தொடர்- 27
தைக்காப்பள்ளியில் வேன் நிற்கும் வரை பாதரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். முகத்தில் பிறை வடித்தில் அழகிய அம்சமான தாடி,சாந்தம் தவழும் புன்னகை பூசிய முகம்.மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் திடகாத்திரமான பார்வை.பாதர் பள்ளி நிறுவாகத்தினரிடம் எங்களை ஒப்படைத்துவிட்டு எங்கள் கரங்களை பற்றிக்குலுக்கினார்.
வழியில் ஒரு கூட்டம் முஸ்லிம் ஆக்கள வெட்டுவதற்கென்று கத்தியுடன் நிற்பதாக தகவல் கிடைத்துள்ளது. எங்களையும் கண்டு அப்படியே விட்டால் பெரிய இனக்கலவரம் வெடிக்கும் என்ற நல்லெண்ணத்தினால் இவ்வளவு பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்திருக்கின்றார்.அவர்தான் பாதர் ரொபர்ட் கிங்ஸ்லி.
நினைவுத்தடங்களில் அழிக்க முடியாத நன்றியுடன் நினைவில் மணக்கும் பெயர்.பிற்காலங்களில் மட்டக்களப்பு மண் ரோசா இல்லத்தில் அவர் இருப்பதாக சொன்னார்கள்.
சில வருடங்களுக்குப்பின் மட்டக்களப்பிலிருந்து வந்த மைக்கல் கொலின் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த தினக்கதிர் பத்திரிகையில் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். அதைப்படித்து விட்டு அவர் என்னைத்தேடி வீட்டுக்கு வந்ததும்,அளவளாவிச்சென்றதும் இன்று போல் உள்ளது.
ஆனால் பதினைந்து வருடங்களைத்தாண்டிவிட்டது என்பதை நினைக்கும் போது காலத்தின் அசுர வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத கையறு நிலை நெஞ்சில் பாறாங்கல்லாய் அழுத்துகின்றது.
எங்களுடன் வந்த காத்தான்குடி நண்பர்கள் நின்றுவிட்டார்கள். சுகைப் ஹாபிழின் வீட்டில் பகலுணவு தந்தார்.மிகவும் மென்மையானவர்.எங்கள் பயணத்தின் வழிகாட்டியும் மூத்தவரும் அவர்தான். சதா வுழுவுடன் இருப்பார். கல்லூரியில் எப்பொழுதும் குர்ஆனுடன் இருப்பவர். வுழுவை அடிக்கடி புதுப்பிக்கும் அவரின் நீள் சட்டையின் கை ஓரங்களில் மஞ்சல் படர்ந்திருக்கும்.
‘பள்ளிக்குருவி’ என்றுதான் நாங்கள் அவருக்கு செல்லப்பெயர் வைத்தோம். அவரை வீதியில் கடைத்தெருவில் கடற்கரையில்,மைதானத்தில் எங்குமே காணமுடியாது நீக்கமற பள்ளியில் இருப்பார். கூச்ச சுபாவம் உள்ளவர். மஞ்சந்தொடுவாயிலுள்ள அவரின் வீட்டிற்குப்பக்கத்தில் உள்ள பள்ளியில் இரண்டு நாள் கழித்து சுஜுதில் இருக்கும் போது அவரையும் சுட்டுக்கொன்று விட்டதாக தகவல் கிடைத்தது.
பாதை நெடுகிலும் பயணத்தில் ஒரு வார்த்தையேனும் வீணாகப்பேசாமல் குர்ஆனை ஓதியபடி அவர் நடந்து வந்தது என் நினைவில் காலத்தால் அழியாமல் நிற்கிறது.
அன்று பகலுணவுக்குப்பின் அங்கிருந்து புறப்பட்டு மாலை ஏறாவூரில் நண்பர் ஜாபிரின் வீட்டில் தங்கினோம்.இருள் பரவ ஆரம்பித்து விட்டது மனித நடமாட்டங்களற்ற வீதியில் நாய்களைத்தவிர துப்பாக்கி ஏந்திய பொலிஸ் மற்றும் இரானுவத்தைத்தவிர வேறொன்றையும் காணவில்லை. இன்னும் எட்டு மைல்கள் நடக்க வேண்டும். கால்கள் வீங்கி கொப்பளித்துவிட்டன. அவர் விண்டோஜன் வாங்கித்தந்தார்.இரவு முழுக்க பூசினோம்.
மறுநாள் காலையில் வாழைச்சேனை நோக்கி நடந்தோம். கூட்டமாக வந்த போது இருந்த தெம்பு மறைந்து விட,காத்தான்குடியிலும்,ஏறாவ+ரிலும் நண்பர்கள் உதிர்ந்து விட,எஞ்சியவர்கள் அச்சம் மேவிய மனங்களை பொத்தியபடி நடந்தோம்.காத்தான்குடியில் நரவேட்டையாடிய புலிகள் ஓரிரு தினங்கள் கழித்து ஏறாவூரிலும் சுட்டும் வெட்டியும் வேட்டையாடினர்.நண்பர் சபீக்கின் குடும்பத்தில் எல்லோரையும் இழந்திருந்தான்.
அவனும் அவனது சகோதரர் அமீனுத்தீன்(முன்னால் அரசியல் துறை விரிவுரையாளர் பேராதனை பல்கலைக்கழகம்) அவரும்தான் தப்பிப் பிழைத்ததாக கேள்வியுற்றேன். நண்பர் அதன் பின் ஆமியில் இணைந்து புலிகளை அழிக்க திடசங்கற்பம் பூண்டு புறப்பட்டுச்சென்றார்.இப்படி கல்வியை இடைநடுவில் முடித்துக்கொண்டவர்வர்கள் பலர்.ஜாபிரின் குடும்பத்திலும் இந்த இழப்புக்கள் அவனையும் கல்லூரியை விட்டு நிறுத்தியது. நண்பர் ஜாபிரை பிற்காலங்களில் கொழும்பில் சந்தித்தேன். அங்கேயே திருமணம் முடித்துள்ளதாக சொன்னார்.
வழியில் மனிதர்களின் நடமாட்டம் அவ்வளவாக இல்லை.கும்புறுமூலை சந்தியில் மறு ஆபத்து காத்திருந்தது.வழி நெடுகிலும் இராணுவம் துப்பாக்கியுடன் நின்றிருந்தாலும் இளவட்டங்களான எங்களில் கரும்புள்ளியாய்; அவர்களின் பார்வை தொடர்ந்து வந்திருக்க வேண்டும்.முகாம் அருகில் நெருங்குவதற்கு முன் இராணுவத்தினர் கத்திக்கொண்டு எமை நோக்கி ஓடிவந்தனர்.ஓரடி முன் நகர்ந்தாலும் ரவை மழை பொழியக் காத்திருந்தது.
அசைவற்று கால்கள் அப்படியே தரித்து நின்றன.வியர்வையில் உடல் தெப்பமாயிருந்தது.மரணத்தின் தப்பிக்கமுடியா சுறுக்குக்கயிறு எங்களின் தலைக்கு மேல் தொங்கியது. கைகளை உயர்த்தும்படி அங்கிருந்து கத்தினார்கள்.
எங்கள் தேசம் 233 ஊஞ்சல் இன்னும் ஆடும்.....