Tuesday 6 March 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


 தொடர் - 09

 34அடியாழமுள்ள கிணற்றில் கப்பியில் நீர் அள்ளுவதும்,சைக்கிளில் இரு மருங்கிலும் குடத்தைக்கட்டிக்கொண்டு ஆற்றில் நீர் மொண்டு தளும்பாமல் இலைகளை உடைத்து சொருகிக் கொண்டு ஒற்றையடிப் பாதையில் சைக்கிள்  உழத்தி வருவதும்  ஒரு சவால். அதை ஒவ்வொரு வார விடுமுறையிலும் நான்தான் செய்தேன்.

நான் முதலில் சைக்கிள் மிதிக்கப் பழகிய அந்த நாள் ...

சாச்சாவின் சைக்கிளில் புளிமரத்தடி மேட்டிலிருந்து குளத்திற்கு செல்லும் பள்ளத்தில்தான் முதல் சவாரி. சாச்சா சைக்கிளை பிடித்துக்கொண்டு கூடவே வருவார்.பாருக்கு கீழ் கால்களை தெத்தித்தெத்தி உழத்திக்கொண்டு போவேன்.சாச்சா பிடித்துத்தானே வருகிறார் என்ற தெம்பு.

சற்று ஊன்றி மிதித்து விட்டேன் .பள்ளத்தில் கிறவல் வீதியில் சைக்கிள் சரிந்து விழ கெக்கலித்துச் சிரித்தபடி சாச்சா ஓடி வந்தார். அவர் கண நேரம் கைகையை விட்டு விட்டு என்னை சுயமாக ஓட விட்ட செய்தி அப்போதுதான் உறைத்தது. வலது காலில் சைக்கிள் பழகி வாங்கி அந்த விருது இன்னும் தழும்பாக இருக்கிறது. 
இலக்கிய விருதுகளை விட கால் தழும்பை தடவிப்பார்க்கையில் நெஞ்சு நிரம்பித்ததும்பும் நினைவுகளே நித்ய விருதுகளாக என்னை  உசுப்பி விடுகின்றன.

(அண்மையில் மோட்டார் சைக்களில் கிறவல் வீதியில் நாயொன்றுடன் மோதிப்பட்டு விழுந்த போதும் அந்த நினைவுகள் சட்டென நெஞ்சில் விழுந்து நினைவுகளைக் கோதிவிட்டன)

மோட்டார் சைக்கிள் பழகியது விழுந்து விடாமல் என்றால் அதில் ஒரு மர்மம் இருக்கின்றது. எனது தோழரின் வாப்பா அலியார் ஹாஜியாரிடம் ஒரு  ‘செலி’பைசிக்கிள் இருந்தது.நாங்கள் அதை செல்லமாக தும்பி என்போம். அவர் சனிக்கிழமை வயலுக்குப்போகவென மூட்டைமுடிச்சுக்களுடன் வந்து விடுவார்.

ஆற்றைக்கடந்து பைசிக்கிள்கள் செல்ல முடியாது என்பதால் வியாழக்கிழமை வரை எங்கள் கடையில் விதம்விதமான சைக்கிள்கள் குவிந்து கிடக்கும்.

அலியார் போடியாரிடம் ஒரு நாள் கேட்டுவிட்டேன்.

'நான் உங்கட சைக்கிள எடுத்துக்கிட்டு ஊருக்கு (ஓட்டமாவடி குறுக்குப்பாதை எட்டு மைல்,பிரதான வீதி 12 மைல்) போகவா? '

என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு கேலியாகக் கேட்டார்.

'ஓடுவியளா'?

'ஓம் 'என்றேன்

சத்தியமாக கண்களாலே தவிர கைகளால் ஓடிப்பார்த்ததில்லை. அந்த தைரியத்தில் ஓம் வந்து விட்டது. முதலில் வாப்பாவுக்குத் தெரியாமல் தும்பியைக் கிளப்ப வேண்டும். எப்படியோ கிளப்பியாகி விட்டது. முதலில் காவத்தமுனையில் இருக்கும் மூத்தம்மாவின் வீட்டிற்குச்செல்வது. குறுக்கு வீதியில் வாகனங்களும் மனிதர்களும் அவ்வளவாக புழக்கமில்லை.

கண் கண்டதை கை செய்யும் என்பார்களே எப்படியோ வாப்பா வயலுக்கச்சென்று வருவதற்கிடையில் சென்று வந்து விட்டேன்.லைசன், இன்சுரன்ஸ் தலைக்கவசம் எல்லாம் தெரியாத காலம்.புலிகளின் ஆட்சி உச்சத்தில் இருந்த காலம்.

சில நாட்களின் பின் பிரதான வீதியால் தும்பியை எடுத்துக்கொண்டு செல்வது என்று தீர்மானித்தேன்.ஆறாங்கட்டையில் உள்ள புலிகளின் பிரதான கேம்பில் நிறுத்தினார்கள். 

‘சின்னப்பொடியன்கள் சைக்கிள் ஓட்டப்படாது சைக்கிள கொண்டு போய் உள்ளுக்க வை’  என்றான் ஒருவன்.

எனக்கு கைகால்கள் உதறத்தொடங்கின. வாப்பாவுக்குத் தெரிந்தால் பாடு சம்பல்தான்.

கடைப்பக்கம் வரும் சின்னவன் தூக்க முடியாத பாரத்துடன் ஏ.கே. 47 டன் நின்றிருந்தான். என்னைக் கண்டதும் என்னவென்றான். விடயத்தைச்சொன்னேன்.அவன் பெரியவனிடம் போய் கதைத்தான்.

‘ஆர்ர சைக்கிள் என்றான் ‘ பெரியவன்.

'அலியார் போடிர’ என்றேன். அவரின் வீடொன்றில்தான் புலிகளின் பிராந்தியக்கிளை ஒன்று ஊருக்குள் இயங்கிவந்தது. இரு தரப்பு பிணக்குகளைத்தீர்த்து வைக்கும் சமாதான தூதராகவும் புலிகளின் மதிப்பு மிகு மனிதராகவும் அவர் இருந்தார் என்பது பிற்காலத்தில் தெரிய வந்தது.

‘எந்த அலியார் போடி ‘? என்றான்

நான் ஊரைச் சொன்னேன்.பயத்தில் ஆள் அடையாளத்தையும் சொன்னேன்.
சைக்கிள தந்து வந்த வழிய போ என்றான்.

அன்று மனதில் பதிந்த வடு ஆறுவதற்கு பல காலம் எடுத்துக் கொண்டது கூடவே ஒரு சபதமும். சொந்தமாக பைசிக்கிள் வாங்கித்தான் இனி ஓடுவது.

காயங்கள் மட்டும்தான் இடம் மாறி இருந்தன. நினைவுகள் என்னவோ அந்தக்குளக்கட்டின் கிறவல்  வீதியில் விழுந்து அவதிப்பட்டுக்கொண்டு துடிக்கின்றன.
ஆற்றிலிருந்து தண்ணீர் தாங்கிய சைக்கிள் ஒற்றையடிப்பாதையில் அலுங்காமல் வருவதென்றால் எத்துனை 'தில்' வேண்டும் என்பதை அந்தப் பாதையில் ஓடிப்பார்த்தால்  தெரியும்.
இது ஒரு விளையாட்டு. தற்போது நினைக்கையில் ஆச்சரியமாகவும் சாகசமாகவும் இருக்கின்றது.

என்னுடன் சைக்கிள் விட பல நண்பர்கள் இருந்தார்கள். ஓற்றை வயல் வரம்பில் சைக்கிள் ஓட்டுவதில் எங்களுக்குள் போட்டி நடக்கும். காட்டுப்புதரில் ரயர் படாமல் மிதிக்க வேண்டும். சில நேரம் நான் சறுக்கி விடுவேன். சில நேரங்களில் ஜெயிப்பதுண்டு.
ஊஞ்சல் இன்னும் ஆடும்.........
எங்கள் தேசம் 216

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...