Thursday 25 August 2016

நூல் அறிமுகம்

அல் அஸ்மா வஸ்ஸிஃபாத்
அல்லாஹ்வின் அழகிய  திருநாமங்கள் மற்றும் பண்புகனை விரிவாக விளக்கும் முதல் தர தமிழ் நூல்
ஆசிரியர் .அஷ்ஷெய்க்.எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி M.A

மிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகமான ரிஸ்வான் மதனியின் அயராத முயற்சி ஆய்வின் பலனாக அல்அஸ்மா வஸ்ஸிஃபாத் என்ற விரிவான நூல் நம் கையில் கிடைத்துள்ளது.

சமயம் பற்றிய அறிவின் அவசியம் உணரப்படும்போதெல்லாம் சமயத்தினை வழங்கிய மூலவேர் குறித்த அடிப்படை அறிவு தேவைப்படுகின்றது. பிரபஞ்சத்தின் தோற்றுவாய்க்கு காரணியாக இருந்த மூலத்தின் வல்லமைகள் சிறப்புக்கள் குணவியல்புகளை அறியாமல் பிரபஞ்சத்தில் வாழ்வதும் அவற்றின் இன்பங்களை துய்ப்பதும் நன்றி கொன்ற செயலெனக்கொள்வது பொருந்தும்.

புனித இஸ்லாத்தை மனித வாழ்வின் அற்புத வழிகாட்டியாக வழங்கிய அல்லாஹ் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் ஐயமற விளக்கம் சொல்கின்றது இந்நூல்.376  பக்கங்களில் 49 தலைப்புக்களில் அல்லாஹ்வின் திருநாமங்கள் பண்புகள் குறித்து நூலாசிரியர் விளக்குகின்றார்.

நாமறிந்தவரை அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள்தான்.இது நமக்கு மரபு ரீதியாக கற்றுத்தரப்பட்டவை.இவற்றினை மீறி அவனுக்கு வேறு பெயர்கள் உள்ளனவா என்பது குறித்த ஆய்வில் நாம் ஈடுபடவுமில்லை. தேடவுமில்லை. எனினும் நம்மை படைத்து ஆளுபவனுக்கு இன்னும் பல திருநாமங்கள் இருக்கின்றன. என்ற ஆய்வின் மூலம் உன்னத வரலாற்று சிறப்பினை தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கியிருக்கின்றார் ரிஸ்வான் மதனி

ஓவ்வொரு தலைப்பிற்கும் பொருத்தமான அல்குர்ஆன் வசனங்களும்.தேவையேற்படின் நபிகளாரின் சுன்னாவும் உசாத்துணையாக எடுத்தாளப்பட்டுள்ளன.அல்லாஹ்வைப்பற்றி அறிமுகம் செய்யும் போது அவன் குறித்து அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து பண்புகளும் குணவியல்புகளும், அவன் வல்லமையை பறைசாற்றும் அனைத்து அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதானது இந்நூலின் சிறப்பம்சம் எனில் மிகையல்ல.

இதற்காக நூலாசிரியர் துறைசார் நூல்களை தேடிப்படித்து தொகுத்திருப்பதனை பாராட்டவே வேண்டும்.

எல்லா சிந்தனைகளுக்கும் பிரிவுகள் கருத்து முரண்பாடுகள் தோன்றியது போல் அல்லாஹ்வின் பண்புகள் பெயர்கள் குறித்து மாறுபட்ட கருத்துக்களும் சர்ச்சைகளும் இஸ்லாமிய உலகில் சில  குழுக்களால் தோற்றுவிக்கப்பட்டன.

எனவே அடிப்படை கொள்கையினை அதாவது அகீதாவை விளங்கிச்செயற்பட அல்லாஹ்வின் பண்புகள் குறித்த நேர்பார்வை அவசியம். தவறான புரிதல்களும் வியாக்கியானமும் அல்லாஹ்வின் மீது அடியான் கொள்ள வேண்டிய நம்பிக்கையினை சிதைத்துவிடும்.அவனை தவறான கொள்கையின்பாலும் சிந்தனையின்பாலும் கொண்டு சேர்த்து விடும்.வழிதவறும் குழுக்களின் மனவோட்டத்தை ஒழுங்கமைக்க சீரிய சிந்தனை ஊட்டப்படவேண்டியது அவசியம். அவற்றினை நமது சலபுஸ்ஸாலிஹீன்களான மதிப்பிகு இமாம்கள் செவ்வனே ஆற்றியிருக்கின்றார்கள்.அவர்களின் அயராத முயற்சியும் ,எழுச்சியும் வழிகெட்ட சிந்தனைப்பிரிவுகளின் கனிசமான உருவாக்கத்தினை தடைசெய்தன.அல்லது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தன.

 இந்த சிந்தனைப்பிரிவுகள் யார் அல்லாஹ்வின் பண்புகள் குறித்த அவர்களின் பார்வை என்ன எவ்வகையான பண்புகளில் மாறுபட்ட கருத்துவேற்றுமைகள் உள்ளன போன்ற விடயங்களை தமிழில் விளக்கும் ஆய்வு நூல்கள் இல்லாத குறையை இந்நூல் பெரிதும் நிவர்த்தி செய்துள்ளது.

குறிப்பாக அல்லாஹ்வின் பண்புகள்,பெயர்கள் தொடர்பான விதிகள் அவற்றிற்கான வரைவிலக்கணம் போன்ற அம்சங்களை துலாம்பரமாக விளக்குகின்றது இந்நூல்.

இஸ்லாமிய உலகில் தோன்றிய கண்ணியமிக்க இமாம்களின் கருத்துக்கள் அல்லாஹ் பற்றிய சரியான வரைவிலக்கணங்கள் குறித்து பேசும் அதே வேளை அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகளை பாழ்படுத்துவதால் ஏற்படும் விபரீதங்களையும் அது குறித்த அபாயத்தினையும் ஆய்வு செய்கின்றது இந்நூல்.

அல்லாஹ்வையும் அவனது திருநாமங்களையும் சரியான கோணத்தில் விளங்கி விசுவாசம் கொள்ளவும்,உறுதியான அவனின் திருநாமங்களின் உள்ளர்த்தங்களை புரிந்து செயற்படவும்  இந்நூல் பெரிதும் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதனை முழுமையான ஆய்வாக தமிழில் தருவதற்கு பிரயத்தனங்களை எடுத்துக்கொண்ட நூலாசிரியர் ரிஸ்வான் மதனியின் முயற்சியை பாராட்டுகின்றோம்.அவரின் ஆய்வுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்க வேண்டும்.அவசியம் அனைத்து தமிழ் பேசும் முஸ்லிம்களும் அறிந்திருக்க வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய இந்நூலை வாங்கி வீடுகளில் வைத்திருந்து வாசித்து விளங்குவோம்.

ஓட்டமாவடி அறபாத் -ஸஹ்வி 

நூல் அறிமுகம்

அல் அஸ்மா வஸ்ஸிஃபாத்
அல்லாஹ்வின் அழகிய  திருநாமங்கள் மற்றும் பண்புகனை விரிவாக விளக்கும் முதல் தர தமிழ் நூல்
ஆசிரியர் .அஷ்ஷெய்க்.எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி M.A

மிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகமான ரிஸ்வான் மதனியின் அயராத முயற்சி ஆய்வின் பலனாக அல்அஸ்மா வஸ்ஸிஃபாத் என்ற விரிவான நூல் நம் கையில் கிடைத்துள்ளது.

சமயம் பற்றிய அறிவின் அவசியம் உணரப்படும்போதெல்லாம் சமயத்தினை வழங்கிய மூலவேர் குறித்த அடிப்படை அறிவு தேவைப்படுகின்றது. பிரபஞ்சத்தின் தோற்றுவாய்க்கு காரணியாக இருந்த மூலத்தின் வல்லமைகள் சிறப்புக்கள் குணவியல்புகளை அறியாமல் பிரபஞ்சத்தில் வாழ்வதும் அவற்றின் இன்பங்களை துய்ப்பதும் நன்றி கொன்ற செயலெனக்கொள்வது பொருந்தும்.

புனித இஸ்லாத்தை மனித வாழ்வின் அற்புத வழிகாட்டியாக வழங்கிய அல்லாஹ் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் ஐயமற விளக்கம் சொல்கின்றது இந்நூல்.376  பக்கங்களில் 49 தலைப்புக்களில் அல்லாஹ்வின் திருநாமங்கள் பண்புகள் குறித்து நூலாசிரியர் விளக்குகின்றார்.

நாமறிந்தவரை அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள்தான்.இது நமக்கு மரபு ரீதியாக கற்றுத்தரப்பட்டவை.இவற்றினை மீறி அவனுக்கு வேறு பெயர்கள் உள்ளனவா என்பது குறித்த ஆய்வில் நாம் ஈடுபடவுமில்லை. தேடவுமில்லை. எனினும் நம்மை படைத்து ஆளுபவனுக்கு இன்னும் பல திருநாமங்கள் இருக்கின்றன. என்ற ஆய்வின் மூலம் உன்னத வரலாற்று சிறப்பினை தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கியிருக்கின்றார் ரிஸ்வான் மதனி

ஓவ்வொரு தலைப்பிற்கும் பொருத்தமான அல்குர்ஆன் வசனங்களும்.தேவையேற்படின் நபிகளாரின் சுன்னாவும் உசாத்துணையாக எடுத்தாளப்பட்டுள்ளன.அல்லாஹ்வைப்பற்றி அறிமுகம் செய்யும் போது அவன் குறித்து அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து பண்புகளும் குணவியல்புகளும், அவன் வல்லமையை பறைசாற்றும் அனைத்து அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதானது இந்நூலின் சிறப்பம்சம் எனில் மிகையல்ல.

இதற்காக நூலாசிரியர் துறைசார் நூல்களை தேடிப்படித்து தொகுத்திருப்பதனை பாராட்டவே வேண்டும்.

எல்லா சிந்தனைகளுக்கும் பிரிவுகள் கருத்து முரண்பாடுகள் தோன்றியது போல் அல்லாஹ்வின் பண்புகள் பெயர்கள் குறித்து மாறுபட்ட கருத்துக்களும் சர்ச்சைகளும் இஸ்லாமிய உலகில் சில  குழுக்களால் தோற்றுவிக்கப்பட்டன.

எனவே அடிப்படை கொள்கையினை அதாவது அகீதாவை விளங்கிச்செயற்பட அல்லாஹ்வின் பண்புகள் குறித்த நேர்பார்வை அவசியம். தவறான புரிதல்களும் வியாக்கியானமும் அல்லாஹ்வின் மீது அடியான் கொள்ள வேண்டிய நம்பிக்கையினை சிதைத்துவிடும்.அவனை தவறான கொள்கையின்பாலும் சிந்தனையின்பாலும் கொண்டு சேர்த்து விடும்.வழிதவறும் குழுக்களின் மனவோட்டத்தை ஒழுங்கமைக்க சீரிய சிந்தனை ஊட்டப்படவேண்டியது அவசியம். அவற்றினை நமது சலபுஸ்ஸாலிஹீன்களான மதிப்பிகு இமாம்கள் செவ்வனே ஆற்றியிருக்கின்றார்கள்.அவர்களின் அயராத முயற்சியும் ,எழுச்சியும் வழிகெட்ட சிந்தனைப்பிரிவுகளின் கனிசமான உருவாக்கத்தினை தடைசெய்தன.அல்லது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தன.

 இந்த சிந்தனைப்பிரிவுகள் யார் அல்லாஹ்வின் பண்புகள் குறித்த அவர்களின் பார்வை என்ன எவ்வகையான பண்புகளில் மாறுபட்ட கருத்துவேற்றுமைகள் உள்ளன போன்ற விடயங்களை தமிழில் விளக்கும் ஆய்வு நூல்கள் இல்லாத குறையை இந்நூல் பெரிதும் நிவர்த்தி செய்துள்ளது.

குறிப்பாக அல்லாஹ்வின் பண்புகள்,பெயர்கள் தொடர்பான விதிகள் அவற்றிற்கான வரைவிலக்கணம் போன்ற அம்சங்களை துலாம்பரமாக விளக்குகின்றது இந்நூல்.

இஸ்லாமிய உலகில் தோன்றிய கண்ணியமிக்க இமாம்களின் கருத்துக்கள் அல்லாஹ் பற்றிய சரியான வரைவிலக்கணங்கள் குறித்து பேசும் அதே வேளை அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகளை பாழ்படுத்துவதால் ஏற்படும் விபரீதங்களையும் அது குறித்த அபாயத்தினையும் ஆய்வு செய்கின்றது இந்நூல்.

அல்லாஹ்வையும் அவனது திருநாமங்களையும் சரியான கோணத்தில் விளங்கி விசுவாசம் கொள்ளவும்,உறுதியான அவனின் திருநாமங்களின் உள்ளர்த்தங்களை புரிந்து செயற்படவும்  இந்நூல் பெரிதும் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதனை முழுமையான ஆய்வாக தமிழில் தருவதற்கு பிரயத்தனங்களை எடுத்துக்கொண்ட நூலாசிரியர் ரிஸ்வான் மதனியின் முயற்சியை பாராட்டுகின்றோம்.அவரின் ஆய்வுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்க வேண்டும்.அவசியம் அனைத்து தமிழ் பேசும் முஸ்லிம்களும் அறிந்திருக்க வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய இந்நூலை வாங்கி வீடுகளில் வைத்திருந்து வாசித்து விளங்குவோம்.

ஓட்டமாவடி அறபாத் -ஸஹ்வி 

Monday 18 July 2016

சிறுகதை

ஊர்காவல் படை

    ஊரெங்கும் அமர்க்களம். எதிர்ப்படும் முகங்களெல்லாம் பூரிப்பில் திளைத்திருந்தன. எங்கள் ஊருக்கும் ஊர்காவல் படைவந்து விட்டது. இந்தக் கிராமத்திற்குச் சொந்தமான தினவெடுத்த இளவல்களின் திண்ணிய தோள்களில் துப்பாக்கிகள் பார்க்கப் பார்க்கப் பரவசம் பொங்கிற்று. 

இன்று ஆயுதப் பயிற்சியை முடித்துக் கொண்டதன் பின்னரான சிறப்பு அணிவகுப்புஇ பிரதான வீதியுடாக ஊர்வலம் செல்வதாக அறிவித்திருந்தார்கள். சி.இ.பி. சந்தியிலிருந்து பிரதேசசபை வரைக்குமான வீதியின் இருமருங்கிலும் ஜனசமுத்திரம் ஆண்கள் பெண்கள் குமரிகள் வாண்டுகள் என ஏகத்திற்கும் கூட்டம்.

தனது பிள்ளை இராணுவக் கோலத்தில் பார்க்கப் போகிறோம் என்ற மிதமிஞ்சிய துடிப்பு வயதானவர்களை நிதானமிழக்கச் செய்திருந்தது. அவர்கள் நடுவீதிக்கு வருவதும் தூரத்தே தெரியும் முகாமை வெறிப்பதுமாக அவதிப்பட்டனர்.

ஆர்.டீ.ஓ. அலுவலகத்திற்கு முன்பாகத்தான் மூத்தம்மாவும் நிற்கிறா மாமாவும் அந்த இராணுவ அணிவகுப்பில் நடை போட்டு வரவிருக்கும் கதாநாகனில் ஒருவர். மூத்தம்மாவின் முதுகுக்குப் பின் சாச்சிமார்கள். அவர்களின் பிள்ளைகள் என ஏக குடும்பமும் பிரசன்னமாயிருந்தது.

காத்தான்குடி ஏறாவூரில் இரவிராய் வெட்டிச்சரித்தபின் அடுத்த ஊர் எங்களது கிராமம்தான் என்ற கிலியும் வதந்தியும் ஒருசேர ஊரைப் பிடித்தாட்டியது.

பிரேமதாசாவின் ஆட்சிக்காலம் 90ல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் இராணுவ முகாம்களை போராளிகள் முற்றுகையிட்டனர். 24மணிநேரத்திற்குள் ஆயுதங்களுடன் சரணடைய வேண்டும். சரணடைந்த முஸ்லிம்களை தனியாகப் பிரித்தெடுத்து சுட்டுக்கொன்றனர். எரித்து மகிழ்ந்தனர். கும்புறுமூலை முகாம் மட்டும் பணியமாட்டேன் என அடம்பிடித்தது. எஸ்.ரீ.எப்.பின் தாக்குதலால் அந்தமுகாமிற்கு முன் பல போராளிகள் மாண்டனர்.

விடுவர்களா! ஊர் ஊராய் திரிந்தார்கள். ஒலி பெருக்கிகள் அதிர்ந்தன. கிறவல் வீதி புழுதியை அள்ளிச்சொரிய வாகனங்கள் பறந்தன.

மறத் தமிழர்களே! தமிழ் பேசும் இனிய மக்களே! நமது மண்  எதிரிகளிடம் வீழ்ந்து கொண்டிருக்கின்றது. அறம்காத்த வீரர்கள் மடிகின்றனர். சிங்கள ஆமியின் கொட்டத்தை அடக்கி நமது மண்ணைக் காப்போம் வாருங்கள் அணி திரளுங்கள்.

கூவிக்கூவிக் களைத்த ஒலிபெருக்கியின் பின்னால் இளைஞர்கள் திரண்டார்கள். எங்கே போகிறோம் யாருக்காக போராடப் போகிறோம்? ஏன் போகிறோம் என்ற அடிப்படை அறிவே இல்லாத நமது இளவல்களும் போனார்கள். மூன்று மணி நேரப்பயிற்சி தாக்குப்பிடிக்குமா மடிந்தார்கள்.
ஆயுதக் கவர்ச்சியால் உந்தப்பட்டுச் சென்றவர்கள் சந்தூக்குகளில் அள்ளித் திணிக்கப்பட்டு ஈமயாத்திரை சென்றார்கள். விதியை தடுத்து நிறுத்தவா முடியும்? இப்படித்தான் நாங்கள் ஈழப்போராட்டத்தில் இணைந்துஎம். விரல் கொண்டு எம் கண்களையே குத்திக்கொன்றோம்.

இரு பக்கமும் அடிபடும் மத்தளங்களாய் எமது வாழ்க்கை. 90ல் ஊருக்குள் இரட்சகர்களாய் வந்த ஆமி புலியிலிருந்து விலகியவர்களை தேடித்தேடிக் கொன்றது. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய எமது இளவல்களை ரயர் போட்டெரித்தது.

அது அடிமனசின் நினைவுகளில் கல்வெட்டுக்களாய் பதியப்பட்ட ரணங்கள். எங்களூரின் மனித மாமிசங்கள் எரியும் அவலக் குமுறலை நிர்ப்பந்தமாய் சுவாசித்தபடி ஊமைகளாய் அழுது வெடித்திருந்த காலமது. அவரவர் பங்கிற்கு சளைத்தவரல்ல என்பதை நிரூபிக்க நாம் பலிக்கடாவனோம். வீரதாப பராக்கிரமங்கள் பரிசீலிக்கும் பூமியாக எமது மண் மாறிற்று.

விஞ்ஞான ஆய்வு கூடத்தில் கொத்திச்சிதறப்படும் எலிகளாக தவளையாகஇபாம்பாக போர் தரித்த பூமியில் சிங்கள தமிழ் பேரினவாதத்தால் குதறப்படும் ஆராய்ச்சிப் பிராணிகளாக நாம் மாறியிருந்தோம். எமது உயிர்களின் விசும்பல்கள் யாரின் செவிகளிலும் கேட்காத அநாதைக் காலங்கள்.

ஓர்மம் மிகு சமுதாயச் சிற்பிகள் தோன்றினர். எமது வித்துக்களிலிருந்து வெடித்து வீரத்தளிர்கள் ஆகர்ஷித்தன. நமது மண்ணின் பள்ளிவாயல்கள் வயல் நிலங்கள்  சொத்துக்கள் அனைத்திற்கும் நாம்தான் கேடயங்கள்.

மரணத்தின் எல்லைவரை விரட்டப்பட்டவர்கள் அச்சம் என்ற புற்றுக்குள்ளிருந்து திரள் திரளாய் வெளியே வந்தனர். பிற்காலத்தில் எங்கள் இரட்சகர்கள் பச்சோந்திகளாய் மாறிப் போனது வேறுகதை. எமது பாதுகாப்பை நாமே கையிலெடுத்துக் கொண்டோம்.

எல்லைகளில் ரயர்போட்டு எரித்துவிட்டு இருளுக்குள் புதைத்திருந்து இளவல்கள் காவலிருந்தனர். தீட்டியவாள்களுடன் மின்சாரமற்ற ஊரை இளவல்கள் காத்துநின்றனர். உள்ளூர் ஒழுங்கைகளிலும் அவரவர் முறைவைத்து விழித்திருந்து காவலிருந்தனர். 

இரவும்பகலானது. கொடூரமரணத்தின் வருகையை எதிர்பார்த்தபடி பெண்களும் உறங்க மறுத்தனர். விழித்திருக்கும் இளவல்களுக்கு “இஞ்சிப்பிளேன்டியும்” அவித்த கடலையும் வரும். பந்தம் எரிவதற்கு எண்ணெய் தருவார்கள் இப்படித்தான் நாங்கள் இருளில் பதுங்கியிருந்த மரணத்தை வெளிச்த்திற்கு விரட்டினோம்.

அரசியலில் நிகழ்ந்த மாற்றங்கள் அழுத்தங்கள் இந்தக் கிராமத்தின் தலைவிதியையும் மாற்றியது. உள்ளூர் இளைஞர்களை திரட்டிப்பயிற்சியளிக்கப்போவதாக அரசு அறிவித்ததைத்தொடர்ந்து வீறுகொண்ட இளைஞர் அணி முகாம்களை நோக்கி படையெடுத்தது. வயதுஇ உயரம் கல்வித் தகைமை எதுவும் தேவையில்லை. ஊரைப் பாதுகாக்க வீரமும் உறுதியும் இருந்தால் போதும்.

பின்னொரு காலத்தில் பயிற்சி முடிந்து வீட்டிற்கு வந்த மாமா 303ஐ எப்படி இயக்குவதென்று என்னை அருகில் வைத்து பாடம் நடாத்தினார். தரையில் உருண்டு நிலையெடுத்துஇ அதன் அடிப்பாகத்தை தோளில் அழுத்தி விசையில் விரல் பதித்து நானும் ஆயுதம் இயக்கத் தெரியும் என்ற பீத்தலை என் நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி கர்வப்பட்டது. இந்த 303ன் அனுக்கிரகத்தில்தான்.
“உங்கள் ஊரை நீங்கள் பாதுகாக்கவே உங்களிலிருந்து உங்கள் படை” என்றவர்கள் எங்கள் படைவீரர்களை சிங்களக் கிராமத்தின் எல்லையில் இருக்கும் அவர்களின் இனத்தைப் பாதுகாக்க அழைத்துப் போனார்கள். எங்கள் ஸலாஹுத்தீன்கள் எங்கள் இருப்பின் எதிர்காலத்தின் மீது சிலுவையறைந்தார்கள்  சிலர் அடாச்செயல்கள் மூலம் சாம்பல்கள் பள்ளத்தாக்கின் கதாநாயகர்களானார்கள். இதுவெல்லாம் எமது நிகழ்கால நிஜத்தின் துயரக்கதை.

காடுகளுக்கும் கடலுக்கும் வயல்வெளிகளுக்கும் செல்லத் தடை செய்யப்பட்ட தருணம் அது. மீறிச்செல்பவர்கள் பிணமாக வீடு கொண்டு வரப்பட்ட காலமும் அது. தொழிலற்ற அனேகரின் பிரச்சினைக்கு ஊர்காவற்படை விமோசனம் கொடுத்தது.

இன்று அந்ததிரு விழாவைக்காண ஊரகூடி நிற்கிறது. தூரத்தே இராட்சத பாம்பொன்று அசைவதைப் போன்றுவரும் இராணுவ அணிவகுப்பு மக்களின் மனதில் கிளர்ச்சியை தூண்டியது. ஆறுமாதப் பயிற்சியை முடித்து இந்த ஊரின்மானத்தையும் இருப்பையும் காக்க உயிரை துச்சமெனமதித்துப் புறப்பட்ட அய்யூபிகளாக ஜனங்களின் மனதில் அவர்கள் ஒளிர்ந்தனர்.

மூத்தம்மா முண்டியடித்தபடி வீதியின் எல்லைக்கே வந்து விட்டார்.

“அடகிழவியைப்பாருங்கடி.
மகனப் பாக்குற  குஷியில ரோட்டுல பறக்குறா”

சாச்சிமார்களின் கேலியும் கிண்டலும் ஒழுங்கை நிறைய சிரிப்பலைகள் மகிழ்ச்சிவண்டுகளின் இடைவிடாத ரீங்காரம்.

நிமிர்ந்த நடை. இராணுவச் சீருடை. நெஞ்சிலும் முதுகிலும் உப்பி இருக்கும் குண்டுகள். இடையில் தொங்கும் கூர்வாள்இ தண்ணீர் போத்தல் கையில் இறுக்கிப்பிடித்தபடி ஏ.கே.47 வீதி மருங்கில் திரண்டிருக்கும் சனங்களை அசட்டைசெய்யும் விறைத்த பார்வை யாரும் யாரையும் திரும்பிப் பார்க்கவில்லை. அலட்நடை.
அணிவகுப்பில் மாமாவும் வருகிறார். அவர் இரண்டாவது அணி 303 கையிலிருந்தது. அவரை விடவும் உயரமான ஆயுதம். மாமாவின் அணி நெருங்க நெருங்க மூத்தம்மாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கூர்முக்காட்டை சீர்செய்தபடி சற்றே நகர்ந்து வீதியின் ஓரத்திற்கே வந்துவிட்டா.

“இஞ்செகா அங்கால போகாத. ஆமி ஏசுவான். ஒளுப்பம்தள்ளி நில்லு”

சாச்சியின் குரலை அசட்டை செய்து விட்டு மாமாவை வெறித்தபடி நின்றா. நெஞ்சு துடித்தது. முதுமையின் தளர்ச்சியும் மிதமிஞ்சிய ஆவலும் பொங்க வெப்புசாரத்தில் கரைந்தா. மாமா நெருங்கி வர ஆனந்தக்கண்ணீரால் அவரைக் குளிப்பாட்டினார். 

எல்லா வீரர்களையும் போல மாமாவும் விறைத்த பார்வையுடன் நேர்முகம் காட்டி நடந்தார். மூத்தம்மாவால் தாள முடியவில்லை.

“மனெ மம்மனிவா”

ஆங்காரமாய் கத்தினா. அது அவவின் அடித் தொண்டையிலிருந்து வந்தாலும் அடங்கிய சத்தமாய் மாமாவின் குண்டுப் பொதியை தாண்டி அவரின் நெஞ்சை உலுக்கியிருக்க வேண்டும். தலையை திருப்பாமல் இலேசாக ஓரக்கண்ணால் மூத்தம்மாவைப் பார்த்து சிரித்தார்.

இப்போது இராணுவ அணிவகுப்பு சென்ற வீதி வெறிச் சோடிக் கிடக்கிறது. திரும்பவும் மாமாவை காணும் ஆவல்! ஐந்து வருடங்களுக்கு முன்காவலரனுக்குச் சென்ற மாமா இன்னும் வீடுதிரும்பவில்லை. இவ்வழி திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு.

எனினும் இராணுவ அணி தினமும் மூத்தம்மாவின் திசை நாடி வருகிறது. அதில் மாமா இல்லை. மாமாவின் சிரிப்பு விழுந்த இடத்தில் குந்தியபடி மூத்தம்மா அழுதுகொண்டிருந்தா.


நன்றி- மீள்பார்வை



Saturday 4 June 2016

சிறுகதை

இரு வீடும், மற்றும் “அன்ரியும்”

கொழும்புக்கு குடித்தனம் வந்து ஒருவருடத்தில் இப்படியொரு பிரிவு வருமென்று நாங்கள் நினைத்திலோம். கொழும்புக்கு வருவதற்கான முன் ஆயத்தங்கள் ஆறுமாதகாலமாக நடந்தேறின. அந்த இந்தாவென அதுதள்ளிப் போய் கொண்டே இருந்தது. 

இடையில் கடும் மழைபிடித்து பிரதான வீதிகளும் காட்டு வெள்ளத்தில் அமிழ்ந்து போயின. ஒரு விடிகாலைப் பொழுது சிலுசிலுத்த மழைத்துளிகளை அலட்சியப்படுத்தி புறப்பட்டு இடையில் பாதைதெரியாத நீர்கோபுரங்களைகண்டு மிரண்டுஇ மறுபடியும் வீடேகி இப்படி ஏராளமான தடைகளைத் தாண்டித்தான் ஈற்றில் கொழும்பு வாசம் வாய்த்தது.

கொழும்புச்சூழலில் ஆர்ப்பாட்டமான ஆடம்பர வாழ்க்கை ஒன்றை சோடித்து வாழும் நகரத்து மக்களிடை ஒரு நடுத்தர கிராமத்துக் குடும்பம் வாழ்வை தொடங்குவதென்பது பெரும் சுமையாக முன் நின்று அச்சுத்தியது.

திருமணம் முடித்த புதிதில் விடுமுறை தினங்களில் ஊருக்கு கிளம்புவதென்பது இன்பமயமாகத்தான் இருந்தது. பயணத்தில் ஒருநாளும் வீட்டில் ஒருநாளுமாய் சிலகாலம். பின் இதுவே அலுப்பாயிற்று. பிரிந்திருக்கவும் சேர்ந்திருக்கவும் முடியாத அவஸ்தை ஒருவருடமாகியும் “என்னஒன்றுமில்லையா” என வயிற்றை உற்றுப்பார்க்கிறார்கள். என அவள் வேறு இருள் படிந்த முகத்துடன் முறையிடுகையில் சூன்யம் வந்து கவ்விக்கொள்ளும். அவளுக்கு சடுதியாக கிராமத்தை விட்டும் கிளம்பி “ஒருமாதிரிப் பார்வை” களிலிருந்து தப்பவேண்டும். இந்த மன அவசங்களுக்கு முற்றுப் புள்ளிதான் கொழும்பு வாசம் என முடிவாயிற்று.

ஊருக்குத் திரும்பும் முதற்கட்டமாக – சாமான்களை மூட்டை கட்டிவேனில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து “அனெக்ஸி”லிருந்து அன்ரியும் வந்திருந்தா. நடுநிசிக்குள் புறப்படவேண்டும் என்ற தீர்மானதத்தின்படி பரபரவென்று வேன் நிறைய சாமான்களை அடையத் தொடங்கினார்கள். 

கீழ் தளத்தில் வீட்டு உரிமையாளர்கள் இருந்தார்கள். மேல் மாடி இரண்டாகப் பிரிக்கப்பட்டுஇ பிரத்யேக வசதிகளுடன் இரு குடும்பங்கள் வசிப்பதற்குத் தோதாக அமைக்கப்பட்டிருந்தது. இரு வீடுகளுக்கும் வெவ்வேறு கதவுகளும் படிகளும்.
இவர்கள் குடியிருந்த அயல்வீட்டில் தென்மாகாண குடும்பமொன்று குடியிருந்தது. வீட்டிற்கு குடிவந்த மறுகணமே மனைவியையும்இ மாமியையும்இ பிடித்து அயல்வீட்டினருடன் அறிமுகம்செய்ய இவன்தான் தள்ளாத குறையாக தள்ளிவிட்டான். அவர்களும் நன்கு அறிமுகமாகி அங்கு வசிப்போரின் மனதில் இடம்பிடித்துவிட்டனர்.

மேல் மாடியில் உசுப்புக் காட்டினால் கீழ்தளத்தில் உள்ளவர்கள் சட்டென உணர்ந்து கொள்ளுமாற்போல் இந்தவீட்டின் அமைப்பு வாய்த்திருந்தது நிலவறை ஒன்றில் தட்டுமுட்டு சாமான்கள் குவிந்துகிடந்தன. 

புதிய முகம்இ புதிய இடம்இ சிக்கலான பாஷை அடிக்கடி துண்டிக்கப்படும் நீர் என எல்லா நெருக்கடிகளுக்கும் இவன் மனைவிதான் மிகக்கடுமையாக ஈடுகொடுக்க வேண்டியதாயிற்று.

திருமணம் முடித்த புதிதில் ஒரு குழந்தைக்கு ஏங்கிய ஏமாற்றத்தின் சமருக்கும் முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. மொழுமொழுவென்று கணத்த வயிற்றுடன் அவளைப் பார்க்கையில் உள்ளூரக்குதிக்கும் உவகை எழுத்தில் மாளாது. தனிக் குடித்தனம் இவனைவிடஇ அவளைத்தான் வாட்டி எடுத்தது.

காலையில் இவன் அலுவலகம் செல்லக்கிளம்புகையில்இ தனிமையின் இருள் கவிழ்ந்து அவள் முகத்தை மூடும். விழிகள் பிதுங்கி மாலை வரும்வரை படிக்கட்டில் தவிக்கும் அவள் மருண்ட விழிகளே இவன் கம்பியூட்டரிலும் தத்தளிக்கும். 

கர்ப்பத்தின் அவஸ்தை தனிமையின் கண்ணுருட்டல் எல்லாவற்றையும் ஏககாலத்தில் துடைத்தெறிய ஊரிலிருந்து யாராவது திடுதிடுப்பென பிரசன்னமாகி விடுவார்கள். சிறிய வீட்டில் மத்தாப்பு வெடிக்கும். சந்தோஷ சாகரத்தில் இவனை விட அவளே அதிகம் திளைப்பாள். ஒரு மாத இடைவெளி விட்டு வருகை தரும் மாமியின் தரிசனம் உவகை தரும். கூடவே உப்பு தேசியும்இ பொறித்த மீனும் கட்டித் தயிரும் மணக்கும். தொப்புள் விழுந்த பூமியிலிருந்து எதுவந்தாலும் அது தித்திப்பான அறுசுவைதான்.

இதமான காற்று இணைந்திருந்து நிலாவை ரசிக்கவும் கவிதை பகரவும் அருகில் அவள் வயிற்றுள் வளரும் உயிரின் அசைவும் எகிறலும் சிலிர்ப்பூட்டும். “இதோ கைய வெச்சிப்பாருங்க என்னமா உதைக்கிது.” அவள் வயிற்றில் கைவைத்து அழுத்தும் போது கிச்சுகிச்சு மூட்டும் குழந்தையின் உதைப்பு உயிரே உறைகிறாற் போல் மனம் உருகி வழியும். யந்திர வாழ்க்கையில் பத்து மாதம் ஒரு தூசாகப் பறந்து போயிற்று.

வழியனுப்ப இரவு 12மணிக்கே வீட்டு உரிமையாளரும்இ அவர் குடும்பமும் மற்றும் அன்ரியும் எழுந்து வந்துவிட்டார்கள். குழந்தை பிறந்த புதிதில் அவர்களின் குடும்பம் வந்து பார்த்துவிட்டு போன போது. “இன்டக்கி அன்ரிட ராத்தா வந்தாஇ “இன்டக்கி கீழ் வீட்டுக்காரர்ர தங்கச்சி வந்தா என தினமும் வரவுகள். இவன் மாலையில் வீடு திரும்புகையில் மகிழ்வூட்டி நின்றன. கண் மூடிதிறப்பதற்குள் ஒருவருடம் கழிந்திற்று. குழந்தையும் பிறந்து 20 நாட்களாகி விட்டது.

ஊரிலிருந்து டெலிபோனுக்கு மேல் டெலிபோன் “பிள்ளையபார்க்க வேண்டும் கூட்டிவாருங்கள்”.

அலுவலகத்திலும் அதிக வேலைப்பளு பணமுடை என நாட்கள் நகர்ந்தது. ஈற்றில் இன்று ஊர் போவதென ஊர்ஜிதமாயிற்று.

குறுகிய கால நட்பில் நெஞ்சம் நெகிழ்கிறது.  “உங்களைப் போல ஒருபெமிலி இனி வாய்ப்பாங்களோ தெரியா”. அன்ரியும் வீட்டுக்காரரும் அங்கலாய்த்தனர். மனைவியையும் மாமியையும் அணைத்தப்படி விசும்பும் ஒலி இவன் நெஞ்சைப் பிசைந்தது.

அவர்களின் பிள்ளைகளும் எழுந்து ஜன்னல் இடுக்கால் தலை நிமிர்த்தி பார்த்துநின்றன. தூக்கம் நிறைந்த அவர்களின் விழிகளிலும் ஏக்கம் தேங்கிக்கிடந்தது.

“நீங்க ஒபீசுக்கு போனாஇகீழ்வீட்டுப் பிள்ளைகள் என்னோடவந்து பேசிக்கிட்டு இருப்பாங்க ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் அவங்கள கூட்டிப்போவாங்க அந்த பிஞ்சுக் குழந்தைகள் பற்றி மனைவி சொன்னது மனதில் தைத்தது.

நாங்கள் குடியிருந்தசூழல் மூவினம் கலந்து வாழ்ந்த ஒரு இறுக்கமான சூழல். அயல் வீட்டினருடன் சுமூகமான உறவு இல்லாலிட்டாலும் பகையுணர்ச்சியும் இடைஞ்சலும் இல்லாத மனிதர்கள். தானுண்டுதான் வேலையுண்டு என ஆலாய் பறக்கும் மனிதர்கள்.

எமக்கு அடுத்த தெருவில் மனைவியின் தோழி தன் கணவருடன் குடியிருந்தாள். இதில் ஆச்சர்யம் நாங்கள் வந்து ஐந்து மாதங்களின் பின்னர்தான் அவள் வீட்டு விலாசம் கிடைத்தது. பின்பு இருவரும் அங்குமிங்கும் நடைபோடத் தொடங்கி விட்டார்கள். பழைய சிநேகிதம் புதிய இடம் நட்பின் அவசியத்தை அதிகம் வலியுறுத்தியது. நேற்றுத் தான் கணவருடன் வந்து குழந்தையையும்இ அவள் தோழியையும் பார்த்து விட்டுப்போனாள்.

மாமியின் நெருக்கமான உரையாடலின் ஊடே மெல்லிய அழுகை ஊடறுத்து இவன் காதை நிறைத்தது. 

பிரசவவலி கண்ட அர்த்தராத்திரியில்இவீட்டு உரிமையாளரின் மனைவிதான் கூட உதவிக்குவந்தா சிங்கள மொழி தெரியாத இவர்களுக்கு அவவின் வருகை ஒரு கடாட்சம் போல் ஆகிவிட்டது. அர்த்த ராத்திரியில் ஆட்டோ பிடித்து மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்த்தது முதல் எல்லாப்பணிகளையும் அவவே கூடநின்று செய்தா. மாமி விம்மலினூடே இவ்வுதவிகளை நினைவுபடுத்திஇ கடைசி வரை உங்கள மறக்க முடியாது என சிணுங்கத்தொடங்கினார்.

பஞ்சுக்குவியலாய் குழந்தை துணியால் சுற்றப்பட்டு மனைவியின் கையிலிருந்தது. அவனை இழுத்து வைத்து இருவீட்டாரும் கொஞ்சிக்கொஞ்சி சிரித்துக்கொண்டிருந்தனர். 

இவனுக்கும் தர்ம சங்கடமாயிற்று. இன்னும் கொஞ்சகாலம் தங்கியிருக்கலாமே என்ற உணர்வின் உந்தல் இந்தப் பாசமழையில் பீறிட்டுக்கிளம்பியது. 

உறவுகள் மனிதநேயம் எல்லைகளையும்இ பிரதேசங்களையும் கடந்து மனங்களில் ஊடுருவிப் பாயும் கடவுளின் அற்புத ஜாலம் குறித்து இவன் ஆச்சர்யத்துடன் பிரமித்து நின்றான். எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து இவர்களைப் பிணைத்து பிரியும் தருணம் ஒரு துளி நீர்க்கசிய வைத்த அற்புதம்தான் களங்கமற்ற உறவின் ஆதாரமாகும்.

அன்ரியின் மருமகன் மாடிப்படி விளக்கு எரியும் ஒளியில் நனைந்தபடி இறங்கிவந்து கை குலுக்கினார். அடிக்கடி டெலிபோன் எடுங்கள் என்றார். அவரைப் பற்றிய பின்னணிக் கனவுகள் ஒரு சினிமாவின் பின்புலக் காட்சியாய் இவன் மனதில் விரியத் தொடங்கின.பழகுவதற்கும் பார்ப்பதற்கும் வசீகரமான மனிதர். அவரின் ஆங்கில மொழித்திறமை எதிரில் நின்று பேசுபவரைக் கூட திணறடிக்கும்.

இவர்களது “அனெக்ஸி”ன் பொதுக் கதவினை ஒட்டினாற் போல்தான் அவர்களின் பிரதான வரவேற்பு மண்டபம் அமைந்திருந்தது. அயலவரின் அமைதிபற்றி அவருக்கு கிஞ்சித்தும் கவலை கிடையாது. ராத்திரி இரண்டரை அல்லது மூன்று மணிக்கு வீடு திரும்புவார். கதவு தட்டும் ஓசையால் நான்கு வீடுகள் தூக்கம் கலைந்து முணுமுணுக்கும். குறிப்பாக எமது நிலையோ சொல்லிமாளாது. இதயத்தில் அடிப்பது போல் படீர்படீரென விடாமல் தட்டிக் கொண்டே இருப்பார். அவர் மனைவியோ அன்ரியோஇ வந்து கதவு திறக்கும் ஓசையைத் தொடர்ந்து அவரின் வசைமாறி காதைஅடைக்கும்.

அருகில் தூங்கும் மனைவி விழிப்புற்று நச்சரிப்பாள். “என்னப்பா இந்த மனுஷன் நேரம் கெட்டு வாரதும் சத்தம் போடுறதும்இ அடுத்தவங்களப் பற்றி கவைலயே இல்லாத ஜன்மம் அவளின் எரிச்சல் அடங்குவதற்குள் அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பமாகிவிடும்.

“பரத்தட்டுவானிஇ காது செவிடாடி பரவேச நான் எவ்வளவு நேரமா தட்டுறன்” அன்ரியைத் திட்டுவார். இப்படி அகால நேரத்தில் அவர் திட்டுவதைக் கேட்க மனசு அலறித் துடிக்கும். மனைவிக்கும் விழிகளில் நீர்துளிக்கும். சற்றைக்கெல்லாம் அவர்மனைவியும் சேர்ந்து அன்ரியை திட்டுவார்கள். காதில் ஒலி வாங்கிவைத்து பேசுவது போல் எம்மை அந்தநாசகாரச் சொற்கள் பிய்த்தெடுக்கும்.

“நாங்க தாரத திண்ணுட்டு மரியாதயா இருடி இல்லாட்டிபோ செத்து தொலை” அவருடன் அன்ரியின் மகளும் சேர்ந்து அவவை அவமானப்படுத்துவதுதான் ஜீரணிக்க முடியாத வேதனையைத் தந்தது.

“என்ன பிரதர் எனிதிங் டெல்மீ” திடீரென அவர் இவன் பின்னணிக் கனவைக் கலைத்தார். “நத்திங்பிரதர்” என்றவன் சிநேகிதமாக சிரித்து வைத்தான். இன்னும் பிரியா விடை விசும்பல்கள் ஓயவில்லை. அன்ரி மனைவியின் முகத்தை தடவியபடி ஏதேதோ கூறிக்கொண்டிருந்தா.

“மறுகா கொழும்புக்கு வந்தா கண்டிப்பா வரனும் பிள்ளய கூட்டிட்டு வாங்க” இன்னும் எதுவெதுவோ ஓர் ஆவல் தவிப்பு எல்லாமே சொற்களாய் விழுந்தன. அவவுக்கு இருந்த ஒரே ஆறுதல் இவன் மனைவிதான். அவளின் பிரிவு அவவை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளியதை இவனால் சட்டென உணரமுடிந்தது.

மருமகனும் மகளும் சேர்ந்து வசைபாடி முடிய பாத்றூமில் அன்ரியின் அழுகைச் சத்தம் நிறைந்திருக்கும். அவர்களின் பாத்றூமுக்கு அருகில்தான் இவர்களின் வீட்டுக்கு வரும்பின் கதவு இருந்தது. தேம்பித் தேம்பி அன்ரி தண்ணீரை முகத்தில் வாரியிறைப்பது தெளிவாக கேட்கும். இவன் மனைவி எழுந்து உட்கார்நது கொள்வாள். தினம் நடக்கும் இந்தச் சம்பவங்கள் அவளை வெகுவாக இம்சைப்படுத்தின.

அன்ரியின் ஓவென்ற கதறல் ஒலி கீழ் வீட்டாரையும் உசுப்பிவிடும். சாமத்தில் எழுந்துவந்து அவவின் மகளை அடக்கமாக ஏசிவிட்டுப் போவார்கள். அயல் வீட்டு சிங்களவர்கள் இதுபற்றி பொலிசில் முறைப்பாடு செய்வதாக கூறிப்பார்த்தார்கள். 

இவன் காலையில் அலுவலகம் கிளம்புகையில் அன்ரி கைநிறைய சாமான் பொதியுடன் வீதியில் எதிர்ப்படுவா. நேற்றிரவுச் சம்பவத்தை நினைவுபடுத்தும் அவவின் கலைந்த தலை முடியும் சிவந்த விழிகளும் பார்க்க பரிதாபமாக இருக்கும். ஒரு இலட்சம் அவமானம் கலந்த சிரிப்பு அதில் வேதனை இழையோடும். எல்லாவற்றையும் புதைத்தபடி “என்னா ஒபிசுக்கா” என்பா. அவவின் விழிகளில் பாசத்திற்கும் ஆதரவிற்கு மான கெஞ்சல் தவித்துக் கொண்டிருக்கும்.

வேனுக்குள் எல்லாச் சாமான்களையும் அடைத்தாயிற்று சில பொருட்கள் அடைய முடியாமல் வீதியில் விரவிக்கிடந்தன. அவை வேனில் மேல் பகுதிக்கென ஒதுக்கப்பட்டதாக வேலையாள் சொன்னான்.

“சரி நேரம்போகுது ஏறுங்கோ என இவன் அவசரப்படுத்தினான். இப்போது அன்ரியின் கையில் குழந்தை இருந்தது.” “மனைவியைப் போல பபா சிவப்பு”  என அடிக்கடி சொல்லிக் கொள்ளும் அன்ரி பவ்யமாக குழந்தையை அணைத்தபடி வெறித்துக் கொண்டிருந்தா.

அன்ரி மூன்று பிள்ளைகளின் தாய். ஒரு ஆண் இரு பெண்கள். அமெரிக்காவில் 15 வருடம் கணவருடன் வாழ்க்கை. ஆடம்பரமாக வாழ்ந்தவர்கள். கணவரின் மரணத்துடன் அமெரிக்காவுக்கு “குட்பை” சொல்லிவிட்டு இலங்கைக்கு திரும்பி விட்டார்கள். அந்திம காலத்தில் ஆண் துணையற்று பிள்ளைகளை வளர்த்து வாழ்க்கையும் அமைத்துக் கொடுத்தபின்பு அந்த பிள்ளைகளே தாயை சுமையாகவும் தொல்லையாகவும் நடாத்தும் அவலம்

யாருக்கும் நேரக்கூடாது இவன்அடிக்கடி மனைவியிடம் இதைக் கூறிக்கொள்வான். 

அன்ரி பற்றிய அனுதாப அலை அந்தப்பேட்டையில் எல்லோர் மனதிலும் கவிழ்ந்திருந்தது. இது அளவுக்கும் தெரியும். இரவுச் சண்டை முடிந்த காலைஇ இவன் மனைவியிடம் வந்துஇ முறையிடுவாஇ “மகள் எனக்கு வெளியில போக முடியல்ல வெக்கமா இருக்கு” இவள் ஆறுதல் படுத்துவாள். ஈற்றில் அன்ரி பிள்ளைகளை விட்டுக் கொடுக்காமல் பரிந்துபேசுவா  “சரி மவள் அவ அப்படித்தான் முன் கோபக்காரி. இரவில எசுவாஇ வெள்ளென சரியாப் போயிரும்” என்பா. அன்ரியின் பிரதி பிம்பங்கள் எப்போதும் அவவை எமக்குள் ஓர் அநாதைபோல வேதனையுடன் நோக்கவைத்தன.

எல்லோரும் வேனுக்குள் ஏறியாயிற்று இவன் இறுதியாக விடை பெற்றான். ஏக குரலில் “அல்லாட காவல்” என்ற ஆசிர்வாதங்கள்இ பனி விசிறும் இரவின் குளிர்மையை தாண்டி மனசில் சில்லிட்டன. அன்ரி குஞ்சை பறிகொடுத்த கோழியாய் மிகுந்த ஆதங்கத்துடன்  வேனை சுற்றியபடி வந்து ஏதோ கூறினா. 

எங்கள் மனங்களின் உக்கிரம் தெரியாமல் வேன் வேகம் பிடித்தது. ஒரு திக்கற்ற பாலைவனத்தில் அன்ரி மட்டும் நின்று தவிப்பதைபோல் இவன் விழிகளில் அவவின் உருவம் மட்டும் ஆரோகணித்துக்கொண்டிருந்தது.

நன்றி- பிரவாகம்



Tuesday 3 May 2016

சிறுகதை

அந்திமழை


“நீங்கள் தந்த “விசிடிங்கார்ட்” விலாசத்திற்கே இக்கடிதத்தை எழுதுகின்றேன்.” 
மழைக்காலம். கனதியற்று சிலுசிலுவென அழுதுகொண்டிருந்தது வானம். தலை நகரத்து அழுக்குகளை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு அசுத்தங்கள் வீதியை நிறைக்கின்றன.

நீங்கள் ஆமர்வீதியில் நின்றீர்கள்.  “குடைகொண்டுவரவில்லை” என்ற மடமையில் வசைபொழிந்தபடி பஸ்சுக்காகக்காத்து நிற்கும் உங்களில் விழிவைத்து நின்றேன் நான்.

மாலையின் வயதை இரவாக உயர்த்திக் காட்டியது இருள். மழை இலேசாகத் தூறினாலும் நேரேநெஞ்சை நிமிர்த்தி “என்னில்விழு” என்று தாரைவார்க்க முடியாது. அப்படியொரு சீராகத்தூறிக் கொண்டிருந்தது.

குடைக்குள் நங்கூரமிட்ட சில உடல்கள் வெளியே தலை நீட்டி “பஸ் வருகுதா’ என வீதியைப் பார்ப்பதும்இ கடிகாரத்தைப் பார்ப்பதுமாய் அவஸ்தைப்பட்டனர். எனினும் நீங்கள் சாவகாசமாக நிற்கிறீர்கள்.

அருகே ஒரு பெட்டிக்கடை சினிமா நட்சத்திரங்களின் படங்களை தன்னில் மாலையாக வரித்துக்கொண்டு பிஸியாக இருந்தது. அதற்குள் பீடாஇ பாபுல் வெற்றிலை வகையறாக்கள். சில குமர் பெண்கள் பெட்டிக்கடைக்காரனிடம் சிரிப்பும் கும்மாளமுமாய் அமர்க்களப்பட்டனர். நீங்கள் புறக்காட்சிகளைச் சுவாரஸ்யமாக அவதானிப்தை நான் பார்க்கிறேன்.

அந்தப்பெண்களின் விழிகளில் இரை தேடும் வெறியிருந்தது. வீதியோரங்களில் களிநடனம் புரியும் வசீகரமும் வேண்டுமென்றே மார்பைத்தூக்கி நிமிர்த்தியிருக்கும் சில்மிஷமும் உங்களை ஒருகணம் திணறடிக்கிறது.
உங்கள் மனம் பரபரப்பதை உணர்கிறேன். ”பேரம் பேசும் தலமாக அந்தப்பெட்டிக்கடை. சுலபமாகக்கண்டுபிடித்துவிட்டீர்கள். திடீரென உங்களை அச்சம் வந்துகௌவுகிறது. இளமையின் மதர்ப்பில் தளதளக்கும் அழகிகள் கூட்டம் வசியம் செய்தது. பிரயாசைப்பட்டுஇ நீங்கள் விழிகளை விடுவித்து வீதியில் எறிகிறீர்கள்.
தூவானமே மழையாகியது. அருகிலிருந்த ஹோட்டலுக்குள் நுழைகிறீர்கள். “பிளேன்ரீ”யை உறிஞ்சியபடி மழையின் சங்கீதத்தில் லயித்திருக்கின்றீர்கள். 
உங்களின் எதிரே நானும் அமர்கிறேன். ஹோட்டலில் அவ்வளவு சனமில்லை. வாழ்வின் வனப்பையும் மதர்ப்பையும் சுவாசமாகக்கொண்டு வாழும் உங்களுக்கு வாழ்க்கை தன்பக்கத்தை புரட்டிக் காட்டியது.
வானத்தைப் புரட்டிப் போட்டால் பூமியைக்கவிழ்த்துக் கொட்டினால் என்னவெல்லாம் உதிரும். கடல் வற்றினால் எப்படி இருக்கும். எல்லாவற்றையும் என்னைப் பார்த்த முதற்பார்வையில் அவதானிக்கிறீர்கள்.
தோளில் அடம்பிடித்துத் தொங்கிய கைப்பையை அவதானத்துடன் உருவி மடியில் வைத்துக் கொள்கிறேன். நீலக்குடையின் கைப்பிடி மட்டும் வெளியே தலை நீட்டியபடி பராக்குப்பார்த்தது. 
மழை இன்னும் வலுக்கத் தொடங்கியது. டிஸ்கவரி செனலில் மட்டுமே கண்டு வியந்த பெருத்த எலிகள் உங்கள் பாதங்களில் உஷ்ணத்தை உமிழ்ந்தபடி கடைமுழுக்க ஓடித்திரிந்தன. விழிகளை இடுக்கி காலுயர்த்தி உற்றுப்பார்க்கும் வெள்ளை வெளேரென்ற எலிகள்.
திடீரென உங்கள் முதுகந்தண்டில் நண்டூர்ந்திருக்கவேண்டும். குனிந்திருந்த நீங்கள் சரேலென நிமிர்ந்து அதிர்கின்றீர்கள். எதிரே இருந்த நான் உங்களையே வெறித்துக் கொண்டிருக்கின்றேன். துணுக்குற்று உங்கள் விழிகள் என்னை துளைக்கின்றன.  உங்களுக்கு அழகான விழிகள்இ குறுகுறுவென்று எதையும் அலைந்து கௌவுகின்ற துடுக்குப் பையன் போல்இ துருதுருவென்று சுழலும் விழிகளின் வசீகரம் எனக்குப் பிடித்தது.
“நீங்க கொழும்புக்கு புதுசா”? 
எனது கேள்வி பிசகின்றி விழ நீங்கள் சுற்றமும் பார்க்கின்றீர்கள் என் இதழோரம் கேலியாய் ஒருசிரிப்பு முகிழ்ந்து உதிர்கின்றது.
“ஒங்களத்தான்இ நீங்க கொழும்புக்கு புதுசா”? 
மறுபடியும் நான் நீங்கள் சுதாரித்துக் கொண்டுஇ என்னை நோக்கி மெலிதாகப் புன்னகைக்கின்றீர்கள். ஒரு ரோஜா முகிழ்ந்து பாதி இதழ் விரிந்து இதோ முழுவதும் மலரப் போகிறேன் என்ற பாவனையைப் போல் அந்தச் சிரிப்பு. அது ஒளிர்ந்த முனையிலிருந்து உங்கள் குரலினிமை பிறக்கிறது. 
“இல்லை 10 வருஷம்” என்கிறீர்கள். 
“எங்க இருக்கிறீங்க”
“தெஹிவளையில் 
 “என்ன செய்யுறீங்க” 
“தனியார் கம்பனியில வேலை செய்யிறன்” 
நான் கேட்பதும் நீங்கள் சொல்வதுமாக இருவரிடையே மௌன முடிச்சுக்கள் நெகிழ நீங்கள் இயல்பாகி என்னைக் கேள்விகளால் துளைபோட ஆரம்பித்தீர்கள்.  
மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. கடை முன்றலில் ஏகப்பட்ட சனநெரிசல் சிறுகுடைக்கு அடங்கமாட்டேன் என்பது போல் மழை அதிக இரைச்சலுடன் கொட்டவாரம்பித்தது. 
பெண் மூடிவைத்த புத்தகம். திறந்து படிக்கும்போதுதான் உள்ளே இருப்பது தத்துவமா? கவிதையா துயரமா என்ற அனுபவம் நமக்கு ஏற்படுகிறது. உங்களிடம் என்னைத் திறந்து காட்டுகிறேன். என் கவிதைகளின் அவலமும் அலறலும் உங்கள் நெஞ்சை சுடுகிறது. வரிக்கு வரி சமுத்திரத்தின் பேரிரைச்சல். நீங்கள் படிக்கவென்றே இத்துணை காலம் நெஞ்சுக்குள் தேக்கிவைத்திருந்தேனோ!? உங்களைப் பார்த்த கணத்தில் மட்டும் ஏன் எனக்கு நம்பிக்கை துளிர்த்தது.  என்வாழ்வைப்போல் இதுவும் புதிராகவே தெரிகிறது. 
அடிக்கிற அம்மாவின் கால்களைக் கட்டிக்கொண்டு அழும் சின்னக் குழந்தை மாதிரி நீங்கள் என்னைத் தவிர்த்து விலக விலக நான் உங்களிடம் எனது கதையை கூறிக் கொண்டிருக்கிறேன்.
“எனது பெயர்பாத்திமா ஊர்காலி எனக்கு மூன்றுபிள்ளைகள். காதலித்து திருமணம் செய்து கொண்டேன். காதலின் திவ்யத்தில் பிரபஞ்சத்தில் இறக்கை முளைத்துப் பறந்துபார்த்தவர்களில் நானும் ஒருத்தி காதல் கணவன் கைவிட்டுவிட்டான். மூன்று குழந்தைகளையும் காப்பாற்ற ஆடைத் தொழிற்சாலைக்கு வந்தேன். 
இலயிப்பின்றி எழுந்து கொள்கின்றீர்கள் “மன்னிக்கவும் இந்த இடம் உன் கதைகேட்க உகந்தது இல்ல எனது விலாசம் தாரன் அலுவலகம் வா” என்றுவிட்டு நகரப்போன உங்கள் கரத்தை பலாத்காரமாகப் பற்றுகின்றேன். பிரசவத்தில் அரைவாசி வெளியே வந்து பாதிக்குழந்தை உள்ளேயிருந்தால் உண்டாகும் வலி எனக்குள் படர்கிறது. என் மனசின் சுமையை இறக்கிவைக்க நீங்கள் கடவுள் அனுப்பிய தூதர் என்றே எண்ணுகிறேன்.
“பக்கத்துல என்டரூம் இருக்கு வாங்கஇஸ “உங்களைப் பார்த்தா நல்லவரா” தெரியுது “நான்யாருக்கிட்டயும்இப்படி நடந்துக்கல்ல பிளீஸ் என்டகதயக் கேளுங்க நான் உடைந்துகரைகிறேன். சனங்களின் பார்வை நம் மீது படரத் தொடங்குகின்றது. உங்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. “சரிவருகிறேன்” நீங்கள் என்னை முன்னே விட்டு இடைவெளிகள் அதிகமெடுத்து வருகின்றீர்கள். கொட்டும் மழையில் கடைக்கு கடைதாவி வந்த உங்களின் பிரசன்னம் என் மனசுக்குள் மலையாய் உயர்கிறது. 
எனது அறை ஒருஹோட்டலின் மேல்மாடியிலிருந்தது. அங்கு வந்த பின்புதான் அதற்குள் கால்வைப்பதே பாவம் என்ற உணர்வு உங்களுக்குள் ஊர்கிறது. இலேசான நடுக்கத்துடன் அறைக்குள் நுழைவதை நான் அவதானிக்கின்றேன். உங்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியற்காக என்னை மன்னித்து விடுங்கள்.
உங்கள் திருவடியில் நான் அமர்ந்திருக்கின்றேன். “தறுக்கு” வைத்து மூடப்பட்டபுத்தகத்தைத் திறக்கின்றேன்.
ஆடைத் தொழிற்சாலையில் அறிமுகமான நண்பி அதிக பணம் சம்பாதிக்க “பார்ட்டைம் ஜொப்” இரிக்குதுஇ வா” வென்று என்னை அழைத்து வந்தாள். மருதானையில் ஒருஹோட்டல் ரூமில் என்னை இருத்திவிட்டு போய்விட்டாள். உள்ளே ஒருவன் வந்து பேரம் பேசும் வரை அந்த ”ஜொப்” இதுதான் என்று எனக்குத்தெரியாது. 
ஒரு கைதிபோல அந்த அறைக்குள் உழன்றேன். உணவும் உடையும் வந்தது. நண்பி என்ற துரோகி என்னை அந்த ஹோட்டலுக்கு விற்று விட்டசெய்தி என்னைத் துடிக்கவைத்தது.
என் அதரங்கள் துடித்தது நெஞ்சு வெடித்து கேவுகிறேன். தன்னுணர்வற்று என் துயரத்தில் தோய்ந்திருந்த நீங்கள் என் தலையை ஆதுரமாகக் கோதிவிடுகின்றீர்கள். ஆண்டவா அந்தத் தொடுகையால்தான் எத்தனைகோடி அமைதியைத் தந்தாய் நன்றி.
அழுகையினூடே என்கதையைத் தொடர்கிறேன். ”அந்தஹோட்டலில் எனக்காகத் தலைக்கு 2000 வாங்குவார்கள். எனக்கு கிடைப்பதோ 500 மட்டும். வாரமொருமுறை எனது பிள்ளைகளைப் பார்த்துவருவேன். வாழ்க்கை – உடம்பை விற்று உடலுக்குச் சோறுபோடுகிறது. ஒவ்வொருஆணின் படர்தலும் என் இரவுகளைச் சுட்டெரித்தன. கலவி என்பதை சொர்க்கமாய் அனுபவித்த நான் என்னில் ஊரும் நாகங்களை அனுமதித்தபடி மரக்கட்டையாகினேன்.
என்னைக்கட்டியவன் “தூளுக்குஅடிமையானவன். ஒருநாள் வீட்டுக்கு ஒருவனை அழைத்துவந்தான். நண்பர் எனஅறிமுகப்படுத்தி அவனுக்கு டீபோடு என்றுவிட்டு வீதியில் இறங்கிஓடினான். “எங்கேபோறீங்க?” என்றுகத்தினேன். “பிஸ்கட்வாங்கிவாரன்” என்றவனின் குரல் உடைந்து விழுந்தது. பிள்ளைகள் பாடசாலைக்குச்  சென்றுவிட்டிருந்த காலை நேரம். 
நண்பனாக வந்தவன். என்னைக் கட்டிலில் தள்ளி சூறையாடினான். “ஏனடா இப்படிச்செய்தாய்”? என்ற விம்மலிடையே அவன்கூறிய பேரிடி இணைந்து வெடித்தது.
“உன் புருஷன் தூளடிக்கவாங்கின கடன் தலைக்குமேல ஏறிட்டு தாரதுக்கு வழியில்ல  சரி உன்பொண்டாட்டிய ஒருதடவைதா என்றன் கூட்டிவந்தான் போயிட்டான். “அன்று போன கணவன்இ இன்னுமில்ல  அவன் நண்பன்தான் அடிக்கடி “கடனை” தீர்த்து போகவந்தான். உங்களுக்கு தெரியுமா நான் மக்காபோய் “உம்ரா செஞ்சவள் என்ன பயன் என்னையும் கிருபையுடன் நோக்க அருள் விழிகள் இல்லையே!
நீங்கள் பேரிடி விழுந்தவர் போல் இடிந்து போகிறீர்கள். பக்கத்து அறைகளில் சிணுங்கல்கள் பேரம் பேசல்கள் ஓர் ஆணின் துவம்சத்தில் சிதையும் பெண்ணின் வேதனைகள் எல்லாம் மிகத் துல்லியமாகக் கேட்டன.
மழையின் வேகம் குறைகிறது. இரவின் உக்கிரத்தில் தலை நகர் விழாக் கோலம்பூண்டிருந்தது. ஜன்னலிடுக்கில் கசிந்து வரும் வெளிச்சம் நாமிருந்த அறைக்குள் சொட்டியது. அந்த அறையே துயரம் படிந்து பிசுபிசுத்தது. எனது புத்தகத்தின் சுவாரஸ்யமான அத்தியாயங்களையும் படிக்கின்றீர்கள்.
“எனக்கு ஒருகூட்டாளி இருக்காருஇ என்ட “பொடிகார்ட்” போல. இந்த ஏரியாவுல அவருதான் சண்டியன். ரூமுக்க அடைபட்டுக் கிடந்தன். “கஸ்ரமர்” இல்ல. வீதிக்கு நானே இறங்கி பேரம்பேசி தொழில்தொடர்கிறேன். ”பொடிகாட்டுக்கு தலைக்கு நூறு மாமூல் ஒருநாளக்கி 5000 அல்லது 6000 வருமானம் வரும். சில நாளக்கி எதுவுமே கிடைக்காது. இந்த  ஹோட்டல்காரங்க மாதமாதம் பொலிசுக்கு இலஞ்சம் கொடுக்கிறாங்க. அதுதான் நாங்க நிம்மதியா இருக்கம். எங்கள்ற ஒவ்வொருத்திக்கும் ஒரு ஆம்பள “பொடிகாட்” இருக்கு. அவங்கதான் எங்கட பாதுகாப்பு. இதுல  வேதன அவமானம் என்னென்டா சில பேரோட புருஷனே. கட்டியவளுக்கு “மாமா” வேல பார்க்குறான்கள்.
திடீரென நாமிருக்கும் கதவு தட்டப்படுகிறது. உங்கள் சர்வாங்கமும் ஒடுங்கி வியர்த்துக் கொட்டுகிறது. சேமித்துவைத்து பாதுகாத்த மானம்  மரியாதை எல்லாம் அம்பலத்தில் கரையப் போகிறது என்ற பயம்  உங்கள் உயிரில் உறைவதைப் பார்க்கிறேன். 
நான் கதவண்டை சென்று தாழ்ப்பாள் விலக்குகிறேன். உங்களுக்கு முகம் தெரியவில்லை. ஓர் ஆணின் கை என் கரங்களுக்குள் எதையோ திணித்துவிட்டு மறைகிறது. தாழ்ப்பாளைப் போட்டுவிட்டு வந்தமர்கிறேன். அதற்குள் தெப்பமாகிவிட்டீர்கள். யாரெனக் கேட்பதற்கும் உங்கள் நாக்கு எழவில்லை. சுதாகரித்தபடி நானே சொல்கிறேன்.
இவன்தான் என்ர “பொடிகாட்” கஷ்ரமர் ரூமுக்கு வந்தா (கொண்டம்) ஆணுறை வாங்கித்தருவது இவன் பணிகளில் ஒன்று. நீங்க என்னோட வருவதப் பார்த்திட்டான். அதான் இது. சிரிக்கிறேன். என் சிரிப்பில் உயிருமில்லை. ஓசையுமில்லை. 
அந்த ஹோட்டல் முழுக்க சுக்கிலத்தின் துர்மணம் வீசுவதான பிரேமை உங்கள் நாசியை நிறைக்கிறது. 
நான் எழுந்துநிற்கிறேன். காய்ந்த திராட்சைப்பழமாய் உலர்ந்திருக்கும் உதடுகளுக்கு சாயம் பூசிமினுக்கம் கொடுக்கின்றேன். நீங்கள் என்னை வாஞ்சையுடன் பார்க்கின்றீர்கள். பவுடரை முகம் முழுக்க அப்பி தலை சீவிக்கொள்கிறேன். என் மனசிலிருந்த கணத்த பாரம் இறங்கிட்டு. என் விழிகள் ஆனந்தத்தில் ஒளிர்கின்றன. 
என் மேல் பச்சாதாபம் மேலிட ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை  நீட்டிஇ இந்தா வைத்துக்கொள் இந்த நரகத்திலிருந்து மீண்டு வேறு தொழிலைத் தேடிக்கொள் என்கிறீர்கள். நான் பிகு பண்ணவே பலாத்காரமாக என்கரங்களுக்குள் நோட்டைத் திணித்து விட்டு வெளியேறிச் சென்றீர்கள். 
உங்கள் முதுகுக்குப்பின் என்குரல் தளதளத்தது உடைந்து சிதறுகிறது.
“இந்த ரூமுக்கு வந்து என்னைத் தொடாம காசு தந்துட்டு போறமுதல் ஆம்புள நீங்கதான் நீங்க நல்லா இருக்கணும் மறுபடியும் என்னைத் திரும்பிப் பார்க்கின்றீர்கள். 
நான் ஓவென்று அழுகின்றேன். ஓங்காரமாகப் பெய்யும் அடை மழையில் என் அழுகையும் கரைகிறது.


நன்றி- ஞானம்

Thursday 24 March 2016

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையும்,பின் தொடரும் துயரமும்.


புலமைப்பரீட்சை திட்டமானது கிராமப்புரங்களில் உள்ள விவேகமான மாணவர்களை நகர்ப்புரங்களில் தெரிவு செய்யப்பட்ட தரமான பாடசாலைகளில் கற்பதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அமுறிமுகப்படுத்தப்பட்டதாகும். இத்திட்டத்தின் மூலம் வறிய கிராமங்களில் வசிக்கும் ஏழைகளின் பிள்ளைகள் அரசின் உபகாரத்தினைப்பெற்று  தனது உயர்கல்வியினை தொடர்வதற்கான நோக்கை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வந்தது.

மேற்படி இலக்கினைஅடைய இத்திட்டம் ஓரளவு வெற்றிகரமாக கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்டது.
எனினும் காலப்போக்கில் இது ஒரு போட்டித்தன்மைமிக்கதாகவும், வக்கிரமிக்கதாகவும் மாற்றமடைந்து இன்று சமூகத்தில் விவாதத்திற்குரிய ஒரு விடயமாக மாறிவிட்டது.

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் சமூகத்தில் உள்ள  அக்கரையும் ஊக்குவிப்பும் பிரமிக்கத்தக்கதாக உள்ளது. கல்விசார் நடவடிக்கையில்  
அடிமட்ட மக்களின் ஈடுபாட்டிற்கும் பாடசாலை சமூகத்தின் மீதான பற்றையும் மேம்படுத்த இப்பரீட்சை வழியமைத்துக்கொடுத்துள்ளது. பெற்றோர் பாடசாலையின் வளர்ச்சியில் காட்டும் அக்கரையும்  மாணவர் கல்வி சார் நலனில் காட்டும் அதீத ஈடுபாடும் இப்பரீட்சைக்குப்பின் ஆர்வமாய் தொடர்ந்துள்ளது எனில் மிகையல்ல. 

எனினும் தற்காலத்தில் இப்பரீட்சைகுறித்த கேள்விகளும் இதன் பின்னனில் நடைபெறும் கல்வி வணிகமும் எதிர்காலத்தில் கல்வி நிறுவனங்களை ‘மாபியா‘க்களாக மாற்றிவிடுமோ என்ற ஐயம் தவிர்க்கமுடியாமல் மேலெழுகின்றது.

இது தொடர்பில் சமூகத்தல் வேரூன்றியுள்ள சில விடயங்களை சிந்தனைக்கு விடுவது பொருத்தமெனதோன்றுகிறது.

புலமைப்பரிசில் பரீட்சை  ஏற்படுத்திய பிரதிபலன்களை விட அது ஏற்படுத்தும் காயங்களும் வலிகளும்,மன உளைச்சல்களும் சமூகத்தில் மனோவியாதியாக மாற்றமடைந்துள்ளன.

 பனிப்போர்

ஆசிரியர்களுக்கிடையான குரோதங்களும் போட்டித்தன்மையும் இப் பரீட்சையின் மூலம்  தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆசிரியரின் முயற்சியால் சித்தியடையும் மாணவர் தொகையினை ஒப்பிட்டு  நோக்கி அந்த ஆசிரியரின் கியாதி சமூகத்தில் மிகைப்படுத்தி மெச்சப்படுகின்றது.

திறமையாக கற்பிக்கும் பிற துறை சார் ஆசிரியர்களின் உழைப்பும் பணியும் உதாசீனப்படுத்தப்படுகின்றது.புலமைப்பரீட்சைப்பரிசில் பரீட்சைக்கு தயார்படுத்தும் ஆசிரியர்களின் முதன்மையும், வரவேற்பும் சக ஆசிரியர் குழாத்தினரிடையே போட்டி மனப்பான்மையையும், குரோத எண்ணங்களையும் வளர்த்து விடுகின்றது. இதனால் மறைமுகமான பனிப்போர் பாடசாலை மட்டங்களில் நிகழ்வதை அவதானிக்கலாம்.ஒழுக்கம் நன்னடத்தை,உயர் குணாதிசயங்களின் உறைவிடமாக உள்ள ஆசிரியர்கள் வஞ்சகம், குரோதம், போன்ற துர்க்குணங்களால் ஆற்றுவிக்கப்படுவதை அவதானிக்க முடியுகிறது. 

புலமைப்பரீட்சைக்கு தயார்படுத்தும் திறமையானவர் எனக்கருதுபரிடம் மாணவர்களை சேர்த்து விட பெற்றோர்கள் முற்படுவதானால் அதே தரத்திலுள்ள ஐந்தாம் ஆண்டிற்கு வகுப்பெடுக்கும் பிற ஆசிரியர்களின் மனதில் புலமைப்பரீட்சை வகுப்பெடுக்கும்  ஆசிரியர் மீது பொறாமையும், போட்டியும் நிலவுகின்றது. இதனால் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய சில ஆசிரியப்பெருந்தகைகள் தனிப்பட்ட விடயங்களை துருவித்துருவி பரப்புவதற்கு முனைகின்றதையும் காணலாம். 

ஒரு பாடசாலையில் திறமையாக கற்பிக்கும் ஆசிரியரை மற்றுமொரு பாடசாலை விலைபேசி பகுதி நேர வகுப்புகளுக்கு இழுப்பதும் அரசியல் செல்வாக்கினைப்பயன்படுத்தி மாற்றம் பெற முயற்சிப்பதும் சாதாரணமான நிகழ்வுகளாகி விட்டன.இது கல்விசார் சமூகத்தினரிடையே எதிர்காலத்தில் பாரிய ஒழுக்க வீழ்ச்சிக்கு வித்திடும் என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது.

கல்வியை கடமையாக கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் இதனை முழு நேர இலாபம் தரும் மூலதனமாக மாற்றி விடுகின்றனர்.இதற்காக இரவு பகலென மாணவர்களை பிழிந்தெடுக்கும் தந்திரங்களையும் சில ஆசிரியர்கள் வகுத்துள்ளனர். தயாரிக்கப்பட்ட கேள்விகள்,கடந்த கால வினாப்பத்திரங்கள், நண்பர்களால் எழுதப்பட்ட புலமைப்பரீட்சை வழிகாட்டிகள் அனைத்தையும் காசாக்கும் இலகு தொழிலாக ஐந்தாம் ஆண்டின் புலமைப்பரீட்சை வழியமைத்துக்கொடுத்துள்ளது.

வாராந்தோறும் இடித்த மாவை திரும்பத்திரும்ப இடித்து மாணவர் சமூகத்தினதினதும் பெற்றோர் சமூகத்தினம் தலையில் கட்டி மிளகாய் அரைக்கும் புத்தசாலித்தனத்தை சில ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை ஆசிரிய வணிகர்கள் கச்சிதமாக செய்து வருகின்றனர்.அடித்த பாம்மை அடித்து வீர தீரப்பட்டம் பெற்;ற மாண்மியம் பெறும் இந்த ஆசிரியப்பெருந்தகைகள் இருக்கு மட்டும் புலமைப்பரிசில் என்ற நாகம் மாணவரின் உயிரையும் பெற்றோரின் பொருளாதாரத்தினையும் கொத்திக்கொண்டே இருக்கும்.

உளவியல் உபாதைகள்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு தயார்ப்படுத்தப்படும் மாணவர்கள் பெரும்பாலும் உளவியல் உபாதைகளுக்கும், உளைச்சலுக்கும் உள்ளாக்கபட்படு வருகின்றமை கண்கூடு. கல்வித்திணிப்பும், மிகைப்படுத்தப்பட்ட  கட்டுப்பாடுகளும் மாணவர்களின் உளவியல் உபாதைகளுக்கு வேர்க்காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

மேலதிக வகுப்புக்கள் என்ற சிறை மாணவரின் சுதந்திரத்தினையும் ,சுறுசுறுப்பினையும் வேரோடு கெல்லி எறிந்து விடுகின்றது. சராசரி ஒரு மாணவன் விளையாடவும் ஓய்வெடுக்கவுமான நேரங்களைக்கூட இந்தப்பரீட்சை கபளீகரம் செய்து விடுகின்றது. அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் புலமைப்பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர் எழும்ப வேண்டும். கலையாத தூக்கத்துடன் பிரத்தியேக வகுப்புக்களுக்கு செல்லவேண்டும்.அதே சீருடையில் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு பாடசாலை வகுப்பறைக்கு செல்ல வேண்டும்.பின்னர் பாடசாலை நேரம் முடிந்ததம் சரியாக அரை மணி நேரத்திற்குப்பின் மாலை வரை  தொடரும் பிரத்தியேக வகுப்பு . 

ஓரு மாணவன் அன்றைய தினம் தன்னை ஆசுவாசப்படுத்துவதற்குள்  இரவு நேர கற்கைகள்  கடந்தகால வினாப்பத்திரங்கள் செய்தல், பயிற்சிகள் என இரவு 10 மணி வரை  பலவந்தமாக  சிறைக்குள் திணிக்கப்படுகின்றான். ஈற்றில்  வீடு திரும்புகையில்  ஆசிரியரால்  மாணவனுக்கு   உபரியாக சில வீட்டுப் பயிற்சிகளும்  வழங்கப்பட்டிருக்கும். 

இந்த கல்விச்சித்திரவதைகள் மூலம் மாணவரின் மனம் பெரிதும் சோர்வுற்று  உள நோய்களாலும், இரத்த அழுத்தத்தினாலும் சிதைவுறுகின்றது.கற்றலில் ஆர்வம் குன்றி வெறுப்பும், சோர்வும் ஏற்பட இது வழி செய்கின்றது.ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு தயார்படுதப்பட்ட மாணவர்களில்  அனேகர் பிற்காலங்களில் மந்த புத்தி உள்ளவர்களாகவும் கற்றலில் ஆர்வம் குன்றியவர்களாகவும் இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

விளையாட்டு உடல் மற்றும் மன ஆற்றலின் விருத்திக்கு வழிகோலும் முக்கிய விடயம்.மாணவரின் ஆரோக்கியத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று போதிக்கின்ற கல்விச்சமூகம் ஐந்தாம் ஆண்டில் மட்டும் விதிவிலக்குகளை கையாள்வது அதிகார மையத்தின் வலிமை எனில் மிகையல்ல. உடல் ,உள ஆரோக்கயம் ,ஓய்வு இந்த அம்சங்களை சிதைத்து விட்டு கல்வியினை மட்டும் திணிப்பதற்குள்ள பின்னணிகள் துலாம்பரம். 

இவற்றிக்குப்பின் பாடசாலைகளினதும், ஆசிரியர்களினதும், பெற்றோர்களினதும், தன்மானம் ஒளிந்து கிடக்கின்றது. இதைத்தவிர வேறெதனையும் புதிதாக நாம் கண்டுபிடித்துவிட முடியாது.

மாணவ சமூகத்தின் உளச்சிதைவுகளின் மீதுதான் தனது தன்மானம்,கௌரவம்,பாதுகாக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்கள் நினைப்பது கூட பாசிசத்தின் நீட்சியேயன்றி வேறில்லை.இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்,சிறுவர் சித்திரவதை சட்டத்தின் கீழ் இத்தகையவர்களுக்கெதிராக நடவடிக்கை  எடுக்கப்படல் வேண்டும். தன்னுடைய சுய கௌரவம் கீர்த்தி பாதுகாக்கப்பட பிஞ்சுகளின் வாழ்வில் விளையாடுவது மன்னிக்கமுடியாத துரோகமாகும்.

சுமாராக இருக்கின்ற மாணவரின் பெற்றோர் வேகமாக கற்கும் மாணவனுடன் ஒப்பிட்டு அவனைப்போல் நீ ஏன் அதிக மார்க் வாங்குவதில்லை என துளைத்தெடுக்கின்றமை அவதானிக்ப்பட்ட யதார்த்தமாகும். இதுவும் மாணவருக்கு மத்தியில்  தாழ்வு  மனப்பான்மை  பொறாமைக்குணம் பலிவாங்கும் தன்மை, போன்ற தீய குணங்களை தோற்றுவிக்கின்றது. 

இந்தப்பரீட்சைக்குத்தோற்றும் மாணவரிடையே ஏற்படும் இள வயது வடுக்கள் காலத்தால் அழியாத காயங்களாக மனதில்  தேங்கி நின்று பலிவாங்கும் உணர்ச்சிக்கு தூபமிட்டுக்கொண்டே இருக்கும்.

மாணவரின் மன நிலை சிறந்த கல்விச்சூழலுக்கு இன்றியமையாத அம்சம் என்பதனை இதில் தொடர்புள்ள மூன்று சாராரும் கவனத்திற்கொள்ள வேண்டும். 

பொருளாதாரச்சுமை

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை ஏற்கனவே குறிப்பிட்டது போல் தொழில் சார் மூலதனமாகும்.ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு தோற்றும் ஒரு பிள்ளையின் குடும்பம் மேலதிகமான பொருளாதார நெருக்கடியினை எதிர்நோக்குவதை அவதானிக்க முடிகின்றது.பின் தங்கிய ஏழை மாணவரின் நிலை  பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டது.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பபரீட்சை சமூகத்தில் போட்டித்தன்மைமிக்க கௌரவமாக ஊதிப்பெருப்பிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியரால் நிர்ணயிக்கப்படும்  பணம்  பெற்றோரால் மறுப்பின்றி வழங்கப்படுகின்றது. தவிர ஆசிரிய வணிகரால் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் அவசியமான மற்றும் அவசியமற்ற புத்தகங்கள், வழிகாட்டிகள்,கடந்த கால வினாப்பத்திரங்கள்,பருவகால வினாக்கள் கேள்விகள்,பிற மாகாணப் பாடசாலையின் கடந்த கால விணாப்பத்திரங்கள் என விற்பனைக்கு கொண்டு வரும் அத்தனை குப்பைகளையும் பெற்றோர்கள் விலை கொடுத்து வாங்க வேண்டும். வாங்காவிட்டால் பிள்ளை பரீட்சையில் தோற்றுவிடுவான் என்ற அச்சுறுத்தல் வேறு விடுக்கப்படுவதுண்டு .

இதனால் திறந்த பொருளாதார கலாச்சாரம் மிகைத்துள்ள தேசத்தில் புலமைப்பரீட்சை எனும் பல்தேசிய கம்பெனிகளின் உற்பத்திகளை  உயர்ந்த விலையில் (மலிவுப்பதிப்புகள்)  விற்றுத் தீர்ந்து விடுகின்றன.கவர்ச்சிகரமான அட்டைகள்,மனதை அள்ளும் விளம்பர உத்திகள் மூலம் ஏஜென்டு ஆசிரியத்தரகர்கள் இந்த வேலையை தாம் கற்பிக்கும்  மாணவருக்கு விற்றுத்தீர்த்து தரகுப்பணத்தினையும் பெற்றுவிடுகின்றனர். கவனிப்பாரற்று சீண்டுவாரற்று பல புத்தகங்கள் வீட்டின் அலுமாரிகளை அடைத்துக்கொண்டு கிடப்பதை பார்க்கலாம்.இதுவெல்லாம் பெற்றோர் மீது இந்தப்பரீட்சையின் பெயரால் சுமத்தும் பாரிய சுமையாகும்.

இது தவிர அவ்வப்போது ஏற்படுத்தப்படும் பரீட்சைபற்றிய கருத்தரங்குகளும் அதற்கென வெளிமாவட்ட மாகாணங்களுக்கு அழைத்துச்செல்லலும் இந்த புலமைப்பரீட்சை வியாபாரிகளால் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் செலவீனங்களாகும். 

இந்தச்செலவுகளை பெற்றோர்கள் மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியே தாண்டிவருகின்றனர்.இரவு நேர கற்கைகளுக்காக முறைவைத்து பெற்றோர்களிடமிருந்து சிற்றுண்டிகள் வரவழைக்கப்படுவதும், அதற்காக மேலதிக கட்டணங்கள் அறவிடப்படுவதும் கண்கூடு. சாதாரணமாக கூலி வேலை செய்யும் ஒருவனின் திறமையான பிள்ளை இத்தகைய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து சிக்கித்தவிப்பதை வணிக சிந்தனையுள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கொள்வதில்லை.


வெற்றி விழாக்கள்

புலமைப்பரீட்சை  ஒன்றிற்கு தோற்றும் ஒரு மாணவன் மேற்குறித்த தடைகளை தாண்டி அவன் இலக்கினை அடைந்து கொள்ள வெற்றியடைந்து சித்தியடைவானாயின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. குறித்த மாணவனை விட அவனை பெற்றவர்களும் ,கற்பித்த ஆசிரியர்களும்  சந்தோஷத்தில் திளைக்கின்றனர். 
எனினும் இந்த வெற்றிக்குப்பின் சித்தியடைந்த சில மாணவரின் குடும்பம் எதிர்கொள்ளும் பொருளாதாரச்சுமை சொல்லுந்தரமன்று.
கற்பித்த ஆசிரியருக்கு உயர் தர அன்பளிப்புக்கள் வழங்கப்படல் வேண்டும்.பரீட்சை வெற்றிக்குப்பின்னரான  அன்பளிப்புக்களை கேட்டுப்பெற குடும்ப பொருளாதாரப்பின்னணியை நன்கு தெரிந்துள்ள ஒரு சில ஆசிரியர்கள் தீர்மானித்துவிடுகின்றர்.சித்தியடைந்த மாணவனின் தந்தையோ தாயோ வெளிநாட்டில் தொழில் பார்ப்பவர்களாக இருந்தால் ‘ஸ்மாட்; ‘தொலைபேசிகளை கேட்டுப்பெருகின்றனர்.
தொலைபேசியின் மொடல் குறிப்பிடப்பட்டு சில ஆசிரிய வணிகரால் கப்பம் கோரப்பட்ட சம்பவங்களும் உண்டு.தனக்கும் தனது குடும்பத்தினருக்குமான அனைத்து தேவைகளையும் சித்தியடைந்த பிள்ளையின் வெற்றியின் மீதேறி நிறைவேற்றும் இழி நிலைக்கு சில ஆசிரியர்கள் தன்னை சர்வதிகாரியாக மாற்றிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் இங்கு நடைபெறத்தான் செய்கின்றது.

கடன்பட்டு அடகு வைத்து வட்டிக்கடையில் அடைமானம் வைத்து தன் பிள்ளையின் புலமைப்பரீட்சை வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு பெற்றோர்கள் பணம் அள்ளிக்கொடுப்பதை சமூக அக்கரையுள்ள யாரும் கை கட்டிக்கொண்டு பார்த்திருக்க முடியாது.
இது நிற்க!
 பாடசாலைகளில் ஆசிரியர்களின் அதிபர்களின் தயவில் நடக்கும் கொடுமை சொல்லி மாளாது.புலமைப்பரீட்சையில் சித்தியடையும் மாணவரின் விகிதாசாரத்திற்கேற்ப அடைவு மட்டங்களை கல்வித்திணைக்களத்திற்கு காட்டி பெருமைப்படும் அதிபர்கள் வெற்றி விழாக்களின் போது பாதிக்கப்படும் சில குடும்பங்களின் கண்ணீர் பற்றி சிந்திப்பது கிடையாது.

பாடசாலை நிருவாகம் இந்த விடயத்தில் புத்தசாலித்தனமாக நடப்பது போல் வெளிப்படையாக காட்டிக்கொண்டாலும் தன்னுடைய ஒரு வருட பரிசளிப்புத்திட்டத்திற்கான அனைத்து செலவீனங்களையும் புலமைப்
பரீட்சையில் சித்தியடைந்த மாணாக்கரின் பெற்றோர்களிடமிருந்துதான் சுரண்டி எடுக்கின்றது.

சித்தியடைந்த ஒரு மாணவனிடமிருந்து மூவாயிரம் (3000) அல்லது நான்காயிரம் ( 4000) ரூபா அறவீடு செய்யப்படுகின்றது. அவனுக்கு கிடைப்பதுநூற்றி ஐம்பது  (150) ரூபாய் பெறுமதியான நினைவுச்சின்னம் அல்லது மெடல்  ஐம்பது (50) ரூபா பெறுமதியான சிற்றுண்டி. இதனையும் வணிக விளம்பரம் மூலம் தேடிக்கொண்டு மிகுதியை ஆசிரியர்களுக்கான அதிக பட்ச கொடுப்பனவாக வழங்கிவிடுகின்றனர்.

இது மட்டுமா இத்தகைய வெற்றி விழாக்களுக்கு பிரதேச மற்றும் பிரயல்யமிக்க பிரமுகர்களையும்,அரசியல்வாதிகளையும் அழைத்து விருந்து வைத்து மாலை மரியாதை வழங்கி அவர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்குவதற்கும் இந்த ஏமாளிப்பெற்றோர்கள்தான் பணம் வழங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.

நிச்சயமாக இது ஒரு பகற் கொள்ளை.இந்தக்கொள்ளையை கல்விச்சமூகம் ,மற்றும் சில பிரதேச கல்வி அபிவிருத்திச்சங்கங்கள் நாகரீகமாக அறவிடுவதை  பெற்றோர் மௌனமாக  அங்கீகரிப்பதுதான் இந்த தவறுகள் தொடர்கதையாக செல்வதற்கு காரணியாக இருக்கின்றது.சில பாடசாலை நிருவாகம் மாணவரிடம் பணம் அறவிடும் அதே சமயம் ஒவ்வொரு வேலைகளுக்கும் நலன் விரும்பிகளையும் நாடி பணம் பெறுவதும் கண்கூடு.சான்றிதழ் அடித்துத்தாருங்கள்,மெடல் செய்து தாருங்கள்,இன்ன செலவினை தங்களின் தயவில் செய்து தாருங்கள் என்ற யாசிப்பின் ஊடாக சமூகத்தில் இந்த விழாக்களை வீண் விரயமிக்க பகட்டான விடயங்களாக மாற்றிவிட்டன.

இது மட்டுமல்ல தெரிந்தவர்கள் நண்பர்கள் குடும்பத்தினர்கள் என பிள்ளையின் வெற்றியின் மீது ‘ஒன்றுமில்லையா ?’ என ஏறி நின்று கேட்டு வாங்கித்திண்ணும் அநாகரீக கலாச்சாரமும் இன்று கோலோச்சுகின்றது.பணமுள்ளவன் செய்யும் போது தன்னுடைய பிள்ளையின் மனமும் குன்றிப்போகும் என்பதற்காக கடன் பட்டு வெற்றிவிழாக்கொண்டாடும் ஏழை பெற்றோர்களின் கண்ணீருக்கு கல்வி சமூகம் பதில் சொல்லுமா?

சுய நலமும்.கல்வியில் மிகைத்து நிற்கின்ற வணிகச்சிந்தனையும் இன்று இலவசக்கல்வியை பெரும் சுமையாக மாற்றியுள்ளது.ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து விட்ட சில பிள்ளைகளின் பெற்றோர் அதே வகுப்பில் பரீட்சைக்குத்தோற்றி  ஒரு சில புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய மாணவர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்வதும் ,துக்கம் விசாரிப்பது போல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதும் இரக்கமற்ற சுபாவத்தின் வெளிப்பாடாகும். இது மனித மனத்தில்  உறங்கிக்கிடக்கும் மிருகக் குணம். 

இறுமாப்பும் தன் பிள்ளையின் மீது கொண்டுள்ள தற்பெருமையும் மற்றவர்களின் மனங்களில் படிந்துள்ள துயரங்களையும் அவமானங்களையும் மறக்கடிச்செய்து விடுகின்றது.தோல்வியில் துவண்டுள்ள தன் பிள்ளையை தோற்றுவதற்கு வழியில்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்திற்கு தவிச்ச முயல் அடிக்கும் வேலையை சிலர் நாசூக்காக செய்து வருவது கண்டிக்கத்க்கது.கீழ்த்தரமான வக்கிரங்களை மற்றவர்களின் துயரத்தைக்கிளறி ஆற்றுகின்ற இத்தகைய இழி செயலை ஊக்குவிக்கின்ற சாதனமாக இப்பரீட்சை மாறி வருகின்றது.

குறைந்த பட்சம் தொலைபேசியில் எனது பிள்ளைக இத்துனை மார்க் வாங்கியுள்ளார். உங்களது பிள்ளையின் மார்க்க என்ன என்று கேட்டாவது தங்களுடைய குரூரத்தை தீர்த்துக்கொள்கின்றனர்.சமூகத்தில் இத்தகைய இழிகுணங்களையும்,வக்கிர குணங்களையும் மறைமுகமாக வளர்த்தெடுப்பதற்கு இப்பரீட்சை வழியமைத்துக்கொடுத்துள்ளது.

மேலும். வசதி படைத்த  குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளை வெற்றி பெற்றபின் ஏற்ப டுத்தும் வெளிப்பகட்டுக்களும் அலங்காரங்களும்,வசதியற்ற பிள்ளைகளின் மனதில் தாழ்வுப்பனப்பான்மையை ஏற்படுத்தி விடுகின்றது.இதனை நிகர்;த்த ஒரு பரிசினை அல்லது சிற்றுண்டி நிகழ்வினை தனக்காக நடாத்தும்படி ஏழை மாணவன் கெஞ்சும் போது அன்றாடங்காய்ச்சி தந்தையின் நிலை என்ன?

உண்மையில் இந்தப்பரீட்சையின் பின்னணியில் கட்டமைக்கப்பட்டுள்ள பகட்டும் மேதாவித்தனமும்தான் முக்கிய காரணியாக கண்டறியப்பட்டுள்ளது.
சாதரணமாக நோக்க வேண்டிய ஒரு விடயத்தை ஊதிப்பெருப்பித்து அதில் நின்று வியாபாரம் செய்யும் உத்தியினை வளர்த்தெடுக்கவும் இந்தப்பரீட்சையின் மேல் அளவற்ற மோகத்தினை உருவாக்கவும் முக்கிய பின்புலமாக செயற்படுபவர்கள் பாடசாலை சமூகமும் அதில்  இலாபமீட்டும் ஆசிரிய குழாமும்தான். 

க.பொ.த.சாதாரண மற்றும் உயர்தரத்தில் கற்கும் ஒரு மாணவனிடத்தில் இத்தகைய பரிவும் அக்கரையும் சமூகம் எடுக்குமெனில் அவன் எதிர்கால வாழ்வு மிகவும் சிறப்புற்று விளங்கும்.அல்லது உயர்தரப்பரீட்சைகளுக்குப்பின் வழிகாட்டல்கள் வழங்கப்படுமாயின் அரிய துறைகளில் மாணாக்கர் சிறப்புற்று விளங்குவர்.

இதனை விடுத்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சைக்குப்பின் தாகத்துடன் ஓட்;டமெடுக்கும் கணிசமான ஆசிரியர்களும் ,பெற்றோர்களும் தங்களின் பராக்கிரமங்களை பறைசாற்றவே ஒடுகின்றனர் என்பது சௌ;ளிடை மலை. சமூகத்தின் மன நிலை மாறாதவரை புலமைப்பரீட்சையின் தலைவிதியையும் மாற்றவே முடியாது.

2016.03.24

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...