Monday 26 September 2011

சிறுகதை- வாப்பாவின் சைக்கிள்


  (01)

வேகமாக வீசிக்கொண்டிருந்த காற்று, போகிற போக்கில் சருகுகளையும் கூழங்களையும் பலாத்காரமாக வாயில் திணித்து விட்டுப்போனது.விழிகள் எரிச்சலடைந்து கடுத்தன.சைக்கிள் மிதிக்க முடியவில்லை. இந்தப்பேய்க்காற்றுடன் மல்லுக்கட்டி முழங்கால் சில்லுகள் விண்ணென்று தெறித்தன. “பெடல்” வேறு  மரமரவென்று கடித்தது.

“கிறீஸ்” வைத்து பல மாதங்கள் இருக்கும். வாப்பா இருந்த போது கடைசியாக செயின் காக்காவின் சைக்கிள் கடையில் “சேர்விஸ்” போட்டதாக ஞாபகம்.கச்சான் காற்றை எதிர்த்து சைக்கிள் மிதிக்க மிகுந்த ஓர்மமும் தெம்பும் தேவை.

உள் நாக்கு வரண்டு நீருக்கு ஏங்கியது. பனை மரமொன்றில் சைக்கிளை சாத்திவிட்டு குளத்தில் இறங்கினேன். கைகளை குவித்து நீரையள்ளி அடர்ந்திருந்த கூழங்களை ஊதிவிட்டு மளமளவென்று குடித்தபோது உள்ளம் ஆசுவாசம் கொண்டது.

பனை மரத்தினடியில் குந்த மனம் ஒப்பவில்லை. சைக்கிள் மட்டும் இருக்கட்டும்;. ஓலைகள் காற்றில் வேகமாக தலை சிலுப்பி கூத்தாடின. சில மரங்களில் நொங்கு முற்றியிருந்தது. சற்றுத்தள்ளி மரமொன்றின் நிழலில் ஒதுங்கிக்கொள்கின்றேன். குளத்தில் குளித்து விட்டு வரும் காற்று என்னில் ஈரத்தை அப்பி விட்டுப்போனது. உடல் குளிர்ச்சியில் மிதக்கத்தொடங்கியது.

மாந்துறை ஆற்றில் குளிக்கச்சென்ற ஒரு குடும்பம் உதிர்த்து விட்டுப் போன சிரிப்பும் கூச்சலும் பொட்டல் வெளியெங்கும் சுற்றித்திரிந்தது. குட்டை ஒன்றில் சில எருமை மாடுகள் தமது கணத்த உடம்பை அமிழ்;த்தி அசைபோட்டபடி படுத்திருந்தன. சேற்றினை அள்ளி வீசும் வால் சொடுக்கில் அருகில் நின்ற வெண்ணிற கொக்குகள் பறந்து போயின.

எதிரே இருக்கும் சைக்கிளில் என் பார்வை விழுகிறது. இது வாப்பாவின் சைக்கிள். ஐம்பது வருடமாக அவர் வாழ்வின் மூச்சில் உயிராகி ஒன்றித்திருந்த இரும்புக்காற்று.

உறுதியாக போக்குகள் கறல் பிடிக்கத்தொடங்கியிருந்தது. உம்மாவையும் நான்கு பிள்ளைகளையும்  காடு மேடெல்லாம் ஏற்றி இறக்கிய இந்த சைக்கிள் அந்திம காலத்தில் மூத்தவனான எனக்கு கை கொடுத்திருக்கின்றது. எனது வறுமைச்சுமையின் பாதியை வாப்பாவே வந்து தன் முதுகில் தாங்குவதான ப்ரேமை இந்த சைக்கிளை தொடும் போதெல்லாம் தவிர்க்கமுடியாமல் வந்து படுத்துகிறது.

வாப்பா பொத்தானையில் கொச்சிக்காளை செய்த காலத்தில் இதை வாங்கியதாக சொல்வார்.ஓட்டமாவடியிலிருந்து பொத்தானை காட்டுக்கு மாட்டு வண்டிச்சவாரி மட்டும் தோதான நாட்களில்; வாப்பா இந்த சைக்கிளை உழத்திக்கொண்டு  சென்ற போது  ஊரே கூடி வந்து வேடிக்கை பார்த்த கதையை அவர் சொல்லும் போது வியப்புடனும் ஆச்சரியத்துடனும் வாப்பாவை பார்த்திருப்போம்.

குரங்காட்டிகள், குறிசொல்வோர். ஆடு மாடு மேய்ப்பவர் எல்லோரும் எட்ட நின்று தொட்டுப்பார்த்து மகிழ்ந்ததை சொல்லும் போது வாப்பாவின் முகத்தில் காருண்யம் பூத்து மறைவதையும் நாங்கள் பார்த்திருந்தோம்.

ஏறாவூர் தியோட்டரில்  உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸ் ஆனவுடன்  12 மைல்கள் உழத்தியபடி எம்.ஜி.ஆரின் கை அசைவை பார்த்துவிட்டு வந்ததை வாப்பா பெருiயுடன் சொல்லும்  தருணங்களில் சுருக்கம் விழுந்த உம்மாவின் முகம் வெட்கிச்சிவப்பதையும் பருவ வயதினரான நாங்கள் களிப்பாக பார்த்திருப்போம்.

சைக்கிள் வாங்கிய புதிதில் உம்மாவுக்கும் இதில் ஏறி ஊரையே சுற்ற வேண்டும் என்ற அடங்கா ஆசை ஊறியது. வாப்பாவிடம் சொன்னபோது ஊர் அடங்கிய முதலாம் சாமத்தில் உம்மாவை முன் பாரில் ஏற்றிக்கொண்டு ஊரின் கிறவல் வீதிகளில் வலம் வந்திருக்கின்றார்.

யார் கண்ணிலும் படாமல்தான் இந்த உலா நிகழ்ந்தது. ஆனாலும் என்ன கோழிக் கள்ளன் ~ரீபின் கண்களில் இந்தக்காட்சி துலாம்பரமாயிட்டு.
சவுறா பீவின் கோழிக்கூட்டைத்திறந்து ஈரச்சாக்கால் இரண்டு கோழிகளை அமுக்கிக்கொண்டு இவன் வீதிக்கு இறங்கும் தருணம் உம்மாவுடன் வரும் வாப்பாவும் கோழியுடன் வரும் ~ரீபும் ஆளையாள் பார்த்துக்கொண்டனர்.

“டேய் ~ரிவு  மாமிர கோழியிலயா கை வச்சிருக்காய் இர்ரா வாரன்”

 வாப்பாவின் சத்தத்தில்  உம்மா முக்காட்டை இழுத்து மூடியதும் அவன் கோழிச்சாக்கை வீசியதும் ஏக காலத்தில் நடந்தேறியது. வாப்பா சொல்வார்  அன்று சவுறா மாமியின் இரண்டு கோழிகளின் குட்டித்தூக்கம் மட்டும் தான் கலைந்தது.

தலைப்பிள்ளையான எனது வருகைக்கு உதவிய இந்த சைக்கிளில் எப்போதும் எனக்கு வாஞ்சை இருந்தது. அர்த்த சாமத்தில் உம்மா இடுப்பு வலியால் துடித்த போது கொலனிக்குள் இருக்கும் கஸ்ஸா மருத்துவிச்சியை வாப்பா பின் கரியலி;ல் ஏற்றிக் கொண்டு திரும்பும் போது சுபஹ் தொழுகைக்கு பாங்கு சொல்ல லெப்பை மாமா பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். எனக்குப்பின் அந்தப்பாக்கியம் யாருக்கும் வாய்க்கவில்லை. தம்பி தங்கைகளின் வருகைகள் ஆஸ்பத்திரியில் நிகழ்ந்துவிட்டன.

அந்திம கால வாப்பாவைப்போல சைக்கிள் சோர்வுடன் பனைமரத்தில் சாய்ந்திருந்தது. ஓராயிரம் கதைகளை தனக்குள் கமுக்கமாக வைத்துக்கொண்டு சாய்ந்திருக்கும் அதன் ‘ரிம்கள்’ மட்டும் சற்று ‘கரல்’ பிடிக்க ஆரம்பித்தன.

தேக்க மர சேனைக்குள் கள்ள மரம் வெட்டி ஊருக்குள் அதை ஏற்றி வந்த இந்த சைக்கிள், பொத்தானைக்காட்டுக்குள் புலிகளால் சுடப்பட்டுக்கிடந்த மையத்துக்களையும் காவிக்கொண்டு ஊருக்குள் சேர்த்திருக்கிறது.

மம்முகாசின்ட மகன் அனிவா இந்தியன் ஆமிக்கு இளநி கொடுத்தானென்று  துரிசடியில் அவர்கள் சுட்டுவிட்டுப்போன பச்சை இரத்தம் உலரு முன்பே வாப்பா சைக்கிளின் பின் கரியலில் வைத்து தள்ளிக்கொண்டு வந்திருந்தார்.

கொச்சிக்காளைக்குப்போனவர் மிளகாய் மூடைக்குப்பதிலாக  இரத்தம் ஒழுக மையத்தை கொணர்ந்த போது ஊர் அவரையும் இந்த சைக்கிளையும் பெருமையாக பேசிற்று.

அனிவாவின் இளம் மனைவி முற்றத்தில் கிடந்து மண்ணைவாரி வானத்தை நோக்கி ‘பதுவா’ செய்தது இன்னும் என் நெஞ்சுக்குள் பாவுகிறது.

மாலையில் கிணற்றடியில் சைக்கிளை வாப்பா கழுவியபோது கரியலில் படிந்திருந்த இரத்தக்கறைகளை கண்டு பயத்தால் அழுதிருக்கின்றேன். சவர்க்காரம் போட்டு தும்பால் தேய்த்துக்கழுவிய பின்பும் வாப்பா சைக்கிளை உள்ளே எடுக்காமல் வெளி விறாந்தைக்குள் சாத்தினார்.

நான் ஒரு மாத காலமாக அந்த சைக்கிளில் ஏறுவதற்கு அடம்பிடிக்கவில்லை என்பது உம்மாவுக்கு மகிழ்ச்சி.

ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்த சிறுவன் என்னைக்கண்டதும் அருகில் வருகிறான். 20 ஆடுகள் இருக்கலாம் செவிகள் நீண்ட வெள்ளாடுகள் மிக எடுப்பாக நின்றன. பாடசாலைக்காலத்தில் நான் விழுந்து விழுந்து நேசித்தவளும் இப்படித்தான். நண்பிகள் புடை சூழ வரும்போது எல்லோர் தோளையும் விஞ்சி அவள் கழுத்தும் சிரிப்பும் வெட்டிக்காட்டும். ஓரடி உசத்தியும் எடுப்பும்.

அவளிடமும் பருவத்தில் ஒரு சைக்கிள் இருந்தது.பெண்கள் சைக்கிள் விட சங்கோஜமான அக்காலத்தில் அவள் முதல் தரமாக அதை ஓட்டிக்கொண்டு வந்த போது கிராமமே வியப்பில் மூழ்கியது. எல்லாப்பெண்களையும் விஞ்சும் சாகசக்காரியாக அவளின் பிம்பமே பேசப்பட்டது. நட்பின் உச்சத்தில் இருந்த காலத்தில் அந்த சைக்கிளில் மைதானம் முழுக்க சுற்றிப்பார்த்திருக்கின்றேன்.

வாப்பாவின் சைக்கிளின் உறுதியான இருப்பு என்னை உறுத்துகிறது.

முள்ளிவெட்டவான் முட்காடுகளில் இதன் கரியலில் இருந்து நான் பயணித்த பயணங்கள் நினைவின் முட்களாக நெஞ்சை அடைக்கிறது.

இயக்கப்பொடியன்கள் அடர்ந்த காட்டின் வழி ஓட்டிச்சென்று உணவுப்பொதிகளை தன் சகாக்களுக்கு கொடுத்து விட்டு வருவதற்கு வாப்பா மறுப்பேதும் சொல்லமாட்டார். மறுப்புகள் எடுபடாது என்பது தெரிந்தபின்பும் என்னத்தப்பேச என்றிருக்கும் வாப்பாவின் தோரணை.

 சைக்கிள அவர் யாருக்கும் ஓடக்கொடுக்கமாட்டார் என்ற அவரின் ‘பொலிசி’ தெரிந்தவர்கள் கேட்கவேமாட்டார்கள்.

(2)

இரவுக்காட்சி முடிந்து  ஏறாவ+ரிலிருந்து வாப்பா நண்பர்களுடன் வருகிறார்.ஆளுக்கொரு சைக்கிள் வெகு உல்லாசமாக பார்த்த படத்தின் நகைச்சுவைகளை சொல்லிச்சிரித்தபடி வீதியை அடைத்தபடி வருகிறார்கள்.

 சித்தான்டியை தாண்டும் போது வாப்பாவின் முதுகில் அனல்காற்று தொடுகிறது. சைக்கிள் நகர மாட்டேன் என்கிற அளவிற்கு கணதியின் வலி . பெடல் மறமறக்க மிதிக்கிறார். பின் கரியலில் இருக்கும் ஆசாமியை திரும்பிபார்க்கும் ஆவல் உந்த முகத்தை வலப்பக்கமாக திருப்புகிறார்.

‘ம்… பின்னால் பார்க்கம மிதிடா’

 குரலின் தீட்சண்யம் அவரை கட்டிப்போடுகிறது. ஆகிருதியான நீள் நிழல் சைக்கிள் பக்கவாட்டில் விழுந்து தொடர்வதை கவனித்தபடியே மிதிக்கிறார். நண்பர்கள் அவரை தாண்டிச்சென்றுவிட்டனர். நிலவின் குளிர்ச்சி வீதி முழுக்க சொரிந்திருந்தது. சாராயத்தவறணைக்கருகில் ஒர் ஆலமரம் விழுது பரப்பி தலை சிலுப்பி நின்றது.

வாப்பா வியர்வையில் குளித்தபடி ஆலமரத்தை கடக்கும் தருணம் சைக்கிளின் பாரம் விர்ரெனக்குறைகிறது. கால்கள் இலேசாக பெடலை உழத்தின. ஆலமரத்தின் கந்துகள் காற்று வீசாத நள்ளிரவில் தலைவிரித்து ஆடியதை  வாப்பா திரும்பிப் பார்க்காமலே சைக்கிளை வேகமாக மிதிக்கத்தொடங்கினார்.

சாமத்தில் தனியாகப்போகும் சைக்கிளின், மாட்டு வண்டிலின் பின்னால் பேய்கள் ஏறி சஞ்சரிப்பதாகவும் இந்த சைக்கிளில் பல பேய்களை தான் ஏற்றி வந்துள்ளதாகவும் வாப்பா வீறாப்புடன் கதை சொல்வார். பேய்கள் இரும்புக்கும் வலாயப்படாத காலம் அது. நாங்கள் தாய்ப்பறவையின சிறகினுள் ஒடுங்கிக்கிடக்கும் குஞ்சுகள் போல் உம்மாவின் விலாவை உரசியபடி வாய் பிழந்து கதைகள் கேட்டிருந்தோம்.

(03)

குட்டையில் கிடந்த எருமை மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாய் எழுந்து மேற்குப்பக்கம் செல்கின்றன.குளித்து விட்டு வரும் அந்தக்குடும்பம் மறுபடியும் சிரிப்பையும் கும்மாளத்தையும் காடு முழுக்க தூவியபடி வந்தது. குளத்தில் நாரைகள் விழுந்து எழும்பிய போது அதன் சொண்டுகளில் மீன்கள் துடித்தன.

பிற்காலத்தில் வாப்பாவின் மனச்சுமைகளை இந்த சைக்கிள் சுமக்க முடியாமல் நைந்து போனது போல் ‘சீட் கு~ன்’ பிய்ந்து போய் பரிதாபமாக தெரிந்தது. வேலை முடிந்து வீட்டுக்குப்போய் முதல் வேலையாக இதைக்கழுவி மினுக்கம் கொடுக்க வேண்டும்.

சில சாமான்களை புதிதாக வாங்கிப்போட வேண்டும். சைக்கிளின் மகிழ்ச்சி வாப்பாவுக்கு செய்யும் முதல் மரியாதை .பனை மரத்தில் சாய்ந்திருக்கும் அது என்னை பரிதாபமாக பார்த்துக்கொண்டிருப்பதான பிரேமை .மனம் சுருக்கென்றது.

‘எனக்கு உம்மாவோட வாழ ஏலாடா மக்காள்’

‘ஏன் வாப்பா ?..’

‘அவட கக்கிசாரம் புறுபுறுப்பும் பொறுக்கேலா எந்த ஆம்புளயும் தாங்கமாட்டான், புகைச்சலுக்க இருந்தாலும் எரிச்சலுக்க வாழ ஏலுமா செல்லுங்க ? ’

‘கொஞ்சம் சமாளித்துப்போங்களன் வாப்பா’

‘இல்ல மக்காள் பொம்;புள வாய்ச்சாதான் வாழ்க்க ருசிக்கும் இல்லாட்டி நரகம்தான்டா, இம்புட்டு நாளும் நரகத்தலதான் வாழ்ந்திட்டன். அதெல்லாம் ஒங்களுக்காக,இனி நீங்க தலெயெடுத்திட்டிங்க ஒங்களுக்கும் கண்ணு விடுத்திட்டு, நீங்களாச்சும் நல்ல குணமுள்ளவள தேடிமுடிங்கடா இது என்ர ஒஸியத்து.’

வாப்பாவின் குரல் உடைந்திருந்தது. அப்போதும் இந்த சைக்கிள் அவர் காலடியில்தான் கிடந்தது.

‘நான் என்னத்த குற வச்ச அவ இப்பிடி நடக்கலாமா’?

உம்மா வாப்பாவுக்கு செய்யும் ஆக்கிணைகள் நினைவில் எழுந்தன. வாப்பாவின் அந்திமம் இயலாமற்போன போது அவரை வார்த்தைகளால் சித்திரவதை செய்து கொன்ற மனைவியாக அவ மாறியிருந்தா. ஆகாதவன் பொண்டாட்டி கைபட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்பது இங்கு தலை கீழாக மாறிப்போயிற்று.

அவரின் யௌவனப்பருவத்தில் உம்மாவை ஆட்டிப்படைத்ததும் ஏனோ சுறுக்கென்று நினைவில் வந்து முட்டியது. தேத்தண்ணியில சீனி குறைய, அல்லது இனிப்புக்கூடிட்டு,கரி ஆக்கின, சரியில்ல இப்படி எத்தனையோ சில்லறைத்தனமான விடயங்களுக்கெல்லாம்  மோட்டுக்கும் தரைக்குமாக குதித்து தாண்டவமாடியவர்தானே.

ஒரு தடவை உப்புக்கொஞ்சம் கூடிட்டு என்றதற்காக சாப்பிட்ட தாலாப்பீங்கானை தூக்கி உம்மாவின் மூஞ்சியில விட்டெறிந்தார். அது அவவின் தலைக்குமேலால் பறந்து சுவரில் முட்டி டங் என்ற கடுர சத்தத்துடள் விழுந்த போது வாப்பாவின் முகம் இறுகிக்கிடந்ததை அச்சத்துடன் பார்த்திருந்தோம். படலையைத்தாண்டி உம்மா வானத்தைப்பார்க்க இவர் கிழமைச்சாமான் கட்டிக்கொண்டு வேலைக்குப் போகவேண்டும் என்ற நிலை இருந்தது.

அந்த அராஜரகங்களுக்கான பழிவாங்கும் படலமாக உம்மாவின் ஆக்கிணைகள் அவரின் அந்திமத்தில் நடந்தேறியுள்ளதாக நினைக்கத்தோன்றுகிறது. பல் பிடுங்கப்பட்ட நாகம் போல் வாப்பாவின் நாடி நரம்புகள் ஆடிப்போன  தருணத்தில் உம்மா வஞ்சம் தீர்த்துக்கொண்டிருப்பதான ஆறுதலை தந்திருக்கலாம்.

 அப்போதும் அவர் கோபப்படவில்லை. சைக்கிள் சவாரியை விடவுமி;ல்லை. வீட்டிலிருந்து மேற்கு மூலையிலிருக்கும் தைக்காப்பள்ளிக்கும் வீட்டிக்கும் மூன்று நிமிடப்பயணம்தான். வாப்பாவோவெனில் சைக்கிளில்தான் செல்வார். மழைக்காலங்களிலும் ஒரு கையால் குடை பிடித்தபடி, நடுங்கும் கரங்களால்; ‘கெண்டிலை’ப்பிடித்தபடி அவர் சைக்கிளில் வரும்போது அச்சம் கவ்வும். ஆனால் விழமாட்டார்.

அவரின் செல்வாக்கை தூக்கி நிறுத்த இந்த சைக்கிள்தான் தோதாகப்பட்டிருக்கலாம். சில சமயங்களில் கத்தா மரத்தடியில் சாத்திவிட்டு அதனிடம் பேசிக்கொண்டுமிருப்பார்.

 அவர்களின் நீள் தூரப்பயணங்கள், எதிர்கொண்ட ஆபத்துக்கள் குறித்தெல்லாம் சைக்கிளுடன் அவர் பேசுவார். சர்வமும் சத்தியம் என்பது போல் அந்த ரெலி சைக்கிள் மௌனமாக கேட்டுக்கொண்டிருக்கும். பணிவுள்ள அடிமையாக வாப்பாவின் பேச்சில் கட்டுண்டு கிடக்கும் சைக்கிளின் இருப்பு எனக்குள் பேரானந்தத்தை தூவும.;

பனை மரத்தில் சாய்ந்து ஓய்வெடுக்கும் சைக்கிளை தூக்கி நிமிர்த்துகிறேன். இரும்புகளின் குளிர்ச்சி ஜில்லென்று கையில் பாவுகிறது. ஒரு என்.ஜீ.ஓவில் வெளிக்களப்பணியாளனான எனக்கு இந்த சைக்கிள் உபயோகம் வார்த்தைகளில் மாளாது.

வாப்பாவே சின்ன வயதில் கூட வரும் பாதுகாப்புணர்வு நெஞ்சில் ஊறியிருக்கும். வாஞ்சையுடன் அதை தள்ளி  பக்குவமாக வீதிக்கு ஏற்றுகிறேன்.

நான் அலுவலகத்தில் நுழைந்தபோது ரஜீவன்தான் முதலில் என்னைக்கண்டான். மேலதிகாரிகளின் வாகனங்கள் தரிப்பிடங்களில் நின்றன. அஞ்ஞனா ரிசப்சனில் ஜெகஜோதியாக சிரித்தபடி என்னை வரவேற்றாள்.

 சைக்கிள் சாவியை விரலிடுக்கில் வைத்து சுழற்றியவாறே எனது மேசையில் வந்தமர்ந்தேன். சற்று நேரத்தில் மேலதிகாரியின் அழைப்பு வர அறைக்குச்சென்று அன்றைய களப்பணிகள் பற்றி கலந்துரையாடினேன் .அவர் அறிக்கைகளை படித்தபின்  என்னை நிமிர்ந்து பார்த்தார்.அவர் இதழ்யோரம் இளநகை முகிழ்ந்தது.

‘ஒரு குட் நிவுஸ்’ என்றார். மலர்ந்த இதழ்கள் மகிழ்ச்சியில் விரிந்தன.

என்ன என்பது போல் என் புருவங்கள் உயர்ந்தன

‘இனி நீங்க அந்த பழய சைக்கிள் ஓடத்தேவையில்ல.நாங்க மொட்பைக் தாரதாக முடிவெடுத்திருக்கம். நாளயண்டக்கி பங்~ன், அவசியம் வந்து உங்கட பைக் எடுத்திருங்க.’

‘தாங்கஸ்’ என்ற வார்த்தைகள் மெலிதாக என்னிடமிருந்து வெளிப்பட்டன அவர் வினோதமாக பார்ப்பதை தவிர்க்குமாற் போல் அவசரமாக வெளியேறினேன். அஞ்ஞானா ஏற்கனவே விடயம் தெரிந்திருப்பாள்.

‘அப்ப இனி இந்த கரள் பிடிச்ச இரும்புக்கு லீவு என்ன, பேரீச்சம் பழம் வாங்கி தாங்க யாகூப் என்றாள்,

ரஜீவனோ ஒரு படி மேலே போய்

‘இனி மரமஞ்சள் குடிக்கிற வேலயும் இல்ல’என்றான்.

நெஞ்சுக்கு இதமான உறவை இழந்துவிட்ட பரிதவிப்பில் மனம் பதைபதைத்தது. வாப்பாவின் சைக்கிள் இல்லாத வீட்டின் தனிமை என்னை அச்சமூட்டத்தொடங்கியது. வெளியே வந்து சைக்கிளை திரும்பி பார்க்கிறேன். உம்மாவால் கைவிடப்பட்டு அந்திமத்தில் பரிதவித்த வாப்பாவைப்போல் அது சாத்திய இடத்தில் அப்படியே நின்றது.


06.06.09 பிரசுரம் அம்பலம் , சஞ்சிகை 2010 ஜனவரி

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...