Saturday 7 August 2010

உயிரறுந்தவனின் கவிதை

மூசாப்பு மூடிய மனத்திலிருந்து
துக்கவிதை வீசிற்று
தூர்ந்து விட்ட உயிரின் சிறகசைப்பில்
துயரம் குமட்டும் தேச நிகழ்வில்
ஒரு சொட்டுப்போல வாழ்வு துளிர்த்தது.

குமையுமிந்த கனவுத்திடலில்
நீர்க்காகமென வாழ்வின் தலை
மரணக்குளத்தில் எகிறி வந்து அச்சமூட்டும்.
பச்சோந்திகளின் தேசமிது
காற்றுலவாத
அறையினுள் தினம் சிறைபட்டு போகிறதெம்
விடுதலை.
சவர்க்கார குமிழியென
ஒரு கணப்பொழுதின் வர்ணமுட்டையாய்
இன்றின் பகற்பொழுதில்
சிரித்துலாவிய வசந்தம்
இரவில் மட்டுமிங்கு மரணத்தை போர்த்திற்று.

மூளையின் தகிப்பில்
உருகிற்று என் விழிகள்
வெண்ணுடுக்களுதிர்ந்த சாமமொன்றில்
என்னிமைக்கூண்டில் சிறைப்பட்டன கனவுகள்.
பின்னவும் நான் பார்த்திருக்க உயிரறுந்த
பல உடல்கள் ஸுஜுதில் கிடந்தன பள்ளியில்.

மூசாப்பு மூடிய மனத்திலிருந்து
அப்பள்ளியில் படித்த துர்க்கவிதை
இன்னும் தான் மூக்கில் கரைகிறது.
எதையும் மறப்பதற்கில்லை நண்பனே
இந்த அகதிக்குடில் எரியுமட்டும்.

சரிநிகர் 2000-03-27

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...