Monday 29 July 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்.

                                                               தொடர்- 44

மலை நாட்டின் பல்கும்புறயில் பணியிலிருந்த போது அயல் கிராமமான கலகெதரயில் உனைஸ் என்ற நண்பர் இருந்தார். ‘கலகெதர உனைஸ்’ என்ற பெயரில் அப்போது எழுதிக் கொண்டிருப்பார்.

ஒரு நாள் மாலையில் போன் பண்ணினார். அவருடன் பேராதனைப்பல்கலைழகத்தில் கருத்தரங்கிற்கு சென்ற நண்பர் இளைய அப்துல்லாஹ்வும் (எம்.என்.அனஸ்) தற்போது இலண்டன் தீபம் தொலைக்காட்சியில் பணி புரிகின்றார். அவரும் போனில் கதைத்தார்.

 எழுத்தாளர்என்று  உன்னுடைய பெயரைச்சொல்லி ஒருவர் அறிமுகமாகி கருத்தரங்கில் கலந்து கொண்டிருக்கின்றார்.கேட்டால் மழுப்புகின்றார்.என்ன செய்ய என்று கேட்டார்கள். ‘விடுங்கப்பா அவர்ர ஆசை அதுவானா சொல்லிட்டுப் போகட்டுமே’ என்றேன். ஆனால் நண்பர்கள் கேட்கவில்லை என்பதை பின்பு தெரிந்து கொண்டேன்.

சில நேரங்களில் நான் எழுதிய கவிதைகளை என்னிடமே தான் எழுதியதாகப் படித்துக் காட்டுவார்கள்.சிரித்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருப்பேன்.

கண்டியில் இருக்கும் போது இப்படியொரு சுவாரஸ்யம் வாய்த்தது.பணி புரிந்த இடத்தில் எனக்குரிய அறையில் தனியாக தூங்குவதில்லை.கூடவே நண்பர்கள் இருவரோ அல்லது அதற்கு மேல் மூவரோ வந்து விடுவார்கள்.குறைந்தது ஒருவராவது வந்துவிடுவர்.

கண்டி குளிருக்கு பிளேன்றீயும், கோப்பியும் குடித்துக் குடித்து கதைத்தபடி இருப்போம்.எத்தனை மணிக்கு தூங்கினாலும் அதான் கேட்டதும் எழும்பி விடுவோம்
.
ஓர் இரவு ஒருவர்தான் தூங்குவதற்கு வந்தார்.நான் கட்டிலை கொடுத்தும் ‘இல்ல நீங்க படுங்க’ என்று விட்டு கட்டிலுக்கு அருகில் தரையில் படுத்துக்கொண்டு கதைத்தபடி இருந்தார்.
‘சேர் நான் ஒரு கவிதை எழுதியிருக்கின்றேன்.அதப்படிக்கிறன் கேளுங்க’ என்றார்.
‘கவிதை எல்லாம் எழுதுவிங்களா ம்; படிங்க’ என்றேன். நான் கவிதை எழுதுபவன் என்றோ கதை எழுதுபவன் என்றோ போகுமிடமெல்லாம் காட்டிக்கொள்வதில்லை.அது என்றைக்கும் எனக்கு உவப்பான  விடயமுமல்ல.

அவர் கவிதை படிக்கப் படிக்க எனக்கு திகைப்பும்,சிரிப்பும்.
சில மாதங்களுக்கு முன் தினமுரசில் நான் எழுதி பிரசுரமான பிரிவின் வலியையும் நட்பின் யாசிப்பையும்  வேண்டி நிற்கும் 
கவிதை.

அந்தக்காலத்தில் தினமுரசில்தான் அதிகமாக எழுதி வந்தேன். வாரம் ஒருமுறை கவிதையோ அல்லது சிறுகதையோ வந்து விடும். தொழில் நிமித்தம் அடிக்கடி ஊர்களை மாற்றிக்கொள்ளவேண்டி ஏற்படும். செல்லும் கிராமங்களிலெல்லாம் கதைக்கான ‘கருக்கட்டி’ விடும்.

நண்பர் பௌசர் போன் பண்ணும்போது கேட்பார். இப்ப நீங்க இந்த ஊருலதானே ?  கத படிச்சன் என்பார்!.

நண்பர் கவிதையை வாசித்து முடித்ததும் ‘எப்படி சேர் கவிதை’ என்றார். ‘ம் நல்லா இருக்கு’ என்றேன்.

‘இத நம்மாளுக்கு எழுதிக்கொடுத்திட்டன் சேர் நாளக்கி ‘வேர்க்அவுட்’; ஆகும்.’ என்றார். அவருடைய தோழியின் நட்பு நமது கவிதையால் தொடரப்போகிறது.அதைப்பிரிப்பானேன் மனசுக்குள் சின்னதாய் ஒரு மின்னல் வெட்டிப்போனது.

‘உங்க ஆளு கவிதையெல்லாம் படிப்பாங்களா? என்றேன். 
‘பேப்பர்லெல்லாம் படிக்கமாட்டா சேர்.புத்தகம் படிப்பா?

‘அப்படியா நீங்க தப்பிட்டிங்க’ என்றேன். ‘என்ன சொல்றீங்க?’ அவர் குரலில் பதற்றம் தொற்றிக்கொண்டது. அதை நீடிக்க நான் விரும்பவில்லை. 

பிறகென்ன இந்தக்கவிதயால உங்க எண்ணம் வேர்க் அவுட் ஆகும் ,தோழரே நிம்மதியா படுங்க’ என்றேன்.

 நெடு நேரமாக ‘பே’ என்று முழித்துக்கொண்டிருந்தார்.எத்தனை மணிக்கு தூங்கினாரோ அறியேன்.

நமது கவிதையை அச்சொட்டாக பாடமிட்டு நம்மிடமே ஒப்புவிக்கும் போது நமக்கு ஏற்படுவது கர்வமா அல்லது மகிழ்ச்சியா என்று புரியவில்லை. ஆனால் நெஞ்சுக்குள் ஒரு புகைமூட்டம் இன்பமாய் பரவத்தொடங்கியது என்னவோ நிஜம்.

பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என்பதற்கான சிலர் எப்படியெல்லாம் திருடி சொந்தச்சரக்கு போல விற்றுவிடுகிறார்கள் என்பதை நினைக்கையில் ஆச்சரியமாக உள்ளது. நிஜவாழ்விலும் திருட்டு,இலக்கியத்திலும் திருட்டு. இப்படி திருடி பிரபல்யம் பெற்ற பல எழுத்தாளர்களை நான் பார்த்துக்கொண்டு வருகின்றேன்.

திருடியது பிடிபட்டவுடன் நான் அதில் எடுக்கவில்லை இதில் எடுத்தேன் என்ற அறிக்கை கூட விடுக்கின்றார்கள். பன்றி இறைச்சியை சாப்பிடும் போதும் நான் ‘பிஸ்மி’தானே சொன்னேன் என்பது போல் இருக்கின்றது அவர்களுடைய வாதங்கள்.

 திருட்டு இலக்கியம் நீண்ட காலத்திற்கு நீடித்து நிற்பதில்லை.சில திருடர்களை இனங்காட்டியிருக்கினறோம். சில திருடர்களை போனால் போகட்டும் போடா என்று விட்டு வைத்திருக்கின்றோம். அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு கிடக்கின்றது என்ற கற்பனையில் பால் குடிக்கும் கள்ளப்பூனைகள்.

சில இலக்கியத்திருடர்களும் கொலைகாரர்களும் இன்றைய தமிழ் இலக்கிய  உலகில் முடி சூடா மன்னர்களாக வலம் வருவது ஆசியாவின் ஆச்சரியங்களில் ஒன்று என்பதை தவிர வேறென்ன சொல்ல முடியும்?

                                                                                                                   ஊஞ்சல் இன்னும் ஆடும்....

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...