Friday 24 November 2017

கட்டுரை: புதுக்கவிதை- ஒரு வரலாற்றுப்பார்வை




பாரதிக்குப்பிறகு தனி வளர்ச்சி காட்டிய வசன கவிதை சிலரின் முயற்சியோடு குன்றி 1940களுக்கப்பிறகு ஒரு தேக்க நிலையை எய்திருந்தது. பல வருடங்களுக்குப்பின் “எழுத்து”இலக்கிய ஏடு தொடங்கியதும் புதுக்கவிதை புத்துயிர்ப்பும்,புது வேகமும் பெற்று ஓங்கி வளர்ந்தது.

புதுக்கவிதை என்ற பெயர் அனேகருக்கப்பிடிக்காத சொல்.இதன் உருவத்தையும் ,உள்ளடக்கத்தையும் பார்த்துக்குழப்பம் அடைகிறவர்கள் பலர்.
தமிழ்க்கவிதையில் மலர்ச்சி பெற்ற இப்புதுமைக்கு “புதுக்கவிதை” எனும் பெயர் 1960களில்தான் சேர்ந்தது. New poetry, Modern poetry  என்றும் ஆங்கிலத்தில் கூறப்படுவதை ஒட்டி,தமிழில் புதுக்கவிதை என்ற பெயர் இம்முயற்சிக்கு இடப்பட்டது.

எனினும் ஆரம்பத்தில் யாப்பு முறைகளுக்குக்கட்டுப்படாமல் கவிதை உணர்வுகளுக்கு சுதந்திரமான எழுத்து உருவம் கொடுக்கும் இப்படைப்பு முயற்சி வசன கவிதை என்றே அழைக்கப்பட்டது.பின்னர் யாப்பில்லாக்கவிதை,இலகு கவிதை ,கட்டிலடங்காக்கவிதை (Free verse) போன்ற பெயர்களை இது அவ்வப்போது தாங்க நேரிட்டது.

புதுக்கவிதை என்பதில் மிரட்சிக்கோ பரிகாசத்திற்கோ குழப்பத்திற்கோ எதுவும் இடம் இல்லை. முன்பு பழக்கத்தில் இருந்துவருகிற- மரபு ரீதியாக அமைந்த ஒன்றிலிருந்து மாறுபட்டு (அல்லது அதை மீறித்)தோன்றுவது புதுசு.(புதிய) மரபு ரீதியான,யாப்பு இலக்கணத்தோடு ஒட்டிய கவிதைகளிலிருந்து மாறுபடும் இக்கவிதைப்படைப்பு புதுக்கவிதை எனப் பெயர் பெற்றது பொருத்தமே ஆகும். பாரதி தனது எல்லாக்கவிதைகளையும் புதுக்கவிதை என்றே குறிப்பிடுகிறார்.

சுவை புதிது,பொருள் புதிது,வளம் புதிது,
சொற் புதிது,சோதிமிக்க
நவ கவிதை” 

என்று பாரதியார் தன் கவிதைகளைப்பற்றிப்பெருமையோடு பேசுகிறார்.
பாரதிக்குப்பிறகு புதுக்கவிதை முயற்சியில் ஆர்வத்துடன் முதன் முதலாக ஈடுபட்டவர் ந.பிச்சமூர்த்திதான்.

“சம்பிரதாயமான யாப்பு முறைகளுக்கு உட்படாமல்  கவிதையைக்காணும் புதுக்கவிதை முயற்சிக்கு யாப்பு மரபே கண்டிராத வகையில் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் எழுதிய ‘புல்லின் இதழ்கள்’ என்ற கவிதைத் தொகுப்புத்தான் வித்திட்டது.அதைப்படித்த போது கவிதையின் ஊற்றுக்கண் எனக்குத்தெரிந்தது.பின்னர் பாரதியின் வசன கவிதையை படிக்க நேர்ந்தது.  என் கருத்து வலுவடைந்தது.இவற்றின் விளைவாக என் உணர்ச்சிப்போக்கில் கவிதைகளை எழுதினேன் என ந.பிச்சமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு அதற்கும் அணி அலங்காரம் உண்டு. அதற்கும் தளையுண்டு, மோனையுண்டு. செய்யுள் எழுதுவதைக்காட்டிலும்  வசன கவிதை எழுதி வெற்றி பெறுவது சிரமம். செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைக்கும் ஒர் இசை இன்பத்தை ஊட்டி விடும். ஆனால் வசன கவிதையின் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் சொல்லில் தட்டினால்தான் கொஞ்சமாவது கவர்ச்சி கொடுக்கும்.சொல்லில் கவிதையின் அம்சம் இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது.வெறும் வசனம்தான்.

இந்த முறையில் வசன கவிதையைத்தமிழில் முதன் முதலாக கையாண்டவர் சுப்ரமணிய பாரதிதான். ‘காட்சிகள்’ என்று அவர் எழுதியிருக்கும் சித்திரங்களைப்படிப்பவர்கள் வசனம் எதுவொன்றும் வசன கவிதை எதுவென்றும் தெளிவாக அறியலாம்.எட்வெட் கார்ட்பெண்டரும்,வால்ட்வில்ட்மனும் ஆங்கிலத்தில் பெற்ற வெற்றிக்குப்பிறகு பாரதியே தமிழில் வெற்றி பெற்றான் என்பது மறுக்கவியலா யதார்த்தம்.

கவிதைக்கும் வசனத்திற்கும் உள்ள வித்தியாசம் உருவத்தினாலேயே ஏற்படுகின்றது என்பது பலரின் கருத்து. அக்கருத்தை மறுதலிக்கிறது எதிர்க்கட்சி.தத்துவ ரீதியாகப்பார்த்தால் மனிதனிடம் பல படிகள் இருக்கின்றன. ஊண்,உறக்கம்,புணர்ச்சி இவை ஒரு படியைச்சார்ந்தவை. உடல் அவைகளுக்கு வேர்.இவைகளைப்பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவது உள்ளம்.அது ஒரு படி.

இச்செய்கைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட உலக இரகசியத்தை அறியத்துடித்து நிற்கும்  அறிவு வழி ஒன்று உண்டு.உணர்ச்சி வழியும் ஒன்றுண்டு.வசனத்தின் வழி அறிவு நிலை சார்ந்தது.கவிதையின் தர்க்கப்பாதை உணர்விலேயே ஒடும். அறிவின் வரம்பை மீறி வசனம் போகுமானால் அந்த நிமிசத்திலேயே அது கவிதையாகி விட்டது என்று நிச்சயிக்கலாம். 

“தீ இனிது” என்று பாரதி சொல்கிறான்.இனிது என்ற சொல் ருசியைசார்ந்தது. ‘தீ சுடும்’ என்பது வசனம். தீ இனிது என்பது கவிதை.உவமைப்போல் உணர்விடம் பேசுமானால் கவிதை பிறந்து விடும்.
இதனை கம்பனிடமும் காணலாம்.

“அமுதம் நிறைந்த பொற்கலசம்
இருந்தது இடை வந்து எழுந்த தென
எழுந்த தாழி வெண் திங்கள்.”

இதை வசனம் என்று நோக்கினால் பொற் கலசம் கடலில் மிதக்குமோ ? நினைத்த போது கடலில் அது எழுந்து வருமோ என்ற ஐயங்கள் எழும்.இந்த வார்த்தைகள் உணர்ச்சியின் வெளியீடு. உணர்வின் உலகிற்கு சமர்ப்பிக்கப்பட்டவை. ‘கடலில் முழுமதி எழும்பொழுது உணர்வு வயப்பட்ட மனிதனின் மகிழ்ச்சிப்பெருக்கைத்தான் கம்பன் அப்படிச்சொல்கிறான்.’ 

-2-
புதுப்புது உருவங்களை தோற்றுவித்தல் புதிதல்ல.இதுவரை வெளி வந்த சந்தப்பாடல்கள் எத்தனையோ புதிய உருவங்களைத்தந்துள்ளன.எனவே புதிய உருவத்தில் எழுதுவதும் மரபானதே! ஒரே படைப்பில் பல்வகை உருவங்களைப்புகுத்துவதும் புதிதல்ல . இணைக்குறள்,ஆசிரியப்பா,வஞ்சி விருத்தம்,வெண்டுறை,கட்டளைக்கலித்துறை,என்னும் பல உருவங்களால் இயல்வது கலம்பகம். எனவே இதுவும் மரபானதே! இக்கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும் போது புதுக்கவிதை மரபானதே!

ஒரு மொழியோ ஒரு காலமோ இலக்கியச்சிறப்பு மிக்கதாக ஆக வேண்டும் என்றால் அந்த மொழியிலோ காலத்திலோ நிறைய செய்யுள் தோன்றிப்பயனில்லை.நிறைய பாடல் தோன்றியும் பயனில்லை.நிறைய கவிதை தோன்ற வேண்டும்.ஏனென்றால் பாவகை மூன்றிலும் தலை சிறந்தது கவிதைதான்.

இன்று கவிதை வடிவம் எப்படி அமையவேண்டும் என்ற வினா எழுகிறது.உணர்வை ஊட்டும் ஒரு நிகழ்ச்சியானது அந்த நிகழ்ச்சி பொருட்களால் இயன்ற காரணத்தால் ஒரு வகை ஒலி நயம் கொண்டே இருக்கும் இந்த ஒலி நயமானது மிக நுட்பமாக இருப்பினும் அதை கவிஞன் மனம் கிரகித்துக்கொள்ளும். இதனால் உணர்வு வெளிப்பாட்டில் இவ்வொலி நயமும் இணைந்து கொள்கிறது. 

இவ்வொலி ஓட்டமே புதுக்கவிதையின் ஒலி ஒழுங்காக அமைகிறது எனலாம். செய்யுள் நடையானது ஓசையோடிருக்கும் காரணத்தால் படிப்பவன் உள்ளத்தில் பரவசத்தை ஏற்படுத்தும் சக்தி படைத்ததாக இருக்கிறது. இதற்கீடான மேலான சக்தியை புதுக்கவிதை எப்படி பெறுகிறது எனவும் நோக்க வேண்டும். 

விழிப்புலப்படிமங்கள் பழைய நினைவோவியங்கள் குறியீடுகள் மூலம் உணர்வு வெளிப்பாடு நிகழ்ந்து படிப்பவன் மனதில் பரவசத்தை உண்டாக்குகிறது.படித்து முடித்த பின்னரும் மனக்கண்முன் நிலைபெற்று நினைதொரு நயம் பயப்பது,நவில்தொறும் நயம் பயப்பது யாப்பு வழிக்கவிதை, நினைதொறும் நயம் பயப்பது புது வழிக்கவிதை
சொற்களைக்கையாள்வதில் புதிய முறைகளை ஆக்கிக்கொண்டால்தான் இன்று கவிதை வளர முடியும்,வாழ முடியும்.

இன்றை பிரச்சினைகளை தீர்க்கும்பணியில் கவிதை ஈடுபடாத வரை புதுக்கவிதையும் முழுமைபெற முடியாது. கருத்து இன்னதென்று புலப்படாத வெறும்படிமப்படையல்கள் பெரும் புதிராக அமைந்து சமுதாயத்திற்கு பெரும் புதிராக அமைந்து விடும்.

பழைய உவமானங்கள், உருவகங்கள்,குறியீடுகள்,படிமங்கள் ஆகியவற்றை கடன் பெற்று கவிதை அதன் சீர்குலைவையே எடுத்துக்காட்டும். சமுதாயத்தில் அவ்வப்போது நிகழும் செயல்களும் , நினைவுகளும் பேச்சு மொழியுமே கவிஞனுக்கு கை கொடுக்க வேண்டும்.

கவிதை கனவு மாத்திரமல்ல,கனவுப்பார்வை மாத்திரமல்ல.அது கனவு காணும் மனசின் வாழ்வு.
மனித ஜாதியின் வாழ்க்கை தனக்குத்தானே வகுத்துக்கொண்ட சட்டதிட்டங்களை மீறி, அணையுடைத்து வெள்ளம் போலப்பெருகி ஓடிக்கொண்டு வருகிறது. மேலும் பெருக்கெடுத்து ஓடப்பார்க்கிறது. மனிதன் தனக்குள் ஏற்படுத்திக்கொண்ட கட்டுப்பாடுகள்  வழி வந்த மரபுகள் எல்லாம் ஒவ்வொன்றாக தகர்ந்து கொண்டிருக்கின்றன.தன் சரித்திரத்திலேயே அனுபவத்தறியாத சுதந்திரத்தைப்பல்வேறு துறைகளில் இன்று மனிதன் அனுபவித்துக்கொண்டிருக்கின்றான். அதில் ஒரு அலை புதுக்கவிதை.

மனிதன் புற உலகத்தையும் பிற மனிதர்களின் செயல்களையும் கனவுப்பார்வையாகக்கவித்தது போதாதென்று தன் அகத்தூடும் அப்பார்;வையை பிரயோகிக்கத்தொடங்கியிருக்கின்றான். அறிவுலகத்தில் இதை செய்து கொண்டு வருவதைப்போல கலையுலகத்திலும் செய்யப்பார்க்கிறான்.

 இவ்வாறு செய்யும் போது,சில சமயம் பழைய முறைகள் தடையாக இருப்பதாலோ அல்லது அவைகளால் இவனுக்கு தேவையானபடி செய்ய இயலாமல் போவதாகவோ உணர்கிறான். புது வழிகளை வகுத்துக்கொள்ளப்பார்க்கிறான். இதில் ஒர் அலைதான் புதுக்கவிதை.

பல பக்கங்கள் கொண்ட  வைரக்கல் போன்றது புதுக்கவிதை. ஒரு பக்கம் புது மாதிரியான அழகு. வியக்கும் அழகு. ஒரு பக்கம் ஏக்கம், மனமுறிவு, பெருமூச்சு காதல், தத்துவம், கோபம், சந்தேகம், அறைகூவல்,சமகால விமர்சனங்கள், தன் மனத்தையே தேர்ந்தெடுத்து ஆராயும் நேர்மை, இப்படி பல பக்கங்கள் உண்டு. சுருங்கச்சொன்னால் இன்று நம்மிடயே இருக்கும் உணர்ச்சிகள் அனைத்தின் பிரதிப்பையும் நாம் புதுக்கவிதையில் காண்கிறோம்.

வரைமுறையற்ற தன்மை, நூதனப்படிமங்கள், மயக்க நிலையையும் வெளிப்படுத்தும் நிலை,கொச்சை மொழிப்பிரயோகங்கள் எப்படி புதுக்கவிதைக்கு வலுவேற்றுகின்றனவோ, அதைப்போல அவை புதுக்கவிதை பலவீனப்படுத்தும் சாதனங்களாவும் அமைவதற்குச் சந்தர்ப்பங்கள் உண்டு என்பதை உணர்ந்து கவிஞன் விழிப்போடு இருக்க வேண்டும்.

இவ்வாறு எழுதப்பட்டுள்ள கவிதைகளில் பல வடிவங்களில் உள்ள கவிதைகள் காணப்படுகின்றன.முக்கியமாக கருத்து எதையும் சொல்லாத வேடிக்கை எழுத்துக்கள். குழப்பம் உண்டாக்குபவை.எளிதில்புரிந்து கொள்ள முடியாதவை. இரு பொருள் கொண்டவை, நடப்புப்பாங்கானவை. கனவுகள் மன வக்கிரங்களை உணர்த்துபவை போன்றவை.

புதுக்கவிதைக்கு கிடைத்த வரவேற்பையும்,புதுக்கவிதை என்று எழுதப்பட்ட எதையும்  பிரசுரிக்கத்தயாராக இருக்கின்ற பத்திரிகைகளின் போக்கையும் கண்டவர்கள் எதையாவது எழுதி எப்படியாவது அச்சில் தங்கள் பெயரைப்பார்த்து விட வேண்டும் என்ற ஆசையும், அரிப்பும் கொண்டவர்கள் மூன்று வரிகளும் நான்கு வரிகளும் ஒரு சில வரிகளும் எழுதி சுலபத்திலேயே பெயரும் கவனிப்பும் பெற்றுவிட முனைந்தார்கள்.சிரமமும், பயிற்சியும் பாடுபடலும் இல்லாமலே         ‘எழுத்தாளர்’ என்ற கீர்த்தியை அடைந்து விட விரும்பியவர்களுக்கும்  புதுக்கவிதை எழுதுவது லட்சியப்போக்கு சுலப மார்க்கமாகத் தோன்றியது. கவிதைகளில் ஆங்கிலச்சொற்களையும், வார்த்தை அலங்காரங்களையும் இணைத்து கவிதை என்ற பெயரில்  கோமாளித்தனம் செய்தனர்.

இதற்கு மின்னல் என்ற கவிதை ஒரு பதச்சான்று
‘……பூமியெனும் காதலி
மழையெனும் Shower ல்
குளிப்பது கண்டு
வானமெனும் காதலன்
மின்னலே கடயளா டiபாவ ஆக
‘கிளிக்’ என்றே ஒரு flash light  எடுத்தான்.”

சாதரண நடப்புக்களையும் சந்தேகங்களையும் சில பிரச்சினைகளையும் உரை நடையாக நேரிடையாக எழுதாமல் வார்த்தைக்கு கீழ் வாhத்தையாக அடுக்கி ஒரே வாக்கியத்தை “புதுக்கவிதை”யாகக்காட்ட முயல்கிற வேலைகளும் நடைபெற்றுள்ளன.

புதுமையாக எழுத வேண்டும் கருத்து -கற்பனை –அழகு ஆழம் முதலியன அமையக்கவிதை எழுத வேண்டும் என்ற உணர்வு பத்திரிகைகளுக்கு கவிதை எழுதும் அனேகரிடம்  இல்லை.நாமும் கவிதை எழுதுகிறோம். நம் பெயரும் அச்சில் வர வேண்டும். என்ற எண்ணத்துடனேயே மிகப்பலர் எழுதுகிறார்கள். முன்பு பலர் எழுதிய விடயங்களையே திரும்பத்திரும்ப பலரும் எழுதுகின்றார்களே தவிர புதிதாக சிந்திக்க தவறிவிடுகிறார்கள். 

சாரமற்ற உணர்ச்சியற்ற உரை நடையிலேயே கவிதைகள் வருகின்றன. அவை கவிதை என்று சில பத்திரிகைகளால் அடையாளமிடப்படுவதுதான் வேதனையும் வேடிக்கையும்.
இதனால் கவிதைக்கலை ஒரு தேக்க நிலையை அடைந்து விட்டது போல் தெரிகிறது.


புதுக்கவிதையை பாதிக்கும் காரணிகள் பல :

முன்னொரு கால் பத்திரிகையுலகின் வேண்டாத பெண்டாட்டியாக இருந்து வந்த புதுக்கவிதை இன்று ‘இடம் நிரப்பி’யின் இடத்திற்கு இறங்கி விட்டமை.
புதுக்கவிதை மொழி பெயர்ப்பில் வரும் பொழுது கவித்துவ வீர்யத்தை இழந்து மூலக்கவிஞனின் உள்ளடக்கத்தை மட்டுமே வாக்கிய அமைப்பில் பேணி வருதல் புதுக்கவிதைப்படைப்பாளியின் வெளியீட்டு நிலை அதுவெனக்கொள்ளும் மயக்கம். அவ்வழியே தம் கவியனுபவங்களையும் வெளியிட முயலுதல்.

ஓவ்வொரு காலகட்டத்திலும் மேனாடுகளில் அல்லது தாய்ட்டில் உச்ச நிலை பெறும் அரசியல்,பொருளாதார சமூக நடத்தைகளும் அவற்றினடியாக எழும் தத்துவப்பார்வைகளும் அவர் தம் கவிதைகளில் இடம் பெற்றிருக்கும். அவற்றை தற்போது தமிழில் படிப்போர் அக்கவிதைகள் எழுந்த நாடுகள்-காலங்கள் என்பவற்றை மறந்து விட்டுப் படிப்பதால் தமக்கும் தமது வாழ் நாள் அனுபவங்களுக்கும் இக்கவிதைகளுக்கும் இடையில் பொருத்தப்பாடு ஏற்படாமை.

எனினும் இவற்றையெல்லாம் மீறி தமிழ்க்கவிதை வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.மெது மெதுவாக சில நல்ல கவிதைகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன என்ற வகையில் கவிதைகளை நேசிப்போர் ஆறுதலடையடைவோம்.



உசாத்துணை நூல்கள்:

புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும்- வல்லிக்கண்ணன்
‘கவிதை’ இதழ்கள் 1994 ஆனி-ஆடி,ஆவணி- புரட்டாதி,ஐப்பசி-கார்த்திகை 
அ.யேசுராசா


நன்றி : 
தமிழ் நயம் இலக்கிய சஞ்சிகை
கொழும்பு ரோயல் கல்லூரி 125 வது கலைவிழா சிறப்பு மலரில் பிரசுரம் பெற்றது 


சிறுகதை - ஒரு மாலையும் சில காகங்களும்


ஒரு மாலையும் சில காகங்களும்


சல்மா ஒரு பூனையைப்போல் பதுங்கியபடி வீட்டுக்குள் நுழைந்த  தருணம் உம்மா மாலை நேரத்தூக்கத்தில் ஆழ்ந்திருந்திருந்தாள்.பக்கத்தில் தங்கை ரேஷ்மாவும் தாயின் வயிற்றுக்குள் ஒடுங்கியபடி தூங்கிக் கொண்டிருந்தாள்.சல்மா குர்ஆனையும் ‘ஸ்காபை’யும் ஒரு சேர சுருட்டி  ‘பிளாஸ்ரிக் பக்கற்’றினுள் எறிந்தாள். அழுக்கடைந்த ஆடைகளை போடும்படி உம்மா வைத்திருந்த ‘பக்கற்’ அது. பரபரவென உள்ளறைக்குள் ஓடினாள். அவசரமாக உடை மாற்றிக் கொண்டாள். சிலமன் கண்டு உம்மா எழும்பினால் தன்னையும் கூடவே படுக்கவைத்து விடுவா  என்ற பயம் அவளை கவ்விக்கொள்ள பதற்றம் வந்து தொற்றிக்கொண்டது. 

அவளுக்கு மாலையில் தூங்குவதென்றால் கசாயம் குடிப்பதைப்போல. உம்மாவை பார்ப்பதும் ஆடைமாற்றுவதிலுமாய் கண்ணாய் இருந்தாள்.   ‘நானா’மார் அறைக்குள் கழற்றிப் போட்ட ஆடைகள் மூளைக்கொன்றாய் தாறுமாறாக வீசிக்கிடந்தன. அதில் தன்னுடையதும் கலந்துள்ளது  என்பது சல்மாவுக்குத் தெரியும். ஒழுங்குபடுத்த வேண்டும் என நினைத்துக் கொண்டாளாயினும் இது தகுந்த நேரமல்ல என உள்ள மனம் கூவியது.டீவியில் ஆன் (on) லைட் எரிந்து கொண்டிருந்தது.ரேஷ்மாவுக்கு உம்மா பொம்மை படம் போட்டுக்காட்டியபடி சோறு ஊட்டியிருப்பதன் அடையாளமாக  சி.டி. பிளேயரும் ஆன் (on) னில் மினுக்கம்  காட்டியது. 

கால்களின் ஓசை கூட நிலத்திற்கு கேட்டுவிடாமல் பதுங்கி பதுங்கி பின் கதவால் நழுவி சல்மா முற்றத்திற்கு வந்தாள்.குப்பைகளை கிளற தினமும் வரும் பூனை வாழை மர மறைவில் உடலை புகுத்தி காத்திருந்தது.

பின் வளவில் காகங்கள் கத்தியபடி பகல் வீசியெறிந்த மீன் கழிவுகளில் குறியாய் இருந்தன. காகங்கள் உச்சஸ்தாயில் கரைந்தால் உம்மா எழும்பி விடுவா. கல்லொன்றை எடுத்து ஓசைப்படாமல் வீசுமாற் போல் காகங்களை நோக்கி ‘பாவ்லா’ செய்தாள். அவை கூட்டமாக கத்திக்கொண்டு மேல் நோக்கிப்பறந்து சென்றன.  

சாத்தப்படாத கதவிடுக்கினுள்; தலையை நீட்டியபடி  அவள் வகுப்புத்தோழி சஹ்ரா நின்றிருந்தாள்.அவள் விழிகளிலும் கள்ளத்தனம் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. ‘உம்மா எங்க’? என்பது போல் சைக்கினையால் கேட்டாள். தூங்குவதாக சல்மா பாவனை காட்டியதும் விழிகளில் மினுக்கம் தெறித்தது.ஓசைப்படாமல் கதவினை சாத்திவிட்டு சல்மா வீட்டின் பின்னால் உள்ள வெற்றுக்காணிக்குள் சென்றாள்.

சஹ்ரா அவள் சைக்கிள் கூடைக்குள் இருந்த புளியங்காய்களை கொடுத்தாள். உப்புக்கல்லும் மிளகாய்த்தூளும் வைத்து சுத்தி அடித்து துகளாகி இருந்தது.  மருதோன்றி மரத்தின் கீழ் அமர்ந்தபடி சாப்பிட்டார்கள்.நாக்கில் மசமசவொன்று புளியேறி உச்சுக்கொட்டியது. 

‘நல்லா இரிக்கிடி ஏது புளியங்கா? ’ 

என்ற சல்மா இன்னுமொரு துண்டை எடுத்து வாயில் போட்டு மெல்லத்தொடங்கினாள்.கருக் புறுக்கென்ற ஓசையுடன் புளியம் துவையள் அவர்களின் கொடுப்புக்குள் ஊறி ஊறி உள்ளிறங்கி;க்கொண்டிருந்தது.

 ‘எங்கட மாமா வயலுக்கு போகக்குள்ள இடையில இருந்த புளியமரத்துல ஆஞ்சயாம், இன்னும் வூட்ட இரிக்கி , நாளைக்கும் கொண்டுவாரன்’ என்றாள் .
சஹ்ரா அவள்  கடை வாயில் எச்சில் ஊறி  நனைந்திருந்து. புறங்;கையால் துடைத்தபடி பொடி கற்களை எடுத்து குருவிகளை நோக்கி எறியத்தொடங்கிளாள்.

எதிர் வீட்டு மாமியின் மதிலில் இரண்டு பூனைகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபோட்டபடி சென்றன. இவர்களை கண்டு கொள்ளவே இல்லை .கீழே கிடந்த ‘பிளாஸ்ரிக்’; போத்தல் ஒன்றினால் ஸஹ்ரா அவைகளை நோக்கி எறிந்து வைத்தாள். அப்போதும் அவைகள் ‘போங்கடி நீங்களும் உங்கட போத்தலும்’  என்பது போல் எதிர்வினைகள் ஏதுமின்றி வீட்டுக்கூறையின் மீது தாவியேறி போய்க்கொண்டிருந்தன. 

‘எறியாதடி உம்மா முழிச்சிறுவா’ 

 மறுபடியும் கல்லொன்றால் பூனைகளை குறிபார்த்த ஸஹ்ராவை அடக்கினாள் சல்மா .

சாவகாசமாக நடந்தபடி தோழியர் வீதியைக்கடந்து அடுத்த தெருவுக்குள் நுழைந்தனர். எதிரே உள்ள வீதியில் ‘நானா’மார் ‘கிரிக்கட்’ விளையாடிக் கொண்டிருந்தார்கள்.உம்மா எழும்பினா தேடுவா என்ற அச்சம் நிழலைப்போல் சல்மாவின் பின்னால் நகரத் தொடங்கியது. வீட்டை விட்டு , சொல்லாம போகக்கூடாது என்ற குரல் பிடரியை அழுத்தியபடி அவளை நெருக்கியபடி இருந்தது. 

எதிரே நானாமார்களும் கண்டு விட்டார்கள் உம்மாவிடம் சொன்னால் இன்றைக்கு செம அடிதான் நினைக்கையில் நெஞ்சுக்குள் புறாக்கள் எழுந்து சிறகடிப்பது போல் தடதடவென அடித்துக்கத் தொடங்கியது. அவர்களைக் கடந்து ஐஸ்கிரீம் வேன் ஒன்று சென்றது. அதன் மியூசிக் சல்மாவை வசீகரிக்கும்.வாப்பா அந்த ஐஸ் கிரீமை திண்ணக்கூடாதென்பார். அடியில் கித்துள் பாணி மிதக்கும் சாம்பல் நிறத்திலானான ஐஸ் கிரீமை வாப்பா வாங்கிக்கொண்டு வருவார்.அதுவும் அலாதியான சுவைதான். உம்மாவுக்கும் அதென்டா நல்ல விருப்பம்.

‘சல்மா அங்கடி நெருப்புக்கோழி’ 

சஹ்ரா எதிர்த்திசையில் கையைநீட்டி கத்தினாள். 

‘ஓம்டி ‘

என்றபடி சல்மாவும் கத்தினாள். சுபைதா மாமியின் வீட்டில் தீக்கோழி இருப்பதாக நானாமார் கதைப்பதுண்டு. அவளுக்கும் அதனை பார்க்கும் ஆவல் உந்துவதும் அடங்குவதுமாய் கடந்த பல நாட்களாக தாப்புக்காட்டியபடிதான் இருந்தது. இப்படி திடீரென அதனைபார்ப்பேன் என கனவிலும் நினைத்திலேன் என வியந்தபடி கோழிக்கும் அவர்களுக்கமாக ஒரு பத்தடி தள்ளி நின்று வியப்புடன் பர்hத்துக்கொண்டிருந்தார்கள். அதன் தாடையில் தணலின் நிறத்தில் சதைகள் வழிந்து தொங்கின. கொக்…. கொக்……. என புறு புறுத்தபடி அது மண்ணைக்கிளறிக்கொண்டு இரை தேடிக்கொண்டிருந்தது.
 ‘உண்மையா நெருப்புத் தணலை விழுங்குமாடி’? 

சஹ்ரா  நம்ப முடியாதவளாய் கேட்டாள்.
’ஓம்டி பெரிய தணலாய் பார்த்து விழுங்குமாம்’.அதற்கு ஒன்டும் செய்யாதாம், நாம ஐஸ் திண்னுற மாதிரி நெருப்ப விழுங்கிப்போட்டு சும்மா இருக்குமாம்’.

 ‘ நீ பார்த்திருக்கியா?’ 

சல்மா இன்னும் நம்ப முடியாதவளாய் துருவத் தொடங்கினாள். 

‘இல்ல எங்கட வாப்பா சென்ன.’ 

கோழி இவர்களை பொருட்படுத்தாமல் கிளறிக்கொண்டிருந்தது.

பஸ்மியாவின் வீட்டை அண்மித்ததும் கேற்றில் நின்று அவளைக்கூப்பிட்டார்கள். பஸ்மினாவும் அவர்களின் வகுப்பில்தான் படிக்கின்றாள். அவள் நேற்று பாடசாலைக்கும் வரவில்லை .
’ஆரது ? ‘ 
என்றபடி பஸ்மியின் ராத்தா எட்டிப்பார்த்தா இவர்களைக் கண்டதும் சிரித்தபடி கேற்றை திறந்து 

‘ உள்ள வாங்க பொண்டுகள்’ என்றா.

வெட்கத்துடன் மருகியபடி இருவரும் உள்ளே சென்றார்கள். பஸ்மியா உள்வீட்டில் ஊஞ்சலில் ஆடியபடி டீ குடித்துக்கொண்டிருந்தாள் இவர்களைக்கண்டதும் எழுந்து வந்து ‘இருங்கடி ‘என்றாள் .பின் குசினிக்குள் குரலை நீட்டி  உம்மா ரெண்டு டீ தாங்க என்று கத்தினாள் .அவள் கடைக்குட்டி என்பதால் கொஞ்சம் செல்லம் அதிகம்  என சல்மாவின் உம்மா சொன்னது உண்மைதான் எனப்பட்டது. அவள் கேட்ட உடன் உம்மா வந்து மண்டபத்தினுள் தலை நீட்டிப் பார்த்தா இவர்களைக் கண்டதும் சிரித்தபடி 
‘ என்ன கூட்டாளியாக் காணல்லண்டு கிளம்பினயாக்கும்’ என்றபடி குசினிக்குள் சென்ற ஐந்து நிமிடத்தில் டீயுடன் வந்தா.

 பஸ்மியின் ராத்தா தலையை வாரிக்கொண்டு கதிரையில் இருந்தா. சற்று நேரத்தில்  கண்ணாடி முன்னால் நின்று கூந்தலை நீவி விட்டபடி அதனை உற்றுப் பார்த்தபடி நின்றா ஊஞ்சலில் இருக்கும் மூவருக்கும் உள்ளறைக்குள் நடக்கும் விடயங்களை துல்லியமாக காணக்கூடியதாக கதவு சற்று அகலத்திறந்து கிடந்தது. 

பஸ்மியின் ராத்தாவின் கூந்தல் அவவின் இடுப்பை விட்டும் நழுவி தரையை தொட்டுவிடுவேன் என போக்குக்காட்டியது. ஆச்சரியத்துடன் அவர்கள் அதனை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.கருகருவென்று மினுங்கியபடி அலை அலையென வசீகரமாய் ஆடிக்கொண்டிருந்தது. ஒரு ஸ்டுடிலில் அமர்ந்தபடி அதனை சடை போடத்தொடங்கினா. அவவின் விரல்கள் மடிவதும் தாழ்வதுமாக … பார்க்கப்ரவசமாகவும் வித்தை போலவும் இருந்தது. பஸ்மியாவோ  அதுவெல்லாம் எனக்கு அலுத்து விட்டது என்பது போல் பிரக்ஞையின்றி ஊஞ்சலி;ல் இருந்தாள் .

 சல்மா தன் கூந்தலை நீவிப்பார்த்துக்கொண்டாள் அது எலி வாலைப் போல அவள் கைக்குள் அடங்காமல் இருந்தது.  இப்படித்தான் நாமும் முடி வளர்க்க வேண்டும் மனசில் அவளுக்கும் நீண்ட கருங்கூந்தல் ஒய்யாரமாக ஆடிக் கொண்டிருந்தது. 

சற்றெக்கெல்லாம் அவள் முதுகின் பரப்பின் மேல் நீண்ட கரு நாகமொன்று படுத்து நெழிவதைப்போல் இருந்தது. கூந்தலை பின்னி முடித்தபின் ராத்தா ஹோலுக்கு வந்து இவர்களுடன்; கதைக்கத்தொடங்கினா. படிப்பு உம்மா வாப்பா எல்லாவற்றையும் கேட்டு விட்டு முற்றத்தில் இறங்கி ஆகாயத்தைப்பார்த்தபடி நின்றா .அவ அப்படி நிற்கையில் கதைகளில் படிக்கும் இளவரசிகளை நினைவூட்டியது. 
பஸ்மியா நேற்று பாசிக்குடாவுக்குப்போனதாக சொன்னாள். தன் பாடப்புத்தகத்தினுள் ஒழித்து வைத்துள்ள மயிலிறகை எடுத்து வந்து காட்டினாள் மூவரும் மிக இரகசியாக தங்களுக்கே  உரிய கவனத்துடன் அதனை பார்த்தார்கள் . 

‘ மூனு நாளைக்குப் பொறகுதான் குட்டி போடுமாம், அதுவரைக்கும் கையாலயும் தொடப்படாது.’ 

 கை வைக்கப் போன சஹ்ராவை இடைவெளியில் தடுத்து நிறுத்தினாள் பஸ்மி.சஹ்ரா முன் சென்ற விரல்களை அவுக்கென இழுத்துக்கொண்டாள். 
‘ மூனு இறகு போட்டா ஆளுக்கொன்று தாரன் என்ன ?’  

என்றபடி புத்தகத்தை மூடிக்கொண்டு போய் உள்ளறைக்குள் பத்திரப்படுத்தி விட்டு வந்தாள் .முற்றத்தில் இறங்கி மூவரும் மாமரத்தை அண்ணாந்து பார்த்தபடி நின்றார்கள் இரண்டு அணில்கள் துரத்தியபடி கிளை விட்டு கிளைதாவி ஓடித்திரிந்தன. வெளவால்கள் வந்து போன தடம் மரத்தில் தெரிந்தது. மாம் பிஞ்சுகளை நறுக்கிவிட்டு பாதியில் கைவிட்டுச்சென்றுள்ள வெளவாலின் மீது ஆத்திரம் வந்தது.குருட்டு வெளவால் மனசுக்குள் திட்டிக்கொண்டார்கள்.

பஸ்மியின்  அயல்  வீட்டில் சத்தமாக பாட்டு வந்தது. சகிக்க முடியவில்லை. பின்பக்கம் மூவரும் சென்றார்கள் .நேற்று பொறுக்கி வந்த சிப்பிகளை பஸ்மி பின் வளவில் ஒரு வாளிக்குள் போட்டு வைத்திருந்தாள். அதனை கவிழ்த்துக் கொட்டி காட்டினாள். பாசிக்குடாவில் இப்போது சிப்பிகள் இல்லை என்பது போல் அவள் கதை தொடர்ந்தது. இருவரும் ஆளாளுக்கு தமக்கு விருப்பமான சிப்பிகளை எடுத்துக் கொண்டனர். பாசிக்குடாவுக்கு  அடுத்த கிழமை போனா இன்னும் கொண்டு தாரன் என பஸ்மி வாக்களித்தாள். 

மதில்களின் மேல் காகங்கள் வரிசையாக குந்தியிருந்தன.நிவாரணம் எடுக்க வந்த ஏழைகளைப்போல்  நிற்கும் காகங்களைப்பார்த்து சிரிப்பாக வந்தது. ஒன்றுக் கொன்று ஏதோ பேசியபடி அவை குந்தியிருக்கும் அழகே அழகு. அதனை விரட்ட மனமின்றி மூவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் .
சல்மா பின் வளவிற்குள் இருந்த குழாயில் தண்ணீர் மொன்று குடித்தாள் . கைகனை குவித்து வாயைவைத்து குடித்ததில் நெஞ்சுப்பகுதி நனைந்திருந்தது. கால்களையும் கழுவிக் கொண்டாள். பின் வளவில் மூவரும் அமர்ந்து விளையாடத் தொடங்கினார்கள்.

சற்றைக்கெல்லாம்  விளையாட்டும் அலுப்புத்தட்டி விட்டது. ஜே மரத்தின் கீழிருந்து அண்ணாந்து பார்த்தார்கள். ஐதாக பழங்கள் தூரத்தில் இருந்தன.சல்மா நீளமான தடியொன்றால் அவற்றை அடித்து விழுத்தினாள். மண்ணில் விழுந்ததை ஊதியபடி வாய்க்குள்வைத்து மென்று துப்பினார்கள்.சல்மாவுக்கு ஒண்ணுக்கு முட்டியது .வீட்ட போகலாம் என அடக்கி;க்கொண்டாள்.மற்றவர்களின் பாத்றூமை பாவிப்பதில் அவளுக்கு கூச்சமாகவும் இருந்தது.பஸ்மியின் பின் வளவு விசாலமானது. தென்னை மா,மாதுளை ,தேசி, விழா,கொய்யா என வளவு கொள்ளா மரங்கள்.நிழல் விழுந்து மணல் குளிர்ச்சியாக இருந்தது. கதையளந்தபடி தோட்டத்தின் மறு முனைவரை சென்று விட்டார்கள். 

அன்னமின்னா மரத்தில் குருவி கூடு கட்டடியிருந்தது. சற்றே அவதானத்துடன் எட்டிப்பார்த்தார்கள். கண் விடுக்காத சிறிய குருவிகள் தலையை எம்பியபடி கத்திக்கொண்டிருந்தன.தாய்க்குருவி இவர்கள் சிலமன் கண்டு உயரப்பறந்து போய் வட்டமிட்டபடி கத்திக்கொண்டிருந்தது. ஒண்டும் செய்திடாதீங்க என்பது போல் அதன் கேவல் .சராலென மூவரும் விலகி பாவம்டி என்றார்கள் .தன் குஞ்சுகளை விட்டு நீங்கிய மறு கணத்தில் தாய் பறவை கூண்டுக்குள் வந்து குந்திக்கொண்டு தலையினை வெளியே நீட்டிப்பார்த்தபடி  படுத்துக்கிடந்தது.

கொக்குகள் தங்கிப்போவதாக விழாமரத்தை சுட்டிக்காட்டினாள் பஸ்மி.கொக்கின் எச்சம் கீழே வெள்ளைத்தீந்தை சிந்திக்கிடப்பதைப்போல் இருந்தது.குமட்டலெடுக்கும் வாடையும் கூடவே உதிர்ந்த வெண் இறகுகளும்.உச்சியில்  குச்சியிலான கூடொன்றும் தெரிந்தது.

வளவு முழுக்க தென்னை ஓசைகளும் சருகுகளும், சுள்ளிகளும்,பறவைகளின் எச்சமும் நீக்கமற இரைந்து கிடந்தன.எல்லாவற்றையும் மிகைத்தபடி பெரும் நிழல் அந்த தோட்டத்தினை போர்த்தியபடி சதா படுத்துக்கிடந்தது.

சல்மாவுக்கு வயிறு கடுப்பெடுத்து முட்டியது.’பஸ்மி பாத்றூம் போகனும். ‘ தயங்கியபடி காதுக்குள் கிசுகிசுத்தாள்.  சஹ்ராவும் எனக்கும் முடுக்குதுடி என்றாள். மூவரும் பாத்றூமை நோக்கி விரைந்து சென்றனர்.

கழுவி சுத்தம் செய்யப்பட்ட பாத்றூமில் பஸ்மியின் ராத்தாவின் கவுனொன்றும் பாவாடையும் ஈரம் சொட்டச்சொட்ட கிடந்தது. இப்பதான் மேல் கழுவியிருக்காப்போல. சல்மா பள பளவொன்று மாபிளின் மேல் கால்களை கவனமாக வைத்து முன்னேறத்தொடங்கினாள். கண்ணுக்குத்தெரியாத நறுமணங்களின் வாசம் மூக்கைத்துளைத்தது. பேஸ்வாஷ்,சிக்னல்,பிரஸ் ,மணக்கும் சோப்புக்கள் , முதுகு தேய்க்கும் பஞ்சு என பொருட்கள் நேர்த்தியாக  அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

‘ டீயேய் என்னடி செய்றாய் வாடி எனக்கும் முடுக்குது’ 

தட தடவென கதவைத்தட்டினாள் சஹ்ரா.

‘இந்தா வாரன் பொறுடி’  என்று விட்டு பேஷனின் மேல் குந்திக்கொண்டாள். வயிறு காலியாகி சாசுவதமாவதை உணர்ந்தாள். 

சற்றைக்கெல்லாம்  உம்மாவின் குரல் காட்டமாய் ஒலித்தது.

 ‘சல்மா நேரம் பெய்த்து ஸ்கூல் போறலியா எழும்பு’.

 தன் இடுப்புக்கீழ் ஈரலிப்பின் சொத சொதப்பு ஊர்ந்து இறங்கியது.  உம்மா அவளன்டை வந்து மோப்பம் பிடிப்பது போல் மூக்கை சுண்டினா. முதுகின் மேல் சுர்ரென்று உறைத்தது. உம்மா பிரம்புடன் நன்றிருந்தா.

 ‘இந்தப்பெரிய கிளட்டுப்பிள்ள  பாயில சூ அடிக்கிறதே வேலயாய்ப்பெய்த்து’.

‘ஒழும்புடி வெளியால கொண்டு போய் எல்லாத்தயும் கழுவிப்போடு’

 முதுகை தேய்த்தபடி ஈரலிப்பான ஆடைகளுடன் பாயை சுருட்டத்தொடங்கினாள்.விடியலின் பிரகாசம் உள்ளறைக்குள் எட்டிப்பார்த்தது. சல்மா கண்களை ஆயாசமாக கசக்கிக்கொண்டு ஜன்னலின் ஊடாக வானத்தைப்பார்த்தாள்

பஸ்மியின் தோட்டத்தில் சற்று  முன் பார்த்த காகங்கள் அவள் மதிலில்  குந்திக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தன.

2017.10.02 
விடி வெள்ளி பத்திரிகை 17.11.2017



  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...