Monday 30 September 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

தொடர் - 48

அதன் தொடர்ச்சியாக பிறகு தஃலீம் தொகுப்பு குர்ஆனுக்கு எதிரானதா? எழுதினே;.இதுவும் பல பதிப்புக்கள் கண்டது. அனேகரின் வேண்டுகோளுக்கினங்க தப்லீக் அன்றும் இன்றும், தஃலீம் தொகுப்பு குர்ஆனுக்கு எதிரானதா ? இரண்டையும் ஒருங்கே சேர்த்து பிற்காலத்தில் ஒரு தொகுப்பு போட்டேன்.

கவிதை சிறுகதை இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்திக்கொண்டு இலக்கியப்பயணம் செய்வதை விடுத்து ஒரு துறையை மட்டும் தேர்ந்தெடுப்பது என்ற முடிவில் கவிதைக்கு முழுக்குப்போட்டேன். 

இடறி விழுந்தால் ஒரு கவிஞரில்தான் விழ வேண்டும் என்ற நிலையிலுள்ள இலக்கிய வீதியில் நாம் கவிதை எழுதாமல் விடுவதனால் ஈழத்து இலக்கிய உலகு அப்படி ஒன்றும் பெரிய இழப்பை சந்திக்கப்போவதில்லை. எரி நெருப்பிலிருந்து தொகுதிக்குப்பின் எழுதிய கவிதைகளை ஒன்று திரட்டி வேட்டைக்குப்பின்.. கொண்டு வந்தேன். அதற்கு முதல் ‘நினைந்தழுதல்" என்னும் சிறுகதைத்தொகுதி வெளிவந்தது.

 மு.பொன்னம்பலத்தின் முன்னீட்டுடன் வந்த அந்த தொகுதிக்கும்  நல்ல வரவேற்பிருந்தது. ‘தமிழ் நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் விருதும், இலங்கையில் ‘விபவி இலக்கிய விருதும் ‘ இந்த நூலுக்கு கிடைத்தது.

விபவி விருது கிடைத்தது ஒரு சுவாரஸ்யமான கதை. எனது கொழும்பு அலுவலகத்தில் கடமையிலிருந்த ஒரு காலைப்பொழுது அஸ்ரப் சிஹாப்தீன் தொலைபேசியில் வந்தார். ‘அறபாத் உங்களின்ற தொகுதியும் விருதுக்கு தெரிவாகியிருக்கு, இன்டைக்கு விழா ஏன் வரவில்லை எனக்கேட்டார்.எனக்கு தெரியாதே என்றேன். அப்படியானால் உடனே புறப்பட்டு வாருங்கள் என்றார். 

ஜேன் டி சில்வா அரங்கில் அந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. மறைந்த கவிஞர் நண்பர் ஏ.ஜி.எம் ஸதகாவும் அவருடைய கவிதை தொகுதியான போர்க்கால கவிதைகள் தொகுதிக்கு விருதைப்பெற வந்திருந்தார்.சில விருதுகள் இப்படியும் கிடைத்திருக்கின்றன.சில விருதுகள் சிபாரிசு செய்யப்பட்டதின் பின்பும்  வழங்கப்படாமலும் போயிருக்கின்றன.

விபவி மற்றும் சுதந்திர இலக்கிய விழா விருதுகள் பெற்ற ‘நினைந்தழுதல் ‘ சிறுகதைத்தொகுதி இனப்பிரச்சினையின் மையங்கள் குறித்தும் சிறுபான்மையினரின் வாழ்வுரிமை ஸ்த்திரமின்மை குறித்தும் உக்கிரமாக பேசியது

நான் சொல்ல வந்தது வேட்டைக்குப்பின் தொகுதி தொடர்பான அனுபவத்தை. தொகுதியை யாருக்கு சமர்ப்பிக்கலாம் என்று யோசித்துக்கொண்டு சில மாதங்கள் கடத்தியிருக்கின்றேன். புலி எதிர்ப்புக்கவிதைகள் அதில் அதிகம் காணப்படுகின்றன.

புலிகளின் பச்சோந்தித்தனத்தை தோலுரித்துக்காட்டும் இந்த தொகுதியை அவர்களையும் அவர்கள் போராட்டத்தையும் நம்பி மோசம் போன முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்களுக்கு இதனை அர்ப்பணம் செய்வது என்று தீர்மானித்தேன்.

 புலிகளால் கொல்லப்பட்ட புலிகளுக்கு, அல்லது முஸ்லிம்களுக்கு, இளைஞர்களுக்கு  என்றெல்லாம் வாக்கியங்களை மாற்றி மாற்றி போட்டுப்பார்த்தேன். திருப்பதியளிக்கவில்லை. அப்படியே கிடப்பில் போட்டு விட்டு சுற்றித்திரிந்தேன். மனசுக்குள் பொறுத்தமான வாக்கியங்கள் பொறியாக ஓடிக்கொண்டு சிக்கமாட்டேன் என்று விடுப்புக்காட்டியது.

ஒரு மாலையில் நண்பர் நழீமை சந்திக்க அவர் அறைக்குசென்றேன். புத்தக வேலைகள் முடிந்துவிட்டதா என்று அக்கரையுடன் விசாரித்தார். எனது அவஸ்தையை சொல்லி  இப்படியெல்லாம் எழுதியிருக்கின்றேன் ஒன்றும் பொருத்தமானதாக தெரியவில்லை என்றேன். ‘புலிகளால் சஹீதாக்கப்பட்ட புலிகளுக்கு.. என்று யோசித்துப்பாருங்கள் என்றார். 

மூடிக்கிடந்த பனிகூட்டம் கரையத்தொடங்கியது. பலமுறை எழுதியும் வாய்விட்டு வாசித்தும் பார்த்தேன். மிகமிகப் பொருத்தமாய் இருந்தது. அடுத்த வாரம் புத்தகம் வந்துவிடும் என்றேன் சந்தோசத்தில்.

நண்பர் சினாஸ் முஹம்மத்தின் கை வண்ணத்தில் நழீமின் ஓவியங்களுடன் புத்தகம் வெளிவந்தது. மிகுந்த அவதானமும், சிரத்தையும் எடுத்து இந்தத்தொகுதியை வெளிக்கொணர்ந்தேன்.

 எரி நெருப்பிலிருந்து கவிதைத்தொகுதி வெளிவந்த போது பாராட்டி தட்டிக்கொடுத்தவர்கள் வேட்டைக்குப்பின் கண்டதும் என்னை பிய்த்துக்குதறி எடுத்தனர்.


ஊஞ்சல் இன்னும் ஆடும்.......

Friday 13 September 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்.

 தொடர்-  47

இலங்கையின் கொடூர யுத்தத்தில் செத்து மடிந்த,அல்லது பாதிப்படைந்த தமிழ் முஸ்லிம்களின் உள்ளக்குமுரல்களின் தொகுப்பாக அந்த தொகுதி வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டது.என்னை இந்த அளவிற்கு எழுத தூண்டிய எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவுக்கு அதனை சமர்ப்பித்திருந்தேன்.

ஏரி நெருப்பிலிருந்து  நூல் வெளியீட்டு விழாவுக்கு இலக்கிய ஜாம்பவான்கள் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர். குறிப்பாக பேராசிரியர் .கா.சிவத்தம்பி ஐயா, செ.யோகராசா,சித்திரலேகா மௌனகுரு போன்ற ஆளுமைகளின் பிரசன்னத்துடன் அந்த விழா ஓட்டமாவடி பாளிகா பெண்கள் கல்லூரியில் 1996 அக்ரோபர் மாதத்தில் நடைபெற்ற இனிய கணங்களை நினைத்துப்பார்க்கின்றேன்.

பின்னர் யாழ்ப்பாணத்திலும் சில இலக்கிய நண்பர்கள் எரி நெருப்பிலிருந்து கவிதைத்தொகுதியை அறிமுகம் செய்தார்கள். நான் கலந்து கொள்ள வில்லை. அதற்குரிய காலமுமாக அது இருக்கவில்லை. அரூஸால் ஏமாற்றப்பட்டவர்கள் பிற்காலத்தில் நிறையப் புத்தகங்களை போட்டிருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.

இப்போது முதல் போட்ட தொகுதியை பார்க்கின்றபோது அச்சுக்கலையும் புத்த ஆக்கப்பணியும் கண்டுள்ள அசுர வளர்ச்சி மலைக்க வைக்கின்றது.கடைசியாக வெளிவந்த (2008) எனது சிறுகதை தொகுதியான ‘உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி ‘ தமிழ்நாட்டில் அடையாளம் பதிப்பகம் போட்டது.
 
ஒரு சதமேனும் எனக்கு செலவில்லாமல் இலாபமாய் வந்த தொகுதி. தொகுதிக்கான தலைப்பை நண்பர்களிடம் கலந்துரையாடியபோது ‘உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருதி ‘ என்று அனார் சொன்னார்.அதுவே பொருத்தமானதாக இருந்தது. அப்படித்தான் டைப்செய்து மெயில் பண்ணினேன்.கடைசியில் ‘குருதி; ‘ ‘குருவி ‘  யாக மறுவி வந்து சேர்ந்து. அதுவும் கதைகளுக்கு பொருந்தி வருகின்றது என்பதால் பேசாமல் விட்டு விட்டோம்.

முதல் தொகுதி போடுவதில் ஏற்பட்ட அனுபவத்தை வைத்துக்கொண்டு பிற்காலத்தில் ஏனைய தொகுதிகளை மிக சிறப்பாகவும் நுணுக்கமாகவும் செய்து முடித்தேன். அச்சுக்கலையின் நெளிவு சுளிவுகளை இலேசில் கற்றக்கொள்ளவும், பிறரின் புத்தகங்ககளை அழகுற அச்சிடவும் இயலுமான அனுபவத்தை இந்த துறை எனக்கு கற்றுத்தந்தது.

எனது இரண்டாவது நூல் ‘தப்லீக் அன்றும் இன்றும் - பாகம் 01 .என் எழுத்துலக வாழ்வில் கசப்பான அனுபவங்களையும் உயிர் அச்சுறுத்தலையும் எதிர் கொள்ள வைத்த  புத்தகம்.

இதனை கொழும்பில் அச்சிட்டேன். அச்சகம் செல்லாமல் ஆலோசனைகளை கொடுத்து ஒரு அறையில் இருந்தபடி மிக இரகசியமாக வெளிவந்த நூல். நூலின் கருத்துக்கள் நடுநிலைமையாக இருந்தாலும் அதனை ஜீரணித்துக்கொள்ளாத ஒரு சிலரின் வன் முறை கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மிக மோசமாக விளைவுகளை ஏற்படுத்தியது.

எனது தலைக்கு பத்து இலட்சங்கள் விலைபேசப்படுகின்ற அளவிற்கு அந்த புத்தகத்தில் எதுவும் இல்லை என்பது நாடறிந்த விடயம்.என்றாலும் கம்பஹா மாவட்டத்தில்  ஒரு ஜீம்ஆப்பள்ளிவாயலுக்கு முன் நின்று கொண்டு ஒருவர் ‘இந்த புத்தகத்தை எழுதியவரின் தலையை கொண்டு வந்தால் பத்து இலட்சம் தருவேன்’ என்ற பகிரங்கமாக கூறும் அளவிற்கு எனது தலைக்குள் என்ன தங்கமா தேங்கி நின்றது.

சிந்தித்துப்பார்க்கையில் இந்த சமூகத்தின் மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கும் பக்குவம் பற்றி இப்போதும் எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. தன்னை ஒருவன் விமர்சிக்கும் போது அதனை உள்வாங்கி சீர்திருத்தம் பெறும் மனப்பாங்கு என்பது எளிதில் வாய்த்து விடுவதில்லை. மேற்படி நூல் மூன்று பதிப்புக்களை கண்டது.குறுகிய காலத்தில் பல்லாயிரம் பிரதிகள் விற்கும் படி என் எதிராளிகளின் பிரச்சாரமே காரணமாயிருந்தது.
 
 
ஊஞ்சல் இன்னும் ஆடும்..



Tuesday 3 September 2013

' குவர்ணிகா ' செவ்வி

01.  உங்களுடைய கதைகளில் எதை முக்கியப்படுத்துறீங்கள்? அல்லது மையப்படுத்துறீங்கள்? அல்லது கவனப்படுத்த முயற்சிக்கிறீங்கள்? மனிதர்களை சம்பவங்களை காலத்தை அரசியலை வாழ்வின் அடிப்படைகளை அல்லது வேறு எதை?

என்னுடைய கதைகளின் முக்கியத்துவம் என்பது நான் வாழ்கின்ற காலமும் மனிதர்களும் சம்பவங்களுமே. இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்த காலப்பகுதியில் எழுத்தின்பால் ஈர்க்கப்பட்டவன் நான்.

ஒடுக்கப்பட்ட மனித குலத்தின் அவலங்களை எழுத்தில் கொண்டுவர வேண்டும் என்ற இலட்சியத்துடன் அக்காலங்களில் ஓர்மமாக இயங்கியவர்களுள் நானுமொருவன். நாம்  வாழ்கின்ற காலம்தான் நமது கதைக்களத்தின் உயிர் நாதம். இதற்கப்பாலுள்ள ஓர் உலகத்தை சிருஷ்டிப்பதென்பது மனசாட்சிக்கு விரோதமானது என்பதை உள்ளுணர்வு அழுத்திச் சொல்கிறது.

 நாம் வாழ்கின்ற காலத்தையும் அதிலுள்ள மனிதர்களையும் எழுதுகின்ற போது சம்பவங்களும் அரசியலும் இயல்பாகவே வந்து விடுகின்றது. உயிர் வாழ உணவின் தேவை போல மனித வாழ்வின் அடிப்படைகளை தீர்மானிப்பது அரசியல்தான். 

கட்சி,இயக்கம், மதம்,மொழி, கொள்கைசார் போராட்டம் என அரசியல் பார்வைகள் வேறுபடலாம். ஆனால் நாம் ஏதோவொரு அரசியல் அனர்த்தத்தில் அல்லுண்டு போகும் பதர்கள்.

வாழ்வின் அடிப்படைகள் இந்த அரசியல் சித்தாந்தம்தான். தீவிர அரசியலை பேரினவாத்தின் அடிவருடிகள் நடாத்துகின்றபோது,  சுய நலன்கள் கோலோச்சும் செயற்பாடுகளை அவதானிக்கும் போது அது  பற்றியும் எழுதியிருக்கின்றேன்.

எனது கூத்தாடிகள், அரங்கம்,கழுதைகளின் விஜயம் ,ஓணான்கள் போன்ற கதைகள் இதற்கு சான்று. மதரீதியான அரசியல் எல்லா சமூகத்திற்குள்ளும் விளிம்பு நிலை மக்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் நடைமுறைக்கு ஒவ்வாத சிந்தனைகள் தோற்றம் பெற்று மக்களின் சிந்திக்கும் அறிவை முடக்கி விட்ட போது துறவிகளின் அந்தப்புரம் எழுதினேன்.

பேரினவாதத்தினதும் பயங்கரவாதத்தினதும் மகா அழிவுகளையும் அது தனிமனிதனிலும் சமூகத்திலும் செலுத்திய தாக்கத்தினை எனது பெரும்பாலான கதைகளில் எழுதியிருக்கின்றேன்.

கடந்த இருபது வருட காலத்தின் அவலங்களை எனது கதைகள் சொல்லுகின்ற போது இரு தசாப்தத்தின் அவலக்குரலாகவே நான் அதைப் பார்க்கின்றேன்.என்னுடைய ஒவ்வொரு கதையின் பின்புலத்திலும் ஓர் அரசியல் இருக்கத்தான் செய்யும். அது பேரினவாத்திற்கு எதிரானதாகவோ, இயக்கம் சார் ஒடுக்கு முறைக்கு எதிரானதாகவோ, தீவிர மத வழிபாட்டிற்கு எதிரானதாகவோ, அல்லது கலாச்சார திணிப்புக்கு எதிரானதாகவோ அதை நீங்கள் பார்க்கலாம்.

இழப்பு, துயரம்,ஏமாற்றம்,மோசடி, அலைந்துழல்தலின்  அவல வாழ்வு, அரசியல் வித்தைக்காரர்களின் சூனியக்கயிற்றின் மாய மந்திரங்களின் நிஜ முகங்களை எல்லாம் எனது கடந்தால கதைகள் பேசியிருக்கின்றன.

பொது பரப்பில் சிந்திக்க விடாதபடிக்கு நான் வாழ்கின்ற காலத்தின் மனசாட்சியுள்ள மனிதர்களின் அவலக்குரல்கள் என்னை கட்டுப்படுத்தியதா என்பது பற்றி சிந்திக்கின்றபோது மௌனமே என் முன் குந்தியிருக்கின்றது. 

எனினும் அண்மைக்காலமாக இந்தத் தளைகளை அறுத்துக்கொண்டு வெளியே வர முயற்சிக்கின்றேன். ‘எழுத்தாளர் ஸ்டீபனின் வாக்கு மூலம்’, ‘மூன்று பூனைகள் பற்றிய ஏழு குறிப்புகள்’  ‘ஏவாளின் தோட்டத்தில் கனிகள் இன்னும் மிச்சமிருக்கின்றன’ போன்ற கதைகள் மேற்சொன்ன பின்புலங்களைத்தாண்டி பொதுப்பரப்பில் எழுதப்பட்ட கதைகளாகவே பார்க்கின்றேன்.

இருந்தாலும் யுத்தத்திற்குப்பின்னராக வாழ்வு கடும் நெருக்கடியும் மன அவஸ்தையும் நிறைந்ததாக மாறிவிட்டது. கதை சொல்லிக்கு வேறு வகையான புதுமையான நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய தருணங்கள் வந்துவிட்டன. இது போர்க்கால இலக்கியத்தை விட காத்திரமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இப்படி சங்கிலித்தொடராக ஏதோவொரு அரசியல் அனர்த்தத்தில் நாம் நிர்ப்பந்தமாக தள்ளப்படுவதை உணர்கிறோமா இல்லையா?

02. நிச்சயமாக. நீங்கள் வாழ்கின்ற காலத்தையும் சூழலையும் மையப்படுத்துகிறீர்கள்.அதேவேளை வாழ்வின் தரிசனங்களும் அதன்வழியாகக் கண்டடைகின்ற மெய்யுமே இலக்கியப் பிரதியை சிறப்பிக்கின்றன. இங்கே புனைவுதான் இலக்கியத்தின் அடிப்படை. சமகாலப் பிரச்சினைகளையும் அதனோடிணைந்த அரசியலையும் அதை முன்னெடுககும் அமைப்புகள்இ மனிதர்களையும் மட்டும் மையப்படுத்தும் எழுத்து காலத்தால் பின்தள்ளப்படும் அபாயமும் உண்டே?

நீங்கள் சொல்வது உண்மைதான். வாழ்வின் தரிசனங்கள் ஊடே கண்டடைகின்ற மெய்யொளி இலக்கியப்புனைவின் சாசுவதம் என்பதை என்னால் மறுதலிக்க முடியாது.  

காலத்தையும்இசூழலையையும் மையப்படுத்தும் எழுத்து என்பது அந்தக்காலத்துடன் ஸ்தம்பித்துவிடும் என்பதற்கு போர்க்காலத்தில் எழுதிய பலர் இன்று சாட்சியாக உள்ளனர். 

அவர்களின் எழுத்துக்கள் சடுதியாக மடைக்கு குறுக்கே பலகை இட்டது போல் நின்று விட்டன. காலத்தை மீறி அவர்களால் பயணம் செய்வது சாத்தியமற்றுப்போனது. இந்த அனர்த்தத்திலிருந்து என்னைப்போன்ற சிலர் மீண்டிருக்கின்றோம் என்பதில் ஓரளவு திருப்தி.

புனைவு என்பது எப்படி சொல்கின்றோம் என்பதை விட எதைப்பற்றிச்சொல்கின்றோம் என்பதில்தான் அதன் வெற்றி தங்கியுள்ளது. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் சிறு நாவல்தான். அதன் புனைவு காலத்தைத்தாண்டியும் வசீகரிக்கும் வல்லமை கொண்டது. இதனை நிகர்த்த பல படைப்புகளை பட்டியலிடலாம்.

03- அதிக அழுத்தமுடைய அரசியல் மயப்பட்ட எழுத்துகளால் நிரம்பியதே ஈழத்து இலக்கியம் என்ற பார்வை ஒரு குற்றச்சாட்டுப் போல வைக்கப்பட்டுள்ளது. இதை மறுக்க முடியாத அளவுக்கு உண்மையும் இது தொடர்பான நிலைமையும் உண்டு. அரசியல் மயம் - அரசியல் நீக்கம் என்பதை இலக்கியத்தில் எப்படி விளங்கிக் கொள்வது? இதன் வரையறைகள் என்ன?

ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த காலம்.கிழக்கிலும்,வடக்கிலும் தென்னிலங்கையிலும் வெவ்வேறு அரசியல் கொள்கைகள் பின்பற்றப்பட்டன. கிழக்கில் முஸ்லிம் சுயாதிக்க சிந்தனையையும், வடக்கில் தமிழீழக் கனவுகளும் தென்னிலங்கையில் ஒரே தேசக்கொள்கையினுடைய அரசியல் சித்தாத்தங்களும் ஒழுங்கமைக்கப்படாத வரிசையில் நடந்தேறின.

கிழக்கு அரசியலின் எழுச்சி என்பது வடக்கின் அடக்குமுறையினால் எழுந்த தீச்சுடராகும்.தென்னிலங்கை அரசியலின் பின் புலமும் எழுச்சியும் வடக்கு, கிழக்கின் மீது எல்லை மீறிய அச்சத்தினாலும், சந்தேகத்தினாலும் கட்டமைக்கப்பட்டதாகும். இந்த சந்தர்ப்பவாத அரசியலின் பின்புலத்திலிருந்துதான் இலக்கியப் பனைவுகளையும் நோக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட தளத்திலிருந்து ஒரு சட்டகத்தின் வடிவத்தை தாண்ட முடியாமல் ஒரு காலகட்ட இலக்கியப்புனைவு இருந்தது. அதுதான் போரியல் இலக்கியமாக அதிக அழுத்தத்துடன் வெளிவந்தது. 
கிழக்கிலிருந்து புனையப்பட்ட பெரும்பாலான இலக்கிய முயற்சிகள் தமிழ் மக்கள் இராணுவ சண்டித்தனங்களுக்கு எதிராகவும் முஸ்லிம் மக்கள், விடுதலைப் புலிகளுக்கெதிராகவும் தங்கள் எழுத்துக்களை பதிவு செய்தனர். வடக்கின் இலக்கியப்புனைவுகள் அனைத்தும் போரியலின் துன்பத்தினை இரு வகையாகப்பதிவு செய்ய முனைந்தது.

இராணுவப்பிரசன்னத்திற்கெதிராகவும்,விடுதலை இயக்கங்களை விமர்சித்தும் இக்கால கட்ட புனைவுகள் பரவலாக்கப்பட்டன. வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்களின் புனைவுகள் தனியான அரசியல் தளத்திலிருந்து இயங்கின.

இப்படித்தான் இலக்கியப்புனைவுகள் அரசியல்மயப்பட்டிருந்தன.
குறித்த அரசியலிருந்து விடுதலையுணர்வு பெற்றிருப்பதாக முற்றாக சொல்ல முடியாவிட்டாலும் இலக்கியத்திலிருந்து இது சற்று நீங்கியுள்ளதாக உணர்கிறேன்.

தற்காலத்தில் புனையப்பட்ட ஈழத்து இலக்கியப்புனைவுகளில் குறிப்படத்தக்க மாற்றங்கள் விரல் விட்டு எண்ணிவிடுமாற்போல் வாழ்வின் மெய்மையைப்பேச விழைகின்றதைப் பார்க்கின்றேன்.

மேற்சொன்ன அரசியல் செல்நெறியின் வரையறைகளை அழுத்தமாக நம்மால் தீர்மானிக்க முடியாது. அது கடந்த கால நேரடி போரியல் அரசியலிருந்து விடுபட்டு மௌனமான சன்னத சூழ்நிலைக்கு நம்மை இட்டுச்சென்றிருக்கின்றது. 

போராட்டங்கள் வேறு வகையான தளத்திற்குமாறியிருக்கின்றன. கருத்துச் சுதந்திரத்தினதும்,இலக்கியப் புனைவுகளினதும் இருப்பு முன்னெப்போதுமில்லாதவாறு மிக ஆபத்தான சுழல்காற்றில் உள்ளீர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

எனவே ஈழத்தைப்பொறுத்தவரை அரசியலை நீக்கிவிட்டு இலக்கியத்தைப்பார்க்க முடியாது. அவரவர் நியாயங்களின் யதார்த்தத்தை மானசீகமாக புரிந்து கொண்டு செயலாற்றுவதுதான் இதன் வரையறை.

04-அரசியல் சார்ந்து அல்லது நெருக்கடி மிக்க சமகாலச் சூழல் சார்ந்து எழுதும் போது ஏற்படுகின்ற விளைவுகள் எப்படியிருக்கின்றன?

அரசியல் அல்லது நெருக்கடிமிக்க சமகாலச்சூழல் சார்ந்து  எழுதும் போது விளைவுகள் குறித்து சிந்திப்பதில்லை. எதிர்வினைகள் இப்படித்தான் இருக்கும் என்று திட்டமிடப்படுவதுமில்லை.

 எனினும் ஒரு படைப்பு அது சார்ந்து சமூகப்பரப்பில் கவனயீர்ப்பு பெறும் போது அது சூழலில் செலுத்தும் செல்வாக்கும்,வசீகரமும் கனதியானது.கவியுவனின் “வாழ்தல் என்பது“இரஞ்சகுமாரின் “மோகவாசல்“இஅமரதாசின் “இயல்பினை அவாவுதல்“,கருணாகரனின் “ஒரு பொழுதுக்கு காத்திருத்தல்“,“ஒரு பயணியின் நிகழ்காலக்குறிப்புகள்“,சித்தாந்தனின் “காலத்தின் புன்னகை“,சு.வில்வரெத்தினத்தின் “காலத்துயர்“, அநாமிகனின் எலும்புக்கூட்டின் வாக்குமூலம்“,முல்லை முஸ்ரிபாவின் “இருத்தலுக்கான அழைப்பு“ மற்றும் அறபாத்தின் “ரெயில்வே ஸ்ரேஷன்“,ரஷ்மி போன்றோரின் எழுத்தில் இழையோடும் அரசியலும்,சமகாலச்சூழலும் இந்த சமூகத்தில் எந்த எதிர்வினைகளை ஆற்றியிருக்கின்றது? அல்லது பேசப்பட்டிருக்கின்றது? என்பது முக்கியமான கேள்வி.

வாசித்து ஆறப்போட்டுவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சமூகம் தன்னை தயார்படுத்திக்கொள்கின்றது. எழுத்தாளன் என்னவோ மானசீகமான  போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக இறுப்புமாப்புக் கொள்வதைத்தவிர வேறென்ன ஆறுதல்  உண்டு ?

05. படைப்பாளிகள்,கலைஞர்கள் அநேகமாக அநீதி்க்கெதிராகவும் நீதியைக் கோரியும் அறத்தை வலியுறுத்தியும் எழுதியும் இயங்கியும் வந்திருக்கிறார்கள் வருகிறார்கள். 

ஆனால் அவர்களுடைய இயங்கு முறைக்கு எதிராகவே பொதுச்சூழலில் உள்ள ஊடகங்கள்,கருத்துருவாக்கிகள்,படித்த சமூகத்தினரின் இயங்குமுறை உள்ளது. இதனால் படைப்பாளிகள், கலைஞர் போன்றோருடைய உழைப்பும் நியாயமான கோரிக்கையும் புறக்கணிக்கப்படுகின்றன.

இதேவேளை மக்கள் தொடர்ந்தும் இருளை நோக்கியே தள்ளப்படுகின்றார்கள். இந்த முரண்பாட்டை - இடைவெளியை எப்படித் தீர்ப்பது? பொதுவெளியின் எதிர்மறை இயக்கத்தை எவ்வாறு வழிப்படுத்துவது?

வாழ்வின் அறம் என்பது தனிமனிதனால் தீர்மானிக்கப்பட்டு,சமூக மட்டத்தில் செயற்படுத்தப்படுவதாகும்.அறமுடன் வாழ்தல் என்பது வெறும் தத்துவமாகப்பார்க்கப்படுகின்ற காலத்தில் நாம் வாழ்வது மகா துரதிஷ்டம்.

படைப்பாளிகள் பொதுச்சூழலில் அறத்தை நிலை நிறுத்த இயங்குகின்ற போது படித்தவர்களும் புத்தி ஜீவிகளும் காவலர்களும் படைப்பாளியின் யதார்த்தத்தை புரிந்து கொண்டும் வாழாவிருப்பவர்கள்.
நமக்கென்ன அவர்கள் அதைப்பார்க்கட்டும் என்ற மனோ நிலையின் வெளிப்பாடே அது.

 ஊடகங்களின் நிலை இதைவிடக்கொடுமை.அரச சார்பான ஊடகங்களில் அறத்தை வலியுறுத்தும் எழுத்துக்களுக்கு மதிப்புக்கிடையாது.தனியார் ஊடகங்களோ கடுகு போன்ற விடயத்தையும் விருட்ஷம் போல் பெருப்பித்துக்காட்டிவிடுகின்றன. ஒன்றுமே இல்லாத ஒன்றை ஊதி ஊதிப்பெருப்பித்து வெடிக்க வைப்பதில் ஊடகங்கள் படு கெட்டி.

எனவே படைப்பாளிகளும் கலைஞர்களும் தங்கள் படைப்புக்களை குறிப்பிட்ட சிலரை மையப்படுத்தி எழுதும் போக்கை கைவிடவேண்டும்.மக்களின் இரசணைக்கேற்றவாறு அவர்களால் இலகுவில் புரிந்து கொள்ளுமாற்போல் தங்கள் படைப்புக்களை பொதுஜனப்படுத்தும் உபாயங்களை கண்டடைய வேண்டும். மக்கள் இருளை நோக்கியே தள்ளப்படுகின்றார்கள் என்றால் மக்களிடம் நமது சிந்தனைகள் சரியாக சென்றடையவில்லை என்பதே உண்மை.

எனவே உண்மைக்குப்புறம்பாகவே இன்றைய ஊடக கட்டுமாணம் செயற்பட்டுவருகின்றது.மக்கள் அபின் தின்னிகளாக ஈர்க்கப்பட்டு இதன்பின்னால் அலைகின்றனர். ஊடகங்கள் சொல்வதை தெய்வ வாக்காக ஏற்று வழிபடுகின்றனர். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இன்று ஊடகங்கள்தான் வரம் கொடுக்கும் தெய்வம்.

வாழ்வின் அறம் என்பதெல்லாம் விரல் விட்டு எண்ணக்கூடிய பிற்போக்கு சக்திகளின் மார்க்கமாகப்போய்விட்டது.

எதிர்மறை இயக்கத்தை ஆற்றுப்படுத்துவதும் இவழிப்படுத்துவதும்  தனிமனித சிந்தனை மாற்றத்தைப்பொறுத்த விடயம். இதனை கவனமாக செயற்படுத்த வல்ல இயக்கத்தின் அவசியம் தேவைப்படும் தருணத்தில் வாழ்கின்றோம்.

06.அப்படியென்றால், அறம்சார்ந்து, ஜனநாயக அடிப்படைகளை மையப்படுத்திஇ நீதியுணர்வோடு இயங்கும் படைப்பாளிகளும் கலைஞர்களும் சனங்களும் தோற்கடிக்கப்படுகிறார்களா? நீங்கள் சொல்கிற மாதிரி இதற்கான செயலூக்கமுள்ள இயக்கத்தின் தோற்றம் எப்படிச் சாத்தியமாகும்? அதற்கான ஏதுநிலைகள் உள்ளனவா?

நிச்சயமாக நீதி,அறம்,ஜனநாயகம் ஆகிய மூன்று பிரதான அம்சங்களும் செத்துப்போய் பல ஆண்டுகள் கடந்து விட்டன. வாழ்வின் மீதான நம்பிக்கைக் கீற்றுக்கள் ஒவ்வொன்றாக இருளை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்கின்றேன்.

நீதியும் அறமும் நிலை கொண்டுள்ளதாக பறைசாற்றும் அஹிம்சையை வேதமாகக்கொண்ட ஒரு நாட்டில்தானா நாம் வாழ்கிறோம் என்ற ஐயங்கள் அடிக்கடி மனதில் எழுகின்றன.

அறம் சார்ந்து சிந்திப்பவர்கள் தோற்கடிக்கப்படுகின்றார்கள்.அவர்கள் தங்கள் வாழ்க்கையின் வசந்தங்களையும் நம்பிக்கைகையையும் ஒவ்வொன்றாக சாத்திக்கொண்டிருக்கின்றார்கள். வேதாந்திகள் இங்கு இரத்தம் ஒழுகும் வாட்களுடன் நர வேட்டைக்கு அலையும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

படைப்பாளிகளிடமும் போட்டியும் இபொறாமையும் குடி கொண்டு விட்டன.திறமைகளை அங்கீகரிக்கவும் அதை தட்டிக்கொடுப்பதையும் விட்டு விட்டு காலை வாரிவிடுவதிலும்’ஜால்ரா’ போடுவதிலும் கீழ் மட்ட அரசியல் தொண்டனைவிட கேவலமாகி விட்டனர்.

எழுத்தாளனாக ஆகுவதற்கு கொலையும் கொள்ளையும் ஆட்கடத்தலும் செய்தல் இப்போது ‘பெஷனாகி’விட்டது. அன்பும்.அறமும் எழுத்தில் இருப்பதை விட அடக்குமுறைதான் இன்று கோலோச்சுகின்றது.

இந்த இலட்சணத்தில் நல்ல படைப்பாளிகளினதும் கலைஞர்களினதும் காத்திரமான குரல் வெறும் ஒப்பாரியாகத்தான் மாறிப்போய்விட்டது.
    
செயலூக்கம் உள்ள ஓர் இயக்கத்தை வழிநடாத்துவதென்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. தலைக்கு மேல் வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கின்றது. அணையிடல் என்பது முயற்கொம்பு என்று சொல்லாவிட்டாலும், வினைத்திறன்மிக்க சமூக கட்டமைப்பு என்பது பாடசாலைகளிலிருந்து கட்டமைக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

துரதிஷ்டம் நமது பாடசாலைகளும் கல்விக்கூடங்களும் ஏன் சில ஆசிரியர்களும் மயானத்திலிருப்பது போல்லவா இருக்கின்றார்கள்.?

07. நிச்சயமாக. கல்வி மையங்களும் அங்கே உள்ள கற்கை முறையும் ஆசிரியர்களும் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ள ஒரு நிலைமையே இலங்கையில் உண்டென்று கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இலங்கை சந்தித்த நெருக்கடிகளைத் தணிப்பதில் கல்வி மையங்களும் கல்வியியலாளரும் செய்ய வேண்டியிருந்த பங்களிப்புப் போதாதுஇ அந்தச் சூழலில் இருந்து எத்தகைய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளும் முக்கியமான ஆளுமைகளும் இல்லை என்றும் சொல்லப்படுவதுண்டு. 

இதைப்பற்றிய உங்கள் நோக்கு என்ன? உண்மையெனில்இ இத்தகைய கீழ்ச்சரிவு ஏன் நிகழ்ந்தது?

இலங்கையைப்பொறுத்தவரை கல்வி வணிகமயப்படுத்தப்பட்டுள்ளது. கல்விமான்கள் எனப்படுவோர் கைதேர்ந்த வியாபாரிகளாக மாறிவிட்டனர்.

ஒழுக்கம்,மாணவர் மேம்பாட்டுத்திட்டம்,சீரிய சிந்தனை போன்ற எந்த இலக்குமின்றி கல்வித்திட்டங்கள் இயந்திரமயமாகிவிட்டன. ஆளாளுக்கு போட்டிமனப்பான்மையும்.பிரத்தியேக கல்வி புகட்டும் திட்டங்களும் மலிந்துவிட்டன.

ஜவுளிக்கடை விளம்பரம் போல் கல்விக்கும் கண்கவர் விளம்பரங்களும் பதாதைகளும் போலி வாக்குறுதிகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

டியூட்டரிகளின் கலாச்சாரமும்,சீர்கேடும் ஒரு மாணவர் சமூகத்தின் ஒழுக்க மாண்புகளில் பாரிய இடைவெளியை தோற்றுவித்துவிட்டன.இலங்கைத் தேசத்திற்கு பொறுத்தமற்ற கல்வித்திட்டங்கள் வகுப்பறையில் மாணவர்களை தூங்கி வழியச்செய்கின்றன.பெற்றோர்களைக் கொல்வதற்கு இரகசியத்திட்டம் பேசுவதற்குரிய மையங்களாக இந்தக்கல்விச்சூழல் தரம்கெட்டுவிட்டது.

வகுப்பறை கற்றல் என்பது மாணவர்களை செம்மைப்படுத்துவதற்கு பதிலாக அங்கும் ஒரு வகை அரசியல் கலாச்சாரம் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆசிரியரின் இயக்கம் சார் மன நிலைக்கேற்ப மாணவர்கள் குழுமயப்படுத்தப்படுகின்றனர்.

இலங்கை சந்தித்த நெருக்கடிகளில் கல்வியலாளர்கள் பார்வையாளர்களாகவும் சம்பள உயர்வு கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டம் செய்பவர்களாகவும் மட்டுமே இருந்தார்கள்.

ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கவில்லை. மையம் கொண்டிருந்த இனப்பிரச்சினைக்கான தீர்வினையும் கருத்துருவாக்கத்தினையும் அவர்கள் மாணவர் சமூகத்திடம் இலகுவாக கட்டியெழுப்பும் சந்தர்ப்பம் நிறையவே உண்டு. சமய மற்றும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் கட்டியெழுப்பியிருக்கலாம்.

எனினும் அவற்றை அவர்கள் வெறுமனே கோசம் போட்டு கூட்டம் வளர்க்கவே பயன்படுத்தினார்கள்.

ஆசிரியனின் வழிகாட்டலும்,வசீகரமும் மாணவர்களை எப்பொழுதும் வசியப்படுத்தும். வீட்டுக்கு அடங்காத பிள்ளைகள் ஆசிரியனிடம் அன்பாக அடங்கிப்போவதற்கு அவனின் புறகிருத்திச்செயற்பாடுகளே காரணம். துரதிஷ்டமாக சில ஆசிரியனிடம் நல்ல பண்புகள் மருந்துக்கும் இல்லை என்கிற நிலையாகிவிட்டது. 

பாலியல் லஞ்சம் பெறும் புதிய கலாச்சாரத்தை இன்றைய கல்வித்திட்டங்கள் தோற்றுவித்து விட்டன.பிள்ளையின் கல்விக்காக தாய் தன் உடலை விலை பேசும் அளவிற்கு கல்வித்திட்டம் ‘கலவி’த்திட்டமாக வளர்ச்சியடைந்துவிட்டது.

உண்மையில் இந்த நிலையை தோற்றுவித்தது நமது நாட்டின் கல்வித்திட்டமும்இ கல்வியலாளர்களுமே என்றால் மிகையல்ல.

08. இதைக் கட்டுப்படுத்துவதற்கான – மாற்றுவதற்கான வழிகள் என்ன? இதைக் குறித்து படைப்பாளிகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தலாம்?

கல்வித்திட்டத்தில் உள்ள குறைபாடுகளே இதற்குரிய காரணமாகும். 
இலங்கையின் கல்வித்திட்டம் காலத்திற்குப்பொருத்தமானதாக இல்லை.

சில விடயதானங்கள் இலங்கைக்கு பொருந்தி வருவதாகவும் இல்லை. 
மாணவர்கள் தேடிக்கற்கும் தூண்டுதல்கள் இங்கு இல்லை. நேர அட்டவணைக்கு தகுந்த மாதிரி அவர்கள் இயங்குவதற்கு பழகியுள்ளனர்.

அதற்கு அப்பால் சிந்திப்பதற்கும் செயற்படுவதற்கும் மாணவர்களை தூண்டுவதற்குரிய வழிமுறைகள் இருந்தும் அதனை ஆசிரியர்கள் செய்யவில்லை என்பது கசப்பான உண்மை.

மாணவர்களின் ஒழுக்கத்தினையும் கல்வியையும் மேம்படுத்தும்  போதனை முறைகள் மாற்றமடைந்து பரீட்சைக்கு தயார்படுத்தும் முறைகளே நடைமுறையிலுள்ளன. பாடத்திட்டத்தினை எழுதுபவர்களும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக இருக்கும் போது சமூகத்தை எப்படி நிமிர்த்துவது? 

உண்மையில் படைப்பாளிகள் செய்யவேண்டிய பணிகள் நிறைய உள்ளன. படைப்பாளியிடம் நேர் நோக்கு சிந்தனை வேண்டும்.குறைந்த பட்சம் பாடசாலைகள் மட்டத்தில் மாணவர்களுக்கு சில விடயங்களை சொல்லலாம்.

பயிற்சிப்பட்டறைகளை ஒழுங்கு பண்ணலாம்.விளைவுகளை உடனடியாக எதிர்பார்க்காவிட்டாலும் எதிர்காலத்தில் சிந்தனை மற்றும் உளப்பாங்கில் மாற்றமுறும் சமூக அமைப்பை எதிர்பார்க்கலாம

09.  இலங்கைச் சூழலில் எழுத்தாளராக இருப்பதிலுள்ள சவால்கள்,முக்கியத்துவம் அனுபவம் எப்படியாது?

 இலங்கைச்சூழலில் எழுத்தாளனாக இருப்பது ஒரு சவால் நிறைந்த வேதனையாகும். எழுத்தாளனுக்கு அவனுடைய எழுத்துக்களை ‘எடிட்’ அல்லது ‘சென்சார்’ செய்யாமல் வெளியிடுவது என்பது சாகசம். 
எழுத்து என்பது இங்கு உபரியான செயல். எழுத்தாளனின் தொழில் வேறு,உறவுகளும்,தோழமைகளும் வேறு,சூ ழல் பொழுது போக்கு அம்சங்கள் வேறு. இத்துணை தடைகளையும் தாண்டி அவன் எழுத வேண்டும் என்பது மகா கொடுமை.

எழுதியதை அவனே புரூப்பார்த்து ,அச்சிட்டு, வெளியிட்டு,கடை கடையாக ஏறி இறங்கி விற்பனை செய்து அதை காசாகப்புரட்டி எடுக்க வேண்டும்.சமூகத்தின் பார்வையில் படைப்பாளி ஒரு திமிர் பிடித்தவனாக அடையாளப்படுத்தப்படுவதும் உண்டு.

ஒரு நல்ல புத்தகம் 1000 விற்று முடிக்க ஐந்து வருடம் தேவைப்படுகிறது என்ற சுந்தர ராமசாமியின் வார்த்தைகள் எத்துணை சத்தியமானது.

என்னுடைய அனுபவத்தில் எழுத்தாளனாக ஆபத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கின்றேன்.சமூகத்தில் கௌரவத்தையும் பெற்றிருக்கின்றேன். எழுத்துக்கும் வாழ்வுக்குமிடையில் தொடர்பு நிலவும் போது அந்த கௌரவம் தானாக வருகின்றது.

எழுத்துக்கும் படைப்பாளிக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்கும் போது சமூகத்தில் அவனுக்குள்ள முக்கியத்துமும் மங்கிப்போகின்றது. பேசப்படுகின்றவனாக எழுத்தாளன் இருக்க வேண்டுமே தவிர தூற்றப்படுகின்றவனாக அவன் இருக்க கூடாது.

அதற்காக எல்லோருக்கும் முதுகு சொறிந்து சாமரம் வீசி கூனிக்குறுகி கூழுக்கு கூத்தாடியாகி இருப்பது என்று சொல்லவில்லை.சொல்கின்ற விடயத்தில் தெளிவும்இஎழுத்தில் நேர்மையும் இருக்கும் போது எழுத்தாளன் சமூகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றான்.

10. இலங்கையின் கிழக்கிலுள்ள இன்றைய சமூக நிலை மற்றும் அதன் உறவு நிலை எப்படியாக உள்ளன? எதிர்கால நிலை எப்படியாக இருக்கும்?

முக்கியமான தருணத்தில் அவசியமான கேள்வி. கிழக்கின் சமூக நிலை என்பது காலம் காலமாக இந்து –முஸ்லிம் உறவுகளின் அடிப்படையில்  கட்டியெழுப்பட்டது. ஈழப்போர் மையம்கொண்ட போது கிழக்கு முஸ்லிம்கள் அந்தப்போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ளும் அளவிற்கு ஐஸ்வரியம் நிறைந்த பொற்காலத்தில் வாழ்ந்திருந்தோம்.

அதன் பின்னரான மாற்றங்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை.கிழக்கின் இன்றைய தமிழ் முஸ்லிம் உறவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.மாற்றங்கள் என்கிறபோது முழுமையான நம்பிக்கையின் அடிப்படையில் என்று என்னால் அடையாளப்படுத்த முடியாதுள்ளது.

ஆனால் அந்த நம்பிக்கை வளர வேண்டும் என ஆசைப்படுபவர்களில் நான் தீவிரமாக உள்ளேன்.சிங்களப்பேரினவாதத்தின் மற்றுமொரு நில அபகரிப்பு யுத்தத்தின் வஞ்சிப்பிலிருந்து மீண்டெழ இரு தரப்பு உறவுகளும் மிக நெருக்கமாக இருக்கவேண்டிய தருணம் இது.

சில வேலைத்திட்டங்களை சமூக மட்டத்தில் செய்து கொண்டு போகின்றோம். அந்தக்காலம் போல் இன்று எல்லா இடங்களுக்கும் அச்சமின்றி சென்று வர முடிகின்றது. உறவுகளை பலப்படுத்தும் பல செயற்பாடுகளை அரச மட்டத்திலும்இஅரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவும் செய்யப்படுகின்றன. இருப்பினும் சிலர் இனவாதத்தீயை மூட்டிவிட்டு குளிர்காய அவ்வப்போது முயற்சிக்கின்றனர்.

எதிர்காலம் கிழக்கில் பல நெருக்கடிகளை தோற்றுவிக்கும் .அது அரச இயந்திரத்தின் ஊடாக இடம் பெற வாய்ப்புண்டு. சிவில் சமூகத்தினராகிய நாம் மிக விழிப்பாக இருக்க வேண்டும். நிதானமிழந்துவிடக்கூடாது. அதற்கான விழிப்பூட்டலும்இ வேலைத்திட்டங்களும் அவசியம்.

கிழக்கு கொஞ்சம் கொஞ்சமாக கறையான் அரிப்பது போல் சுரண்டப்பட்டுவருகின்றது. இரு இனங்களினதும் சுயத்தினை அழிக்கும் கைங்கரியங்கள் மௌனமாக அரங்கேறுகின்றன.களியாட்டங்கள் என்கிற பெயரில் கிழக்கு இளைஞர் யுவதிகளின் சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.இது நாளடைவில் சமூகப்பிரக்ஞையற்ற மந்தைக்கூட்டத்தை உற்பத்தியாக்கும் எண்பது திண்ணம்.

தன் இருப்பு பறி போகும் போது ‘வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புல’ பைலாப்பாட்டுக்கு ஆடிக்கொண்டிருக்கவும்,சீரியல்களில் செல்போன்களில் கரைந்திருக்கவும்  ஒரு பரம்பரை உருவாகி கொண்டிருக்கின்றது. விழிப்பூட்டக்கூடியவர்கள் கல்வியலாளர்களும் சிவில் அமைப்புக்களுமே!
கிழக்கின் எதிர்காலத்திற்கு அங்கு வாழும் இரு பிரதான இனங்களும் கைகோர்த்து பயணிக்க வேண்டிய தருணம் இதுதான்.

அரசியல்வாதிகளின் அவ்வப்போதைய சுரணையற்ற அறிக்கைகளுக்குப்பின் மக்கள் செல்வதை தவிர்ந்து கொண்டாலே போதும் எந்தக்கொம்பனாலும் கிழக்கின் உறவுகளை சிதைக்க முடியாது.

11. உங்களின் கதைகளைக் குறித்து தமிழ்ச் சமூகத்தின் மனநிலை எப்படி? முஸ்லிம் சமூகத்தின் மன நிலை எப்படி? இலக்கிய வாசிப்பும் சமூக நிலைப்பட்டுள்ளதாகவே உள்ளது என்பது என்னுடைய அவதானிப்பு.  இதுகுறித்தும் இதன் விளைவுகள் குறித்தும்?

இலக்கிய வாசிப்பு சமூக மயப்பட்டதாக இருக்கின்றது என்பதை முற்றாக என்னால் அங்கீகரிக்கமுடியாது. இலங்கையைப்பொறுத்தவரை குழுநிலையான இலக்கியச்சார்பு நிலை நிறையவே உண்டு.என்னுடைய கதைகளை இரு சமூகத்தினரும் கொண்டாடுகின்றனர் என்பது அனேக நண்பர்களினதும்,இலக்கிய ஆர்வலர்களினதும் உரையாடல்கள் மூலமாக நான் அறிந்து கொண்டவை. முஸ்லிம் வங்குரோத்து அரசியல் குறித்து எழுதிய போது அது சார்ந்தவர்களால் எதிர்ப்புக்கிளம்பியது. புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளை விமர்ச்சித்தபோதும் அந்த தரப்பிலிருந்தும் ஆதரவாளர்களிடமிருந்தும் எதிர்ப்புக்கிளம்பியது. அரச இயந்திரத்தின் எல்லை மீறிய அக்கிரமங்களுக்கு எதிராக எழுதிய போதும் அதனை அண்டி வாழ்பவர்களினால் எதிர்ப்புக்கிளம்பியது.

எல்லாத்தலைகளுக்கும் ஏற்றவாறு தொப்பி செய்வது எழுத்தாளனால் சாத்தியப்படாது. ஒரு புனைவு அது முடிவுறுந்தருணத்தில் பொருத்தமான பல தலைகளை வாசகன் இனங்கண்டு கொள்கின்றான். அதை வாசகன்தான் அளவான தலைக்கு போட்டுப்பார்த்து திருப்தியடைகின்றான். அவரவர் கட்சி சார்ந்து இயக்கம் சார்ந்து கொள்கை சார்ந்து கதையினை  வாசிப்புக்குட்படுத்திப்பார்க்கின்றான்.

நான் ஒரு விடயத்தை எழுதும் போது எதிர் விளைவு குறித்து சிந்திப்பதில்லை. சரியென்று  நியாயமென்று பட்டதை எழுதிவிடுகின்றேன். இது சில நேரங்களில் இரு சமூகத்திற்குள்ளும் சில அதிருப்திகளையும் , ஆதரவினையும் பெற்றுத்தந்திருக்கின்றது. 

ஆதரவு.எதிர்ப்பு இரண்டையும் எதிர்பார்ப்பது எழுத்தாளனின் தகுதியாக இருப்பதில்லை.எதை எப்படி வெளிப்படுத்துகின்றோம் என்பதுதான் முக்கியம். ஒருவருக்கு அந்த விடயம் புரிந்தாலும் எழுத்தாளனின் வெற்றி அதுதான்.

12. இலங்கையில் இன்று எழுத்தாளர்கள் அந்ததச் சமூக நிலைப்பட்டு - இன ரீதியாகஇ சமூக ரீதியாக இயங்க வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவே யதார்த்த நிலை உள்ளது என்ற அபிப்பிராயமுள்ளது. சமூக நிலைப்படாதபோது அவர்கள் மீது கடுமையான எதிர்நிலையான குற்றச்சாட்டுகள் முன்னிறுத்தப்படுகின்றன. இது படைப்பாளிகளையும் படைப்பையும் சுருக்கி, திசைமாற்றிக் கட்டுப்படுத்தும், சிதைக்கும் என்ற அச்சம் பல படைப்பாளிகளிடத்திலே உண்டு. இது குறித்து உங்களுடைய கருத்தென்ன?

இந்தக்கேள்விக்குரிய சில பதில்களை மேலே குறிப்பிட்டிருக்கின்றேன்.இலங்கையில் சமூகங்களுக்கு ஏற்றவாறு எழுத்தாளர்கள் இயங்குவது தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்டதாக நீங்கள் உணர்வதை நான் முழுமையாக அங்கீகரிக்கவில்லை.

எழுத்தாளன் சமூகமயப்பட்டவனாக,அல்லது இனத்துவ அடையாளப்படுத்துவனாக இருப்பதை விட உலகமயப்பட்டவனாக இருக்க வேண்டும். நிச்சயமாக சமூக நிலைப்பட்டு இனத்துவரீதியாக எழுத்தாளன் இயங்குகின்ற போது பல உளவியல்இகருத்தியல் எதிர்வினைகளை சமூகம் எதிர்கொள்வதை தவிர்க்க முடியாது.

‘இது நம் ஆள் எழுத்து,அல்லது ‘நம்மடவன்ட படைப்பு’ என்ற அடையாளம் எழுத்தாளனை ஒரு வட்டத்திற்குள் சுருங்கவைத்து விடும்.சுந்தரராமசாமியை,ஜெயகாந்தனை,ஜெயமோகனை,பிரமிளை,முத்து லிங்கத்தை,ஷோபா சக்தியை இன்னும் பலரை நான் படிக்கவும் முடியாது. வைக்கம் முஹம்மது பசீரை, தோப்பில் மீரானை, நுஃமானை,சோலைக்கிளியை, எஸ்.எல்.எம். ஹனீபாவை, பவ்சரை, ரஷ்மியை மற்றும் பலரை நீங்கள் படிக்கவும் முடியாது. இவ்வாறே சிங்கள எழுத்தாளர்களினதும்  ஆக்கங்களை நாம் இருவரும் படிக்கவும் முடியாது.

எழுத்தாளன் சமூக நிலைப்படுவதற்கு அவன் மண் புழு அல்ல.அவன் சூரியன். பிரகாசிக்க வேண்டும். அவன் நிலா. குளிர்விக்க வேண்டும்.அவன் காற்று, இதமாக வருட வேண்டும். அவன் நீரோடை. தாகம் தீர்க்க வேண்டும். இவை எல்லாம் ஒரு சமூகத்திற்கும் இனத்திற்கும் உள்ள விடயம் அல்லவே! 

சிங்கள எழுத்து, இந்து எழுத்து,முஸ்லிம் எழுத்து என்றெல்லாம் எழுத்தில் இனத்தைச் சொருகாமல் இருப்பதுதான் படைப்பாளிக்கு வழங்கும் கௌரவம்.

ஓர் இனத்தின் இருப்புக்குறித்து கரிசனை காட்டுவதும் பொதுத்தளத்தில் மற்றவர்களையும் இணைத்துக்கொண்டு போராடுவதும் எழுத்தாளனின் பணியாகும் . சமூகம் இதனை எதிர்பார்க்கின்றது.


13. ஆனால் ஒரு தொகுதி எழுத்தாளர்கள் இன அடையாளத்தைப் பிரதானப்படுத்தி, அல்லது இன ரீதியான உணர்வுகளுக்கு முக்கியத்துவமளித்தே எழுதுகிறார்கள், இயங்குகிறார்கள். அப்படியல்லாது பொதுத்தளத்தில் இயங்குவோரை அவர்கள் சந்தேகிக்கிறார்கள். அல்லது எதிராளாகப் பார்க்கிறார்கள். அப்படியே பிரகடப்படுத்தியும் விடுகிறார்களே? இன்னும் அழுத்தமாகச் சொன்னால் தரப்புகளின் பிரதிநிதிகளாகத் தொழிற்படுகிறார்களே?

அப்படி அவர்கள் இயங்குவதற்கு கடந்த காலச்சூழல்கள் காரணமாய் அமைந்திருக்கலாம். தான் சார்ந்த சமூகத்தின் அவலக்குரல்களை அவர்களின் குரலாகவே பதிவு செய்வதில் ஆபத்துக்கள் இருப்பதாய் நான் உணரவில்லை.

ஆனால் மற்ற இனத்தின் உரிமைகளையும் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துவதாய் அது அமைந்து விடக்கூடாது.ஒருவன் தன் தாய் நாட்டை, தாய் மொழியை, தன் இனத்தை நேசித்தபடி, பொதுத்தளத்தில் இயங்க முற்படும் போது சந்தேகத்திற்குரியவனாக மாறி விடுகின்றான். 

நடுநிலை என்பது இங்கு எதுவும் சாராது இருப்பது என்ற அர்த்தம் அல்ல. நடுநிலை என்பது சொல்ல வேண்டிய விடயத்தை சொல்ல வேண்டிய இடத்தில் தைர்யமாக சொல்வதாகும்.

 இதனை ஓர் படைப்பிலக்கியவாதி சரியாகப்பயன்படுத்தினால் அவன் குழுக்களின் அல்லது தரப்புக்களின் பிரதி நிதியாக தன்னை முத்திரை குத்திக்கொள்ளத் தேவையில்லை. 

எனினும் சில ஆதிக்க மனோபாவமுள்ளவர்கள் இன அடையாளத்தை முதன்மைப்படுத்தி இயங்குவதையும்,பொதுத்தளத்தில் இயங்குவோரை விமர்சிப்பதையும் ஒரு சமூக அந்தஸ்தை அவாவியே செய்து வருகின்றார்கள். அவ்வப்போது எழும் கைதட்டல்கள் அவர்களுக்கு தேவை.

14. உங்களுடைய எழுத்துகளில் ஏற்பட்டுள்ள மாற்றமாக நீங்கள் எதையெல்லாம் உணர்ந்திருக்கிறீங்கள்? அந்த மாற்றங்கள் எப்படி ஏற்பட்டன?
என்னுடைய எழுத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாசிப்புத்தான் காரணம். நல்ல நூல்களின் அறிமுகம் குறிப்பாக எஸ்.எல்.எம்.ஹனீபாவுடனான நெருக்கம்,  நல்ல புத்தகங்களினதும் வாசிப்பினதும் அண்மையில் என்னை கொண்டு சேர்த்தது. வணிக ரீதியான எழுத்துக்களிலிருந்து விடுபட்டு காத்திரமான நல்ல படைப்புக்களை எழுதுவதற்கு தூண்டியவர்களில் எஸ்.எல்.எம்.ஹனீபா முக்கியமானவர்.

தொடர்ச்சியான இயக்கம், வாசிப்பு, நல்ல நண்பர்களின் தோழமை எல்லாம் இணைந்துதான் எழுத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என நம்புகின்றேன்.

மாற்றம் என்பது வெறுமனே ஏற்பட்டுவிடக்கூடிய மாய மந்திரமன்று. மிகக்கடுமையான உழைப்பை வேண்டி நிற்பவை. இப்போது சொல்ல வேண்டிய விடயத்தை தேர்வு செய்து விட்டு அதை எப்படிச்சொல்வதில் என்பதில்தான் கரிசனை செலுத்திவருகின்றேன்.

போரியல் தொடர்பான விடயங்களை முன்பு அதிக அழுத்தம் கொடுத்தாலும் தற்போது வாழ்வின் உன்னதமான வேறு பல முக்கிய விடயங்கள் குறித்து கரிசனை செலுத்தத் தொடங்கியுள்ளேன்.

15. போர்க்காலம், போருக்குப்பிந்திய காலம் என்ற வகையில் சமூக நிலையிலும் இலக்கியத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்,அனுபவங்கள் என்ன?


போர்க்காலம் கொலையுதிர் காலம் எனில் போருக்குப்பிந்திய காலம் அதைவிடக்கொடுமையானதாய் போய்விட்டது. உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் போர்க்காலத்தில் வாழ்க்கை இருண்டிருந்தது. போரில் ஈடுபட்டவர்கள் அதனுடன் சம்மந்தப்படாத மூன்றாந்தரப்பை கொன்றழித்து வந்தனர்.

சமூகத்தில் போர் ஏற்படுத்திய வடு என்பது எல்லா இல்லங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தது. மனதளவில் இலங்கையை பீடித்தாட்டிய மரணத்தின் வலிய கரங்களில் யாரும் தப்பிச்செல்ல முடியாத அளவிற்கு  நசிபட்டுக் கிடந்தனர். அந்த வலி,இழப்பு,கதறல்,ஆற்றாமை காலாதி காலமாய் நமது பிடரி நரம்பில் ஊடுபாவாக அழுத்திக் கொண்டிருக்கின்றன. இதைத்தான் இலக்கியம் சொன்னது.

போரியல் இலக்கியம் என்பது ஒட்டுமொத்த வலிகளின் தொகுப்பு. அது ரஜனி திரணகமவின் குரலாக, அல்லது செல்வியின் குரலாகஇ,அமிர்தலிங்கத்தின் குரலாக, குட்டிமணியின் குரலாக, மனம்பேரியின் குரலாக, அஷ்ரபின் குரலாக, அரந்தலாவயின் பிக்குகளின் குரலாக,ஒந்தாச்சி மட ஹாஜிகளின் குரலாக என வலிகள் ஏக காலத்தில் சம அளவில் ஒலித்தன. உயிர்கள் பறிக்கப்படுவதில் ஆளாளுக்கு ஒரு ‘பொலிசி’யை வைத்துக்கொண்டு வேட்டையாடினர். இதனைத்தான இலக்கியம் பதிவு செய்திருக்கின்றது.

போர் முடிவுக்கு வந்தவுடன் போரியல் இலக்கியத்தின்பால் கவனம் செலுத்தியவர்கள் திடீரென காணாமற்போயினர். போரை வைத்து சில எழுத்தாளர்கள் நன்றாக உழைத்தனர். போரின் பெயரால் அவர்களின் பொருளாதாரமும் சமூக கௌரவமும் பாதுகாக்கப்பட்டன. மின் குமிழை அணைத்தது போல் போர் இவர்களின் கற்பனை ஊற்றை அடைத்துவிட்டது.

ஈழத் தமிழர்களை வைத்து இந்திய அரசியல்வாதிகள் சந்தர்ப்ப அரசியல் செய்தது போல் சிலருக்குப் போர் வருமானம் ஈட்டித்தரும் ஒன்றவும்இகீர்த்தியைத்தேடித்தரும் அம்சமாகவும் ஆகிவிட்டது. எனக்கு இந்த இரண்டு அனுபவங்களும் வாய்த்திருந்தது. போரியல் இலக்கியமும்இபோருக்குப்பிந்திய இலக்கியமும் வாலாயப்பட்ட ஒன்றாக இருந்தன.

இலக்கியத்தின் அண்மைக்கால செல் நெறிகள் பல மாற்றங்களை கண்டடைந்துள்ளது. வாசிக்கவேண்டும் என்ற அவா பொது மக்களுக்கும் பிறந்துள்ளது. போரின் வலியை பேசிக்கொண்டு பராக்கிரம வீர தீர சாகசங்களைப்பேசிப்பேசி வீணே கழிப்பதைவிட வாழ்வின் வசந்தகாலத்தினை படைப்புக்கள் இப்போது சொல்லவாரம்பித்து விட்டன.

நமது அரசியல்வாதிகளிடம் மட்டும்தான் மாற்றம் இல்லாத  மாற்றம் நிகழ்ந்துள்ளதே தவிர,மற்றதெல்லாம் மாறிக்கொண்டுதான் இருக்கின்றது. 

16. ஐம்பது ஆண்டுகால ஈழச்சிறுகதைகளை மதிப்பீடு செய்யும்போது உங்கள் அனுபவத்தில் எதை ஒரு படைப்பாளியாகவும் வாசகராகவும் உணர்ந்து கொள்கிறீர்கள்?  
                                                                                                           
சிறுகதைத்துறை குறிப்பிடத்தக்க மாற்றம் கண்டுள்ளது. ஐம்பது ஆண்டுகால சிறுகதைகளை மதிப்பீடு செய்யும் போது கதை சொல்வதில் கையாண்ட உத்தி,உள்ளடக்கம்,கதைக்கான பின்புலம்,மற்றும் கருத்து நிலைகள் மாற்றமடைந்து வந்துள்ளன.

கதைக்கான உள்ளீடுகளும்இமொழியின் அடர்த்தியும் அபரித வளர்ச்சியடைந்துள்ளன. மரபு ரீதியான கதை சொல்லும் கலை அருகி மெல்ல மெல்ல நவீனத்திற்குள் சிறுகதைகள் உள்ளீர்க்கப்பட்டு வந்துள்ளன. 

 கதைகள் பெரும்பாலும் நிலம் சார்ந்தும்,மண் மீட்பு போராகவுமே இருந்துள்ளது. நிலச்சுவான்தாரிகளின் நில அபகரிப்பும் ஒடுக்குமுறையும் கதைகளின் பின் புலமாக இருந்தது.

அந்த நிலை இன்று வேறு வடிவத்தில் மாற்றமடைந்துள்ளது. இலக்கியத்தில் பதியப்பட்ட விடயங்களை பார்க்கின்றபோது தொழிலாளியின் தோட்டங்களையும்,வயலையும் அற்ப கிரயத்திற்கு தட்டிப்பறிக்கும் போடிமாரின் அட்டகாசங்களை விட தற்போதைய நில அபகரிப்பு மிகுந்த ஆபத்தானதும் அதிர்ச்சியானதும்.

போடிமாரின் சுரண்டலை எழுதிய அளவிற்கு சிவப்புச்சால்வைகளின் நிலபறிப்பை இன்னும் நாம் இலக்கியத்தின் ஊடாக சொல்லவில்லை.

ஐம்பது ஆண்டுகால சிறுகதை வரலாற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பது திடீரென ஏற்பட்ட விபத்தல்ல.பல சோதனைகள்இதடைகள்இமுயற்சிகள் அனைத்தையும் தாண்டிஇஇன்றைய நவீன கதை வரை வந்தடைந்துள்ளது.

நமக்கு  வழிகாட்டியவர்களின்  மொழி மீது எனக்கு மையல் உண்டு.அவர்களின் கதைகளில் பேசப்படும் சமூகச் சீர்திருத்தம் அவர்களின் காலத்தில் மிக காத்திரமானது.சாதிய அமைப்புக்கும்,முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகவும் எழுதுவதென்பது அவ்வளவு இலேசுப்பட்டதல்ல. அந்த எழுத்தில் நேர்மைஇ ஓர்மம்  எல்லாவற்றையும் பார்க்கின்றேன்.

17. முஸ்லிம் பெண்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி நிலைகள், சமூக அளவில் அவர்களுடைய இடம் குறித்து?

முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் வகிபாகம் காத்திரமானது. பெண் ஒரு போற்றத்தக்க ஆன்மாவாக கருதப்படுபவள். அதனால்தான் என்னவோ இஸ்லாமிய மார்க்கம் அங்கீகரித்த உரிமைகளைக்கூட சில நேரங்களில் சமூகத்தின் இறுக்கமான கலாச்சார நெறிகள் அனுபவிக்கமுடியாதபடிக்கு பெண்களை தடுத்திருந்தன.

கல்வி இலவசமாக்கப்பட்ட பின்பும், தொழில் நுட்ப புரட்சிக்குப்பின்பும் முஸ்லிம் பெண்கள் சில சமூகத்தளைகளை உடைத்தெறிந்து கண் விடுத்திருக்கின்றார்கள். நிறைய வாசிக்கின்றார்கள்,எழுதுகின்றார்கள்.

எனினும் சிலர் பத்தாம் பசலித்தனமான வறண்ட சிந்தனைகளுடன் சிலர் அதீத கற்பனைகளுடன் சிலர் தன்னைப்பற்றிய மிதமிஞ்சிய இறுமாப்புகளுடன் இலக்கிய உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்துள்ளார்கள்.பரிதாபத்திற்குரிய பலரை இலக்கிய உலகில் பார்க்கின்றேன்.

எனினும். பெண்களின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை வரவேற்கின்றேன்.தனக்கு வழங்கப்பட்டிருக்கும் சமூகப்பொறுப்பை அவர்கள் செவ்வனே நிறைவேற்றி வருகின்றார்கள்.சமூகம் அவர்களை அங்கீகரித்து அரவணைக்கின்றது.

பெண் தமக்குரிய சமூகக்கடமைகளை சுயமாக நிறைவேற்றவும்,தீர்மானம் எடுக்கவுமான மனோ தைர்யத்தை அவர்களுக்கு கற்ற கல்வி வழங்கியுள்ளது.

புதிய பாதையில் முஸ்லிம் பெண்களின் பயணங்கள் தொடர்வதும் எமது அதிர்ஷ்டமே.



  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...