Saturday 7 August 2010

உயிரறுந்தவனின் கவிதை

மூசாப்பு மூடிய மனத்திலிருந்து
துக்கவிதை வீசிற்று
தூர்ந்து விட்ட உயிரின் சிறகசைப்பில்
துயரம் குமட்டும் தேச நிகழ்வில்
ஒரு சொட்டுப்போல வாழ்வு துளிர்த்தது.

குமையுமிந்த கனவுத்திடலில்
நீர்க்காகமென வாழ்வின் தலை
மரணக்குளத்தில் எகிறி வந்து அச்சமூட்டும்.
பச்சோந்திகளின் தேசமிது
காற்றுலவாத
அறையினுள் தினம் சிறைபட்டு போகிறதெம்
விடுதலை.
சவர்க்கார குமிழியென
ஒரு கணப்பொழுதின் வர்ணமுட்டையாய்
இன்றின் பகற்பொழுதில்
சிரித்துலாவிய வசந்தம்
இரவில் மட்டுமிங்கு மரணத்தை போர்த்திற்று.

மூளையின் தகிப்பில்
உருகிற்று என் விழிகள்
வெண்ணுடுக்களுதிர்ந்த சாமமொன்றில்
என்னிமைக்கூண்டில் சிறைப்பட்டன கனவுகள்.
பின்னவும் நான் பார்த்திருக்க உயிரறுந்த
பல உடல்கள் ஸுஜுதில் கிடந்தன பள்ளியில்.

மூசாப்பு மூடிய மனத்திலிருந்து
அப்பள்ளியில் படித்த துர்க்கவிதை
இன்னும் தான் மூக்கில் கரைகிறது.
எதையும் மறப்பதற்கில்லை நண்பனே
இந்த அகதிக்குடில் எரியுமட்டும்.

சரிநிகர் 2000-03-27

Wednesday 4 August 2010

மரணக்கரங்கள்

உனக்கென்ன
சட்டமியற்ற கைகள் உயர்த்துவாய்
இருக்கின்ற சட்டங்களோ இருக்கமாயுள்ள
இக்கனத்தில்,
இன்னுமின்னும் குரல்வளையை நெரிக்கும்
உன் கைதூக்கல்.

நீ-வியர்க்காமல் பயணிக்க
குளிர் ஊர்தியுண்டு
வானிலும் பறந்தேகுவாய்
தங்குமிடம்,வாகனம்,பெட்ரோல்,டெலிபோன்,
போனேசசென
உன் பை நிரம்பும் எம் வரிப்பணத்தில்.

உன் மெய் காக்க படையுண்டு
ஏவலரும் இன்னும் சில அடியாலும்
உனக்குண்டு
உன் குழந்தைகளோ கடல் தாண்டி அறிவுண்ணும்

உனக்கென்ன குறையுண்டு தலைவா
இரவிரவாய் விலையுர
நீ உயர்த்தும் கைகள்
உனக்கு வாக்குப்போட்ட
எம் கழுத்தையல்லோ நெரிக்கிறது.


2000-05-05 யாத்ரா-2001

Tuesday 3 August 2010

துண்டிக்கப்பட்டவனின் சாபம்.

தடித்த குரலுயர்த்திப்பேசிலேன்
பிறர் அஞ்சுதற்குறிய
கொடூரனுமல்ல நான்.
எனினும்
நாடு நிசியில்
வஞ்சித்தென்
கழுத்தை எனறுத்தீர்.?

என் துவிச்சக்கரவண்டியே
சந்தூக்கானது.
முன்னர் எரித்தவரின்
அபயக்குரல் அடங்கு முன்
என் கழுத்தை
எனறுத்தீர் சொல்லுங்கள்.

பொங்கலுக்கா பலி எடுத்தீர்
ஈழத்தர்ச்சணைக்கா எனை எடுத்தீர்.?
கத்தியை செருகி என்
பிடரியை அறுக்கையில்
கதறிய என் ஓலத்தை
தேசிய கீதமாக்கவா
திட்டமிட்டீர்.?

அறுபத்தைந்து வருஷங்கள்
வாழ்ந்தவொரு கிழவன் நான்
ஒரு கோழியைக்கூட
திருகத்தெரியா வயோதிபனை
கதறக்கதற அறுத்தனையோ
வீரர்காள்.?

இளம்பிறையை எரித்துண்ட
கல்மடுக்கிராமமே
இனி உன்னில் யுகாந்திரமாய்
அலையுமென் அபயக்குரல்.

அது உன் பிச்சலத்தின் ஆணிவேரை
உசுப்புமொரு நாள்.
அப்போதுணர்வாய்
துண்டிக்கப்படுகையில்
என் வலியை!

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...