Tuesday 10 July 2012

நினைவுகளில் தொங்கும் ஊஞ்சல்


தொடர் -16

என் சர்வாங்கமும் ஒடுங்கி இதயம் வெடித்துவிடுமாற்போல் அடித்துக்கொண்டது. ஐந்தடி உயரமுள்ள கருத்த நாயொன்று பாய்வதற்கு தயாராக இருந்தது. அந்தக்கண்கள் நெருப்புக்கங்குகள் போல் சுடர்விட்டுக்கொண்டு மின்னிக்கொண்டிருந்தன.தீட்டிய வால் போல் நாக்கு நீண்டு ஈரத்தில் மினுமினுத்தது.திறந்த வேகத்தில் கதவை இழுத்து மூடினேன்

பருந்தின் கால்களில் அகப்பட்ட கோழிக்குஞ்சாக தேகம் நடுங்கிக்கொண்டிருந்தது.வியர்வையில் தெப்பமாகி பிரமையுடன் கட்டிலில் குந்திக்கொண்டிருந்தேன்.காதுகள் இரண்டும் வெளியில் இருந்தன. ஒரு சிலமனுமில்லை. அக்காலத்தில் கையடக்கத்தொலைபேசி வசதிகள் இல்லாத காலம்.எனக்கு ஊரிலிருந்து கடிதம் மட்டும்தான் வரும்.நானும் அப்படித்தான் வாரமொரு முறை தபால் அனுப்புவேன். 

எத்தனை மணிக்குத்தூங்கினேன் என்று தெரியாது.காவன்னா ஹாஜியார் வந்து கதவைத் தட்டு மட்டும் தூங்கியிருந்தேன். காலையில் யாரிடமும் இரவு நடந்த சம்பவத்தை சொல்லவில்லை.மறுநாள் இரவு தனியே தூங்குவதில்லை என்ற முடிவுடன் இருந்தேன். அங்கு பணி செய்த ஒரு வருடமும் நண்பர்கள் புடை சூழத்தான் தூங்கினேன்.எனது உஸ்தாதிடம் கேட்டேன்.

 'மகன் அது ஜின். பள்ளியில் இபாதத்துக்கு வருவது நல்ல ஜின்களின் அன்றாடப்பணி.அது நாய் பாம்பு ரூபத்திலும் வரும் என்பது ரசூலுல்லாஹ்வின் பொன் மொழி' என்றார்.அது சரி பள்ளிவாயலுக்குள் வரும்போதும் நாய் வேசம் எதற்கு என்று ஜின்னிடம் கேட்டிருக்கவேண்டும் அதற்குப்பின் அதைக்கானும் பாக்கியம் கிடைக்கவே இல்லை. மனிதர்களே குதறிக்கடிக்கும் வேட்டைப்புலி வேசத்தில் பள்ளிவாயலுக்குள் நுழையும் போது ஜின் வந்தால் என்ன? நான் தம்புள்ள பள்ளிவாயலுக்குள் (20.04.2012) வந்தவர்களை இப்படி சொல்லவில்லை.

 அவ்வப்போது கருப்பு நாய்களைக்கானும் போது அந்தக்காட்சி மனதை விட்டும் அகலாமல் பயமுறுத்திக்கொண்டுதான் இருக்கிறது.

99 காலப்பகுதியிலும் இப்படித்தான் ஜின்னில் அகப்பட்டுக்கொண்டு திமிறியிருக்கின்றேன். வவுனியா வீதியில் மதவாச்சி நகருக்கு அண்மையில் இருக்கும் கிராமம் இக்கிரிகொல்லாவ.என்னுடன் படித்த இரு நண்பர்களின் கிராமம். ஏ.எல் எடுத்தபின் இங்கெல்லாம் வந்திருக்கின்றேன். வரட்சியான ஊர்.விவசாயம் ,கால் நடை வளர்ப்புத்தான் பிரதான தொழில்.

பெரும்பாலானோர் வீட்டு முற்றத்தில் மாட்டுப்பட்டி இருக்கும்.ஆடுகளும், நாட்டுக்கோழிகளும் சர்வசாதரணமாக முற்றத்தில் கிடந்து மேயும்.பெண்கள் சாணி அள்ளுவதும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவுதிலும் இருப்பதைக் கண்டிருக்கின்றேன்.

புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முல்லைத்தீவுவாசிகளின் அகதி முகாமும் இருந்தது. சுற்றுத்தொலைவில் மன்னார் அகதி முகாம் ஒன்றும் இருந்தது.மன்னார் வேப்பங்குளம்,சாளம்பைக்குளம் நண்பர்களும் இக்கிரிகொல்லாவ அகதி முகாமில் தங்கியிருந்தது எனக்கு வாய்ப்பாக போய்விட்டது. 

யாழ்ப்பாணத்து முஸ்லிம் குடும்பங்களும் தங்கிருந்தார்கள். சில யாழ்ப்பாணத்துப் பிள்ளைகள் எனது மாணவர்களாக இருந்தார்கள்.இக்கிரிகொல்லாவைக்கு சீக்கிரமாக வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.நண்பர்களின் ஊர் என்பதால் வறட்சி வசதிவாய்ப்புகளை மறந்து வந்து விட்டேன்.இங்கு வருவதற்கு இன்னுமோர் காரணம் எனது மச்சான் மன்சூர் அவர்கள் மதவாச்சி மில்போர்ட்; மனேஜராக மாற்றலாகி வந்திருந்தார்.

 இங்கு வந்த பிறகுதான் அன்றாடத் தினசரி கூட இல்லாமல் இருப்பது தெரிந்தது. இரண்டு மைல் தொலைவில் உள்ள ரம்பாவ நகருக்குச்சென்று  பத்திரிகை எடுத்து வந்து படிப்பது என் அன்றாட பழக்கங்களில் ஒன்றாக இருந்தது.அல்லது மதவாச்சிக்குப்போய் மச்சானுடன் கதைத்து விட்டு வருவது. யுத்தம் உச்சத்தில் நின்ற காலம்.இரானுவ நெருக்குவாரங்களும்,புலிகளின் பழிவாங்கள்களும் குறைவில்லாமல் மக்களுக்கு கிடைத்துக்கொண்டிருந்தன. 

அந்தக்கிராமங்களில் பெரும்பாலும் அறையில் தூங்குவதும் ,பேக்கரியில் வேகுவதும் ஒன்றுதான்.நான் அறையில் படுப்பது கிடையாது.இருக்கவே இருந்தது மிகப்பெரிய பள்ளி ஹோல்.முஅத்தினார்,வழிப்போக்கர்கள், என  ஒரு பட்டாளமே பள்ளியில் தங்க தினமும் ஆட்கள் கிடைத்தார்கள்.நானும் அன்று அப்படித்தான் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தேன்.பள்ளிவாயிலில் மிம்பருக்கு எதிரே உள்ள தலைவாயிலில் யாரும் உள்ளே நுழைந்து விடாதவாறு குறுக்காக மரமொன்றை தரித்து வீழ்த்தியதைப்போல் நான் படுத்துக்கிடந்தேன்.வெற்றுடம்பு ஈரமான காற்றுடன் மின்விசிறியின் காற்றும் ஒருசேர தாலாட்டுப்பாடியிருக்க வேண்டும்.நல்ல தூக்கம்.

 நள்ளிரவு 1மணி தாண்டியிருக்கும் என நினைக்கின்றேன்.வலிய இரு கரங்கள் எனது கால்களைப் பிடித்து மேல் நோக்கியவாறு சுழற்றி எடுத்ததை உணர்ந்தேன் .என்ன நடக்குதென்று நிதானிக்க முடியவில்லை அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இரு கால்களும் அசைக்கவே முடியாத அளவிற்கு இரும்புப்பிடி. என்னை அந்தரத்தில் ஒரு பம்பரம் போல் சுற்றிக்கொண்டிருப்பது யார் ?.கனவா என்று யோசித்துப்பார்த்தேன்.பலம் கொண்ட மட்டும் கத்திப் பார்;தேன் இடுப்பிலிருந்த சாரம் நழுவி விடுமாற்போல் இருந்தது. கனவல்ல என்று உணர்ந்தபின் முழுப்பலத்தையும் குவித்து கத்தினேன்.

நான் படுத்த இடத்திலிருந்து சற்று அப்பால் நான் வீசப்பட்டுக்கிடப்பதை உணர்ந்தேன். பள்ளிவாயலுக்குள் படுத்த முஅத்தின்சாப்தான் முதலில் என் காட்டுக்கத்தலைக்கேட்டு ஓடி வந்தார். என்னைப்பார்;த்ததும் அவர் பயத்தில் உறைந்து போய் பின் நிதானித்து அருகில் வந்து அள்ளி எடுத்து குடிக்க தண்ணீர் தந்தார். நடந்ததை சொல்வதற்கு எனக்கு அவகாசம் தேவைப்பட்டது. திக்பிரமை பிடித்தவன் போல் தூங்கிய இடத்தைப் பார்த்தேன் .போர்வையும் தலையணையும் அப்படியே கிடந்தது. அது ஜின்னின் வேலையாக இருக்கும்.ஒதி ஊதிக்கிட்டு படுங்க என்றார். 

பள்ளிவாயலின் தலைவாயலில் படுக்கப்படாது.ஜின் வருகின்ற நேரம் வழியில் படுத்தால் இப்படித்தான் செய்யும்.வருகின்ற ஜின்னுக்கு எவ்வளவோ வாசல் இருக்க என்னை பம்பரமாய் சுற்றி வேடிக்கை காட்டிய மர்மம் என்ன ?மற்றது நான் தூங்கும் போது சொல்லாமல் ஜின்னிடம் என்னை மாட்டிவிட முஅத்தின்சாப் திட்டம் போட்டாரா? எந்த ஜின்னிடம் கேட்கலாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

எங்கள் தேசம் - 223                                                       ஊஞ்சல் இன்னும் ஆடும்.......

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...