Saturday 23 July 2011

காத்திருந்த மரணப்பொறி.....

னக்கு ஒரேயொரு பெரியம்மா. அவவின் பெயர் வெள்ளையும்மா .ஆள் பொது நிறம்.பெரியப்பா ஒர் அப்பாவி.மூத்தது பெண் இரண்டாவது ஆண். பெயர் ஹயாத்து முஹம்மது. குடும்பத்தில் உள்ளவர்கள் 'அயாத்தமது' என்று கூப்பிடுவார்கள். நான் 'அயாத்து காக்கா' என்பேன். பெரியப்பாவை போல் அவனும் ஒர் அப்பாவி. படிப்பு ஏறவில்லை. வயலுக்கு குருவிக்காவலுக்கு அனுப்பி விட்டார்கள்.
'கிடச்சிமடுக்கண்டத்தில் தாய் மாமனின் வயலுக்குள் விழும் குருவிகளை விரட்டும் தொழில் அவனுடையது.
எதற்கும் பயந்த அப்பாவி முகக்களை. சனத்திரளுக்குள் வரமாட்டான்.அவ்வளவு கூச்ச சுபாவம். அதைவிடப்பயம் காக்கி ஆடைகளைக்கண்டால்.
நான் சொல்வேன் 'காக்கா காக்கி சட்டயக்கண்டா ஓடாதீங்க. சந்தேகம் வரும் சுட்டுப்போடுவானுகள்' அதற்கு ஒரு வெகுளிச்சிரிப்பு பதிலாக வரும். 'நம்மளச்சுட ஆருக்கு தைரியம் வரும் ' என்பது போல் இருக்கும் அந்தச்சிரிப்பு.
புலிகள் துள்ளித்திரிந்த காலம்.ஆட்சியென்றால் அப்படியொரு ஆட்சி.எங்கள் ஊரில் ஏரியா பொறுப்பாளராக புஹாரி. சீர் திருத்தவாதியாக... ஹீரோவாக.. அவர் கையில் எப்பவும் ஒரு "மெசின் கண்" ஒரு கோழியை சுடுவதற்கும் முப்பது குண்டுகளை அநாயாசமாக பொரிந்து தள்ளும் மாவீரர்.
உம்மா ஆசையாக வளர்த்த ஒரு பாணிச்சேவலை முப்பதுக்கும் மேற்பட்ட குண்டு களை செலவழித்து சுட்டுக்கொன்றது என் மனக்கண்ணில் நிற்கிறது.
முள்ளிவெட்டவான் கடையின் பின் வளவில் தீனி பொறுக்கிக்கொண்டிருந்த சேவலையொத்த பல சேவல்கள் அவரின் துப்பாக்கிக்கு இரையாகியிருந்த காலம் அது.
பொத்தானையில் அஹமது காக்காவின் கடை,முள்ளிவெட்டவானில் வன்னியனாரின் கடை,(எனது வாப்பாவின் வாப்பா) முக்கர் கல்லி்ல் அப்துல் ஹமீதின் கடை, புணாணையில் டாப்பரின் கடை என சிதறிக்கிடந்த கடைகளில் முஸ்லிம்களும் தமிழர்களும் கூடிக்குலாவி மகிழ்ந்திருந்த அது ஒரு பொற் காலம்.
பொத்தானைக்கண்டத்திற்கு பொறுப்பாக தியாகு நியமிக்கப்பட்டிருந்தான். அந்தப்போராளி தூங்குவது அஹமது காக்காவின் கடை பெஞ்சில்.வயல் வெட்டுக்காலங்களில் வரி வசூலிப்பது,சின்னச்சின்ன சண்டைசச்சரவுகளில் மூக்கை நுழைத்து சமாதான தூதுவனாய் கருமமாற்றுவது,இன்னும் சில அதிகாரங்களை வைத்துக்கொண்டு தியாகு கூடவே சிறு படையையும் வழிநடாத்திக்கொண்டிருந்தான்.
அவனுடன் கிருஷ்ணன் என்ற போராளியும் முக்கிய நபராக இருந்தான் இந்தியாவிலும்,பலஸ்தீனத்திலும் கெரில்லா பயிற்சி எடுத்தவன்.இந்திய அமைதிகாக்கும் படையினருடன் பொருதி குடல் தொங்க அதை அள்ளிச்சொருகிக்கொண்டு தப்பி ஓடியவன் என்ற பெருமையும் அவனுக்கு உண்டு. அது ஒரு சாகச நிகழ்வு என்பது போல் கடைகளில் கூடி நிற்கும் கூட்டம் கதைத்து மாய்ந்தது.
தியாகுவுக்கும் அவனுக்கும் பூவை ஒருத்தி்யின் காதலைப்பெறுவதில் வந்து விட்டது சனியன்.ஆளையால் அடித்துக்கொள்ளவில்லை. பொருமிக்கொண்டு அலைந்தது சுற்று வட்டாத்திற்கும் தெரியும்.
ஒரு நாள் பனி அடர்ந்திருந்த அதிகாலை நேரம் அயாத்து காக்கா அஹமது காக்காவின் கடைக்கு வந்து சேர்ந்தான்.இரவெல்லாம் நித்திரை முழித்த அயர்வு.தேயிலைப்பொடி வாங்கி வர மாமாதான் அனுப்பியிருந்தார்.
காக்கா செல்லும் போது கடை மூடியிருந்தது.கடையைச்சுற்றி சனக்கூட்டம் முண்டியடித்துக்கொண்டு முன்னேறியது.அயாத்து காக்கா பயத்தில் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்தான். பக்கத்து வயல் மில்லக்காரன் கூட்டத்திலிருந்து அயாத்து காக்காவை நோக்கி முன்னேறி வருகிறார். 'தம்பி அயாத்தமது இஞ்செ நிக்காத வாடிக்குப்போ, அவன் தியாகுவ யாரோ வெட்டிப்போட்டு துவக்கையும் பறிச்சிட்டு பெய்த்தானுகளாம். அவனுகள் வந்து ரவுண்டப் பண்னுரதுக்கு முதல் வாடிக்குப்போய் மாமாவேட இரி'
வயற்காரன் வார்த்தைகளை முடிக்கவில்லை புழுதியை வாரி இரைத்தபடி ஜீப்புகளும், வேன்களும் வந்து சேர்ந்து விட்டன. வந்த வேகத்தில் வேடிக்கை பார்த்தவர்களை பிடித்த வைத்து விசாரிக்கத்தொடங்கினர். தூரத்தில் நின்றவர்களையும் கையசைத்து கூப்பிடனர். அயாத்து காக்காவை நோக்கி பல கரங்கள் ஆவேசத்துடன் அருகே வாவென அசைந்தன.
புலிக்கோடிட்ட சீருடைகள். காக்காவின் கண்களில் காக்கியின் நிறம் தைத்தது. கால்கள் பரபரக்க வயலை நோக்கி ஓடத்தொடங்கினான்.அவனை விரட்டிச்சென்ற போராளிகள் வயற்பரப்பில் மத்தியில் பிடித்து விட்டனர்.
'ஏனடா ஓடினாய் என்பதற்கும் பயத்தில்தான் ஓடினேன் என்று பதில் சொல்லத்திராணியற்ற அவன் சிறு நெஞ்சு அச்சத்தால் துடித்துத்துடித்து எம்பியது.
அவன் அணிந்திருந்த 'சேர்ட்டி'னால் கரங்களிரண்டையும் முதுகுப்பின்னால் இழுத்து வைத்து கட்டியிருந்தனர்.
தியாகுவின் கழுத்தை வெட்டி துவக்கை பறித்த எதிராளியை பிடித்து விட்ட வெற்றிப்பெருமிதம் அவர்கள் கண்களில் துலங்கியது.அவனை ஜீப்பில் அள்ளிக்கொண்டு போயினர்.
ஆறாம் கட்டை புலிகளின் முகாமிற்கு பெரியம்மா நடை நடையாக அலைந்து திரிந்தா. புஹாரி கையை விரித்து விட்டார். 'நாங்கள் செய்யவில்லை' தமிழ்ச்செல்வன் ஊடகங்களுக்கு காட்டும் புலி முகம் போல் புஹாரியும் சொல்லிவிட்டார். நாங்கள் பிடிக்கவில்லை.
பெரியம்மா முந்தானையை விரித்து வானத்தை நோக்கி அழுத விழியுடன் பார்த்த பார்வை.
புஹாரி இந்திய அமைதி காக்கும் படையினரிடம் சரணடைந்ததும்,ஊருக்குள் மகிழ்ச்சியாக ,சுதந்திரமாக சுற்றியதும்,பின் அரேபிய தீபத்தில் வேலை பார்த்ததும் பெரியம்மாவை கடவுளிடம் பிடிப்பைக்கொடுக்காமல் தள்ளியிருக்கச்செய்தது என்னவோ உண்மைதான்.
முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் பரிதாபகரமாக மடிவதற்கு சில மாதங்களுக்கு முன்...
பெரியம்மா முகத்தில் மகிழச்சிப்பொங்கிப்பூரிக்க ஓடிவந்தா....
என்னவென்றேன் . முகத்தில் இனம் புரியா குதூகலம்.
மேலே கையை விரித்த அவவின் விழிகள் ஆனந்தத்தால் நனைந்திருந்தன.
பெரியம்மாவின் ஈர விழிகளையும் அன்று அவ அழுத அழுகையும் தவிர்க்க முயன்றேன் முடியவில்லை.பதினைந்து வருடங்கள் ஓடி விட்ட பின்பும் அது நெஞ்சில் தீயாக எரிகிறது என்ன ஒரு தீட்சண்யப்பார்வை.
"தம்பி புஹாரிட வூட்டுக்கதவுல குண்டு வச்சி அவன அழிச்சிட்டானுகள்,பொத்தான ஆத்துக்குள்ள உன்ட காக்காவ அடிச்சிக்கொன்று மையத்தயும் என்ட கண்ணுல காட்டாம புதச்சானே அன்டக்கி கேட்ட துஆ இப்ப பலிச்சிரி்ச்சிடா என்ட மகனே!'
அதிர்ச்சியில் நான் உறைந்து நின்றேன்.

Monday 11 July 2011

பின் தொடரும் பிரபலங்களின் நிழல்.

விதை மழை பெருக்கெடுத்து ஓடுவதை கண்டு என்னை அச்சம் வந்து கவ்வுகிறது.
இடறி விழுகிற போது ஒரு கவிஞன் காலடியில் கிடந்து துடிக்கின்ற அளவிற்கு கவிஞர்களின் அட்டகாசம் இலங்கையை ஆட்டிப்படைக்கின்றது.
இளம் கவிஞர்களில் சிலர் விமர்சனங்களை கண்டு அச்சப்படுகின்றதை பார்க்கின்ற போது எதிரே வரும் மரணத்தைக்கண்டு விட்ட அச்சம் அவர்களின் முகத்தில் தெரிகிறது.
அதனால்தான் என்னவோ ஆளாளுக்கு தற்போது முதுகு சொரியும் விமர்சனப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
புதிதாக எழுத வருகின்றவர்களின் வாசிப்பறிவை அளவீடு செய்தல் மிகச்சிரமமாகவுள்ளது.கொழும்பில் நான் வேலைப்பார்த்த காலங்களில் ஒரு கவிதாயினி (இப்படித்தான் தன்னை சொல்லிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவர்.) அவர் எழுதிய கவிதைகளுடன் என்னை சந்திக்க வருவார். அதை புத்தகமாக போட, படாத பாடுபட்டார். என்னிடம் அதற்கு ஒரு உரையும் எழுதும் படி நடையாய் நடந்தார்.
பிரபலத்தின் கையெழுத்து எனும் முத்திரை பெரிய காரியம் அல்லவா?

அவர் கவிதைகளைப்படித்து விட்டு எனக்கு அவர் மேல் பரிதாபமே ஏற்பட்டது. இதற்கு எப்படி நான் உரை எழுதுவது. முதலில் அவர் எழுதியவைகளில் கவிதை எது ? துணுக்குகள் எது? என்பதில் ஆரம்பித்தது வில்லங்கம்.
நான் அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். நீங்கள் ஈழத்தில் அல்லது ஈழத்திற்கு அப்பால் யாருடைய கவிதைகளை அதிகம் விரும்பி வாசிப்பீர்கள் என்றேன்.
அவர் 'பே' என்று விழித்தபடி என்னை பரிதாபமாக பார்த்தார். நான் இன்னும் சரியாக யாரையும் படிக்கவில்லை சேர் என்றா. தினகரன்,மித்திரனில் வரும் கவிதைகளை படிக்கின்றேன் என்றா. அவவின் மேல் கழிவிரக்கம் சுரந்தது.
முருகையன்,சு.வில்வரத்தினம்,சேரன்,ஜெயபாலன், நுஃமான்,சன்முகம், சிவலிங்கம்,போன்ற தலைமுறையினரையும் கேட்டுப்பார்த்தேன். சோலைக்கிளி ,ரஷ்மி,நளீம்,முல்லை முஸ்ரிபா, அம்ரிதா,நபீல், சலனி, அனார். பஹீமா,அம்பை,ஆழியாள்,சிவரமணி இன்னும் எத்தனையோ பெயர்களை கேட்டுப் பார்த்தேன்.


பாழாய் போன என்னிடம் கவிதைகளை காவிக்கொண்டு வந்திருக்கின்ற அசடே குறைந்தது எனது கவிதைகளையாவது படித்தாயா என்றேன்.
முள்ளிவாய்க்காலில் பிரபாகரனின் உயிரற்ற உடலைப்பார்த்து மிரண்டு நின்ற கருணா அம்மான் போல் கவிதாயினியின் முகம் அச்சத்தில் உறையக்கண்டேன். அந்தப்பெயர்களை தான் முதன் முதலில் கேள்விப்படுவதாக வேறு வாக்கு மூலம் தந்தார்.
இலக்கியப் பத்தி எழுத்துக்களில் , மேடைகளில் இப்படி பட்டியல் போட்டு பேய்க்காட்டுவது ஒன்றும் புதிதல்லவே.
அப்படியென்றால் அம்மணீ நீங்கள் நல்ல கவிதைகளை எழுதும் திறனை இழப்பதற்கு இது ஒன்றே போதும் என்றேன்.
கையிலிருந்த கவிதை கட்டுக்களைக்காட்டி இது நல்ல கவிதைகள் இல்லையா சேர்? என்றா. விம்மி வெடிக்கும் போல் இருந்தது அவர் வட்ட விழிகள்.
இதிலே நல்ல கவிதைகள் இருக்கலாம். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.
ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகளாவது தேடிப்படிக்கக்கூடாதா? வெள்ளவத்தையில் இயங்கும் தமிழ் சங்கத்தில் நிறைய புத்தகங்கள் இருக்கும் படியுங்கள் என்றேன்.
( ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு செய்யும் திட்டத்தின் கீழ், கொள்வனவு செய்யப்பட்ட எனது நூல்களும்,என்னைப்போன்ற ஏமாளிகளின் நூல்களும் 10 வருடங்கள் கடந்தும் தமிழ் சங்கத்தில் கடன் சுமையுடன் இருக்கும் தானே?)
என்னை விட்டபாடில்லை. மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டுமாம்.
கவிதாயினியின் கவிதைகளைப்படித்து அவவின் தலைக்கு வலிக்காமல் குட்டியாகி விட்டது.
வாங்கிக்கொண்டு போனவர்தான் . என் அலுவலகப் பக்கமே தலை நீட்டவில்லை.
சில வருடங்களின் பின் கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற புத்தக விழாவில் அம்மணியின் புத்தகமும் வெளியிடப்பட்டது. ஆனால் என்னிடம் அவர் தவமிருந்து பெற்ற குட்டு இல்லாமல்.
அதை உலகக்கவிதைகளின் தரத்திற்கு பதவியுயர்வு கொடுத்து உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்து ஒரு பிரபலம் எழுதிய முன்னுரையுடன் அம்மணியின் புத்தகக்கனவு நனவாகிவிட்டது.
இனி அவர் ஈழத்தில் தவிர்க்க முடியாத கவிதை அரசியாக,இலக்கிய மேடைகளில் கொலுவிருக்கும் மரியாதைக்குரிய இராணியாக முடிசூடிக்கொள்ள முடியும்.
இப்படித்தான் பேச்சு வாக்கில் சகோதரி பாயிசா அலி சொன்னார்.
ஒரு இளம் கவிதாயினி தனது புத்தகத்தை அவவுக்கு அனுப்பிவிட்டு அதைப்பற்றி
நன்றாக எழுதுமாறு நயமாக வேண்டிக் கொண்டாராம்.
நல்லதை மட்டும் சொல்ல வேண்டும் என்று புதிதாக எழுத வரும் சிலர் நினைக்கிறார்கள். அதனால் அவர்களின் இலக்கிய வளர்ச்சி பாதிப்படைவது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போகிறது. ஆற்றுப்படுத்த வேண்டிய மூத்த எழுத்தாளர் சிலர் சகட்டு மேனிக்கு அவர்களை உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்து சூடம் ஏற்றி கொண்டாடுவதால் புதியவர்களும் தங்களை விட்டால் இலக்கியம் வளர்ப்பது யாரென்று மார் தட்டும் அளவிற்கு மாயைகளில் மயங்கிக்கிடக்கின்றனர்.
புத்தகங்களுக்கு முகஸ்துதிக்காக வழங்கப்படும் முன்னுரைகள்,மதிப்புரைகள் ஒர் இளம் எழுத்தாளின் வளர்ச்சிக்கு வெட்டும் பாரிய புதை குழி.
நாஞ்சில் நாடன் இது பற்றி ஆழமான, சுவாரஸ்யமான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கின்றார்.

...........முன்னுரைகளின் நம்பகத்தன்மைகளை விவாதப் பொருளாக்கும் முயற்ச்சி இந்த கட்டுரை. அணிந்துரை, வாழ்த்துரை, நூன்முகம், பின்னுரைகளையும் ஒரு விரிந்த தளத்தில் முன்னுரை என்றே கொள்ளலாம். நண்பர், சீடர், கைத்தடி, எடுபிடி, முகவர், தக்கார், போஷகர் என்ற வரையறைகளுக்கு உட்பட்டு எழுதப்பெறும் முன்னுரை பலவற்றில், முன்னுரையில் மேற்க்கோளாகக் காட்டப்பட்டவை தாண்டி, புத்தகத்தில் எதுவும் இருப்பதில்லை. கவிஞர், விமர்சகர் க.மோகனரங்கன் முன்னுரை எழுதுவது முறைவாசல் தெளிப்பது போன்று ஆகிவிட்டது என்றார் ஒருமுறை.
புகழ்பெற்ற சினிமா பிரமுகர் ஒருவர் முன்னுரைக்கு பதினைந்தாயிரம் வாங்குகிறார் என்றும், அதை முன்பணமாக கொடுத்துவிட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் முன்னுரையை அவர்தான் எழுதுவார் என்பது உத்திரவாதம் இல்லை. அவரது அலுவலகம் அதைச் செய்துவிடும். வேறு பலருக்கு அவர்தம் பெயர்தாங்கி வரும் படைப்புகளையே அலுவலகங்கள் தாம் எழுதுகின்றன என்கிறார்கள். இதில் தெரியவருவது என்னவெனில் அவருக்கு இணையாக எழுத வல்லவர் கனபேர் இருக்கின்றார்கள் என்பதுதான். என்றாலும் பிரபலத்தின் கையெழுத்து எனும் முத்திரை பெரிய காரியம் அல்லவா
தொடர்ந்து படிக்க அவர் இணையத்திற்குள் நுழைந்து பாருங்கள்.

http://nanjilnadan.wordpress.com/

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...