Tuesday 21 February 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

 
 தொடர் -08

தோட்டத்திற்கு முன்னால் பெரிய ஆட்டுப்பட்டி.
இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட செம்மறியாடுகள். அடர்ந்த உரோமங்கள்,சதா துக்கம் நிறைந்த கண்களுடன் பூமியை உற்று நோக்கிய படி அந்த ஆடுகள் தனித் தனியே பிரிந்துதான் படு சுறுசுறுப்பாக மேய்ச்சலுக்குச்செல்லும்.

அவை எம்.கே. ஹாஜியாரின் பட்டி. அவரின் பூர்வீகம் இந்தியா.ஆடுகளை கவனிப்பதற்கென நிரந்தரமாக இரண்டு குடும்பங்கள் குடிசைபோட்டிருந்தன. ஹாஜியார் வாரமொரு முறை வியாழக்கிழமைகளில் வருவார்.

முகடு திறந்த ஜீப் வண்டி புழுதியை இரைத்தபடி கடை முன்றலில்தான் தரித்து நிற்கும்.வாப்புப்பாவிடம் அவருக்கு கொள்ளைப்பிரியம் இரண்டு பேரும் சிரித்தபடி ஆடுகளைப்பார்க்க கிளம்பிப்போவார்கள். அவரின் ஜீப்புக்கள் தொழுவதற்கான முசல்லா, தண்ணீர் பாய் உட்பட அனைத்தும் இருக்கும்.
 
ஹாஜியார் சென்ற பின்பும் ஓரிரு நாட்கள் அவர் விட்டுப்போன ஜன்னதுல் பிர்தவ்ஸின் நறுமணம் புளிய மரத்தைச்சூழவும் கமகமக்கும்.

சற்று தொலைவில்  பரந்து கிடக்கும் வயல் வெளி. வயலையும் குளத்தையும் பிரிக்குமாற் போல் இராட்சத பாம்பாய் படர்ந்து நீளும் குளக்கட்டு. வயலைத்தாண்டி விழுந்தால் மாந்துரை ஆறு.

எங்கள் அடுப்படியில் எப்போது உலை கண் மூடும் என்று தெரியாது.புசுபுசுவென்று அடுப்பெரிந்து கொண்டே இருக்கும். சதா ஆக்கி கொட்டுவதற்கு அக்காமார்கள். பாக்கியம்,திரவியம், ராசாத்தி. நீங்கள் எங்கிருக்கின்றீர்கள் என்ன ஆயிற்று உங்கள் அந்திமம்.
 இது வரை தெரியாது.

தங்கைகள் இருவரும் வாகநேரி தமிழ் கலவன் பாடசாலையில் படிக்க போவார்கள். நான்கு மைல் தெலைவு. நடந்து போய் மறுபடியும் நடந்தே வருவார்கள். சைக்கிளில் வரும் தெரிந்தவர்கள் ஏறச்சொன்னாலும் ஏறிவரவேமாட்டார்கள். நடப்பதில் அப்படி ஒரு சுகம் அவர்களுக்கு. 
 
'மில்க்போர்ட்' சந்தி வரை கலகலவென்று வெண்புறாக்கூட்டம் கலைவதைப்போல் மற்றப்பிள்ளைகள் விடைபெற அவர்கள் மட்டும் மீதியிருக்கும் ஒரு மைல் தூரத்தை தனித்து நடந்து வந்து விடுவார்கள்.

இருந்தாற்போல அவர்களுக்கும் சைக்கிள் சவாரி வாய்த்து விடும்.ஊரிலிருந்து வரும் சாச்சாமார்களின் சைக்களின் முன்னே ஒருவரும் பின் கரியறில் ஒருவருமாக கலகலப்பாக வந்து இறங்கியவுடன் உம்மாவின் நக்கல் வந்து வாசலில் விழும்.  
 
“ என்னடி குளக்கட்டு நாளக்கு உங்கள கோவிக்காதாக்கும்..”

அந்தப்பாடசாலையில்தான் எனது மாமிமார்களும் சாச்சாமார்களும் படித்ததாக வாப்புப்பா சொல்வார்.

வாப்புப்பாவின் கடைக்கு வன்னியனார் கடை என்றால் பிரசித்தம். புளியமரத்தடிக்கடை என்பது பின்னாளில் மருவிற்று, கடை என்றால் கிராமத்திற்குரிய அசல். அகன்ற புளியமரம், கடைக்கு முன்னால் குரல் நீட்டி முழங்கும் ரோடியோ. ஒரு சோகேஸ்.

அதற்குள் கொஞ்சூண்டு தயிர் வடை, போலை, பாலப்பம், வண்டப்பம், லெவரியா (கோழிஅப்பம்) கவண்ரொட்டி,தட்டு ரொட்டி.உம்மாவினதும் வாப்பாவினதும் கைவண்ணத்தில் தயாராரிக்கப்பட்ட பண்டங்கள்.

சில தட்டுகளில் பியான் ரோல்,பனிஸ், அட்டக்கேக், யானக்கத்தா,ரோஸ்பான், வட்டர்,கட்டப்பான் (ஆட்டுக்கால்) கொழும்பு வட்டர் பான் வகையறாக்கள்.

கடை பென்ஜில் எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். யாழ்ப்பானத்து பாணிச்சுருட்டும்,பீடியும் வாயில் இருக்க தம்பி,பிரபாகரனிதும்,ஜே.ஆரினதும் அரசியல் சாணக்கியங்கள் பற்றிய கதைகள் சூடுபறக்கும். வாப்பா டீ ஆற்றுவதில் ஒரு கண்ணும் ‘சோகோசி’ல் ஒரு கண்ணுமாய் இருப்பார்.

இரண்டை விழுங்கி விட்டு ஒன்றுக்கு கணக்கு விடுபர்கள் கையும் களவுமாக அவரிடம் கடன் பட்டு சொல்லி கழன்ற கதைகளும் முன் பென்ஜில் இருப்பவர்களால் ஹாஷ்யமாக சொல்லப்படும். கொல்லென்ற சிரிப்பினிடை எட்டி நின்று மேயும்  அவிழ்த்து விடப்பட்ட காளைகளின் கழுத்து மணிஓசையும் சேர்ந்து கொள்ளும்.

பட்டிதொட்டியெல்லாம் பால் சேகரிப்பவர்கள்,மீன்வியாபாரிகள்,புல் அறுக்கச்செல்பவர்கள்.கீரை அறுக்கும் கூட்டம்,கரை வலை வீசுபவர்கள் என்ற அடிமட்ட தொழிலாளியும், போடிமாரும் ஒன்றாய் கலப்பதற்கும் கதைப்பதற்கும் புளியமரத்தடிக்கடை வாகாக இருந்ததது.

வாப்புப்பாவின் ஹாஷ்யத்திற்காக அவர் வாயைக் கிளறிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் அதிகம். இன்சிப்பிளேன்றியுடன் லெவரியாவைக்கடிக்கும் போடிமார் மட்டும் வெற்றிலை வட்டுவத்தை உருவி விட்டபடி இருப்பர்.

அதற்குள் பாக்கு சீவல், சுண்ணாம்பு டப்பா, ஏலக்காய்,சாதிக்காய்,கராம்பு, வெற்றிலை,புகையிலைத்துண்டுகள்.கையிப்பு.

 கையிப்புத்தகட்டுக்குப்பெயர் போன இடம் ஏறாவூர், வட்டுவத்திற்குள் அறையாகப்பிரித்து இவைகளை போடிமாரின் பெண்டிர் அடுக்கி வைத்திருப்பவர். சுற்று மெதுவாக மெல்ல சின்ன உரலும் துவைப்பதற்கு ஆணியும் இருக்கும்.

 பாக்குச்சீவலை உரலுக்குள் இட்டு, வாசனைப்பொருட்களையும் இட்டு துவைக்கும் ஓசையுடன் ஊர் வம்பும் பசைபோல் அரைபடும்.

எங்கள் கடைக்கு முன் எப்போதும் ‘தீனா’(தீக்கிடங்கு) எரிந்து கொண்டிருக்கும்.பச்சை மரங்களை வெட்டிப்போட ஆட்கள் இருந்தார்கள்.

மஃரிபு நேரத்தில் ஊரிலிருந்து வரும் மாட்டு வண்டிகள் இங்கு தரித்து விடும். கரத்தைகளின் கீழ் தொங்கும் லாந்தரின் மினுக்கம் கண் சிமிட்டி வாவென்று அழைப்பது போன்றிருக்கும். 
 
வால் வண்டிலில் ஒரு சாக்குப்பை கட்டப்பட்டிருக்கும். அதற்குள் கத்தி மண் வெட்டி உள்ளிட்ட சட்டி பானைகளும் அடக்கம்.

 யானைகளுக்குப் பயந்து வண்டில்காரர்கள் புளியமரத்தடியில் குவிக்கப்பட்டிருக்கும் ஆற்று மணலில் படுத்துக்கொள்வார்கள்.

தீனாவைச்சுற்றி மாடுகள் நுளம்புகளை விசுக்விசுக்கென வாலால் விரட்டியபடி அசைபோட்டு நிற்கும். இந்த மாடுகளுக்கு நல்ல ஞாபக சக்தி.

 வண்டி ஓட்டிக்கொண்டு வருபவர்கள் கண் மூடிப்படுத்தாலும் வழக்கம் போல் தரித்து நிற்கும் கடைகளில் மாடுகள் சற்று இளைப்பாற நிற்கும். யாராவது தட்டி எழுப்பினால் உண்டு. இல்லாவிட்டால் என்ன தேனீர் குடித்து மீளவும் ஏறும் நாழிகை அதற்கு அத்துப்படி.வண்டிக்காரன் எழும்பாவிட்டால் அரை மணி நேரத்திற்குள் காளைகள் நடையைக்கட்டும்.

இடையில் சக வண்டில்களுக்கும்,ஏனைய பிரயாணிகளுக்கும் வழிவிட்டபடி ஐந்தறிவு ஜீவன்களின் பயணங்கள் தொடரும். செக்கலுக்குப்பின் வண்டியோட்டிகள் தூங்கவேமாட்டார்கள்.

 வனப்பாதையில் மாடுகள் நேரே பழகிய  பாதையில் சென்று விடும். யானைகளின் தொல்லைகள் அதிகம் என்பதால் புளியமரத்தடி கடை வரை விழித்துக்கொண்டு வருவர்.லாந்தரின் திரி கீழிறங்கும்.

பனியை ஊடறுத்து புகைச்சுருள்கள் மேலேகும். இடையிடையே வண்டிக்காரர்கள் எழுந்து சுருட்டை பற்ற வைத்து இழுத்தபடி தீயைச்சுற்றி அமர்ந்திருப்பர்.உள்ளங்கைகளை ஜ்வாலையில் காட்டி முகத்தில் தடவிவிட்டபடி சாமத்திலும் சிரிப்பும் கேலியும் கடையைச்சூழவும் ஒளி வட்டமாய் பிரகாசிக்கும்.
வாப்புப்பா பெரிய தும்பட்டியால் தன்னை மூடிச்சுற்றிக்கொண்டு பிளேன்றியுடன் வந்து விடும் தருணங்கள் மகா அற்புதமானவை. நெருப்புக்கங்குகள் திகுதிகுவென எரியத்தொடங்கும்.

எங்கள் தேசம் - 215
ஊஞ்சல் இன்னும் ஆடும்.....

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...