Wednesday 22 August 2012

ஷைத்தான்களின் தெரு

ரமழானில் தளையிட்டிருந்த ஷைத்தான்கள் சங்கிலிகளை அறுத்துக்கொண்டு தெருக்களில் அலைவதைக்கண்டு அதிர்ந்து போனேன். 

ஆம் நோன்புப்பெருநாள்  தொழுகை முடிந்ததும் இந்த பயங்கர காட்சி எனக்கும் மற்றவர்களுக்கும் துலாம்பரமாகத்தெரிந்தது.

ஒரு மோட்டார் சைக்கிளில் குறைந்தது மூன்று ஷைத்தான்கள் சென்றன.புழுதியை வாரி இறைத்தபடி அதி வேகமாகச்செல்லும் ஒரு ஷைத்தானின் கையில் ஊது குழல் ஒன்றும் இருக்கும் .அது கனரக வாகனங்கள் ஹார்ன் அடிக்கும் ஒலியை மிஞ்சிய ஒலி.மூன்றாவது அல்லது இரண்டாவதாக அமர்ந்திருக்கும் ஷைத்தான் அந்தச்சங்கை பெருங்குரலெடுத்து ஊத தெருவே பெரும் ரகளையாக மாறி இருந்தது. 

ஏக காலத்தில் சில நேரங்களில் பத்துக்கும் மேற்பட்ட பைக் ஊர்வலங்களில் இந்த ஹார்ன் ஒலி கர்ண கடூரமாய் தெருவின் அமைதியை துவம்சம் செய்தன. 

முறையான சாரதி அனுமதிப்பத்திரமோ, தலைக்கவசமோ இருக்காது.
இது பெருநாள் தினங்களில் சில சமூகத்தலைமைகளால்  எங்களுக்கு கிடைத்த விஷேட அலவன்ஸ்.

அநாகரீகமான கலாச்சாரப்பிறழ்வில் வளர்க்கப்பட்ட ஒர் இளம் சமூகம் உருவாகி வருவதை இது போன்ற அண்மைகக்கால நிகழ்வுகள் நமக்கு அதிர்ச்சியை தருகின்றன.

நாட்டின் சட்டங்களை அடாத்தாக மீறுவதில் இவர்களுக்கு உள்ள ஆர்வம் நம்மை பயங்கொள்ளச்செய்கிறது.

இத்தகைய விஷேட தினங்களில் சலுகைகளை வழங்குமாறு பணிப்பவர்கள் அரசியல்வாதிகள். தங்கள் பவரை நாட்டுச்சட்டங்களை மீறுவதற்குப்பயன்படுத்த தூண்டும் இவர்கள் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எத்தகைய அடக்கு முறைக்கு எதிராகவும் குரல் எழுப்பத்திராணியற்றவர்கள்.


சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய பொலிசாரின் கரங்களை வலுவிழக்கச்செய்வது சில உள்ளுர் அரசியல் சக்திகள். இதனால்  அவர்களுக்கு கிடைக்கும் அற்ப இலாபம் ஒரு சமூகத்தின் இளந்தலைமுறையினரை காட்டுமிராண்களாகவும் மனிதப்பண்புகளை மதிக்காதவர்களாகவும் உருவாக்குகின்றது  என்பதை இந்த அரசியல் தலைமைகள் சிந்தித்துப்பார்ப்பதில்லை.

இவ்வருட பெருநாள் தினத்திலும் அதற்கு முந்திய தினத்திலும் அவதானிக்கப்பட்ட சம்பவங்களை கவலை கொள்ளச்செய்வதும் வெட்கித்தலைகுனியச் செய்வதுமான துர்ச்செயல்களாகும்.

தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் ஓட்டலாம் என்ற சலுகையை சில இளைஞர்கள் அத்துமீறி பிரயோகித்ததை அவதானிக்க முடிந்தது

. ஒரு சைக்கிளில் மூவர் செல்வது Nபாக்குவரத்துப்பபொலிசாருக்கு அருகில் சென்று உரத்த தொணியில் ஹார்ன் அடிப்பது ஓட்;டமாவடி சுற்றுவட்டத்தில் வேண்டுமென்றே ரவுண்ட் அடிப்பது. பொலிசாருக்கு அண்மையில் சென்று பட்டாசுகளை கொளுத்திப்போடுவது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

உண்மையில் பொலிசாரின் கடமைகளை செய்யவிடாது இவ்வாறான அநாகரீக கலச்சாரத்திற்கு வித்திடும் சமூகத்தலைமைகள் இவற்றின் ஊடாக எதைத்ததான் சாதிக்க முயல்கின்றன என்பது நம்முன் நிற்கும் பெருங்கேள்வி..

வேறெந்த சமூகத்திலும் கிராமத்திலும் இல்லாத இழிவான கலாச்சாரத்தை கல்குடா தொகுதியில் மட்டுமே தரிசிக்க முடியும்.

 இது தொடர்ந்தேர்ச்சியாக பின்பற்றப்படும் ஒரு கேவலத்தை உருவாக்கி விடும். இதனை தடுத்து நிறுத்தி சட்டத்தை அமுல்நடத்த பொலிசாருக்கு இடமளிப்பதுடன் இத்தகைய வரம்பு மீறல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் போது அதில் தலையிடாதவாறு அரசியல் சக்திகள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

தங்களுடைய சுய நல அரசியல் நலன்களுக்கு இளைஞர்களை பகடைகாய்களாக்க முனைவது ஒரு சமூகத்தின் ஒழுக்க விழுமியங்களுக்கு எதிரான சாட்டையாகும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து செயற்படவேண்டும். 

பள்ளிவாயல் நிருவாகங்கள் ஜம்இய்யதுல் உலமா சபையினர் மற்றும் பொது நிறுவனங்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்

வளர்ந்து வரும் அதிவேக சைக்கிள் கலாச்சாரம் விஷேட தினங்களில் மிகப்பெரும் சமூக அவலத்தை வளர்க்கின்றது.

 விலங்கிடப்பட்ட சைத்தான்;கள் அவிழ்த்து விடுவது சமூகத்தின் மானத்தை ஏலம் போடுவதற்கு சமன்.


Sunday 19 August 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்



தொடர்- 21

இந்திய இராணுவம் இலங்கையில் காலடி எடுத்து வைத்தபோது தமிழ் மக்கள் தங்கள் இரத்தத்தால் பொட்டிட்டு வரவேற்றது நினைவில் நிற்கிறது. மாலையிட்டு நெற்றியில் திலகமிட்டு தங்களை மீட்க வந்த மீட்பர்களாக அவர்கள் வணங்கப்பட்டனர்.கிழக்கில் அவர்களின் பிரசன்னம் சில மனங்களில்  அடங்காத்திமிரை விதைத்ததை அறிவேன்.

சுழல்கின்ற காலச்சக்கரத்தில் மீட்பர்கள் இரத்தத்தால் திலகமிட்ட மங்கையரின் கற்பின் சுவையை அறியமுற்பட்டு அவர்களை துவம்சம் செய்தனர்.புலிவேட்டைக்குப்புறப்பட்ட ஜாவான்கள் நரவேட்டையில் இறங்கினர்.

விடலைப்பையன்களின் கன்னங்களும் அவர்களின் பற்களால் காயப்பட்ட சரித்திரங்கள் கிழக்கில் உண்டு.துகிலுரிந்த துச்சாதனர்களால் தமிழ் மக்களின் அழகிய கனவுகள் சிதைந்து கொண்டிருந்ததை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம்.எங்கள் கோவணங்களை பாதுகாப்பதே பெரும்பாடாய் இருந்த காலமது. 

இந்திய இராணுவம் திடீரென முற்றுகையிடும், அதிகாலையில் எழுந்து கதவைத்திறந்தால் எல்லா முற்றங்களிலும் துவக்குடன் நின்றிருப்பார்கள். அன்றைய தினம் அலுவல்கள் எதுவும் நடைபெற அனுமதி இல்லை.வயல் வேலைக்குப் போகவோ,அலுவலகங்களுக்குச் செல்லவோ, பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லவோ முடியாது. பெண்கள் வீடுகளுக்குள் முற்றுகையிடப்பட்டிருப்பர்.

 ஆண்களை பாடசாலை மைதானத்திற்கு அழைத்துப் போவார்கள். கையில் ஒரு பெயர் பட்டியல் இருக்கும் . அது புலிகளின் முக்கியஸ்தர்களின் பெயர்கள். அந்தப்பெயர்கள் உள்ளவர்களை தனியே பிரித்தெடுத்து விசாரிப்பார்கள் .

விசாரணைகள் பெரும்பாலும் ஹிந்தியில்தான் இடம் பெறும் மொழிபெயர்ப்புக்கு தமிழ் நாட்டுக்காரர் ஒருவர் நிற்பார்.

கையில் இருக்கும் பெயர் லிஸ்ட்டை வாசித்து விட்டு 'இவனுகள தெரியுமா? ' என்பான்

'அண்ணே இவன் கிடக்கிறான் தெரிஞ்சாலும் நீங்க இல்லெண்டு சொல்லுங்க.'
மொழி பெயர்ப்பது போல் இனப்பாசம் காட்டுவான் தமிழ் நாட்டு வீரன்.

இந்த முற்றுகை ஒரு நாள் நீடிக்கும். உணவு தண்ணீரெல்லாம் தத்தமது வீடுகளில் இருந்து மனைவிமார்களால் கணவன்மார்களுக்கும். தாய்மார்களால் பிள்ளைகளுக்கும் ,உறவினர்களுக்கும் கொண்டு வரப்படும். மைதானமே திறந்த வெளிச்சிறையாக காட்சி தரும்.

காட்டிக்கொடுக்க முகமூடிகள் தயாராக இருக்கும்.முகமூடிக்கு முன்னால் வரிசையில் செல்ல வேண்டும். புலிகள்,புலிகளின் ஆதரவாளர்,அனுதாபிகள் தனக்கு முன் வந்தவுடன் முகமூடியின் தலை இலேசாக ஆடும்.

மறுகணம் அவன் தலைவிதியை ஜாவான்கள் நிர்ணயிப்பர். நான் ஒவ்வொரு முற்றுகையிலும் பிரார்த்திப்பதுண்டு .முகமூடிக்கு முன் வரும்போது அல்லாஹ்வே ஒரு ஈயைக்கூட அவன் அருகில் அண்ட விடாதே .மூக்கில் மொய்க்கும் ஈக்கும் தலையாடினால் என் நிலை என்ன? அச்சத்தில் உறைந்திருப்போம்.

தனக்கு வேண்டாதவர்களை பகை தீர்த்துக்கொள்ள முக மூடிகளின் தலைகள் ஆடிய வரலாறும் உண்டு.

ஒரு நாள் முள்ளிவெட்டவான் கடையில் நின்றிருந்தேன்.இந்திய இராணுவத்தினர் வந்து முற்றுகையிட்டு என்னையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போய்விட்டனர்.வாப்பா கெஞ்சிப்பார்த்தார்.வாகநேரி சந்தியில் இருக்கும் மில்க்போர்ட்டுக்கு ஐம்பது அடி தூரத்தில் ஒரு ஆல மரம் நின்றது. அதன் கீழ் ஏற்கனவே குவிக்கப்பட்ட சனங்களும் நின்றிருந்தனர்.எங்களை அவர்களுடன் இணையவிட்ட கப்டன் விசாரணையை ஆரம்பித்தான். 

ஆலமரத்தின் கீழ் அவனுக்கு கதிரை போடப்பட்டிருந்தது. விசாரணைக்குட்படுத்துபவர்கள் அவன் முன்னால் முழந்தாளிட்டு நிற்பாட்டப்பட்னர்.எனக்குத்தெரிந்த புலிகளும் இருந்தார்கள்.கையில் அவர்களுக்கு துவக்கு மட்டும் இல்லை.எங்கள் ஏரியா பொறுப்பாளர் சகாயமும் நின்றிருந்தான்.மில்க் போர்ட்டுக்குள்ளிலிருந்து

 'அடிக்காதீங்க எனக்கு தெரியா கடவுளே'

 என்ற கூக்குரல்கள் மரணக்கதறல்களாக வந்து வெளியில் விழுந்தன. பனை மட்டைகள் முறியும் சத்தம் என் காதை அடைத்தது.

எனது முறை வந்தது.

தமிழ் மொழிபெயர்ப்புக்கு இ.பி டி.பி அண்ணர் ஒருவர் நின்றிருந்தார்.தமிழ்தேசிய இராணுவமும் இருந்தது. இது இந்திய இராணுவத்தாலும்,வடக்கு கிழக்கு மாகாண சபையினாலும் தோற்றுவிக்கப்பட்ட கலவை.

ஜாவான் கேட்டான் புலிய தெரியுமா ?
ஓம் சேர் 

காட்டுவியா?
கண்டா காட்டுவன்

துவக்கு வச்சிருந்தானுகளா?
ஓம் சேர்

எப்படி சாமான் ?
உங்கட துவக்க விட பெரிய துவக்கு சேர்

சகாயன் சிரிப்பதை உணர்ந்தேன்.

எங்கள் தேசம் -227                                                                  ஊஞ்சல் இன்னும் ஆடும்...

Thursday 2 August 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


தொடர் - 20

நிச்சயம் புஹாரி காக்காவை சுட்டுக்கொன்றிருக்கமாட்டார். ஒரு நாள் எங்கள் கடைக்கு வந்த புஹாரி உம்மாவிடம் 'ராத்தா அந்தா மேய்ற சாவலைத்தாவன்' என்றார்.

உம்மாவும் சரி பிடிச்சிக்கொண்டு போ என்றார்.கொண்டையில் சிவப்புப்பூவில் ஓய்யாரமாக இரை தேடிக்கொண்டிருந்த பாணிச்சேவலை நோக்கி மெசின் கண்ணை இயக்கினார். ஒரு  கோழிக்கு இருப்பத்தைந்து குண்டுகள் செலவழித்தும் அவரால் அதைப்பிடிக்கவே முடியவில்லை.சேவல் இவரை விட திறமையாக கெரில்லாப்பயிற்சி எடுத்திருக்க வேண்டும்.நாங்கள்   பெருநாளைக்கு அறுத்துச்சமைக்கும் வரை அது பல கோழிகளுக்கு முட்டை வழங்கிக்கொண்டிருந்தது சுவாரஸ்யமான கதை

.  இவர் எப்படி ஆமியைச்சுடுவார் என்பது எனது நீண்ட கால ஐயம்.நிச்சயம் இவர் காக்காவை அடித்துத்தான் கொன்றிருப்பார்.அல்லது கொல்லும்படி கட்டளையிட்டிருப்பார்.(இவர் வீட்டிலிருக்கும்போது பொறி வெடியில் சிக்கவைத்து சிதறடித்தவர் யாரென இன்று வரைப்புலப்படவில்லை,வினை வினைத்தவன் திணை அறுப்பதில்லை என்பதற்கு கண் கண்ட சாட்சி அவரின் சிதறிக்கிடந்த ஜனாசா)

நாங்கள் பொத்தானை புனானை காடுகளில் காக்காவின் ஜனாசாவைத் தேடினோம்.காடு மறைத்து வைத்துள்ள சடலத்தை நாட்கணக்கில் தேடினோம். குளிப்பாட்டாமல்,கபனிடாமல்,தொழுவிக்காமல் அடக்கம் செய்யப்பட்;ட அவனை இந்தக்காடு மறைத்து வைத்துள்ளதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. முதன் முதலாக காட்டின் மேல் உள்ள வசீகரம் அற்றுப்போனது இப்படித்தான். 

இன்றும் பொத்தானை ஆற்றுக்குப்போகும் போதெல்லாம் தேடிப்பார்க்க மனம் அவாவுகின்றது. கேட்பாரற்று கிடக்கும் மனித எலும்புக்கூடுகளுக்குள் எனது காக்கா இருப்பானோ? எனினும் பறவைகளின் மிருகங்களின் ஒலிகள் காக்காவின் ஒப்பாரியாகவும் வாழ்தலுக்கான இறைஞ்சலாகவும் என்னை அலைகழித்துக்கொண்டே இருக்கின்றது.

ஆயுதக்குழுக்களின் விசாரணை என்றவுடன் இன்னொன்றும் சட்டென்று நினைவில் ஆடுகின்றது.

1988 இன் கடைசிப்பகுதி என நினைக்கின்றேன். நான் கிழக்கிழங்கை அறபுக்கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த காலம். கல்லூரி விடுமுறையில் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று அரட்டை அடிப்பது வழக்கம். இப்போது அரட்டை மன்னர்களை கண்டால் ஓடி ஒளிவது வழக்கம்.
அன்றும் அப்படித்தான் காத்தான்குடி நண்பர் அபுல் ஹசனின் ஊரான காங்கயனோடைக்கு போவதென்று தீர்மானித்தோம்

.காங்கயனோடை ஆறையம்பதிக்கு பக்கத்தில் என்பதால் அடிக்கடி இரு இனங்களுக்கும் முறுகல் நிலை ஏற்படுவதுண்டு.அதைத்தூபம் போட்டு வளர்ப்பவர்கள் ஆயுதக்குழுக்கள்.

 என்னுடன் ஏறாவூர் தோழர்களும் இருந்தனர். விடுமுறை விட்டதும் நேரே ஊருக்குப்போகவில்லை காத்தான்குடியில் இறங்கி பிரதான வீதியில் இருந்து காங்கயனோடை நோக்கி நடந்தோம்.

தோழர் அபுல் ஹசனின் வீட்டுக்கு 200 மீற்றர் இருக்கும்.வழியில் ஒரு ஆயுதக்குழுவின் முகாமிருந்ததை நாம் கவனிக்கவில்லை.தோழர்களும் சொல்லவில்லை.

முஸ்லிம்களிடம் தணகிப்பார்க்கும் வல்லமை கொண்ட ஜனநாயக்குழுக்கள் ஆயுதங்களுடன் நடமாடிய காலம். ஆட்கடத்தல், விசாரணை,கப்பம்,சித்திரவதை எல்லாம் ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு முஸ்லிம்களிடம் செயற்படுத்திய காலம்.

நாங்கள் முகாமை நெருங்கியதும் ஒரு அண்ணர் துப்பாக்கியுடன் ஓடி வந்தார்.
'எங்க போறியள்?'
'எங்கட வூட்ட' தோழர் அபுல்ஹசன் சொன்னார்.

அவர் எப்போதும் ஹாஸ்யமானவர்.அவர் பதிலிலும் அது இழையோடியதை நான் கவனித்தேன்.மாணவர் மன்றங்களில் அவர் பாடுவது குறித்த பாடகனை தற்கொலைக்கு தூண்டுவதாய் இருக்கும்.நாங்கள் அப்படித்தான் அவருக்கு கமென்ட் அடிப்போம்.பிரியாவிடைப்பாட்டில் கூட சோகமில்லாமல் சிரித்துக்கொண்டு பாட அவரால் மட்டுமே சாத்தியம் என்றால் நம்புங்கள்.

'வூட்ட போரண்டா இதால  ஏன் வந்த '?
அண்ணர்தான் மறுபடியும்.
'இதான எங்கட ரோட்டு'
மறுபடியும் அபுல்ஹசன் 
உங்களயெல்லாம் விசாரிக்க வேனும் என்று விட்டு நடங்க உள்ளுக்க என்றார்.

இலோசாக குலை நடுக்கம் ஆரம்பித்தாகிவிட்டது. வீட்டுக்குத்தெரியாமல் விடுமுறையை காத்தான்குடியில் கழிக்க திட்டமிட்டதை நினைக்கையில் மனம் பதைக்கத் தொடங்கியது. ஒரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். 

சுவரில் இரத்தக்கரைகள் படிந்திருந்தன. மனிதக்  கவிச்சியின் துர்நாற்றத்தை நாசி நிறைக்கத் தொடங்கியது. நாங்கள் ஏழுபேர்.அவர்கள் ஒரு ஆறுபேர் இருக்கும் ஆளுக்கொரு துவக்கு.துருவித்துருவி விசாரித்தார்கள். கல்லூரியின் அடையாள அட்டையை காட்டினோம்.நீங்களெல்லாம் ஜிகாத் படை எங்கள நோட்டமிட வந்திருக்கியள் என்றார்கள் முடிவில்.எப்படியெல்லாம் துல்லியமாக மோப்பம் பிடிக்கின்றார்கள் என்பதை நினைக்கும் போது நமது நாட்டின் கொலைக்குழுக்களில் பெருமையாக இருந்தது.

'நீதானே அட்டாளைச்சேனையில் நேற்றிரவு நோட்டீஸ் ஒட்டினாய் ? எனை நோக்கி ஒருவன் சுண்டு விரலை நீட்டினான்.

மாலை ஐந்தரைக்கெல்லாம் எங்கள் விடுதியின் இரும்புக்கதவுகள் மூடப்படுவதும் அது மறுநாள் ஏழுரைக்குத்தான் மீளவும் திறக்கப்படுவதையும் தெரிந்தவர்களுக்கு அவன் கேள்வி சிரிப்பைத்தான் சிந்த வைக்கும். ஆனாலும் சிரிக்கவில்லை.சம்சுத்தீன் மௌலானாவின் பார்வைக்குத்தப்பி விடுதிக்குள் இருக்கும் ஒரு சிற்றெறும்பும் முன் கதவால் நழுவ முடியாது என்ற இலட்சணத்தில் நான் நோட்டீஸ் ஒட்டியது என்றால் சும்மாவா சிரிப்பு வரும். 
'இல்லை அண்ண நாங்க யாரும் அப்பிடியானவங்க இல்ல.நாங்க படிக்கிற புள்ளயள்.'

எங்கள் வார்த்தைகள் எங்களுக்கே அன்னியமாகின.சற்றுமுன் போட்ட அட்டகாசமான கூச்சல்களும் கேலியும் அடங்கி உயிர்பிச்சைக்கு மன்றாடும் வார்த்தைகளாக அவை இறைஞ்சுதலாக ஒலித்தன.யாசகத்தனமிக்க வார்த்தைகளில் முழு ஜீவனும் காலடியில் ஒடுங்கி சிறுத்தது.

'அப்ப நீங்க ஓற்றர் படை இல்ல.எல்லாரும் முஸ்லிம் ஆக்கல் என்பதை நாங்க எப்புடி நம்புற காசக்குடுத்தா இதப்போல பல ஐடின்டிகார்ட் எடுக்க ஏலும்'  
ஒருவன் குண்டை தூக்கி தலையில் போட்டான். அது வெடித்துச்சிதற உடல் பயத்தில் வெடவெடத்தது.

'இல்ல அண்ண நாங்க முஸ்லிம் ஆக்கள்தான்.' நான் நடுங்கியபடி கூவினேன்.மேலண்ணத்தில் நாவு ஒட்டிக்கொண்டு அடம்பிடித்தது.வார்த்தைகள் நடுக்கமுடன் வெளிப்பட்டன.

அவன் இதழின் கோடியில் கேலியாய் இளநகை பூத்து மறைந்தது.
'அப்ப சுன்னத்து வச்சிரிக்கா என்டு பார்க்கவேனும்.'
நாங்கள் ஆளையால் மிரட்சியுடன் பார்த்தபடி நின்றோம்.

நாசர் இஞ்ச வா தலைவனின் அழைப்புக்கு வாலைச்சுருட்டிக்கொண்டு காலை நக்கும் நாய்க்குட்டிபோல் நாசர் வந்து அவன் முன் பவ்யமாக நின்றான்.
அவன் கையிலும் ஏ.கே 47 இருந்தது.சுவிங்கத்தை மென்றபடி இருந்தான்.
'இவங்கள செக் பண்ணிப்போட்டு அனுப்பு' தலைவனின் வார்த்தைக்கு மறுப்பேது ? 

'டேய் இஞ்சால வாங்கடா' என்ற சப்தம் ஈயத்தைக்காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது.அவர்கள் தேவல போலிருந்தது.நம்மடவனுக்கு கொம்பு முளைச்சா எப்படி இருக்கும் என்பதற்கு அவன் 'திருக்கவாலன்' நல்ல உதாரணம் மச்சான் என்று பிற்காலத்தில் நாங்கள் நினைத்துப்பார்த்து சிரிப்பதுண்டு.

நாசர் எங்கட சோனக அடையாளச் சின்னத்தை உறுதிப்படுத்தி தலைவனிடம் நல்ல பெயர் வாங்கிக்கொண்டான். பின்னர் எங்களை நோக்கி ஓடுங்கடா இனி இஞ்சாலப்பக்கம் தல வச்சிம் படுக்கப்படாது என்றான். அவமானத்தில் வெட்கித் தலைகுணிந்தபடி வெளியேறினோம். ஏதோ ஒன்றை இழந்து விட்ட அவசத்தில் மனம் பதகளித்துக் கொண்டிருந்தது.


எங்கள் தேசம் : 227                                                                        ஊஞ்சல் இன்னும் ஆடும்..

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...