Sunday 26 May 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

                                                                       தொடர்- 40

நன்பர் பவ்சர்,என் ஆத்மா,பொத்துவில் மஜீத்,அக்கரைப்பற்று ஏ.எம்.தாஜ்,ஏ.எம்.ரஷ'மி,கருங்கொடியூர் கவிராயர் என்ற பெரும் கவிஞர் பட்டாளம் தினகரனில் எழுதிக்கொண்டிருந்தோம். ஒரு வருடத்திற்குள் எல்லா முன்ணனிப் பத்திரிகையிலும்,உள்நாட்டு வெளிநாட்டு சஞ்சிகையிலும் எனது கவிதைகள் வெளிவரத்தொடங்கின.

விடாமுயற்சியும் வாசிப்பும் என் எழுத்தின் தீவிரத்திற்கு தீனி போட்டுள்ளது என்பதை இப்போது நினைத்துப்பார்க்கின்றேன். இப்போது எழுதிக்கொண்டிருக்கும் புதியவர்கள் வாசிப்பது அரிதாகத்தான் உள்ளது. அதை அவர்களின் எழுத்தில் பார்க்கலாம்.உப்புச் சப்பற்ற எழுத்துகளுக்கு தாங்களே தன் கழுத்தில் மாலை போட்டுக்கொள்ளும் அசிங்கம் இங்குதான் உண்டு.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதை விட நூல்கள் இல்லாத ஊரில் குடியிருப்பதுதான் என்னைப்பொறுத்தவரை மிகுந்த அவஸ்தை என்பேன்.இப்போதும் படிக்கத்தொடங்கிவிட்டால் எழுதத்தொடங்கி விட்டால் என்னை அசைக்கவே முடியாது என்பது என் துணைவியின் குற்றச்சாட்டுக்களில் ஒன்று. எழுத்தும் வாசிப்பும் மனமொன்றி இருந்தால் அது மற்றவர்களின் மனதில் சாசுவதமாய் தங்கி வாழும்.

நான் வேலைப்பார்த்த இடங்களில் பெரும்பாலும் வாசிப்பதற்கு பத்திரிகைகளை தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை.மலைநாட்டில் உள்ளவர்களுக்கும், வடமத்திய மாகாணத்திலுள்ளவர்களுக்கும் சரிநிகரை அறிமுகப்படுத்தியிருக்கின்றேன். இன்றைய காலம் போல் இணையத்தில் பத்திரிகைகளை வாசிக்க முடியாத காலம்  அது.சிறு சஞ்சிகைகள் அக்காலத்தில் வந்து கொண்டிருந்தது.

மட்டக்களப்பிலிருந்து ‘படி’ மூன்றாவது மனிதன்,நந்தலாலா,மற்றும் புலம் பெயர் நாடுகளிலிருந்து அம்மா, எக்சில்,உயிர் நிழல்,போன்ற சஞ்சிகைகள் வந்தன. மறு சஞ்சிகைகள் வரும் வரை திரும்பத்திரும்ப பாராயணம்தான்.

கடைசியாக கொழும்புக்கு 1996 இல் காலடி எடுத்து வைத்த போது வாசிப்பும் எழுத்தும் உச்சத்தில் இருந்தது.நான் வேலை பாhத்த அலுவலகம்   பொரல்லையில் அமைந்திருந்தது.வாசிப்பதற்கும்,எழுதுவதற்கும் அமைதியான இடம். தூரிகைக் கவிஞர் நண்பர் எஸ்.நழீமிடமிருந்தும்.கவிஞர் அனாரிடமிருந்தும் காத்திரமான புத்தகங்களை இரவல் பெற்று வாசித்திருக்கின்றேன்.

சம்பள நாளில் செட்டியார் தெருவில் இருக்கும் பூபாலசிங்கம் புத்தக நிலையத்திற்கு சென்று விடுவேன்.இந்திய மற்றும் ஈழத்து சஞ்சிகைகள்,புத்தகங்கள் என அள்ளிக்கொண்டு வந்து அடுத்த மாத சம்பளம் வருவதற்கு முன் வாசித்து விடுவேன். திருமண பந்தத்தில் இணையாத பொற் காலம் என்பதால் நிறைய வாசிக்கவும் எழுதவும் அக்காலங்கள் உதவின. அதிகம் என்னை வாசிக்கவைத்தவர் எஸ்.எல்.எம். ஹனீபா.

முதிசம்களின் இலக்கியப்பொக்கிசங்களை எஸ்.எல்.எம். மூலம்தான் படித்து முடித்தேன்.ஜெயமோகன்,ஜெயகாந்தன்,சுந்தரராமசாமி,பிரமிள்,நகுலன்,ராஜகோபாலன்,அசோகமித்திரன்,ஜானகி ராமன்,என பெரும் படைப்பிலக்கிய ஜாம்பவான்களை படித்தது அவரிடமிருந்துதான்.தோப்பில் முஹம்மது மீரான்,தகழி, வைக்கம் முஹம்மது பசீர் என்று மலையாளிகளை அறிமுகப்படுத்தியவரும் அவரே.பொற்றேகார்ட்டின் பல நாவல்களை படித்து பரவசமுற்றதும் இக்காலத்தில்தான்.

வாசிப்பும் தொடர்ச்சியான எழுத்துப்பயிற்சியும் இல்லை என்றால் ஓர் எழுத்தாளனால் சோபிக்கமுடியாது.என்பது என் அனுபவம் என்ன எழுதுகிறோம் என்பதை விட அதை எப்படி வெளிப்படுத்துகின்றோம் என்பதுதான் படைப்பிலக்கியத்தில் அதி உச்சம் என்பேன். ஒரு புனைவின் நம்பகத்தன்மையும் வாழ்வின் உன்னதங்களை கோடிட்டுக்காட்டும் மெய்யுமே இலக்கியத்தில் நிலையானவை என்பது இன்று நம்மில் பலருக்கு தெரியாமலேயே போய்விடுகின்றது.

எழுத்துக்கு மட்டுமல்ல அரசியல் போராட்டம், அல்லது இயக்கம் சார்ந்த செயற்பாடுகள் எல்லாவற்றிருக்கும் இது பொருந்தும்.காலத்தால் நின்று சில புனைவுகள் பேசப்படுவதற்கு காரணம் அவர்கள் மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் முறைதான் என்பது எவ்வளவு சத்தியமாக உள்ளது.

com

திருமண பந்தத்தில் இணையாத பொற் காலம் என்பதால் நிறைய வாசிக்கவும் எழுதவும் அக்காலங்கள் உதவின./ தங்கள் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள்
S.Naleem


 எங்கள் தேசம்- 245                                                                                    ஊஞ்சல் இன்னும் ஆடும்......                                          
   

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...