Sunday 15 January 2012

சிறுகதை - மாயநதி



            இன்றைய குத்பாவிலும் நரகத்தின் ஏழு தலைப்பாம்புகளும் காட்டுவிரியன்களும்தான் பள்ளி முழுக்க ஊர்ந்து திரிந்தன.சென்ற மாதமும் அதற்கு முந்திய மாதத்திற்கு முந்திய வாரமும் சீழும், புண்னும் கள்ளிச்செடியும் கொதிக்கும் எண்ணெய்க்கொப்பரையும் மாறி மாறி வந்து வாழ்வை பீதிக்குள் அமிழ்த்தி விட்டுச்சென்று விட்டதை நீங்கள் அறிவீர்களா?

மூன்று நாட்களாக கால் மேல் போட்டு ஆரத்தழுவிய அவளைக்கூட தொட முடியாத அளவிற்கு உங்கள் நரக வர்ணனை உணர்ச்சிகளை மழுங்கடித்து விட்டதே! கனிந்த இரும்பின் மேல் கொல்லன் தெளித்த நீரின் சத்தத்துடன் எல்லாமே அடங்கிவிட்டது ஹசரத்!

 ஏன் ஹசரத் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சுவர்க்கத்தைப் படைக்கவே இல்லையா? பாலாறும் தேனாறும் மதுவாறும்  கன்னி கழியா பருவமங்கையரும் நறுமணமும் மலர்த்தோட்டங்களும் இன்னும் பல இன்ப லாகிரி நிறைந்த சுவர்க்கத்தைப் பற்றி எங்களுக்கு ஓதவே மாட்டீர்களா? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?

இங்கிருந்து வத்திகானுக்கு காவித்துணியைக்கொண்டு போய் போர்த்திய ‘அகமக்கு’வின் தில்லுமுல்லுகளைப்பற்றியெல்லாம் நீங்கள் வாய் திறக்கவே மாட்டீர்களா? நான் இதையெல்லாம் சொல்வது உங்களை எதிர்த்து நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்பதற்கல்ல.

எனக்கு 100க்கு 100 அல்லாஹ் மார்க் போடுவான் என்ற பேராசை இல்லாவிட்டாலும் என்னை பெயிலாக்கமாட்டான் என்ற நம்பிக்கை நிறையவே உண்டு ஹசரத். அதற்கு உங்களிடம் சான்றிதழ் பெறத்தேவையில்லை. 

முஹம்மது நபி சொன்னதைப்போல என் மனைவியிடம் அந்தச்சான்றிதழை பெற்றுவிடுவேன். ஏனெனில் அவளுக்கு நான் சக்களத்தியுடன்  போரிடும் மனச்சுமையை எப்போதும் தரமாட்டேன் என்ற ‘பைஅத்’தின்படி வாழ்ந்து வருபவன்.

என்றாலும் என்ன செய்ய ஹசரத் இந்த துன்யா பாடாத பாடு படுத்துகிறதே? நான் அவளை சந்திக்காமல் இருந்திருக்கலாம். அவள் ஒரு மாய நதி, மூஸா நபியின் கைத்தடி போல் மந்திரங்களால் ஜெயிக்க முடியா ஜீவ ரசம். 

பிர்அவ்னின் சந்நிதியில் கயிற்றுப்பாம்புகளைப்பிடித்து அசர வைத்த தீர்க்கதரிசியைப்போல் நானும் லேசாகத்தான் அவளை எடை போட்டேன்.  

என்னவாயிற்று முன்னொரு போதும் இல்லாத அவசங்களை என்னில் இழுத்துவிட்டுப்போனாள். அவள் மூட்டிய விரகத்தீயில் எரிந்து கருகியவர்களில் நானும் ஆகாமல் பாதுகாத்தது உங்கள் துஆ ஒன்றைத்தவிர வேறொன்றுமில்லை ஹசரத்.

நிறையப்பேர் அவள் சுக்கிலக்கயிற்றை விழுங்கி மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவதிப்பட்டதையும், கவிதைகள் எழுதி பித்துப்பிடித்தலைந்ததையும் உங்களுக்குச்சொல்லாமல் வேறு யாருக்கு சொல்ல முடியும் ஹசரத். இப்படித்தான் என்னிடமும் சவால் விட்டிருந்தாள்.
  
‘டேய் எனக்கு நீ வேணும்டா என்னயக் கலியாணம் முடிக்காட்டி நான் செத்திடுவன்டா’ என்றாள்.

‘அடியேய் பைத்தியக்காரி நான் மூனு பிள்ளையின்ற தந்தை, தவிர என் மனைவி எனக்கு எந்தக்குறையும் வைக்கவில்லை உனக்கு வயசுக்கோளாறு வடிவா யோசி’என்றேன். ‘இல்லடா நல்லா யேசித்துப்போட்டுதான் சொல்றன்’.

அவளின் ஆசையை என்னால் அடக்கமுடியவில்லை. மைதானத்தின் மையப்புள்ளியில் நிற்கும் காளையாக அவளும், அதன் முன் மல்லுக்கட்டி நிற்கும் வீரனாக நானும் .. கடைசியில் ‘போடி போக்கிரி’ என்று விட்டு வந்து விட்டேன்.

என் முதுகுக்குப்பின் அவள் குரல் விம்பி வெடித்தது.        ‘எனக்கிட்ட வாரவனெல்லாம் என்ர காலடியில் விழுந்து கிடக்கானுகள். நீ மட்டும் பொண்டாட்டிக்கு விசுவாசமா இருந்தா சொர்க்கமா கிடைக்கப்போகுது.? ’

‘உன்ட காலடியில விழுந்து கிடக்கிறவனுகளெல்லாம் சாக்கடைப்பன்றிக்குட்டிகள்.

பதிலுக்கு நானும் கத்திவிட்டு வந்து விட்டேன். ஹசரத் நீங்களே சொல்லுங்கள்!

எழுதுறவனுகளெல்லாம் இப்படி வாழனும்டு சட்டமா போட்டிரிக்கி. சமகால இலக்கியம், காத்திரமான படைப்பு, கஸ்மாலம் என்றெல்லாம் பேசிக்கொண்டு பிறர் மனையில் கன்னம் வைக்கும் சிருஷ்டிகளுக்கு குர்ஆனில் என்ன தண்டனை கூறப்பட்டுள்ளது என்பதை அடுத்த குத்பாவிலாவது ஓதுங்கள். 

ஏனெனில் இவர்கள் முஸ்லிம் தேசம் பற்றிய அதீத புனைவுகளில் மயங்கிக்கிடக்கும் இலக்கிய முனிகள்..


உப குறிப்பு 1

கால நதி தன்பாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. மாய நதிகளின் மந்திரங்கள் அதை அசைக்க முடியாமற்போயிற்று. போலியும், பகட்டும் ஏமாற்று வித்தைகளும் அறிந்த இரட்டை இதயக்காரிகளின் சூழ்ச்சிகளை நதி அறியும். அதெப்படி என்னிடமே அவள் திருமணச்செய்தி சொல்வது சாத்தியமானது ஹசரத்?

ஒரு மஞ்சல் நிற மாலைப்பொழுதையும் மையிருட்டின் நெருக்கத்தையும் தவிர்த்து விட்டு எதுவும் நடவாத ஒருத்தியைப்போல் அந்நியம் காட்ட முடிகிறது? நான் வியப்பின் முனைக்கே ஏறிவிட்டேன் தெரியுமா?

பரம அதிர்ச்சி! உடலை கூறு போட்ட ஒருத்தி தன் புருஷனுக்கு விசுவாசமாக இருக்கப்போகிறேன் என்பது உங்கள் பார்வவையில் ‘ஹிதாயத்’ அல்லவா?
 அதுதான் என் விருப்பமும். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது அவளுக்கு அடித்த இந்த யோகம் ‘ஹிதாயத்து’தான். 

நேற்று வரை பலரை பித்துப்பிடிக்க வைத்த ஒருத்திக்கு வேறொரு ‘கராமத்து’ம் நேர வாய்ப்பில்லை ஹசரத். அவளை எல்லாம் வல்ல ரப்பு காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை எனக்கு அதீதமாகவே உண்டு .ஏனெனில் என்னையும் அவன் காப்பாற்றினான்.

தவிர முன்பு அவளின் வாழ்வெனும் சிறு மலரை கசக்கி எறிந்து அவமானப்படுத்தியனின் கயமைகளை என்னிடமும் இன்னும் சிலரிடமுமம் சொல்லிச்சொல்லி அழுதவள். 

அவனால்தான் என் வாழ்வையே நரகமானது என்றவள் அவனின் அந்தரங்க உறுப்பின் மீது காட்டுவிரியன்கள் கொத்தக்கடவ! விஷம் படர்ந்த நரக ரசத்தை பருகிச்சாக! அந்திம காலத்தில் விஷர் நாய் கடித்து நாயைப்போலவே குறைத்துச்சாக என்றெல்லாம் அவனைப்பற்றி என்னிடம் பகைமை பராட்டியவள்.
 
இனி அவனின் உறவும் நினைவும் வேண்டாம் என்று உதறித்தள்ளியவள் திடீரென மீளவும் தீக்குள் விரலை விட்டு குளிர்ச்சி என்கிறாள் இது  என்ன குணம் ஹசரத்?

 வந்த விஷயம் என்னவென்றால்  அப்பாவிப்பெண்களை? விபச்சார வழக்குத்தொடுத்து மறுமையின் மன்றத்தில் நிறுத்தி விடாதீர்கள். அவர்களும் வாழ்ந்து பார்க்க ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் ஹசரத். நடு நிசியில் நீங்கள் நடாத்தும் தஹஜ்ஜத்துக்களில் இதையும் நினைவில் வைத்து மன்றாடுங்கள்.

உப குறிப்பு -2

தம்பி உனக்கு வேல நிச்சயம்.என் வெற்றிக்கு உழைத்த உன்னை கைவிடமாட்டன், ‘ஸ்கூல் கார்டர்’ வருகுது போட்டுத்தாரன்.

தம்பி இதை நம்பி பெரிய இடத்தில்  சம்மதம் வைக்க சிக்னல் காட்டி விட்டதில் உம்மாவுக்கு தலைகால் புரியா மகிழச்சி. தேதி மட்டும் குறிக்கவில்லை.

மந்திரியின் கூஜா ஒரு வசதியான குடும்பத்துப்பையனுக்கு வந்த கார்டரை விற்றுவிட்டார். தம்பி ஏமாற்றத்துடன் அவர் வீட்டிற்கு முன்னால் நின்று திட்டினான். பரதேசி நாய்களே! நீங்க ஏறி வர நாங்க ஏணியா இருந்தம். மேல வந்தா எங்கள எட்டி உதைக்கிறிங்களா? காச வாங்கிட்டு வேலய விற்ற நன்றி கெட்ட கல்பு,ஹராங்குட்டி நீயும் உன்ட குடும்பமும் விபத்தில் சாகனும்! 

அடுத்த முறை படு தோல்வி  அடையனும்! (குண்டு வெடித்துச்சாக சாபமிட தம்பி நினைத்து அதை முளையிலேயே கிள்ளி எறிந்தான். பிரபாகரன் செத்தபின் குண்டு வெடிக்காது என்ற நம்பிக்கை) ஆத்திரம் தீர கத்தி விட்டு தம்பி அரசியலை தூக்கி உப்பாற்றில் கரைத்து விட்டு வந்தான்.

உப குறிப்பு -3

‘நான் புள்ள குட்டிக்காரன் சேர் நூறு ரூவா தாரன் உடுங்க சேர். கோர்ட்டுக்கு கேஸ் எழுதாதீங்கசேர்’. ஆட்டோக்காரனின் இறைஞ்சுதல். அல்லாஹ்விடமும்  இப்படி  பணிந்திருக்கமாட்டான்.

முகத்தை மட்டுமல்ல மனத்தையும் கல்லாக்கி நின்றிருந்தான் அவன்.செய்வதறியாது ஐந்நூறு ரூபா நோட்டை பைலுக்குள் வைத்து நீட்டுகிறான். ‘ட்ரபிக் பொலிஸ்’ அதை மடித்து பேண்டுக்குள் திணித்தான். லைசன் பைலுக்குள் வருகிறது. 
 
பெரும்பாலான நாட்களில் பெற்றோல் போக ஒரு நாள் ஹயர். நெஞ்சு பொறுக்குதில்லையே! கள்ள ஹராங்குட்டிகள். பிரபாகரா இவர்களை எல்லாம் குண்டு வைத்து சின்னாபின்னப்படுத்தாமல் போயிட்டியே ராசா !

ஓம் ஹசரத் இதற்கெல்லாம் அரசியல் பலம் வேண்டும். இருந்தால் அக்கிரமம் செய்து பொலிசில் பிடிபட்டால் லேசாக கழன்று விடலாம். எனக்கும் அரசியலுக்கு வர கொள்ளை ஆசை (தோதான தொழில்) நீங்கள் வேறு  இவற்றையெல்லாம் ஹராம் ஹராம் என்று கூச்சல் போட்டு அச்சமூட்டுகின்றீர்கள். இல்லாட்டி ஏக்கர் கணக்கில் காணியை பிடிக்கத் தெரியாமலா இருக்கன்.

சும்மா கிடந்த சங்கு வாயெனுக்கெல்லாம் நீலக்கடலில் கப்பல் ஓடுது.சிங்கப்பூரிலும், இந்தியாவிலும் பிஸ்னஸ் நடக்குது. அவன்ட பிள்ளைகளின்ற மனைவியின்ற பெயரில் சுவிஸ் பேங்கில் கணக்கு ரண் ஆகுது.
 
நாங்கள் செய்தா மட்டும் அது பாவம்.அவர்கள் செய்தால் அது புண்ணியம். ஒரு விஷயத்தையும் உருப்படியாகச் செய்ய முடியாமல் நீங்கள் படுத்துகிற பாடு ஹசரத் . அல்லாஹ் மன்னித்தாலும் நீங்கள் குறுக்கே விழுந்து தடுப்பீர்கள் போல் இருக்கிறது உங்கள் உபந்நியாசம்.

உப குறிப்பு -4

தமிழ் மொழியை வளர்ப்பதற்கென்று முழு மூச்சாக இயங்கும் வானொலி ஒன்றின் அலைவரியை டியூன் பண்ணுகிறேன்.உங்கள் இதய வானொலியின் அடுத்த புரோகராம் சொல் புதிது பொருள் புதிது நிகழ்ச்சி. 

கல் தோன்றி மண் தோன்றாக்காலத்துக்கு முன் தோன்றிய மூத்த தமிழ் மொழியை வளர்க்கவும், உங்கள் வேகத்தையும் விவேகத்தையும் பரீட்சிக்கவும் இதோ ஒரு சொல் விளையாட்டு. 

நேயர்களே! நாங்க ஒரு சொல்லைச் சொல்லுவம், நீங்க அதற்கு எதிர்சொல் சொல்லனும்,உதாரணமா நாங்க காதல்னா நீங்க கீதல்னு சொல்லனும். நாங்க கீதல்னு சொன்னாக்கா நீங்க காதல்னு சொல்லனும் இடைவெளி வராம பட்டுன்னு சொல்லனும் ஒகேவா போட்டிக்குப்போவமா..

நீண்ட நேரம் ஒரு நேயர் அழைப்பில் இருக்கிறார்.
ஹலோ வணக்கம்
வணக்கம் அக்கா!
 யாரம்மா? 
நான் அம்புத்தளை மேரி.

மேரி நீங்க செஞ்சிக்கிட்டு இரிக்கிங்க?

‘அக்கா இப்ப நான் தமிழ் வானொலியின்ற ரசிகையா இருந்து,அழகான உங்களிடம் பேசிக்கிட்டு இருக்கன்

‘யப்பா கடி தாங்கல்லடா’ ரொம்ப தேங்க்ஸ்ம்மா’

 ‘எங்கள புள்ளரிக்க வச்சிட்டிங்க மேரி எப்படியிருக்கிங்க? அம்புத்தளையில தேயிலை பூக்குதா?’

 ‘ஓம் அக்கா நான் ரொம்ப கஷ்டப்பட்டு பல நாள் ரை பண்ணினன்   இப்பதான் லைன் கிடச்சிது. ஏனக்கு ரொம்ப சந்தோஷம்…’

‘ரொம்ப தேங்கஸ் மேரி.’

‘அக்கா எங்கட அம்மாவும் பேசனுமாம்.’

ஹலோ அம்மா வணக்கம்!

எப்புடி இரிக்கிங்கம்மா? மேரி உங்களுக்கு எத்தினையாவது பிள்ள? ஆள் வீட்டுல எப்புடி குழப்பம்தானே?

ஓம்

மகள் சரியான குழப்பம்.

மேரி பார்த்திங்களா நான் உங்க ஜாதகத்தையே கண்டுபிடிச்சிட்டன். அறிவிப்பாளினியின் சிரிப்பு தமிழ் வானொலியின் அலை வரிசையில் கலந்து வீடு முழுக்க கசிகிறது. 
 
அம்மாவும் மேரியும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.மூத்த தமிழும் சிரிக்கிறது.


சரி மேரி போட்டிக்குப்போலாமா? நாங்க ரெடி நீங்க ?
ரெடி அக்கா!

நாங்க யானன்டு சொன்னா நீங்க பூன சொல்லனும் நாங்க பூன சொன்னா நீங்க யான சொல்லனும். ஓகேவா

ஓகே அக்கா

யான… பூன..
யான… பூன..
பூன.. யான
யான… பூன..
பூன.. யான
பூன.. பூன..

‘ஓ மைகார்ட்’ மேரியின் கதறலில் அலை வரிசை நடுங்குகின்றது. ஆர்வத்துடன் சொல் விளையாட்டில் பங்குபற்றிய மேரிக்கு வாழ்த்துக்கள். அடுத்த நேயர் நீண்ட நேரமாக காத்திருக்கின்றார். ஹலோ… வணக்கம் யாரது?..

ஹசரத் இப்படி வசந்தமான தமிழை வளர்க்கப் பேசிய ஒரு மௌலவியின் மனைவி வீட்டில் சும்மா இருக்கப்பிடிக்காமல் வானொலிக்காரர்களின் மாய வலையில் சிக்கி இரவோடு இரவாக தமிழ் வளர்க்க ஓடிவிட்டாள்.

மௌலவி ஊருக்கு உபதேசம் செய்ய பெட்டி படுக்கையோடு புறப்பட்டு சரியாக மூன்றாவது நாள் நள்ளிரவில் வந்து நின்ற வெள்ளை வேனில் அவள் ஏறிப்போனதை அரிசி ஆலை காவல் காரன்தான் முதலில்கண்டான்.

பிறகு அந்த தீ ஊர் முழுக்க பரவி அமோசன் காட்டில் பரவிய கொடுந்தீயாக  கொழுந்து விட்டெரிந்ததை அணைக்கவே முடியாமல் போனது.

நள்ளிரவில் அறிவிப்பாளர்களுடன் கொஞ்சி மகிழும் இன்னும் சில குமரிகளும் களட்டிகளும் (திருமணம் முடித்தவளுகளுக்கு நான் வைத்த செல்லப்பெயர்) மிக விரைவில் ஜம் பண்ணவிருப்பதாக இரண்டு நாட்களின் பின் பதுளையில் பிடிபட்ட மௌலவியின் மனைவியான ஏக பத்தினி திருவாய் மலர்ந்தருளியது வேறு விஷயம்

 அவள் வயிற்றிலும் தங்கமான தமிழ் வளர்ந்திருக்கும் இல்லையா ஹசரத்? அவன் மானமுள்ள மௌலவி ஓடிப்போன இரவில் தலாக் சொல்லி விடுதலைப்பத்திரம் வழங்கிவிட்டான்.

அவள் வாழ்வோவெனில் வஸந்தமும் இல்லை, தென்றலும் இல்லை சூரியனாய் போய் விட்டது. இப்படித்தான் எனக்குத்தெரிந்த பலர் பெண்களை வசியப்படுத்த செல்போனிலும் வித்தைகள் பல செய்து பிடிபட்டு மாண்டு போயினர்.சுங்கான் கருவாடு திமிங்கிலம் ஆக முடியுமா ஹசரத் ?

உப குறிப்பு -5

சைலாவின் பிள்ளை காணாமல் போன கதை

சைலா வருஷத்திற்கு ஒரு பிள்ளை என்ற விகிதத்தில் பெற்றுப்போடுகிறாள். பூனை குட்டி போடுவது போல்.. தெருவோர குழாய்க்கடியில் அவள் பிரசவம் நிகழ்வதாக பேசிக்கொண்டார்கள். இந்தத்தடைவ அரசினர் வைத்தியசாலையில் நிகழ்ந்தது அவள் சுகப்பிரசவம்.

 ஓல்லியான தேகம். வெற்றிலை மென்று சிவப்பேறிய அதரங்கள். கூந்தலை உயர்த்திக்கட்டி கொண்டை போட்டிருப்பாள். கொசுவம் வைத்து சேலையை நேர்த்தியாக உடுத்தியிருப்பாள். சைலாவின் கால் படாத எந்தத்தெருவும் இல்லை, கடையுமில்லை.
 
குறைந்தது பத்து ரூபா. அதற்கு குறைய கொடுத்தால் வாங்கமாட்டாள். அவளிடமும் சில தர்ம குணங்களை இறைவன் வழங்கியிருந்தான் .முக்கியமாக நள்ளிரவில் தெருவில் கிடக்கும் அவளை யாராவது தழுவினாள் பாவம் என்று விட்டுக்கொடுக்கும் குணம்.

 என் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கடை வீதிக்கு சென்றிருந்தேன். சைலா அங்கு வருவாள் என்று யாருக்குத்தெரியும்? வந்தவள்  கொசுவத்தை பிரித்து பத்து ரூபா நோட்டை எடுத்து சொக்லட் வாங்கி பிள்ளைகளுக்கு கொடுத்தாள்.
 
ஆச்சரியத்துடன் அவளைப்பார்த்தபடி நின்றிருந்தேன். நிறைமாதமாய் சென்ற மாதம் கண்டது நினைவுக்கு வந்தது. எங்க சைலா உன்ற பிள்ளை? என்றேன். வெடித்துப்பறந்த மத்தாப்பூவாய் சிரித்து ஓய்ந்தவள் அதைக்காணல்ல என்றாள் சர்வசாதரணமாய்.

பிள்ளைக்கு சொந்தக்காரன் தூக்கிட்டுப்போயிருப்பான் என்றார் கடை முதழாளி.அதற்கும் அவளிடமிருந்து சிரிப்பு வெடித்துச்சிதறியது.அவர் கொடுத்த பத்து ரூபாய் நோட்டை வாங்கி கொசுவத்தின் முடிந்தபடி படியிறங்கிச் செல்லும் அவளை வியப்புடன் பார்த்தபடி நின்றேன்.

இவளுக்கும் அந்த மாய நதியானவளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு ஹசரத்.உங்கள் புருவங்கள் உயர்வது புரிகிறது. இவள் காசுக்குத்தழுவ தவமிருப்பவள்.அவள் பசித்தபோதெல்லாம் தழுவ உடல் விரிப்பவள்.

அவளின் பிள்ளை காணாமல் போனது ஆச்சரியமில்லை ஹசரத். அது குடிக்கும் முலைப்பாலை அவள் என்ன செய்கிறாள் என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். 
 
ஏனெனில் அது தழும்பி கசிந்து ஈரலித்துக் கிடந்ததை நான் எப்போதும் கண்டேனில்லை என்பது சைலாவின் அயலானான மம்மனிவாவின் சத்திய வாக்கு. டேய் மம்மனிவா நீ ஆரோக்கியமாக இருப்பதன் அர்த்தம் புரியவே இல்லடா சண்டாளா.

உங்களின் தீட்சண்யப்பார்வையில் இவைகள் பஞ்சமா பாதகங்களாக தெரிவதே இல்லையா ஹசரத் ? வானத்திற்கு மேலேயும் பூமிக்கு கீழேயும் உள்ள வாழ்வைப்பற்றியே குத்பா ஓதுகிறீர்கள். இடையில் உள்ள இடைவெளிக்குள் எத்துனை அரிதாரம், எத்துனை பகட்டு போலி?


உப குறிப்பு -6

ரிஸ்னி சாமியின் கள்ளக்காதல்

ரிஸ்னி ஆலிம் கடத்திச்செல்லப்பட்ட செய்தி ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை பரவியது. புலிகளும் இல்லை, வெள்ளை வானும் இல்லை,சி.ஐடி.யுமில்லை.
 
சமாதானம் பூத்துக்குலுங்கும் புண்ணிய பூமியில் ரிஸ்னி கடத்தப்பட்டது ஊர் மக்களை அதிர்ச்சியின் நுணிக்கே தூக்கிச்சென்று விட்டது. அவரைப்பற்றியும் அவரின் காம லீலைகள் பற்றியும் அரசல்புரசலாக கதைகள் வேறு இறக்கை முளைத்து பறக்கத்தொடங்கிய காலம்.
 
அதிகாலை வணக்கத்திற்கென பள்ளிவாயல் நோக்கி சென்றவரின் துவிச்சக்கர வண்டி முற்றத்தில் கிடந்தது. ஒற்றைப்பாதணியும் அதனருகே அநாதரவாக கிடந்ததாக ரிஸ்னி ஆலிமின் மனைவி புலம்பிக்கொண்டிருந்தாள்.

கடத்தியது யார்? ஏன் கடத்தினார்கள் என்பதெல்லாம் அவிழ்க்க முடியாப் புதிர்களாக ஊர் மனதை அரிக்கத்தொடங்கியது.

‘அது அவரு முன்ன ஒரு சிங்களக்குட்டியோட பழக்கமாம்.அவள்ர ஆக்கள்தான் பழிவாங்கண்டு கடத்தினயாம்’ சந்தியில் ‘டேஸ்ட் கடை’ வைத்திருக்கும் அனிவா கிசுகிசுத்தான்.

‘சே என்ன அனிவா ஒரு ஆலிம பத்தி கேவலமா கதைக்காய். சிங்களக்குட்டிய அவரு வச்சிருந்தாரா? நம்ப முடியலியே! அவருக்கு சிங்களமும் பேச வராதடா தம்பி, உசன் மறுத்துப்பார்த்தார்.

அனிவா விடுகிறபாடில்லை. ‘உசன் காக்கா நானும் அத நம்பலத்தான். அங்க வேல செஞ்ச எங்கட நானாட மகன்தான் விசயத்த உண்மைப்படுத்தினாரு. பள்ளிக்கு முன்னால ஒரு காமண்ட்ஸ். அதுல வேல செஞ்ச குட்டிய அவரு தூக்கிட்டுப்போய் கண்டியில குடும்பம் நடத்தினயாம்.
 
அது மஹல்லாவாசிகளால பிடிபட்டு இரண்டு பேருக்கும் நிகாஹ் செஞ்சி வச்சயாம், பிறகு…? அனிவா முடிப்பதற்குள் உசன் ஆவலில் உந்தினார். 
 
பிறகென்ன.. என்றவர் கடைப்பக்கம் திரும்பினார். இரண்டு இளவல்கள் பெஞ்சில் உட்கார்ந்திருந்தனர். என்னாம்பி என்றார். ரெண்டு டேஸ்ட் தாங்க காக்கா.நுரையீரலும் வெட்டிப்போடுங்க…

அனிவா இரண்டு பிளாஸ்ரிக் தட்டில் லஞ்ச் சீட்டை விரித்து அவித்த கிழங்குகளை நசித்து உப்பும் மிளகுத்தூளும் தூவினார். பின் பாபத் ஆணத்தை ஊற்றி நுரைஈரல் துண்டுகளை  நறுக்கிப்போட்டார். தேசிக்காய்சாற்றை மேலே பிழிந்து இரு பிளேட்டையும் மேசையில் வைத்து விட்டு உசன் காக்காவிடம் வந்தார்.

ம் ..பிறகு கதய முடியன் அனிவா, என்று அவஸ்தைப்பட்டார் உசன் காக்கா.. கிளைமாக்ஸ் கண்டு விடும் ஆவல் முகத்தில் ததும்பியது.

என்னத்துல காக்கா நான்  கதய உட்ட? அனிவா தடுமாறிய போது, உசன் அடிகளை எடுத்து கையில் கொடுத்தார்.ரெண்டு பேருக்கும் கலியாணம் முடிஞ்ச கதயில வுட்டாய், ‘ஓம் காக்கா அப்ப இவரு வெளிநாட்டுக்கு போறன் எண்டு போட்டு எயாபோட்டுல பின் வாசல் வழியா ஓடி ஊருக்கு வந்ததிட்டாரு வந்துதான் இப்ப இஞ்ச கலியாணம் முடிச்சயாம்..

 அது சரி அனிவா சாமி மாருக்கெல்லாம் கள்ளக்காதல் காதலி இருக்கிறதெல்லாம் சகஜம்தானே! நம்மட சாமியும் வச்சிட்டுப்போகட்டுமே.

அதெப்படி காக்கா ஊருக்கு உபதேசம் பண்ணுற ஆலிமு இப்படி செய்யிறத பார்த்தா நெஞ்சு பொறுக்குதில்லையே!.தண்ணிக்குள்ளாள நெருப்புக்கொண்டு போற மாதிரி,இவரு குர்ஆனுக்குள்ளாள காதல் கடிதமும் கொண்டு போயிருக்கிறார். ‘இவர கடத்துர அளவுக்கு நம்மட ஊர்ல பேயன் ஆரு இருக்கானுகள் அனிவா?’

இவரக்கடத்தி தும்புமுட்டாயி கூட வாங்கேலாதுண்டு தெரியும் காக்கா, அவரே போய் எங்கயாச்சும் ஒளிச்சிருப்பாரு. சிங்களவனுகள் சும்மா வுடுவானுகளா? சாமி நித்தியானந்தா உம்மை விஞ்சவும் எங்களுரில் விண்ணர் உண்டு தெரிஞ்சிக்கிடும்.

நீங்களே சொல்லுங்கள் ஹசரத்! இந்த முல்லாக்களுக்கெல்லாம் அல்லாஹ்விடத்தில் தண்டனை என்ன விதிவிலக்கா ? நீங்களும் கஞ்சா வாங்க சகீலாவின் வீட்டிற்குப்போவதாக அரசல் புரசலாக கேள்விப்பட்டன். 
 
பரவாயில்லை அதுக்கும் உங்களிடம் ‘பத்வா’ இருக்கும்தானே! கஞ்சாவும் பெண்களும் எங்களுக்கு ஹராம் என்று அச்சுறுத்தும் உங்களுக்கு சுவர்க்கமா நரகமா ஹசரத்?
   
2010.01.29



அறபுச்சொல் விளக்கம்

ஆலிம்,ஹசரத்,மௌலவி: இஸ்லாமிய மார்க்க போதகர்
அல்லாஹ்,ரப்பு:  கடவுள்
அகமக்கு :    முட்டாள்
பைஅத்:       உடன்படிக்கை
மூஸா நபி :   (மோசே) தீர்க்கதரிசி
பிர்அவ்ன் :    மோசே நபி காலத்து மன்னன்
துஆ:        பிரார்த்தனை
ஹிதாயத் :    நேர்வழி
கராமத் :      அற்புதம்
தஹஜ்ஜத் :    நடுநிசித்தொழுகை
ஹராங்குட்டி :  திருமண உறவுக்குப்புறம்பாக பிறந்தவர்கள்
ஹராம் :      விலக்கப்பட்டது
பத்வா :       மார்க்கத்தீர்ப்பு
நிகாஹ்:        திருமணம்
குர்ஆன்:        புனித வேத நூல்
குத்பா:        வெள்ளிக்கிழமை பிரசங்கம்.
மஹல்லா வாசி: ஊர் வாசிகள்

பிரசுரம் ஜுன் 2010   ‘உயிர் நிழல்’ பிரான்ஸ்

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...