பிரச்சினைகளும் வினோதமான மனக் கவலைகளும் நட்சத்திரமற்ற வான இருளில் பரவியடிக்கும் போர் மூட்டங்களும் அவனுடைய செவியையும் நாசியையும் எட்ட ஆரம்பிக்கின்றன;
அவை தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள சூழலையும் வேறு வேறெனப் பிரித்துக் காட்டும் பிரக்ஞையை￶த் தனக்குள் பலவந்தமாகப் புகுத்துவதைக் கண்டு அந்த மனிதன் குழம்பிப் போகிறான்;
என்னதான் அது என்ற கோபத்துடனும் ஆர்வத்துடனும் தனக்கு அதிர்வைத் தந்த திசையைக்குறி வைத்து எழுதப் புறப்படுகிறான்.
அம் மனிதன், அந்தப் பயணத்தில் காட்டின் எல்லைகளையும் அதற்கப்பாலான கிராமங்களையும் அங்கே குப்பி லாம்புகளின் வெளிச்சத்தில் உலா வருகின்ற ஜின்கள்,பேய்கள், எழும் இனிமையான இரைச்சலிலும் மெளனத்திலும் அங்கங்கே மரங்கள் வெட்டப்பட்ட வெளியில் பால் உதிரும் மணத்திலும் கண்காணாத மூலைகளிலும் நிரம்பி அலைகின்றான்.
அந்த மனிதனன்தான் அறபாத்; அவர் நினைவூஞ்சலில் நம்மையும் உட்கார வைத்து ஆட்டுகிறார்.
கூப்பிடக் குரலற்றுக் காற்ராய் வெளிப்படும் அவர் சாச்சவுடன் வனத்துக்குள் வந்த நினைவுகள் ( பக்: 64)
காட்டின் உருவம் இயல்பான வெளிச்சத்தைக் கொண்டதாகவும் செரிமான ஒலியைப்போல அதன் சப்தத் துகள்கள் அனிச்சையாகவே அவருக்குள் கரைந்து விடுவதாகவும் அதன் அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பானதாகவும் மாறி விடுவதை நானும் அனுபவித்தேன்.
படைப்பாளி என்பவன் கொள்கை பரப்பும் செயலாளி இல்லை; படைப்பாளி எப்பொழுதும் நினைவுகளை அடையாளப் படுத்துபவனாகவே இருக்கிறான்.
அராபாத் அவர் கொள்கையாளி; ஆனால் பாசாங்குகளை இலக்கியத்தில் ஆவணமாக்காதவர்; நினைவுகளில் தொங்கிய நீர் ஊஞ்சலை அறுத்து விடாதவர்.
-நபீல்
Anar Issath Rehana, Aaliya Aaliya and 10 others
1 Comment
Like
Comment
Share

 

தோழர் அல்சாத்தின் முக நூல் சுவட்டின் பதிவு

நன்றி அல்சாத்

"நினைவில் தொங்கும் நீர் ஊஞ்சல்" எனும் ஓட்டமாவடி அறபாத் இன் பத்தி எழுத்துத் தொகுதியை படிக்க கிடைத்தது. ஆசிரியரைப் பற்றிய ஓர் சிறு குறிப்பை இவ்விடத்தில் பதிந்துவிட்டு நூலைப் பற்றி சொல்வதே பொருத்தமானது என்று நினைக்கிறேன்.

கிழக்கிலங்கை ஓட்டமாவடியைப் பிறப்பிடமாகக்கொண்ட அறபாத் அவர்கள் கலைப்பட்டதாரியும் பயிற்றப்பட்ட மௌலவியும் ஆவார். தற்போது அரசுப் பணி புரிந்து வருகிறார். இவரது முதல் சிறுகதை தொகுதி "நினைந்தழுதல்" க்கு 'விபவி விருதும்' "உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி" சிறுகதைத் தொகுதிக்கு 'இலங்கை அரசின் சாஹித்யமண்டலச் சான்றிதழும்' 'கிழக்கு மாகாண சபையின் விருதையும்' வென்றவர்.
கவிதை, கதை, கட்டுரை என பல துறைகளில் இயங்குபவர்.இதுவரை பதினொரு நூல்களை எழுதியுள்ளார்.
2015 முதல் இலங்கை அரசின் 11ஆம் ஆண்டு தமிழ்ப்பாட நூலில் இவரின் சிறுகதை 'மூத்தம்மா' இடம்பெற்றுள்ளது சிறப்புக்குரியது.
இவ்வாசிரியரின் சிறு வயது பராயம் கொண்டு அவரது வாழ்க்கை அனுபவங்களை மிகவும் அழகாக பதியவிட்டிருக்கிறார் இந்நூலில்.
"எங்கள் தேசம்" நாளிதழில் தொடராக வெளிவந்த 50 பத்தி எழுத்துக்களின் கோர்வையே இந்நூல்.
நிச்சயமாக இந்நூலைப் படிப்பவர் மனதில் தமது உசுக்குட்டிப் பருவ நினைவுகள் ஊஞ்சலாடாமல் இருக்க முடியாது. அந்தளவு மிகவும் அழகாகவும் அவரது வாழ்வில் பெற்றுக் கொண்ட இன்பம், துன்பம், கஷ்டம், நஷ்டம், துரோகம் போன்ற பல விடயங்களையும் மிகவும் லாவகமாக படிப்பவர் மனதை வசியப்படுத்தி ஒன்றித்துப் போக செய்திருக்கிறார்.
பின்னட்டையில் நூல் பற்றியும் ஆசிரியர் பற்றியும்
Slm Hanifa
எழுதியிருக்கிறார்.
இந்தியாவின் புகழ்மிக்க காலச்சுவடு பதிப்பகம் பதிப்பித்திருக்கும் இந்நூல் மிகவும் கவனமாக எழுத்துப் பிழைகள் இன்றி அழகிய முன்னட்டையோடும் சுமார் 160 பக்கங்களில் நூலை தொகுத்திருப்பது சிறப்புக்குரியது.
நான் படித்து சுவைத்த இவரது முதல் நூலே இதுவாகையால் ஏனைய இவரது அனைத்து நூல்களையும் படிக்க ஆவலாயுள்ளேன். இருப்பவர்கள் தந்துதவினால் சிறப்பாக இருக்கும்.
இது போன்ற பல ஆக்கங்களை இனியும் தர வேண்டுமென்ற பிரார்த்தனையோடு ஓட்டமாவடி அறபாத் மௌலவிக்கு வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.

 



எஸ். நளீமின் 

 “பல்லிகள் இல்லா சுவரில் மேயும் வண்ணத்துப் பூச்சிகள்” 

உணர்வின் மொழி

                                                                                -ஓட்டமாவடி அறபாத்

 
‘தலைசிறந்த சொற்களை தலைசிறந்த ஒழுங்கில் கோர்ப்பது கவிதை.’ என்றான் கோல்ட்ரிஜ். ‘குழம்பிய உணர்வுகளின் தெளிந்த வெளிப்பாடு கவிதை’ என்பது ஆடனின் நிலைப்பாடு. 

 

கவிதையை புரிந்து கொள்ளவும் அதனுடன் நெருங்கிப்பழகவும் மனிதனாக வாழ்வது அவசியம்.மனிதன் என்பது சக மனிதனின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு அவனை நேசிப்பது மட்டுமன்றி , பிரபஞ்சத்தில்; உள்ள சகல உயிரினங்களையும் பிரமை கொண்டு அதனை நேசிப்பதுதான் மனிதம்.

 

கலைகளுக்கு இந்த விசாலமான மன விசாரம் உன்னதம் என்பேன்.
ஓவியம்,கவிதை, சிறுகதை,இதழியல் என்ற பல்வகை புலமைகளின் பரிணாம நீட்சியாக எஸ்.நளீமின் பல்லிகள் இல்லா சுவரில் மேயும் வண்ணத்துப் பூச்சிகள் கவிதைத் தொகுதி முகிழ்ந்துள்ளது. கடைசிச் சொட்டு உசிரில்…(2000), இலை துளிர்த்துக் குயில் கூவும் (2008) ஆகிய முன்னிரு கவிதைத் தொகுதிகளும் அவருக்கு விருதுகளைப் பெற்றுக்கொடுத்த தொகுதிகளாகும். பூகோளத்தின் சூட்சுமங்களை நேசிக்கத் தெரிந்த ஒருவரால் மட்டுமே எழுதவல்ல கவிதைகளை பல்லிகள் இல்லா சுவரில் மேயும் வண்ணத்துப்பூச்சிகளில் வாசித்துணராலம்.

 

நளீமின் கவிதைகளை இன்னதென்று விளக்;குவதைவிட வாசித்து உணரத்தான் முடியும். 

 

தான் வாழும் சமூகத்தின் மீதான அபரித காருண்யம், இயற்கையுடனான காதலின் வசீகரம், சமூக ஒழுங்கு மீறப்படும்போதும் சத்தியத்தின் கால்கள் முடக்கப் படும்போதும் அவற்றுக்கெதிரான கோபாவேசம், வன்முறைக்கெதிரான சீற்றம் என அவரின் கவிதைகள் பல்வகை உணர்வுகளின் கொந்தளிப்பாக வெளிப்பட்டுள்ளது.

 

கடந்த காலங்களின் சௌந்தர்யங்களை நினைவூட்டி, உறவுகளின் சிதிலங்களை வேதனையுடன் பேசுகின்றன சில கவிதைகள். அந்த வேதனைகளை கணல்மிகு நினைவுக் குறிப்புகளாக அவர் கவிதையில் சொட்டும் பதகளிப்பு இடையறாத கதறலாக எம் செவிகளில் நுழைந்து மனதை அரிக்கிறது.

 

பல்லிகள் இல்லா சுவரில் மேயும் வண்ணத்துப் பூச்சிகள், கெடூரங்களால் ஆனது, அறைக்கு வந்த வண்ணாத்தி, வசப்படாத வாழ்வைக் கட்டமைத்தல், வசீகரித்த வாழ்வெழிலை, வரைந்துயர்ந்த, மனத்தீ ஆகிய கவிதைகள் நான் மேற் குறித்த உணர்வுகளை சுட்டும் கவிதைகளாகும். 
அதிகாரத்தின் இரும்புப் பிடியில் சாமான்யர்கள் ஏமாற்றப் படுவதும் ஏய்த்துப் பிழைப்பதும் காலங்காலமாய் பின்தொடரும் அவலங்கள். சர்வாதிகாரத்தின் கொடூரங்களுக்கெதிரான நளீமின் சொற்கள் ஓங்கி ஒலிக்கின்றன. சொற்கள் சம்மட்டிகளாகி சம்ஹாரம் செய்கின்றன. ஒப்பாரி ஓங்கிய தீவு, ஒரு கனிமரம்தேடி, இருள் ஒதுங்கும் மூலை, தனித்த குரலும் வால் மனிதர்களும், விலங்கோடு வாழ்வு, அமர்க்களம், அழுகி நாறும் நீ, குறுக்குக் கோழிக்கு கூந்தல் கட்டி போன்ற கவிதைகளில் அவரின் சூரசம்ஹார தொணி சன்னமாய் கேட்கிறது.அதிகாரத்தின் மையலில் அடகு வைக்கப்படும் ஒரு கையறு சமூகத்தின் ஆவேசக்குரலென இக்கவிதைகளை குறிப்பிடவியலும்.

 

இனவாதத்தால் எரியூட்டப்பட்ட வாழ்விலிருந்து மீண்டவர்கள் நாங்கள். இன்றைய தேதிவரை இனவாதத்தின் அகன்ற கோரப் பசிமிகு திறந்த வாய்களுக்கருகேதான் எங்கள் இருப்பு பதகளித்துக் கொண்டிருக்கின்றது. இனவாதத் தீயின் உஸ்ணத்தில் நின்று கொண்டே நிழலை யாசிக்கும் நளீமின் சில கவிதைகள் உரத்துப் பேசுகின்றன.

 

இனவாதம் கோலோட்சும் இந்த தீவில் இனி சௌஜன்யம் என்பது எட்டாக்கனி போலவும் முடவனின் கொம்புத்தேன் கனவு போன்றும் ஆகிவிட்டது. அந்த ஆற்றாமைமிகு துயரங்களை தன் கவிதைகளால் இடித்துக்காட்டுகின்றார். உள்ளத்துள் மிருகம் வளர்த்தல், வசப்படாத வாழ்வைக் கட்டமைத்தல், தீ விதைகள் கவிதைகளில் இந்த ஆதங்கம் சொட்டுகின்றது.

 

இந்த சமூகத்தின் கையறு நிலை கண்டு அவர் கொண்டுள்ள தார்மீகக் கோபம் ஆங்காங்கு கவிதைகளில் நீக்கமற கர்ச்சித்தபடி கூடவே வருகின்றது.

 

….” தேர்தல்கள் தோறும் 
நிறம் பூசிக்கொண்ட
உன் சின்ன விரலிடம் 
வெட்கம் கொள்
வாக்களிக்க நீ பிரஜை
இங்கே வாழ மட்டும் நீ யார்? “

 

என அவர் ஆவேசப்படும்போது அடக்கு முறையின் கொடூர முகத்தில் காறி உமிழ்வதுபோல் அடங்கியிருப்பவனின் தன்மானத்தை கிளறிவிடுவதுபோல பல்முனை உணர்வுத்தளத்தில் நின்று பேசும். இதனை நிகர்த்த பல கவிதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளமை நளீமின் போர்க்குணத்திற்கோர் சத்திய சாட்சிகளாகும்.

 

கவிதை என்பது வெறுமனே தனிமனித அனுபவம் அல்ல, தனிமனித அனுபவமாயினும் அது சமுகம்சார் அனுபவமாகவும் இருக்கும்.
கவிஞன் தன் சமுகம்சார் அனுபவத்தையே தன் அனுபவமாக உய்த்துணர்ந்து எழுதுகின்றான்.

 

நளீமின் கவிதைகள் அகவயப்படுத்தப்பட்ட புறவயக் கவிதைகளெனில் மிகையல்ல. அவர் கவிதைகளைப் புரிந்து கொள்வதற்கு மொழி மட்டும் தெரிந்திருந்தால் போதாது வாசகனின் தயார் நிலையும் மனோ விசாலமும் பிரதானமானது.

 

நளீமின் கவிதை சொல்லும் மொழி தனித்துவமானது. முன்னிரு தொகுதிகளிலும் சோலைக்கிளியின் கவிதை மொழி ஆங்காங்கு தாக்கம் செலுத்தியுள்ளது. தொன்னூறுகளுக்குப் பின் எந்தக் கவிஞனும் சோலைக்கிளியை தவிர்த்துவிட்டு கவிதை எழுத முடியாது என்ற அடிப்படையில் அத்தாக்கத்தினை புரிந்துகொள்வது கடினமல்ல.

 

இத்தொகுதியிலுள்ள சில கவிதைகளில் நளீமின் மொழிப் பாய்ச்சல் வேறொரு தளத்தில் பயணிக்கத் தெடங்கியுள்ளது. அகத்துறிஞ்சல்களால் மொழியை செம்மைப் படுத்திய கவிதைகள் இத்தொகுதியில் விரவிக் கிடக்கின்றன.  பல்லிகள் இல்லா சுவரில் மேயும் வண்ணத்துப் பூச்சிகள், வற்றிக் கிடக்கும் என் மனக் கடல், சட்டத்தில் அடைக்கும் கோடுகள், கொடூரங்களால் ஆனது. இருள் ஒதுங்கும் மூலை போள்ற கவிதைகள் அவரின் மொழிச் செழுமைக்கோர் பருக்கைகளாகும். 

 

அறிவினால் விளங்கிக் கொள்ளப்படும் கவிதைகளைவிட உணர்வினால் புரிந்துகொள்ளப்படும் கவிதைகள் இத்தொகுதியில் விரவிக்கிடக்கின்றன. எல்லா மனிதர்களுக்கும் உள்ளே தகிக்கும் தார்மீக உணர்வை தனித்துவமாக அடையாளம் காட்டுபவன்தான் கலைஞன். மனித வாழ்வோடும் , உறவோடும் கலைகளை நெருக்கமாகக் கொண்டு வரும் போது அது இலகுவில் புரிந்து விடும் என்பது பொதுவான யதார்த்தம்.

 அந்தக் கலைஞயினூடாக சமூகத்தின் கலைப் பெறுமானங்களையும் சொற் சிக்கனத்துடன் பொருள் கனதியுடன் நளீம் தன் கவிதைக@டாக முன்வைக்கின்றார். செறிவான கவிதைகள் மூலம் விரிவான விவாதங்களை எழுப்பும் நளீமின் கவிதைகள் மனோரதிய பேரின்பத்தை தரவல்லது எனில் மிகையல்ல.



16.10.2020


Thursday 5 November 2020



அன்புள்ள சித்தி றபீக்கா பாயிஸ்,

தங்கள் கடிதமும், கவிதை நூலும் 13.10.2020இல் கிடைத்தது. அதிகரித்த வேலைப்பளு, அலுவலகப்பணிகள் காரணமாக உடனடியாக பதில் எழுத முடியவில்லை. உங்கள் கவிதைகளையும் உடனடியாக படித்து விட வேண்டும் என்று மேசையில் வைத்திருந்தேன். ஓவ்வொரு நாளும் அது கண்களை குத்திக்கொண்டே இருந்தது. 

இந்த கொவிட் 19 இரண்டாவது அலை தக்கதோர் சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளது. வீட்டிலிருந்து என்ன வேலை செய்வது அலுவலகப்பணிகளை 8மணி நேரமாக செய்வதற்கு இங்கு ஒரு ‘பிடுங்கலு’ம் இல்லை,’பீத்தலு’ம் இல்லை. கொஞ்சம் வாசிப்பு கொஞ்சம் எழுத்து என்று பொழுது போகிறது. தவிர எனது பிரத்யேக வாசிகசாலையை ஒழுங்கமைக்கும் பணிகளையும் தொடங்கியிருந்தேன். ஒரு வாரகாலமாக பிள்ளைகள் மனைவியின் உதவியுடன் அவற்றினை செய்து முடித்துவிட்டேன்.நீண்டகால அவா இந்த கொரோனாவால் நிறைவேறியிருக்கின்றது.

சதுப்பு நிலக்கொக்கின் கால்களை வாசித்து முடிப்பதற்கும் இரண்டு நாட்கள் தேவைப்பட்டது. கவிதை மனம் ஊறிப்பிரவகித்தோடுபவர்களிடம் நேசிப்புக்கு பஞ்சமிருக்காது.உயிர்கள் என்ற சட்டகத்தை தாண்டி அஃறிணைகளையும் காதலுறும் நுண்ணிய உணர்வுகளால் பின்னப்பட்டதுதான் கலைஞனின் இதயம்.சமூகத்தின் கண்களாவும் அங்கமாகவும் நிற்பவர்களால்தான் உள்மன அதிர்வுகளை புரிந்து கொள்ள முடியும்.

றபீக்கா உங்கள் ‘சதுப்பு நிலக்கொக்கின் கால்கள்’ உள் மனதின் ஆழித்துயரங்களை உரத்துப்பேசும் சித்திரங்களாகும். ‘வற்றாத ஈரம்’ உலர்வதற்குள் மற்றுமொரு கவிதை தொகுதியை தந்திருக்கின்றீர்கள். இது உங்களின் நீண்டகால நூலுருவாக்க கனவுகளை மெய்ப்பித்திருக்கின்றது. வாழ்வின் அடிமட்டத்திலிருந்து மேலெழுந்த’ பீனிக்ஸ்’ பறவை நீங்கள் . உங்கள் இலக்கிய கனவுகள் மெய்ப்பட்டிருப்பதில் எனக்கும் பேரானந்தம்.வலிகள் மிகுந்த வரண்ட காலங்களை வசந்தமாக உருமாற்றும் அற்புதங்களை கவிதை மூலம் பூக்கச்செய்துள்ளீர்கள்.

உங்கள் கவிதைகள் பிரதானமாக மூன்று விடயங்களை பேசுகின்றன.

1. சிறுவர் உளவியல் சார் அகவியல் பிரச்சனைகள்

2. சமூகப்புறக்கணிப்புக்களானவர்களின் மன அதிர்வுகள்

3. பெண்களின் நுண்ணிய மனக்கிலேசங்களை பிரபலிக்கும் எண்ணங்கள்

சிறுவர் உளவியல் குறித்த பல கவிதைகள் இத்தொகுதிக்குள் விரவிக்கிடக்கின்றன.ஒரு சில கவிதைகளை தவிர்த்திருப்பின் சிறுவர் உளவியல் குறித்துப்பேசும் சிறந்த கவிதைத்தொகுதியாக ‘சதுப்பு நிலக்கொக்கின் கால்கள்’ பேசப்படடிருக்கும்.

ஒரு வேளை உணவுக்காக எதிர்காலத்தையே அடமானம் வைக்கும் சிறுவர்கள்,வசந்தகால கனவுகள் சூன்யமாகி மலரும் போதே கருகிய அவலங்கள் என சிறுவர்களின் உள்ளுலகத்தின் பேரவலங்களை நீங்கள் அற்புதமாக கவிதையில் பதிவு செய்திருக்கின்றீர்கள்.

குப்பையில் குண்டு மணி,ஒரு வேளை உணவு,பளிங்கு வீட்டின் தூசி, நான் இல்லை கொத்தன், எனது நாள், வெளிப்படாத பிஞ்சு மூளை, விளக்கின் விழி, டியூசனுக்கு பிந்திய நான் போன்ற கவிதைகள் சிறுவர் உலகத்தின் அறியப்படாத இருண்ட துயர்மிகு பாடல்களை பேசும் கவிதைகளாகும். 

பாசத்திற்காகவும், அரவணைப்புக்காகவும் ஏங்கும் குழந்தைகளின் அவலக்குரல் உங்கள் கவிதைகளில் மௌன ஒலிகளாக இடையறாது கேட்டுக்கொண்டே இருக்கின்றது.

பெண் என்பவள் சில நேரம் உணர்வுகளால் நெய்யப்பட்ட நூல் வேலி. அவள் நுண்ணிய அதிர்வுகளையும், சிறு ஏமாற்றங்களையும் தாங்கும் மனோதிடம் அற்றவளாக தன்னை தாழ்த்திக்கொள்கின்றாள். அத்தகைய பெண்களுக்கு மாயசக்தியினையும், மனோவலிமையையும் உங்கள் சில கவிதைகள் ஊட்டச்சத்தாக பருகத்;தருகின்றது.சில கவிதைகள் ஆற்றாமையினால் மனம் வெதும்பி புலம்புகின்றது. சில கவிதைகள் தலைகோதி ஆறுதலாக தெம்பூட்டுகின்றது . பிரியாணி,பலாச்சளை,கனவுகளின் சிதைவு, முறிந்த பேனா, இரவின் மழை, தழும்புக்குள் பூச்சிகள், போன்ற கவிதைகளில் பெண் மனத்தின் அவலங்கள் ஏக்கங்கள், ரணங்கள் குறித்து பேசியிருக்கின்றீர்கள்.

உங்கள் உள்மனத்தின் பெருவலி சொற்கட்டுமாணத்தையும் மீறி படிப்போர் மனதில் அவசத்தை தூவி விட்டுச்செல்கின்றது.பெண் விடுதலைக்கான குரல்கள் நீட்சியாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

ஒரு ஒற்றைக்குருவி நீருக்காக பாலைவனத்தின் மணற்குன்றுகளிலிருந்து கேவுவதைப்போல மனித மனங்களின் சிறு தவிப்பையும் கவிதைகளில் படியவைத்திருக்கும் நீங்கள் இடையறாத வாசிப்பினையும், தேடல்களையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை உங்கள் கவிதைகள் பெரிதும் வேண்டி நிற்கின்றன. 

தொடர்ச்சியான வாசிப்பும் பயிற்சியும் நிலைபேறாக கூடவே இருந்தால் உங்கள் கவிதை திறன் அபரிதமாக வளரும் என்பதற்கு இத்தொகுதியில் உள்ள ‘சதுப்பு நிலக்கொக்கின் கால்கள்’ ஒரு பதமாகும். உங்களை எதிர்காலத்தின் கவிதை வனத்திற்கு அழைத்துச்செல்ல வாசிப்பும் கவிதைப் பயிற்சியும் 'கை விளக்காக' இருக்க வேண்டும் என்று ஆசிக்கின்றேன்.


நன்றி

அன்புடன்

ஓட்டமாவடி அறபாத்.

5112020

 


 

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...