Sunday 8 July 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


தொடர்- 18

நான் சாச்சாவுடன் வனத்திற்குள் வந்த கதைக்கு மீண்டும் வருகின்றேன். இடைவழியில் சந்திப்பதற்கு இப்படி நிறைய சமாச்சாரங்கள் வரும்
சாச்சா கடையைப்பரத்தி சாமான்களை அடுக்கினார். இன்னும் பலர் எங்களுக்கு முன் வந்து கடை பரத்தியிருந்தனர். சர்பத் கடை. தும்பு மிட்டாய், கலர் விசிறி,காகிதக் கண்ணாடி, உப்பிப்பெருத்த பலூண்கள்,பலூன்களில் பல ரகங்களையும் ஊதி ஊதி சாச்சா கடைப்பந்தலில் கட்டித்தொங்கவிட்டார்.

காப்பு,தலைப்பூ,கண்ணாடி வளையல்கள் பிளாஸ்ரிக் அய்ட்டங்கள்,கலர் கலரான மாலைகள்,முத்துக்களால் கோர்க்கப்பட்ட வளையல்கள். என கண் கவர் சாமான்கள் எங்கள் கடையில் மின்னின. கூட்டம் நிறைந்தது. முதல் நாள் எதையும் வாங்கவில்லை தொட்டுப் பார்த்துவிட்டு கலைந்து போனார்கள்.

இன்றைய திருவிழாக்களில் நடப்பது போல் காதை சல்லடையாக்கும் இசை கச்சேரிகள்,தொட்டுப்பார்க்க விதம்விதமாக சுந்தரிகள் அவர்களை தொடுவதில் நானா நீயா என்ற போட்டிகள், அதனால் வரும் குண்டு வெடிப்பு, கத்திக்குத்து ,கோஷ்டி மோதல். எதுவும் இல்லை.

அன்றை திருவிழாக்கள் தற்போது போல் அரிதாரம் இல்லாமல் யதார்த்தமாக நடைபெற்றதை பார்த்திருக்கின்றேன்.புதிய பாத்திரங்களில் சமையல் நடக்கும்.கடவுளுக்கு கிடாய் வெட்டுவதுண்டு. ஸ்பீக்கர் இல்லை. சௌந்தரராஜன்,சீர்காழி கோவிந்தராஜன்களின் பக்திப்பாடல்கள் இல்லை மேளதாளம் இல்லை.

ஈற்றில் பிரமாண்டமான இன்னிசைக் கச்சேரியும் திண்டுக்கள் ஐ லியோனி முழுமத்தின் பட்டிமன்ற வகையறாக்கள் எதுவுமில்லை.தென்னிந்திய நடனசிரோன்மணிகளின் நாட்டியமும் இல்லை. எனினும் திருவிழாக்கள் களைகட்டி இருக்கும். 

மூன்று நாட்களும் அந்தக்காட்டில்தான் சோறும் தூக்கமும்.முஸ்லிம்களின் மார்க்கமும் பெரும்பாலும் அவர்களுடையப் போன்றுதான் இருந்தன. தொழுகை இல்லை.காட்டில் இருந்தாலும் படைத்தவனை வணங்க வேண்டும் என்ற உணர்வில்லை. உழைப்பும்,தொழிலும்தான் பாடு என்றிருந்தனர்.

காட்டில் உறங்குவதும்,ஆற்றில் குளிப்பதும் திருவிழாவில் தரும் உணவை உண்பதுமாக நாட்கள் கடந்துவிடும்.வெறும் பைகளை மட்டும் காவிக்கொண்டு ஊருக்குத் திரும்புவோம்.

இன்று வியாபாரத்திற்குச்சென்று திரும்பினால் செக் தாள்கள்தான் மிஞ்சி நிற்கும்.அதிலும் செல்லுபடியற்ற செக்குகளின் மௌனத்தூக்கம் வியாபாரியை அச்சுறுத்தியபடி சதா அவன் பைக்குள் கிடந்து உறுமிக்கொண்டிருக்கும்.

எனக்கு காடு இன்னுமொரு அனுபத்தையும் தந்தது. அது கள்ளராசாவின் காலம்.

1982 களில் கள்ள ராசாவினதும் அவனின் தோழர்களினதும் அட்டகாசங்கள் தலைவிரித்தாடின. சன நெரிசலற்ற வீடுகளில் வந்து கொள்ளை அடிப்பதும் கொலை செய்வதும் அவர்களின் தொழிலாக இருந்தது. 

பொத்தானை,கள்ளிச்சை,காரமுனை மினுமினுத்தவெளி போன்ற இடங்களில் அவன் தன் கை வரிசையைக்காட்டிக் கொண்டிருந்தான்.தனியாக இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து பெண்களை வல்லுறவு செய்வதால் பெண்கள் நடுங்கிப்போய்க் கிடந்தார்கள்.

அப்போது மின்சாரம் பரவலாக இல்லாத காலம்.குப்பிலாம்பின் மங்கிய வெளிச்சத்தில் படித்தவர்கள்தான் அதிகம்.நானும் அப்படித்தான் படித்தேன். எங்கள் வீட்டில் குப்பிலாம்பு என்பது சிம்மினியோ, லாந்தரோ இல்லை. வெற்றுக்குப்பியில் திரியைப்போட்டு மேலே ஒரு சோடா மூடியால் அடைத்து லாம்பாக பயன்படுத்துவார்கள்.

 நான் விடுதியில் இருந்த காலம் இரவில் லைட்டை அணைத்து விடுவார்கள் கண்விழித்து கொஞ்சம் படிக்க குண்டு பல்புக்குள் எண்னெய் ஊற்றி திரியை நுழைத்து லாம்பாக பயன்படுத்தியிருக்கின்றேன். 

ஸ்கிறீன்,புரஜக்டர்கள் இல்லாத காலம்.டிவி கேம்,மொபைல் எஸ்.எம்.எஸ்கள் எதுவும் தெரியாது.இப்படித்தான் பெரும்பாலானவர்களின் கல்வித்தாகம் தீர்ந்தது.

 நாங்கள் முள்ளிவெட்டவானில் வாழ்ந்த காலத்தில் இந்தக்கள்ளராசாவின் அராஜரகம் குறித்து அதிகம் பேசப்பட்டது.

அவன் எங்கே எப்போது வருவான் என்று சொல்ல முடியாது.பொலிஸ் ஆமி கெடுபிடிகள் எல்லாம் பெரிதாக இல்லை.இயக்கமும் இங்கு காலூன்றவில்லை.கள்ளராசா தண்டயல் ஆனதற்கு இதுவும் காரணம்.ராசாவின் பெயரைச்சொல்லி சும்மா கிடந்த கள்ளர்களும் கோழி ஆடுகளைத் திருடினாலும் அது ராசாவுக்கு பெரிய அவமானமாக தெரியவில்லை.ஏனெனில் ராசா களவையும்,பிறர் மனை துய்ப்பதையும் தெய்வமென நினைத்து வாழ்ந்தவன்.

மாலையானதும் கடையை மூடிவிட்டு அன்றைய வியாபார சில்லரைகளையும் அள்ளிக்கொண்டு அயலில் இருக்கும் காட்டுக்குள் சென்று விடுவோம்.விடியவிடிய காடும் இருளும் அத்வைதமாகிப்போகும். இரவில் காடுகளுக்குள் வசிப்பது என்பது ஒரு திகில் அனுபவம்.

அது தமிழ் மக்களுக்கு போராட்ட காலத்தில் வலாயப்பட்டுப்போனது.நுளம்புகள் சகட்டுமேனிக்கு கடித்துக்குதறும் .காட்டு நுளம்புகள் ஒரு பறவையைப்போல் வட்டமிட்டு ரீங்காரமிடும். நச்சுப்பாம்புகளுக்கும், பிற விஷ ஜந்துகளுக்கும் பயப்படவேண்டும்.வெளிச்சம் காட்ட முடியாது.இருமல் தும்மல் போன்ற உபாதைகளை அடக்குவது பெரும் அவஸ்தை.

கைக்குழந்தை இருந்தால் அதைவிட அவஸ்தை இல்லவே இல்லை. குழந்தைக்கே உரிய குறும்புத்தனங்களை மறக்கச்செய்யவேண்டும். காட்டுக்குள் அது விடியவிடிய தாயின் மடியில் தூங்க வைக்க இருக்கவே இருந்தது அக்காலத்தில் குதிரைப்யிலுவான் லேகியம். உம்மா எனது தம்பிக்கு அதை கொஞ்சம் வாயில் கிள்ளிப்போட்டு தூங்க வைப்பா.உம்மாவை நிகர்த்த பல உம்மாக்களின் தூக்க மாத்திரை இதுவாகத்தாதன் இருந்தது.விசமம் புரியும் குழந்தைகளின் சிம்மசொப்பனமாமக குதிரை லேகியம் பிரபல்யம் பெற்றது இப்படித்தான்.

காடுகள் பிற்காலத்தில் வசீகரமானதற்கு கள்ளராசாவின் பிரசன்னம் காரணியாக அமைந்தது என்னவோ உண்மைதான்.காடுகள் எங்களின் உயிர்களையும் மானத்தையும் காப்பற்றியுள்ளது. காடுகள் வாழ்க்கையின் குறிக்கோள்களை கற்றுத் தந்தது. காடுகளின் அரவணைப்பில் பல இரவுகள், பகல்கள் தூங்கியிருப்போம்.

காடுகளின் அன்பும் அரவணைப்பும் எங்களை பகலிலும் தாலாட்டியுள்ளது.இந்திய ஆமிக்கும்,இலங்கை ஆமிக்கும் பயந்து காடுகளில் பதுங்கியிருக்கின்றோம்.அப்படி பதுங்கியிருக்கும் சிலர் சும்மா இருக்காமல் கஞ்சா செடி வளர்த்து செல்வந்தராகியதும் உண்டு.காடுகளுக்குள் குடும்பம் நடத்தி பிள்ளைபெற்றவர்களும் உண்டு.நீண்ட வரலாற்றுக்குறிப்புகளை காடுகளில் இருந்து நான் கற்றுக்கொண்டிருக்கின்றேன்.தன்னந்தனியாக அடர்ந்த வனங்களில் திசைகெட்டு அலைந்திருக்கின்றேன்.

மூத்தாப்பாவுடன் அடர்ந்த வனங்களில் முயல் வேட்டைக்கும்,மான்வேட்டைக்குமென சுற்றியிருக்கின்றேன்.அவரின் சிவப்பு நிற தோட்டாக்களை காவிக்கொண்டு இருளுடன் இருளாய் காட்டில் அலைவது எத்துனை மகிழ்ச்சி. தீனாவைச்சுற்றி விறகுகளை அடுக்கும்படி கூறிவிட்டு காட்டுக்குள் நுழையும் மூத்தாப்பா வரும் வரை காட்டின் நடுவில் அமர்ந்து கொண்டு மானிரைச்சியை காயவைத்து வாட்டியிருக்கின்றேன்.

ஓ..காடே நீ எவ்வளவு அற்புதமான அனுபவங்களை அள்ளித்தந்தாய் இன்பமும் துன்பமும். துரோகமுமாய்....

எங்கள் தேசம் : 225                                                                          ஊஞ்சல் இன்னும் ஆடும்..

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...