Monday 24 December 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


 தொடர் : 30
 ண்மைக் காலத்திலும் காட்டில் தங்கியது நினைவில் நிற்கிறது.அது காஞ்சிலங்குடாக்காடு. மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிபாய்ந்த கல் வீதியில் இருபது மைல்களாவது பயணிக்க வேண்டும்.முன்னர் புலிகளின்  தனி இராட்சியமாக இருந்த பூமி முஸ்லிம்களின் பல்லாயிரக்கணக்கான வயல் நிலங்கள் இங்குதான் உண்டு.

 இருபது வருடமாக இந்த வயல்களில் விதை விதைத்து அறுவடை செய்து அனுபவித்த புலிகளும் அவர்களின் அருவருடிகளும் கடைசி வரைக்கும் முஸ்லிம்களுக்கு குத்தகை கொடுக்காமலேயே செத்து மடிந்தனர். இப்போது அதைவிடவும் கொடுமை. ஆதி அந்தமாய் காடு வெட்டி வயல் செய்து வந்த அந்த மக்களின் வயல்களுக்கு சட்டப்படி ‘பேர்மிட்’ தரமுடியாது என்று மிரட்டுகின்றார்கள்.இருபது வருடம் ‘ஓசியில்’ வயல் செய்த கூட்டத்திற்கு அதனை சூரையாட வேண்டும் என்ற பேராசை வந்து விட்டது. சில அதிகாரிகளின் பேருதவி இவர்களுக்கு துணை உண்டு.

 உரம் எடுப்பதற்கும் வயல் செய்கை பண்ணுவதற்கும் நாய் ஓட்டம் ஓட வேண்டியுள்ளது. .தங்களது பூர்வீக நிலன்களை பாதுகாக்க இன்று பெரும் போராட்டமொன்று மௌனமாக அரங்கேறியுள்ளதை அறிந்தவர் அறிவர். மாட்டுப்பட்டிகளும் அனந்தம். முன்பு அங்கிருந்த மாடுகளை விட்டுவிட்டுத்தான் ஓடிவந்தனர். அதையெலல்hம் தமிழீழம் கேட்டு துவக்கு தூக்கியவர்கள்

 எடுத்துக்கொண்டார்கள். ஆட்டுப்பட்டிகள்,கோழிப்பண்ணைகள் என ஏகப்பட்ட கால்நடைகளை அபகரித்துக்கொண்டுதான் விரட்டினார்கள். 

சுற்றி வர ஆறும், வயலும் சார்ந்த ரம்யமான காடு. சைக்கிள் செல்ல முடியாத இடம் வரை சைக்கிளில் சென்றோம். ஒரு புளிய மரத்தடியில் சைக்கிள்களைப் போட்டுவிட்டு கால்நடையாக நடக்கத்தொடங்கிய போதுதான் தூரம் தெரிந்தது. தூரத்தில் காடு எம்மை இரு கரம் விரித்து அழைப்பது போன்ற உணர்வு. நடக்க நடக்க வயல்வெளிகள் பெருகிச்செல்ல காடு பின்நோக்கி ஓடிப்போனது. 

கையில் பொதியுடன் இரண்டு மைல்கள் நடப்பதென்பது மகா கொடுமை.   அதுவும் இரவில் தங்கியிருந்து வேட்டைக்குப்போகவென்று புறப்பட இருந்தோம். யானைக்கூட்டம் பற்றி அழைத்துப்போன நண்பர் எதுவும் சொல்லவில்லை.நாங்களும் புறப்படும் அவசரத்தில் அது பற்றிக்கேட்கவில்லை .

 இரவு உணவுக்கு முயல் கறி சமைக்க முடியுமா என்பதிலேயே குறியாக இருந்தோம். வயற்காடுகளில் கதைத்துச்சிரித்து கும்மாளமிட்டபடி நடந்தோம் .ஈற்றில் பாதுகாப்பற்ற ஒரு வாடியில் கொண்டு போய் விட்டார்கள் . அப்போது நேரம் மாலை ஐந்தரை மணி இருக்கும். சூரியன் சடுதியாக மேற்கு வானின் அடிவாரத்தில் சரிந்து கொண்டிருந்தான். கால்கள் வலியெடுத்தன. காட்டிற்குள் செல்லும் எண்ணம் ஈடேறவில்லை. தெரியாத்தனமாக ஆர்வக்கோளாறினால் நிலவு காலத்தில் வந்திருக்கின்றோம்.ஒரு உடும்பைத்தானும் பிடிக்க முடியாத காலம். அந்த வாடியில் சமைத்து சாப்பிட்டவுடன்,நண்பர் ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.

 நாம தங்கியிருக்கிற வாடியிலிதான் போன மாசம் ஒருவர யான அடிச்ச. ஒரு ஆள் மௌத்து மத்தவர்ற கால் உடைஞ்சிட்டு .ஏனென்றா அவர் செத்த மாதிரி படுத்திருக்கிறார். ஊரில் பரபரப்பாக பேசப்பட்ட விடயம். அது நிகழ்ந்த களத்தில் நாம் பொறியில் அகப்பட்டது போல் நிற்பது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.உடைந்த காலுடன் வீட்டில் படுத்தவரை நான் பார்த்து விட்டு வந்திருந்தேன். யானை எப்படி வந்தது அதன் மூர்க்கம் நெல் மூட்டைகளை அது உறிஞ்சிக்குடித்த இலாவகம் உள்ளிட்ட எல்லாவற்றையும் அவர் ஒரு திகில் படம் பார்ப்பதைப்போல சொல்லி முடித்தபோது அது பெரிதாக என்னில் தாக்கம் செலுத்தவில்லை.முகம் குப்புறப்படுது;திருந்த அவரைக்காப்பாற்றியது அந்த நெல் மூட்டைதான் என்றார்.

இடுப்புக்ழன்று போனது வயல்  அறுவடைக்காலம் என்பதால் தூரத்தில் வாடிகளில் லாந்தர் விளக்குகளில் மினுக்கம் தெரிந்ததது.நுளம்புகள் புழுதியைப்போல் வந்து அப்பிக்கிடந்தன.சித்தாலேப தைலத்தை கால் முழுக்க பூசிக்கொண்டு உறவுக்காரர் சொன்ன திகில் படத்தின் காட்சிகள் அரங்கேறுவதான பிரேமை என்னைத்தொற்றிக்கொள்ள கால்களுக்குள் தலையை புதைத்தபடி இரவைக்கழித்தேன்.

 இடைப்பட்ட பகுதியில் கும்மிருட்டு யானை அருகில் வந்து ஸலாம் சொன்னால்தான் தெரியும்.யானைவரும் வழியில் வயற்காரர்கள் காவல் நின்றார்கள்.விடிய விடிய நெஞ்சைப்பிடித்தபடி அந்த வாடிக்குள் குந்தியிருந்தோம்.சிலர் முயல் வேட்டைக்குப்போய் ஈற்றில்  அரைக்கிலோ பெறுமதியான முயலொன்றுடன் வந்தார்கள். 

காலையில் ஆற்றுக்குப்போய் ஒரு குளியல் போட்டோம். முன்பு குளித்த ஏனைய ஆறுகள் போல் ரசித்துக் குளிக்க முடியாத நீரோட்டம். என்றாலும் பகற்பொழுது வரை நீர் யானைகளைப்போல் நீந்திக்களைத்து கரையில் படுத்து,மறுபடியும் ஆற்றில் குதித்து, தூண்டிலில் மீன் பிடித்து அந்தக்காட்டை அதிர வைத்தோம். மாலையானதும் வரிந்து கட்டிக்கொண்டு காட்டை விட்டு கிளம்பிவிட்டோம்.

காடுகள் திகிலையும் ஆச்சரியத்தையும் மரணவலியையும் பாதுகாப்பையும் தந்தன என்பதை நினைக்கையில் எவ்வளவு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது.


எங்கள் தேசம் 235                          ஊஞ்சல் இன்னும் ஆடும்….

Friday 14 December 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்



29

நடுக்காட்டில் திடீரென ஒரு ட்ரக்டர் சேற்றில் புதையுண்டது.இறங்கித் தள்ளிப் பார்த்தோம். முடியவில்லை. பெட்டியின் இரு ரயரும் ட்ரக்டரின் முன் ரயரும் முழுமையாக சேற்றினுள் அமிழ்ந்திருந்தன.அச்சம் தொற்றிக்கொண்டது. யானைகள் வந்து போன கால் தடங்கள் சேற்றில் புதையுண்டிருந்தன. 

இராட்சத இலைகளாக அதன் காலடிகள் பூமியில் அச்சடித்து காய வைத்தது போல் எங்கும் நிறைந்திருந்தது. திரும்பிச்செல்லவும் இயலாத தூரத்திற்கு வேறு வந்து விட்டிருந்தோம்.ரைவர் மிகவும் சாமர்;த்தியமானவர்.புதையுண்ட ரயரை வெளியே எடுக்க மிகுந்த பிரயத்தனமெடுத்தார். குழுப்பணி செய்யப் பயிற்றுவிக்கப்பட்ட நாம் காடுகளில் அலைந்து நாறும் கம்புகளும் வெட்டி வந்து மெசின் ரயரை மேலெழுப்பி பயணத்தைத்தொடர்ந்தோம்

.வில்பத்துக்காட்டின் தொடர்ச்சி என்றார்கள் புத்தள நண்பர்கள்.புத்தளத்தில் ஆற்றுக்குப்போவதற்கு ஒரு நாளை ஒதுக்கிவிடுவார்களாம்.உடுத்திருக்கும் ஒரு சாரம் மட்டும்தான். காலையிலிருந்து மாலை வரை நீருக்குள்ளேயே நேரம் கழியும்.சாப்பிடுவதும் நீருக்குள் அமர்ந்தபடி. ஈரச்சாரனுடன் கரையில் வந்து தொழுது விட்டு மறுபடியும் நீர்க்காகம் போல் தண்ணீரில் குதித்து விடுவார்கள்.ஆற்றைக்கண்டவுடன் எங்களுக்கும் அப்படித்தான் தோன்றியது.

காடு பெருகியபடிச்சென்றது.அதன் போக்கில் நாங்களும் அள்ளுண்டு சென்றோம். ஈற்றில் அழகான ஆற்றோரம் இறக்கி விட்டு காடு அவ்விடத்திலேயே அமர்ந்து கொண்டது.

மாலை வெய்யிலில் ஆற்றின் முதுகில் சிற்றலைகள் ஆரோகணித்துச்செல்லும் அழகே தனி அழகு.ஆற்றின் மறுகரையிலும் அடர்ந்த வனாந்திரம் விரிந்து கிடந்தது.இரு மருங்கிலும் இராட்சத மரங்கள். கூடாரங்களை அடித்து பொருட்களை இறக்கி வைத்தோம்.

 மாலைக்குள் ஒரு குளியல் போட்டு ஆளுக்கொரு வேலையாக இழுத்துப்போட்டு சமையல் வேலைகளில் ஈடுபட்டோம். விறகு பொறுக்க சிலர் சென்றனர்.விறகுக்கா பஞ்சம். நெருங்கி வரும் இரவை சமாளிக்கவும் அது கொண்டு வரும் குளிரை எதிர்க்கவும் விறகு தேவை.குவியலாக கொண்டு வந்து குவித்தார்கள்.பனி மழை பொழியத்தொடங்கியவுடன் தீ கங்குகள் மேலெந்து அதை உலர வைத்தன. கூடாரத்தைச்சூழவும் நடுக்காட்டில் அமர்ந்தபடி நள்ளிரவு வரை கதையளந்தோம்.

ஆற்றில் நீண்ட நேரம் விளையாடியதால் களைப்பு மேலிட்டது.அடிக்கடி ஒரு பிளேன்றீ தேவைப்பட்டது.இந்தக்கால சுற்றுலாக்களில் மதுவும்,இசையும் வாஜிபு என்பது போல் நம்மவர்கள் மாற்றிவிட்டார்கள்.

ஆடம்பரமில்லாமல் இறைவனின் அற்புதங்களை அனுபவிக்கவும் இரசிக்கவும் இயலாத நவநாகரீக மோகத்தினுள் நாம் விழுந்து இறங்கிக்கொண்டிருக்கின்றோம்.பார்ப்பதற்கும் அனுபவிப்பதற்கும் இந்தப்பூமியில் இயற்கை கொட்டிக்கிடக்கின்றது. 

வீதிகளில் கும்மாளமிட்டு ஆடிப்பாடி தெருக்களில் குடித்து மிருகங்களைப்போல் அலைவதைத்தான் பெஷன் என்கிறார்கள்.சுற்றுலா என்கிறார்hகள்.காலிமுகத்திடல் குடைக்காட்சிகளும்,காலி வீதியின் கடற்கரை காட்சிகளும், ஹம்பாந்தோட்டை வரையிலான இறுசல் காடுகளின் நிழல்காடுகளில் அரங்கேறும் அசிங்கங்களும் படைத்தவனை மறந்த சுற்றுலாக்களாக மாறிவிட்டதை நமக்குக்காட்டுகின்றன.

தூங்கிய சற்றைக்கெல்லாம் காவலுக்கு நின்றவர்கள். அலறியபடி வந்தார்கள்.நெருப்புக்கங்குகள் ஓவொன்று எழுந்து நின்றன.என்னவென்று எழுந்து வந்தோம். ஆற்றின் மறுகரையில் யானையின் பிளிறல். செவிட்டில் அறைந்தாற்போல் விழுந்தது.மங்கிய நிலவொளில் கருப்பனின் அசைவு தெரிந்தது.

 அமைதியான அதன் வாழிடத்தை குலைக்க வந்த குளவிக்கூட்டமாய் எங்களை அது பார்த்திருக்க வேண்டும். நாங்கள் என்ன  சும்மாவா இருந்தோம்? பதினைந்து இள இரத்தங்களின் கொண்டாட்டக்கூச்சலில் அமைதியின் இப்பிடமான  வனத்தின் அவஸ்தை யானையின் உருவில் வந்து நின்றது.  காடே அதிரும்படி பிளிறியது. மரங்களை சகட்டு மேனிக்கு உரசியபடி சன்னதம் ஆடும்  அதன் மூர்க்கம் எங்களை கிலி கொள்ளச்செய்தது.

 எரியும் நெருப்புக்கட்டைகளை தூக்கி காட்டி போவென்று ஒருவர் சைக்கினை செய்தார்.யானைக்கு தீ என்றால் பயம். புத்தளம் நண்பரிடம் ஒரு துவக்கும் இருந்தது.ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். என்றார்.வனவிலங்கு திணைக்களத்தின் பாதுகாவலர் அவர்.யானைக்கும்  எமக்குமிடையே தடையாக இருப்பது ஆறு மட்டும் தான் அது தன்பாட்டில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்து.

கூடாரத்திற்குள் சிலர் நடுங்கியபடி ஒடுங்கிக்கிடந்தனர்.தொடை நடுக்கம் என்பார்களே அதை அன்றுதான் அனுபவித்துப் பார்;த்தோம். கூடாரத்தை சுற்றிலும் நெருப்பு அரணாக பச்சை விறகுகள் எரிந்து கொண்டிருந்தன. யானையின் கோபம் தனி வதாக இல்லை. அவ்வவ்போது அதன் எதிர்ப்பை மறு முனையில் நின்றபடி வெளிப்படுத்தியது.அடர்ந்த வனத்தின் கிளைகள் மூர்க்கமாக ஆடியதை நிலவொளியில் பார்த்தபடி நின்றிருந்தோம்.

 மனதை விட்டும் அகலாத ரம்யமாக காட்சி அது. அமைதியாக ஓடும் பிரமாண்டமான ஆறு.அதன் மறுகரையில் சன்னதம் ஆடும் யானைக்கூட்டம்.குளிர்ச்சியான நிலாக்கீற்றின் மினுக்கம் ஆற்றின் முதுகில் ஜிகினா காட்டியபடி…மிக இளமையான காற்று. 

அச்சத்திலும் மலைக்க வைத்த இறைவனின் விந்தையான படைப்பின் இரகசியம் என்னை மெய் மறக்கச்செய்த தருணங்களில் இதுவும் ஒன்று. மறுநாள் பொழுது புலரும் வரை தூங்கவில்லை.அறுப்பதற்கு கொண்டு வந்த ஆடு மட்டும்  எந்தக்கவலையுமின்றி ஆற்றோரம் அசைபோட்டபடி நின்றிருந்தது.

எங்கள் தேசம் : 235                                                                 ஊஞ்சல் இன்னும் ஆடும்……..



Sunday 2 December 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்



                      28


ருவர் மட்டும் வரும்படி சைகையில் காட்டினார்கள்.நான்தான் சென்றேன். ட்ரவலின் பேக்கை வைத்து விட்டு வரும்படி  மறுபடியும் கத்தினான். கைகளை உயர்த்தும்படி மற்றொருவன் கூச்சலிட்டான்.கைகளை உயரே தூக்கியபடி இராணுவ முகாம் அண்டையில் சென்றேன். 

துருவித்துருவி விசாரித்து விட்டு அலசி அலசி சோதனையிட்ட பின்பு மற்றவர்களையும் கைகளை உயர்த்தியபடி வரும்படி சைகை காட்டினார்கள்.எல்லோரையும் சோதித்து விட்டு ம்.. ஏறுங்கள் ஜீப்பில் என்றார்கள் .

 மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் ஆறு மைல்கள் நடக்க வேண்டும் என்ற மனக்கஷ்டம் மறந்து போனது. ஆர்வமுடன் பாய்ந்து ஏறினோம். இரானுவத்தினர் திறந்த ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வாழைச்சேனைக்கு வந்தார்கள்.

ஓட்டமாவடி பசாரில் சில கடைகளில் நிற்பாட்டி எங்களை தெரியுமா என அடையாளம் கேட்டார்கள்.ஓம் எங்கட ஊ+ருப்பொடியன்கள் என்றவுடன், சாவன்னாட சந்தியில் இறக்கி விட்டுப்போனார்கள்.தெரியாது என்றால் இருக்கவே இருந்தது வெற்று ரயர்கள், போட்டு எரித்து விட்டுத்தான் மறு வேலை

.ஏனெனில் அக்காலங்களில் புலிகள் முஸ்லிம்கள் போல் வேடமிட்டும் ஊருக்குள் நுழைந்து வேவு பார்த்து வந்தனர்.இராணுவத்தினதும் புலனாய்வுப்பிரிவினதும் கண்களில் மண்னைத்தூவி விட்டு அடிக்கடி வந்து போவதால் தொப்பி போடுவதும் முஸ்லிம்கள் தம் அடையாளங்களை பின்பற்றுவதும் பெரும் சவாலாய் இருந்தது.ஜீப்பில் பாய்ந்து ஏறிய மகிழ்ச்சியை இந்த விசாரணைகள் துடைத்தெறிந்தன.

வீட்டுக்கு வந்தவுடன் மரணத்திற்குத்தப்பி வந்தவர்கள் என்ற பிரமிப்புடன் ஊரே திரண்டு வந்து வியப்புடனும் ஆறுதலுடனும் பார்த்து விட்டுச்சென்றது.

மரத்தால் விழுந்தவனை மாடு முட்டியது போல் ,அன்று மாலையே அபத்தமான செய்தி காட்டுத்தீ போல் பரவத்தொடங்கியது. முள்ளிவெட்டவான் கடைக்கு முன்னுள்ள புளியமரத்தில். வாப்பாவும் தம்பியும் தொங்குவதாகவும் முஸ்லிம் ஆக்கள் காட்டுப்பாதையால் தப்பி புனானைக்கு வந்து கொண்டிருப்பதாகவும் அந்த வதந்தீ வேகமெடுத்தது 

இந்தக்காலம் புலிகள் முஸ்லிம்களின் இரத்தத்தால் யாகம் நடாத்திய துர்க்காலம்.உறவினர்கள்,ஊர் மக்கள் என பெரும் படை பொலிஸ் இரானுவத்தின் உதவியுடன் முள்ளிவெட்டவானுக்கு புறப்பட ஆயத்தமானோம்.

வாப்பாவுக்கும்,தம்பிக்கும் அப்படியொன்றும் நடக்கவில்லை என்றும் காட்டுவழியால் தப்பி வருகிறார்கள் என்றும் பிந்திய செய்தி கிடைத்து.அலைந்துழல்தலின்  முதல்படி இங்கிருந்துதான் ஆரம்பமாயிற்று.

நாங்கள் நேசித்த தோட்டத்தை, கடையை, கதைக் களமான புளியமரத்தை, ஆடுகளை,மாடுகளை,நீந்தி விளையாடிய ஆற்றை, வயல் வெளியை, ஓடையை,கோல்டன் மீன் நீந்தும் குளத்தை,திராய் செடி நோண்டும் வயல் வெளியை  பனை மரங்களை,காடுகளை தலை தாழ்த்தி மேயும் கோழிகளை,அவ்வப்போது எட்டிப்பார்க்கும் பாம்புகளை,முற்றத்தில் கூட்டமாய் இறங்கி மேயும் மணிப்புறாக்களை இனிய புல் வெளிக்கனவுகளை இழந்து வெறும் கோதுகளாக திரும்பினோம்.

காடு என்றவுடன் மற்றுமொரு நினைவுகளையும் மனம் உசுப்பிப்பார்க்கிறது.
காடுகள் மனிதனுக்குத்தரும் படிப்பினைகள் அனந்தம்.

அற்புதமான,ஆனால் அழகான அனுபங்களை காடுகள் நமக்குத்தருகின்றன.அப்படியொரு இனிமையான நினைவுகளை  யுத்தம் நின்றவுடன் காடு எனக்கு வழங்கியது.

2006ம்ஆண்டு என நினைக்கின்றேன்.கொழும்பில் வேலை பார்த்தபோது எனது நிறுவனத்தினால் ஒரு சுற்றுலா செல்ல ஏற்பாடுகள் நடந்தேறின

.நுவரெலியா,ஹம்பாந்தோட்ட பொத்துவில், பாசிக்குடா, காலி,என இடங்களை தெரிவு செய்த போது எல்லாமே சென்று இடங்கள் என ஓரங்கட்டப்பட்டன.ஈற்றில் புத்தளம் தெரிவு செய்யப்பட்டது.

மூன்று நாள் பயணம்.புத்தளத்திலிருந்து எலுவான்குளத்திற்குச்சென்றோம். எலுவான் குளம் வரை எமது வாகனத்தில் செல்வதென்றும் அங்கிருந்து காட்டுவழிப்பயணத்திற்கு இரண்டு ட்ரக்டர்களில் செல்வதென்றும் தீர்மானித்தபடி எலுவான்குள நண்பர் ட்ரக்டர்களுடன் தயாராக இருந்தார். ஆற்றுக்குப்போக ஒரு எட்டு மைல் இருந்தது. பொருட்கள் ஏற்றப்பட்ட ட்ரக்டர் காட்டுப்பாதையால் உறுமியபடிச்சென்றது. 

யானைகளின் விட்டைகளும் காலடித்தடங்களும் அவ்வப்போது கண்களில் பட்டன. வனத்தின் அடர்த்தி நீக்கமற எங்கும் நிறைந்திருந்து.கண்ணுக்கெட்டிய தூரம் வரை இறுசல் காடே எம்மை அழைத்துச்சென்றது.இப்படியொரு வனத்திற்குள் வருவது இது தான் முதற்தடைவ. இதற்கு முன்பு சென்ற காடுகளில் இவ்வளவு அடர்த்தியும் விசாலமும் இல்லை.சூரியக்கண்களால் பூமியை பார்க்கவே முடியாதபடி சில இடங்களில் மரங்கள் பிண்ணியபடி காட்சியளித்தன.  புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

எங்கள் தேசம் : 234                                                               ஊஞ்சல் இன்னும் ஆடும்……..



  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...