Wednesday 28 September 2011

சிறுகதை: ஜின்




        வீட்டுக்கு அடங்காத “தல தெறிச்ச“ பிள்ளைகளை வேதம் படிக்கவென வலுக்கட்டாயமாக மதரசாவுக்கு சேர்த்துவிடும் ஒரு காலமிருந்தது. ஆகம நியதிகளை கற்று ஞானதீட்சைபெறும் இளங்குருக்கள் பழைய சேஷ்டைகளை துறந்து ரொம்ப அடக்கமாக நடந்து கொள்வர் .

      1985 இன் முற்பகுதி குதியான் பருவத்தில் பனை மரம் , நாவல் மரம், மாமரம் எனப்பாய்ந்து திரிந்த அலியை அவனது வாப்பாவான முஹம்மது முத்து மரிக்கார், மதரசாவுக்கென நேர்ச்சை செய்து பிரகடனப்படுத்திவிட்டார்.  
குடும்பங்கள் கூடி மகிழ்ச்சியில் திளைத்து, நார்சா கொடுத்து , லெப்பை வந்து பாதிஹா ஓதி மாப்பிள்ளை அழைத்துப்போவது போல், அலியை மதரசாவுக்கு அழைத்துப்போனார் மரிக்கார் .
 
       முன் பனி உறையும்  குளிர்காலம் . வைகரையின் சௌந்தர்யங்களை துளைத்துக்கொண்டு,ஊளையிட்டபடி மூச்சிரைத்து வந்து நிற்கும் மட்டக்களப்பு உதய தேவியில், அலி வாப்பா சகிதம் ஏறிக்கொண்டான்.
முழங்கால் தழைய தைக்கப்பட்ட ஜிப்பா, தலைப்பாகை, தொப்பி புது லேஞ்சு , முதன் முதலில் வாங்கிய அண்டவெயர், ஒரு பீங்கான், தேனீர்க் குவளை, பெட்ஷீட் , துவாய், ஒன்றிரெண்டு சந்தண சோப், ஐந்து பார்சோப், பென்குயின் நீலத்திரவப்போத்தல், அலியின் உம்மா விடிய விடிய விழித்திருந்து சுட்ட முறுக்கு,பலகாரம், கொக்கச்சி, சீனி மா அய்ட்டங்கள்  அனைத்தும் மரிக்காரின் கையில்.

         அலியின் தோளிலோ, புத்தம் புதிய ரவல் பேக் பச்சைக்கலரில் ஊறப்போட்ட ரவல் பேக்கின் தோல் மணம் மூக்கைப்பிசைந்தது. பேக்கின் சிப் வந்து முடியும் நுணியில் தொங்கும் ஒரு சின்னப்பபூட்டு. சாவி ரவல் பேக்கின் வெளியறைக்குள் பத்திரமாகக்கிடந்தது.

        மதரசாவுக்குச்செல்வதென்றால் வாட்ச் வாங்கித்தரவேணும் என்ற பிடிவாதத்தின் பயனாக கிடைத்த “மெண்டியா“ மணிக்கட்டில் உருண்டு திரண்டு சிமிட்டிக்கொண்டிருந்தது.அடிக்கொருதரம் அதை திருப்பித்திருப்பி மணிக்கட்டில் இருக்குமாறு சரிபார்த்துக்கொண்டான் . புத்தம் புதிய தோள் சப்பாத்து . வாப்பா காத்தான்குடியில் இறக்கி தயிர்வடையும் டீயும் வாங்கித்தந்தார் .

        இலங்கையில் பெயர் பெற்ற மதரசாவுக்குள் கால் பதிக்கையில் நெஞ்சுக்கூடு பதகளித்தது. கருகருவென்ற அடர்ந்த தாடிகள், முழங்கால் தொடும் நீண்ட ஜிப்பாக்கள் பச்சை நிற பாம்புகள் போல் தோளில் வழிந்து கிடக்கும்  பச்சைத்தலைப்பாகை.

    உஸ்தாதின் முன் அலி நிற்கிறான்.அலிக்குப்பின்னால் வாப்பா கூனிக்குறுகி மரியாதை கலந்த அச்சத்துடன் ஒடுங்கி நிற்கிறார். காலில் விழவும் தயார் என்ற பவ்யம்.

     “ தம்பி நல்லா ஓதுவியா “  உஸ்தாதின் குரல் தடித்து அவனில் தெறித்து அறை  முழக்க வெடித்தது.

“ இப்புடி வா “

அவரருகில் சைக்கினை செய்ய, மகுடிக்கு மயங்கிய நாகமென உஸ்தாதின் காலடியில் நின்றான். அவரின் வியர்வையுடன் மசிந்து ஜன்னதுல் பிர்தவ்ஸின் திவ்வியம் நாசி  விடைத்து , கல்பு நிறைகிறது.

அறையை நோட்டமிடுகிறான். சுவரோரமாய் ஒரு கருங்காலிக்கட்டில் மேசை, நாற்காலி மேசை நிறைய தினுசான புத்தகங்கள் . காகிதங்கள்.அலியின் தொண்டைக்குள் புளியாணம் உறைக்கிறது.

“ ஓம் அசரத் “

“ ஆ நல்ல பொடியன் ஆகிரத்துல உனக்கும் அல்லாகுத்தஆலா சிபாரிசுக்கு சங்க செய்வான் “

“ எங்க அல்ஹம்த ஓது பாப்பம் “ 

அஊதுவில் தொடங்கி,வலல்லாழ்ழீன் ஆமீனில் முடிக்கிறான் .உடுத்தியிருந்த வெள்ளைச்சாரன் பிருஷ்டத்தில் ஒட்டிக்கொண்டு, திமிர் காட்டியது. உஸ்தாத் மூக்குப்பொடி உருஞ்சிக்கொள்ள குணிந்த தருணம் பார்த்து,  பிரயாசைப்பட்டு அதைபிய்தெத்தெடுத்தான்.
அசிங்கமாகஅங்கயெல்லாம் கையப்போடக்கூடாது என்பது போல் வாப்பா கண்களால் எச்சரித்துக் கொண்டிருந்தார் .

உஸ்தாத் சாய்வு நாற்காலியின் முனையைத்தருகியபடி ஆழ்ந்து சிந்தித்தார் .பின் அலியை நோக்கி கனிவாக இள நகை பூத்தார்.

“ நல்லம் , அர்கானுல் ஈமான் சொல்லு “ என்றார் .

ஒரு வாரத்திற்கு முன் விடுமுறையில் வந்திருந்த அலியின் ஊர்க்காரன் அசன், இதே மதரசாவில்தான் ஓதுகிறான் . கேள்விகளின் ரகம் அதற்கான பதில்கள் எல்லாவற்றையும் விலாவாரியாக சொல்லிக்கொடுத்திருந்தான். அர்கானுல் ஈமான் ஒப்பிவிக்கப்பட்டது.

உஸ்தாதின் முகம் பூரிப்பில் மலர்ந்தது. 

“ ம் மரிக்காரு பொடியன் நல்ல கெட்டிதான். “

     வாய்விட்டு புகழ அலி கால் பாவாது மிதந்தான். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட தெய்வக்குழந்தையாகிய திமிர் நெஞ்சுக்குள் பரவியது. வாப்பா பூரிப்பில் திளைப்பதை முகம் உணர்த்தியது. உஸ்தாதின் அறையே ஒரு விந்தையான உலகமாய் விரிந்தது .அலியின் விழிகள் வியந்து வியந்து அறை முசிய வலம் வந்து, ஈற்றில் அந்தக்கருங்காலிக்கட்டிலில் முட்டி நின்றது.

    அலியின் உம்மாவுக்கு மூத்தாப்பா சீதனமாய் கொடுத்த கருங்காலிப்பெட்டகத்தின் நினைவு .மனசின் மேலெழுந்து, கல்பை அடைத்தது.அதற்கு ஏக சொந்தக்காரியான உம்மாவின் நினைவு , அவட மீன் கரியின் ரசம், என ஒவ்வொன்றாய் சங்கிலித்தொடராக அலியின் நினைவுச்சந்தைக்குள் இரைச்சல் கொடுத்தன.தொண்டைக்குள் காலையில் வாப்பா வாங்கித்தந்த தயிர் வடை  மகா வளையமாக குறுக்கே கிடந்தது .

உஸ்தாது எதிரே மங்கலாகத்தெரிந்தார். அவரண்டையில் வாப்பா ஒரு புள்ளியாக நின்றார். அறையில் சற்றைக்கு முன் பார்த்த எந்தப்பொருளும் இல்லை. வெறும் கட்டாந்தரை இவன் மட்டும் ஏகனாய் நின்றான்.உம்மா வந்து மார்போடு அணைத்து தலைக்குள் விரல் புதைத்து  கோதி விடுகிறா.அவவின் மெத்தென்ற மார்பில் முகம் புதைத்து  விசும்புகின்றான்.

“ என்னடாம்பி குழர்றாய் “

   உஸ்தாதின் குரலில் இழையோடிய இதம் வெப்பிசாரமாய்  வெடித்து, கேவலாய் எழுந்தது. வாப்பா சங்கடத்தில் நெழிந்தார்.

“ மனெ இப்ப என்னத்திற்கு குழர்றாய். அடுத்த மாசம் லீவாம் அச்சுப்பெருநாள் லீவு, இடையில நானும் உம்மாவும் வருவம் நம்மட ஊருப்புள்ளயளும் இருக்காங்க பயப்பிடாம இரு தம்பி “

    தலை தடவி வாஞ்சையுடன் அணைத்தபடி வாப்பா தழுதழுத்து விடைபெற்றுச்சென்றார் . அவர் குரலும் கம்மியதை அலி கவனிக்கவே செய்தான்.

    தனியனாய் அறையில் நின்றவனை உஸ்தாத் ஏற இறங்கப்பார்த்து விட்டு, மேசையில் உறங்கிக்கிடந்த பெல்லை அழுத்தினார்.ஒரு இளவல் ஓடி வந்து ஸலாம் சொன்னார் .

“ இந்தப்புள்ளக்கு கீழ றூம கொண்டு போய் காட்டிட்டு , இப்ப சேர்த்திருக்க முதலாம் வகுப்புல வுடு. “


 இளவலின் பின்னால் பலியாடு போல் சென்றான். அறைக்குள் நிலவிய மனப்புழக்கம் இளகியது.முற்றத்தில் இறங்கி விடுதியை நோட்டமிட்டான்.பிரமாண்டமான இரு மாடிக்கட்டடம்  “ப“ வரிசையில் மண்டபங்களும், வகுப்பறைகளும் நடுவே முற்ற வெளி சூழவும் தென்னை, பலா, மா மரங்கள். சமையறை மட்டும் காவி படிந்து  பார்ப்பதற்கு அசூசையாய் தோற்றம் தந்தது.

     இளவல் வழி நெடுகவும் ,அலியை புலன்விசாரணை செய்து கொண்டு போனார் . கடைசியாக வூட்டுல எத்தின பொம்புளப்புள்ளயல் என்ற கேள்விக்கு ரெண்டு என்றவுடன் , விடுதி வாசல்  வந்தது. 
பெரிய ஹோல் வரிசையாக ஆனால் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சின்னச்சின்ன மரத்திலானான கபேட்டுக்கள், அருகில் சுருட்டி அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பாய்கள்.
தாறுமாறாக கொடியில் தொங்கும் வர்ணத்துணிகளான  ஆடைகள். தண்ணீர் போத்தல்கள்,விடுதிக்குறிய இலட்சணங்களுடன் அந்த ஹோல் ஒழுங்கற்ற காட்சி தந்தது. இவனுக்குறிய கபேட்டில் கொண்டு வந்த சாமான்களை அடுக்கு மட்டும் இளவல் கூடவே நின்றார்.

      அதென்ன பேக்குல தின்னுற சாமானா எனக்கேட்டுவிட்டு முறுக்கு வளையங்களை கையிலெடுத்து கடிக்கத்தொடங்கினார்.

“ராத்தமாரு எத்தினையாம் ஆண்டு படிக்கிற“

  சீனிமாவை வாயில் போட்டபடி மீண்டும் வேதாளம் ஏறியது.

“ ஒருவர் ஏ.எல். இளயவ ஜி.சி என்றான். “

 கடைவாயில் படிந்திருந்த துகள்களை தலைப்பாகையால் துடைத்தபடி “உங்களப்போல மாநிறமா அவங்களும் “ என்று விட்டு, அசடாக சிரித்தார். மிஸ்வாக்கு ஏறிய பல்லிடுக்கில் சீனிமா அப்பிக்கிடந்தது.அலி எதுவும் பேசாமல் சாமான்களை அடுக்கினான் .

“ என்னயும் தேவையென்றா ஆரும் கரச்சல் கொடுத்தா எங்கிட்ட சொல்லுங்க “

       கொண்டு வந்த பெட்லொக்கை கபேட்டில் மாட்டி மூடி விட்டு, வகுப்பு எங்க என்றான். இளவல் சிரித்தபடி அலியை வகுப்பறைக்கு கூட்டிச்சென்றார் . ஏலவே வந்திருந்த புதிய பையன்களுடன் அலியும் வகுப்பில் விடப்பட்டான்.

       அருகருகே பல வகுப்புகள். தினுசான பார்வைகளுடன் பையன்கள். அயல் வகுப்பில் பாடம் நடாத்தும் உஸ்தாதின் குரல் சுவரில் மோதி எல்லா வகுப்புகளுக்கும் தாவியது. அப்படியொரு வெண்கலக்குரல்.அலி மிரண்டபடி வகுப்புக்குள் நுழைகிறான் .பாடம் நடாத்திக்கொண்டிருந்த உஸ்தாத் இயல்பான கேள்விகளை கேட்டு விட்டு அமரச்சொன்னார்.

ஐந்தாக பிரிக்கப்பட்டிருந்த நீண்ட கட்டடத்தில் அலியின் வகுப்பு இடமிருந்து வலமாக மூன்றாவது இருந்தது. ஆங்கிலத்தில் B-3 என்று இடது பக்க மூலையில் பொறிக்கப்பட்டிருந்தது.வலது பக்கம் திறந்து விடப்பட்ட ஜன்னல்களின் வழியே குளிர்காற்று இறங்கி வந்தது. ஜன்னலுக்கு அப்பால் நெஞ்சுயர மதில். 
மதிலை ஒட்டினாற் போல் அகன்ற தாமரைக்குளம் ஆங்காங்கே தண்ணீரின் மினுப்பு மினுப்புத்தெரிய,குளத்தை மூடிக்கொண்டு தாமரைகளே கிடந்தன.மிதமான அலைகளுக்கு மேலும் கீழும் வழுவி இறங்கும் அகன்ற தாமரைப்பூக்களில் வண்டுகள் குந்த தருணம் பார்த்து சுற்றிச்சுற்றி வளையவந்தன.
குளத்தின் நுணியில் மலைத்தொடர்.அதன் அடியில் அடர்ந்திருக்கும் தென்னந்தோப்புகள். விளைச்சலுக்கு தயாராக நிற்கும் நெற்கதிர்கள்  என அந்த இடமே சௌந்தர்ய வியப்பையும், புலன்களில் சிலிர்ப்பையும் தந்தது.

“ என்னடாம்பி ஒங்கட ஊருல குளம் கிளம் ஒன்டுமில்லப்போல “.

பாடம் நடாத்திக்கொண்டிருந்த உஸ்தாதின் நக்கலில் முகம் நாணி கரும்பலகையை நோக்கினான் .


        இடைவேளையின்போது ஊர்  பிள்ளைகள் இவனை சூழ்ந்து கொண்டார்கள். கென்ரீனுக்கு அழைத்துப்போனார்கள்.குரக்கன் கூழ் 5 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வாங்கித்தந்தார்கள்.

        கென்ரீனில் கடன் சொல்லி  பெரியநானாக்கள் திண்பண்டங்கள் வாங்கிப்போனார்கள்.போகும் வழியில் இவனில் ஒரு முறைப்பு வைத்துவிட்டே சிலர் சென்றனர்.

        மாலை ஐந்து மணிக்குப்பிறகு காலாற உலாவரவும், விளையாடவும் அனுமதியிருந்தது. பேச்சுவாக்கில் இரவில் மதரசாவில் சின்னப்பிள்ளைகள் தூங்கும் ஹோலில் ஜின்களின் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை செய்து விட்டு கமுக்கெனச்சிரித்தார்கள்.

       அலியின் கால்கள் நடுங்கத்தொடங்கின.ஜின்களின் அட்டகாசம் குறித்து ஒவ்வொருவரும் திகிலூட்டும் கதைகளை சொன்னார்கள்.இரவில் வந்து வுழூச்செய்வது, சாமத்தில் ஒண்ணுக்குப்போகையில் லைட்டை அணைத்து விடல்,பள்ளியில் வந்து தொழல், வழில் தூங்குபவர்களை தூக்கி விளாசல் அல்லது அமுக்கல் என ஏகப்பட்ட ஜின்களின் அட்டகாசங்களை சொல்லிச்சொல்லி கிலியூட்டினார்கள்.

       ஜின் வாசிலாத்து பண்ணும் மந்திரங்கள் தனக்குத்தெரியும் என்டு அசன் எடுப்புக்காட்டினான்.அலிக்கு இரவில் மூத்தம்h சொல்லும் பேய்க்கதைகளுடன் ,ஜின்களும் கூட்டுச்சேர்ந்து அச்சமூட்டின . 

பள்ளியில்  அசன் பச்சை தலைப்பாகையுடன் ஜின் தொழுது கொண்டிருந்ததை தான் கண்டதாக வேறு கதையளந்தான் .நெடுநெடுவென்று வளர்ந்த உருவம் ,முகட்டை தொட்டு விடுமளவிற்கு அதன் கைகள் உயர்ந்ததையும் அசன் விஸ்தாரமாய் சொல்லிக்கொண்டிருக்கையில் இரவு வந்து விட்டது.

இருள் இறங்கி பூமியைத்தழுவ, அச்சம் கவ்வத்தொடங்கியது. தாமரைக்குளத்தின் விரிந்த மலர்களில் ஜின்கள் பதுங்கி இருக்குமோ என்ற ஜன்னி .மஃரிபு நேரத்தில் குளத்தைப்பார்ப்பதை தவிர்ந்து கொண்டான் .

யாருக்கும்  அஞ்சாத இரவு  வெகு உல்லாசமாக பூமியை தனக்குள் உறிஞ்சிக்கொண்டது. விடுதியில் படுக்கை அறை தனித்தனியே இல்லை ஒற்றை மண்டபத்தில் பாயை விரித்து படுத்துக்கொள்ள வேண்டும். குறுக்காக பெஞ்சு இருக்கும் அருகில் தூங்குபவரின் மேல் கை கால் படாமல் ஒரு பாதுகாப்பு .பெரியவர்களுக்கு மேல் மாடியில் படுக்கை.

       அலி ஜின் நடமாட்டம் கம்மியாக இருக்கும் என ஊகித்து ஒரு மூளையில் பாயை விரித்தான். வண்ணாரவெட்டைக்குள் “கல்பன் புல்“ பிடுங்கி ,  காய வைத்து மூத்தம்மா பின்னித்தந்த வர்ணப்பாய் .மடமடவென்று தரையில் இருக்கமாட்டேன் என அடம்பிடித்தது.

அலி தலையை வைத்து அழுத்திப்படுத்துக்கொண்டான். இந்த இடத்தை தேர்வு செய்ததற்கு இரு காரணங்கள். ஒன்று இது மூளை ஜின்கள் மூளை முடுக்கெல்லாம் வராது. பெரிய உஸ்தாதின் பின் வழி தலைவாசல் இரண்டாவது காரணம்.

வெகு நேரமாய் தூக்கம் வராமல் அவதி;ப்பட்டான். புது இடம், முதன் முதலாக உம்மாவின் மூச்சுக்காற்றுப்படாத இரவு. ராத்தாமார்களின் சண்டைகளற்று உம்மென்று இவனை முறைத்தபடி இருக்கும் நைட் லாம்பு.எல்லாவற்றையும் மீறி மிகைத்து நிற்கும் ஜின்களின் அட்டகாசம் என அலியின்  உறக்கம் நி;த்தியமாய்  உறைந்திருந்தது.

எத்தனை மணிக்கு தூங்கினான் என்பது தெரியாது .கண் விழித்தபோது சலனங்களற்று நிர்த்தாட்சண்யமாய் தெரிந்தது இருள். இருள் பதுங்கிய இடங்களைத்தேடித்தேடி விரட்டிக்கொண்டிருந்தது நைட் லாம்பு. அயலண்டை குளத்திலிருந்து தவளைகளின் சலக்புலக் ஓலிகள்.வெகு தொலைவில் ஊளையிடும் நாய்கள். அவனைச்சூழவும் குறட்டை ஒலிகள் .

அலியால் தன் கை கால்களை அசைக்க முடியவில்லை. மரத்துப்போய் விட்டதா அவன் மேல் கணதியாக ஏதோவென்று கவிழ்ந்திருப்பதை சடுதியாக உணர்ந்தான் .உடம்பை அசைக்கவே முடியாத அழுத்தமான பிடிக்குள் தான் இறுக்கப்படுவதை அறிந்தும் அவனால் ஒர் இம்மியளவும் நகர முடியவில்லை 


ஜின்தான் சந்தேகமில்லை. ஆயதுல் குர்ஷியை ஓதினால் ஜின் விலகிவிடும் மாலையில் அசன் சொன்னது பொறி தட்டியது .அவசரமாக ஓதினான் .உதடுகள் பிரிய மறுத்தன. ஜின்னின் சூடான மூச்சுக்காற்று கழுத்தை தீய்த்தது. பயத்தில் உறைந்து தரையோடு தரையாக நைந்திருந்தான்.

தன் மேல் கவிழ்ந்திருக்கும் ஜின்னின் அழுங்குப்பிடி இறுகியது உடல் அதிர, வீறிட்டுக்கத்தினான். சப்தம் அடி வயிற்றுக்குள் உறைந்து அடங்கிப்போனது.

தன்னை பிடித்திருந்த ஜின் எப்போது விலகிப்போனது என்று தெரியாது .உடல் இலேசாகிக்கிடந்தது. வியர்வையில் நனைந்து தெப்பமாயிருந்தான்.

 நெஞ்சுக்கு மேல் தூக்கிவிடப்பட்ட சாரனை இறக்கி விட்டு துடைத்துக்கொண்ட பின்பும், அசூசையான வாசத்தை நுகர்ந்தான். ஜின்னின் செய்கை அருவருப்பாகவுமிருந்தது.

ஜின்னை பார்க்க வேண்டும் போல் உணர்வு தட்டியது. இலேசாக ஒருக்களித்து மிக ஜாக்கிரதையாக கண்னிமைகளைப்பிரித்தான் .பயத்தில் உடல் வெடவெடத்தது. நெடுநெடுவென்ற உருவம் அடர்ந்த தாடி, கட்டம் போட்ட ஜிப்பா, தலையில் சுற்றிய பச்சைத்தலைப்பாகை ஜின் அசைந்தசைந்து பெரிய உஸ்தாதின் அறைக்குள் நுழைவதை பார்த்துக்கொண்டே இருந்தான். மண்ணில் கால் பாவாது ஜின் நடக்குமென்று அசன் கூறியது சுத்தப்பொய் என்பது உறுதியாயிற்று .

வியர்வையில் தெப்பமாகிக்கிடந்த உடம்பில் திடீரென ஜன்னதுல் பிர்தவ்ஸின் நறுமணம் கமழ்ந்தது.ஓங்காரம் வருவது போல் மனம் அவதிப்பட்டது. சடுதியாக எழுந்தவன் தன் மேல் வீசிக்கொண்டிருக்கும் ஜன்னதுல் பிர்தவ்சை துடைக்கத்தொடங்கினான் .

புதைந்திருக்கும் இருள் நாளைய இரவு பற்றி, அவனை பயமுறுத்திக்கொண்டிருந்தது.துடைக்கத்துடைக்க தன் மேல் படிந்திருக்கும் பிர்தவ்ஸின் காரம் உடல் முழுக்க திகுதிகுவென எரியத்தொடங்கியது. அடிவயிற்றில் புதைந்திருந்த கேவல் வெடிக்க வீறிட்டு கத்தினான் ஜின்... ஜின்...


பிரசுரம் முஸ்லிம் குரல்
 2005.04.17 

Monday 26 September 2011

சிறுகதை- வாப்பாவின் சைக்கிள்


  (01)

வேகமாக வீசிக்கொண்டிருந்த காற்று, போகிற போக்கில் சருகுகளையும் கூழங்களையும் பலாத்காரமாக வாயில் திணித்து விட்டுப்போனது.விழிகள் எரிச்சலடைந்து கடுத்தன.சைக்கிள் மிதிக்க முடியவில்லை. இந்தப்பேய்க்காற்றுடன் மல்லுக்கட்டி முழங்கால் சில்லுகள் விண்ணென்று தெறித்தன. “பெடல்” வேறு  மரமரவென்று கடித்தது.

“கிறீஸ்” வைத்து பல மாதங்கள் இருக்கும். வாப்பா இருந்த போது கடைசியாக செயின் காக்காவின் சைக்கிள் கடையில் “சேர்விஸ்” போட்டதாக ஞாபகம்.கச்சான் காற்றை எதிர்த்து சைக்கிள் மிதிக்க மிகுந்த ஓர்மமும் தெம்பும் தேவை.

உள் நாக்கு வரண்டு நீருக்கு ஏங்கியது. பனை மரமொன்றில் சைக்கிளை சாத்திவிட்டு குளத்தில் இறங்கினேன். கைகளை குவித்து நீரையள்ளி அடர்ந்திருந்த கூழங்களை ஊதிவிட்டு மளமளவென்று குடித்தபோது உள்ளம் ஆசுவாசம் கொண்டது.

பனை மரத்தினடியில் குந்த மனம் ஒப்பவில்லை. சைக்கிள் மட்டும் இருக்கட்டும்;. ஓலைகள் காற்றில் வேகமாக தலை சிலுப்பி கூத்தாடின. சில மரங்களில் நொங்கு முற்றியிருந்தது. சற்றுத்தள்ளி மரமொன்றின் நிழலில் ஒதுங்கிக்கொள்கின்றேன். குளத்தில் குளித்து விட்டு வரும் காற்று என்னில் ஈரத்தை அப்பி விட்டுப்போனது. உடல் குளிர்ச்சியில் மிதக்கத்தொடங்கியது.

மாந்துறை ஆற்றில் குளிக்கச்சென்ற ஒரு குடும்பம் உதிர்த்து விட்டுப் போன சிரிப்பும் கூச்சலும் பொட்டல் வெளியெங்கும் சுற்றித்திரிந்தது. குட்டை ஒன்றில் சில எருமை மாடுகள் தமது கணத்த உடம்பை அமிழ்;த்தி அசைபோட்டபடி படுத்திருந்தன. சேற்றினை அள்ளி வீசும் வால் சொடுக்கில் அருகில் நின்ற வெண்ணிற கொக்குகள் பறந்து போயின.

எதிரே இருக்கும் சைக்கிளில் என் பார்வை விழுகிறது. இது வாப்பாவின் சைக்கிள். ஐம்பது வருடமாக அவர் வாழ்வின் மூச்சில் உயிராகி ஒன்றித்திருந்த இரும்புக்காற்று.

உறுதியாக போக்குகள் கறல் பிடிக்கத்தொடங்கியிருந்தது. உம்மாவையும் நான்கு பிள்ளைகளையும்  காடு மேடெல்லாம் ஏற்றி இறக்கிய இந்த சைக்கிள் அந்திம காலத்தில் மூத்தவனான எனக்கு கை கொடுத்திருக்கின்றது. எனது வறுமைச்சுமையின் பாதியை வாப்பாவே வந்து தன் முதுகில் தாங்குவதான ப்ரேமை இந்த சைக்கிளை தொடும் போதெல்லாம் தவிர்க்கமுடியாமல் வந்து படுத்துகிறது.

வாப்பா பொத்தானையில் கொச்சிக்காளை செய்த காலத்தில் இதை வாங்கியதாக சொல்வார்.ஓட்டமாவடியிலிருந்து பொத்தானை காட்டுக்கு மாட்டு வண்டிச்சவாரி மட்டும் தோதான நாட்களில்; வாப்பா இந்த சைக்கிளை உழத்திக்கொண்டு  சென்ற போது  ஊரே கூடி வந்து வேடிக்கை பார்த்த கதையை அவர் சொல்லும் போது வியப்புடனும் ஆச்சரியத்துடனும் வாப்பாவை பார்த்திருப்போம்.

குரங்காட்டிகள், குறிசொல்வோர். ஆடு மாடு மேய்ப்பவர் எல்லோரும் எட்ட நின்று தொட்டுப்பார்த்து மகிழ்ந்ததை சொல்லும் போது வாப்பாவின் முகத்தில் காருண்யம் பூத்து மறைவதையும் நாங்கள் பார்த்திருந்தோம்.

ஏறாவூர் தியோட்டரில்  உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸ் ஆனவுடன்  12 மைல்கள் உழத்தியபடி எம்.ஜி.ஆரின் கை அசைவை பார்த்துவிட்டு வந்ததை வாப்பா பெருiயுடன் சொல்லும்  தருணங்களில் சுருக்கம் விழுந்த உம்மாவின் முகம் வெட்கிச்சிவப்பதையும் பருவ வயதினரான நாங்கள் களிப்பாக பார்த்திருப்போம்.

சைக்கிள் வாங்கிய புதிதில் உம்மாவுக்கும் இதில் ஏறி ஊரையே சுற்ற வேண்டும் என்ற அடங்கா ஆசை ஊறியது. வாப்பாவிடம் சொன்னபோது ஊர் அடங்கிய முதலாம் சாமத்தில் உம்மாவை முன் பாரில் ஏற்றிக்கொண்டு ஊரின் கிறவல் வீதிகளில் வலம் வந்திருக்கின்றார்.

யார் கண்ணிலும் படாமல்தான் இந்த உலா நிகழ்ந்தது. ஆனாலும் என்ன கோழிக் கள்ளன் ~ரீபின் கண்களில் இந்தக்காட்சி துலாம்பரமாயிட்டு.
சவுறா பீவின் கோழிக்கூட்டைத்திறந்து ஈரச்சாக்கால் இரண்டு கோழிகளை அமுக்கிக்கொண்டு இவன் வீதிக்கு இறங்கும் தருணம் உம்மாவுடன் வரும் வாப்பாவும் கோழியுடன் வரும் ~ரீபும் ஆளையாள் பார்த்துக்கொண்டனர்.

“டேய் ~ரிவு  மாமிர கோழியிலயா கை வச்சிருக்காய் இர்ரா வாரன்”

 வாப்பாவின் சத்தத்தில்  உம்மா முக்காட்டை இழுத்து மூடியதும் அவன் கோழிச்சாக்கை வீசியதும் ஏக காலத்தில் நடந்தேறியது. வாப்பா சொல்வார்  அன்று சவுறா மாமியின் இரண்டு கோழிகளின் குட்டித்தூக்கம் மட்டும் தான் கலைந்தது.

தலைப்பிள்ளையான எனது வருகைக்கு உதவிய இந்த சைக்கிளில் எப்போதும் எனக்கு வாஞ்சை இருந்தது. அர்த்த சாமத்தில் உம்மா இடுப்பு வலியால் துடித்த போது கொலனிக்குள் இருக்கும் கஸ்ஸா மருத்துவிச்சியை வாப்பா பின் கரியலி;ல் ஏற்றிக் கொண்டு திரும்பும் போது சுபஹ் தொழுகைக்கு பாங்கு சொல்ல லெப்பை மாமா பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். எனக்குப்பின் அந்தப்பாக்கியம் யாருக்கும் வாய்க்கவில்லை. தம்பி தங்கைகளின் வருகைகள் ஆஸ்பத்திரியில் நிகழ்ந்துவிட்டன.

அந்திம கால வாப்பாவைப்போல சைக்கிள் சோர்வுடன் பனைமரத்தில் சாய்ந்திருந்தது. ஓராயிரம் கதைகளை தனக்குள் கமுக்கமாக வைத்துக்கொண்டு சாய்ந்திருக்கும் அதன் ‘ரிம்கள்’ மட்டும் சற்று ‘கரல்’ பிடிக்க ஆரம்பித்தன.

தேக்க மர சேனைக்குள் கள்ள மரம் வெட்டி ஊருக்குள் அதை ஏற்றி வந்த இந்த சைக்கிள், பொத்தானைக்காட்டுக்குள் புலிகளால் சுடப்பட்டுக்கிடந்த மையத்துக்களையும் காவிக்கொண்டு ஊருக்குள் சேர்த்திருக்கிறது.

மம்முகாசின்ட மகன் அனிவா இந்தியன் ஆமிக்கு இளநி கொடுத்தானென்று  துரிசடியில் அவர்கள் சுட்டுவிட்டுப்போன பச்சை இரத்தம் உலரு முன்பே வாப்பா சைக்கிளின் பின் கரியலில் வைத்து தள்ளிக்கொண்டு வந்திருந்தார்.

கொச்சிக்காளைக்குப்போனவர் மிளகாய் மூடைக்குப்பதிலாக  இரத்தம் ஒழுக மையத்தை கொணர்ந்த போது ஊர் அவரையும் இந்த சைக்கிளையும் பெருமையாக பேசிற்று.

அனிவாவின் இளம் மனைவி முற்றத்தில் கிடந்து மண்ணைவாரி வானத்தை நோக்கி ‘பதுவா’ செய்தது இன்னும் என் நெஞ்சுக்குள் பாவுகிறது.

மாலையில் கிணற்றடியில் சைக்கிளை வாப்பா கழுவியபோது கரியலில் படிந்திருந்த இரத்தக்கறைகளை கண்டு பயத்தால் அழுதிருக்கின்றேன். சவர்க்காரம் போட்டு தும்பால் தேய்த்துக்கழுவிய பின்பும் வாப்பா சைக்கிளை உள்ளே எடுக்காமல் வெளி விறாந்தைக்குள் சாத்தினார்.

நான் ஒரு மாத காலமாக அந்த சைக்கிளில் ஏறுவதற்கு அடம்பிடிக்கவில்லை என்பது உம்மாவுக்கு மகிழ்ச்சி.

ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்த சிறுவன் என்னைக்கண்டதும் அருகில் வருகிறான். 20 ஆடுகள் இருக்கலாம் செவிகள் நீண்ட வெள்ளாடுகள் மிக எடுப்பாக நின்றன. பாடசாலைக்காலத்தில் நான் விழுந்து விழுந்து நேசித்தவளும் இப்படித்தான். நண்பிகள் புடை சூழ வரும்போது எல்லோர் தோளையும் விஞ்சி அவள் கழுத்தும் சிரிப்பும் வெட்டிக்காட்டும். ஓரடி உசத்தியும் எடுப்பும்.

அவளிடமும் பருவத்தில் ஒரு சைக்கிள் இருந்தது.பெண்கள் சைக்கிள் விட சங்கோஜமான அக்காலத்தில் அவள் முதல் தரமாக அதை ஓட்டிக்கொண்டு வந்த போது கிராமமே வியப்பில் மூழ்கியது. எல்லாப்பெண்களையும் விஞ்சும் சாகசக்காரியாக அவளின் பிம்பமே பேசப்பட்டது. நட்பின் உச்சத்தில் இருந்த காலத்தில் அந்த சைக்கிளில் மைதானம் முழுக்க சுற்றிப்பார்த்திருக்கின்றேன்.

வாப்பாவின் சைக்கிளின் உறுதியான இருப்பு என்னை உறுத்துகிறது.

முள்ளிவெட்டவான் முட்காடுகளில் இதன் கரியலில் இருந்து நான் பயணித்த பயணங்கள் நினைவின் முட்களாக நெஞ்சை அடைக்கிறது.

இயக்கப்பொடியன்கள் அடர்ந்த காட்டின் வழி ஓட்டிச்சென்று உணவுப்பொதிகளை தன் சகாக்களுக்கு கொடுத்து விட்டு வருவதற்கு வாப்பா மறுப்பேதும் சொல்லமாட்டார். மறுப்புகள் எடுபடாது என்பது தெரிந்தபின்பும் என்னத்தப்பேச என்றிருக்கும் வாப்பாவின் தோரணை.

 சைக்கிள அவர் யாருக்கும் ஓடக்கொடுக்கமாட்டார் என்ற அவரின் ‘பொலிசி’ தெரிந்தவர்கள் கேட்கவேமாட்டார்கள்.

(2)

இரவுக்காட்சி முடிந்து  ஏறாவ+ரிலிருந்து வாப்பா நண்பர்களுடன் வருகிறார்.ஆளுக்கொரு சைக்கிள் வெகு உல்லாசமாக பார்த்த படத்தின் நகைச்சுவைகளை சொல்லிச்சிரித்தபடி வீதியை அடைத்தபடி வருகிறார்கள்.

 சித்தான்டியை தாண்டும் போது வாப்பாவின் முதுகில் அனல்காற்று தொடுகிறது. சைக்கிள் நகர மாட்டேன் என்கிற அளவிற்கு கணதியின் வலி . பெடல் மறமறக்க மிதிக்கிறார். பின் கரியலில் இருக்கும் ஆசாமியை திரும்பிபார்க்கும் ஆவல் உந்த முகத்தை வலப்பக்கமாக திருப்புகிறார்.

‘ம்… பின்னால் பார்க்கம மிதிடா’

 குரலின் தீட்சண்யம் அவரை கட்டிப்போடுகிறது. ஆகிருதியான நீள் நிழல் சைக்கிள் பக்கவாட்டில் விழுந்து தொடர்வதை கவனித்தபடியே மிதிக்கிறார். நண்பர்கள் அவரை தாண்டிச்சென்றுவிட்டனர். நிலவின் குளிர்ச்சி வீதி முழுக்க சொரிந்திருந்தது. சாராயத்தவறணைக்கருகில் ஒர் ஆலமரம் விழுது பரப்பி தலை சிலுப்பி நின்றது.

வாப்பா வியர்வையில் குளித்தபடி ஆலமரத்தை கடக்கும் தருணம் சைக்கிளின் பாரம் விர்ரெனக்குறைகிறது. கால்கள் இலேசாக பெடலை உழத்தின. ஆலமரத்தின் கந்துகள் காற்று வீசாத நள்ளிரவில் தலைவிரித்து ஆடியதை  வாப்பா திரும்பிப் பார்க்காமலே சைக்கிளை வேகமாக மிதிக்கத்தொடங்கினார்.

சாமத்தில் தனியாகப்போகும் சைக்கிளின், மாட்டு வண்டிலின் பின்னால் பேய்கள் ஏறி சஞ்சரிப்பதாகவும் இந்த சைக்கிளில் பல பேய்களை தான் ஏற்றி வந்துள்ளதாகவும் வாப்பா வீறாப்புடன் கதை சொல்வார். பேய்கள் இரும்புக்கும் வலாயப்படாத காலம் அது. நாங்கள் தாய்ப்பறவையின சிறகினுள் ஒடுங்கிக்கிடக்கும் குஞ்சுகள் போல் உம்மாவின் விலாவை உரசியபடி வாய் பிழந்து கதைகள் கேட்டிருந்தோம்.

(03)

குட்டையில் கிடந்த எருமை மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாய் எழுந்து மேற்குப்பக்கம் செல்கின்றன.குளித்து விட்டு வரும் அந்தக்குடும்பம் மறுபடியும் சிரிப்பையும் கும்மாளத்தையும் காடு முழுக்க தூவியபடி வந்தது. குளத்தில் நாரைகள் விழுந்து எழும்பிய போது அதன் சொண்டுகளில் மீன்கள் துடித்தன.

பிற்காலத்தில் வாப்பாவின் மனச்சுமைகளை இந்த சைக்கிள் சுமக்க முடியாமல் நைந்து போனது போல் ‘சீட் கு~ன்’ பிய்ந்து போய் பரிதாபமாக தெரிந்தது. வேலை முடிந்து வீட்டுக்குப்போய் முதல் வேலையாக இதைக்கழுவி மினுக்கம் கொடுக்க வேண்டும்.

சில சாமான்களை புதிதாக வாங்கிப்போட வேண்டும். சைக்கிளின் மகிழ்ச்சி வாப்பாவுக்கு செய்யும் முதல் மரியாதை .பனை மரத்தில் சாய்ந்திருக்கும் அது என்னை பரிதாபமாக பார்த்துக்கொண்டிருப்பதான பிரேமை .மனம் சுருக்கென்றது.

‘எனக்கு உம்மாவோட வாழ ஏலாடா மக்காள்’

‘ஏன் வாப்பா ?..’

‘அவட கக்கிசாரம் புறுபுறுப்பும் பொறுக்கேலா எந்த ஆம்புளயும் தாங்கமாட்டான், புகைச்சலுக்க இருந்தாலும் எரிச்சலுக்க வாழ ஏலுமா செல்லுங்க ? ’

‘கொஞ்சம் சமாளித்துப்போங்களன் வாப்பா’

‘இல்ல மக்காள் பொம்;புள வாய்ச்சாதான் வாழ்க்க ருசிக்கும் இல்லாட்டி நரகம்தான்டா, இம்புட்டு நாளும் நரகத்தலதான் வாழ்ந்திட்டன். அதெல்லாம் ஒங்களுக்காக,இனி நீங்க தலெயெடுத்திட்டிங்க ஒங்களுக்கும் கண்ணு விடுத்திட்டு, நீங்களாச்சும் நல்ல குணமுள்ளவள தேடிமுடிங்கடா இது என்ர ஒஸியத்து.’

வாப்பாவின் குரல் உடைந்திருந்தது. அப்போதும் இந்த சைக்கிள் அவர் காலடியில்தான் கிடந்தது.

‘நான் என்னத்த குற வச்ச அவ இப்பிடி நடக்கலாமா’?

உம்மா வாப்பாவுக்கு செய்யும் ஆக்கிணைகள் நினைவில் எழுந்தன. வாப்பாவின் அந்திமம் இயலாமற்போன போது அவரை வார்த்தைகளால் சித்திரவதை செய்து கொன்ற மனைவியாக அவ மாறியிருந்தா. ஆகாதவன் பொண்டாட்டி கைபட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்பது இங்கு தலை கீழாக மாறிப்போயிற்று.

அவரின் யௌவனப்பருவத்தில் உம்மாவை ஆட்டிப்படைத்ததும் ஏனோ சுறுக்கென்று நினைவில் வந்து முட்டியது. தேத்தண்ணியில சீனி குறைய, அல்லது இனிப்புக்கூடிட்டு,கரி ஆக்கின, சரியில்ல இப்படி எத்தனையோ சில்லறைத்தனமான விடயங்களுக்கெல்லாம்  மோட்டுக்கும் தரைக்குமாக குதித்து தாண்டவமாடியவர்தானே.

ஒரு தடவை உப்புக்கொஞ்சம் கூடிட்டு என்றதற்காக சாப்பிட்ட தாலாப்பீங்கானை தூக்கி உம்மாவின் மூஞ்சியில விட்டெறிந்தார். அது அவவின் தலைக்குமேலால் பறந்து சுவரில் முட்டி டங் என்ற கடுர சத்தத்துடள் விழுந்த போது வாப்பாவின் முகம் இறுகிக்கிடந்ததை அச்சத்துடன் பார்த்திருந்தோம். படலையைத்தாண்டி உம்மா வானத்தைப்பார்க்க இவர் கிழமைச்சாமான் கட்டிக்கொண்டு வேலைக்குப் போகவேண்டும் என்ற நிலை இருந்தது.

அந்த அராஜரகங்களுக்கான பழிவாங்கும் படலமாக உம்மாவின் ஆக்கிணைகள் அவரின் அந்திமத்தில் நடந்தேறியுள்ளதாக நினைக்கத்தோன்றுகிறது. பல் பிடுங்கப்பட்ட நாகம் போல் வாப்பாவின் நாடி நரம்புகள் ஆடிப்போன  தருணத்தில் உம்மா வஞ்சம் தீர்த்துக்கொண்டிருப்பதான ஆறுதலை தந்திருக்கலாம்.

 அப்போதும் அவர் கோபப்படவில்லை. சைக்கிள் சவாரியை விடவுமி;ல்லை. வீட்டிலிருந்து மேற்கு மூலையிலிருக்கும் தைக்காப்பள்ளிக்கும் வீட்டிக்கும் மூன்று நிமிடப்பயணம்தான். வாப்பாவோவெனில் சைக்கிளில்தான் செல்வார். மழைக்காலங்களிலும் ஒரு கையால் குடை பிடித்தபடி, நடுங்கும் கரங்களால்; ‘கெண்டிலை’ப்பிடித்தபடி அவர் சைக்கிளில் வரும்போது அச்சம் கவ்வும். ஆனால் விழமாட்டார்.

அவரின் செல்வாக்கை தூக்கி நிறுத்த இந்த சைக்கிள்தான் தோதாகப்பட்டிருக்கலாம். சில சமயங்களில் கத்தா மரத்தடியில் சாத்திவிட்டு அதனிடம் பேசிக்கொண்டுமிருப்பார்.

 அவர்களின் நீள் தூரப்பயணங்கள், எதிர்கொண்ட ஆபத்துக்கள் குறித்தெல்லாம் சைக்கிளுடன் அவர் பேசுவார். சர்வமும் சத்தியம் என்பது போல் அந்த ரெலி சைக்கிள் மௌனமாக கேட்டுக்கொண்டிருக்கும். பணிவுள்ள அடிமையாக வாப்பாவின் பேச்சில் கட்டுண்டு கிடக்கும் சைக்கிளின் இருப்பு எனக்குள் பேரானந்தத்தை தூவும.;

பனை மரத்தில் சாய்ந்து ஓய்வெடுக்கும் சைக்கிளை தூக்கி நிமிர்த்துகிறேன். இரும்புகளின் குளிர்ச்சி ஜில்லென்று கையில் பாவுகிறது. ஒரு என்.ஜீ.ஓவில் வெளிக்களப்பணியாளனான எனக்கு இந்த சைக்கிள் உபயோகம் வார்த்தைகளில் மாளாது.

வாப்பாவே சின்ன வயதில் கூட வரும் பாதுகாப்புணர்வு நெஞ்சில் ஊறியிருக்கும். வாஞ்சையுடன் அதை தள்ளி  பக்குவமாக வீதிக்கு ஏற்றுகிறேன்.

நான் அலுவலகத்தில் நுழைந்தபோது ரஜீவன்தான் முதலில் என்னைக்கண்டான். மேலதிகாரிகளின் வாகனங்கள் தரிப்பிடங்களில் நின்றன. அஞ்ஞனா ரிசப்சனில் ஜெகஜோதியாக சிரித்தபடி என்னை வரவேற்றாள்.

 சைக்கிள் சாவியை விரலிடுக்கில் வைத்து சுழற்றியவாறே எனது மேசையில் வந்தமர்ந்தேன். சற்று நேரத்தில் மேலதிகாரியின் அழைப்பு வர அறைக்குச்சென்று அன்றைய களப்பணிகள் பற்றி கலந்துரையாடினேன் .அவர் அறிக்கைகளை படித்தபின்  என்னை நிமிர்ந்து பார்த்தார்.அவர் இதழ்யோரம் இளநகை முகிழ்ந்தது.

‘ஒரு குட் நிவுஸ்’ என்றார். மலர்ந்த இதழ்கள் மகிழ்ச்சியில் விரிந்தன.

என்ன என்பது போல் என் புருவங்கள் உயர்ந்தன

‘இனி நீங்க அந்த பழய சைக்கிள் ஓடத்தேவையில்ல.நாங்க மொட்பைக் தாரதாக முடிவெடுத்திருக்கம். நாளயண்டக்கி பங்~ன், அவசியம் வந்து உங்கட பைக் எடுத்திருங்க.’

‘தாங்கஸ்’ என்ற வார்த்தைகள் மெலிதாக என்னிடமிருந்து வெளிப்பட்டன அவர் வினோதமாக பார்ப்பதை தவிர்க்குமாற் போல் அவசரமாக வெளியேறினேன். அஞ்ஞானா ஏற்கனவே விடயம் தெரிந்திருப்பாள்.

‘அப்ப இனி இந்த கரள் பிடிச்ச இரும்புக்கு லீவு என்ன, பேரீச்சம் பழம் வாங்கி தாங்க யாகூப் என்றாள்,

ரஜீவனோ ஒரு படி மேலே போய்

‘இனி மரமஞ்சள் குடிக்கிற வேலயும் இல்ல’என்றான்.

நெஞ்சுக்கு இதமான உறவை இழந்துவிட்ட பரிதவிப்பில் மனம் பதைபதைத்தது. வாப்பாவின் சைக்கிள் இல்லாத வீட்டின் தனிமை என்னை அச்சமூட்டத்தொடங்கியது. வெளியே வந்து சைக்கிளை திரும்பி பார்க்கிறேன். உம்மாவால் கைவிடப்பட்டு அந்திமத்தில் பரிதவித்த வாப்பாவைப்போல் அது சாத்திய இடத்தில் அப்படியே நின்றது.


06.06.09 பிரசுரம் அம்பலம் , சஞ்சிகை 2010 ஜனவரி

Sunday 4 September 2011

ஜெயமோகன் அஞ்சல்





அன்பும் மதிப்புமிகு ஜெயமோகனுக்கு,
உங்களின் யானை டாக்டர் படித்தேன். மனசு மத்தாளமானது.உங்களைக்காண வந்த எஸ்.எல்.எம்.ஹனீபா மூலம் கிட்டியது.

ஒட்டமாவடி அறபாத்

ஊமைச்செந்நாய்க்கு நிகரான படைப்பு.இன்றைய தமிழ்ச் சூழலில் ஜெயமோகன் என்கின்ற உங்களால் மட்டும்தான் இவ்வாறு எழுத முடியும். இது முகஸ்துதியோ புகழ்ச்சியோ அல்ல,சத்தியம்.உங்களைக்கண்டு வந்த எஸ்.எல்.எம்.என்னிடம் ஜெயமோகன் என்கின்ற புத்தனைக்கண்டு வந்தேன் என்றார்.புத்தனின் மறு பெயர் ஈரம்.யானை டாக்டரின் ஒவ்வொரு பத்தியிலும் அந்த ஈரம் சொட்டுகிறது.

இலங்கையில் 6200 யானைகள் வாழ்ந்தாலும் எங்கள் காடு 2200 யானைகளுக்கே போதுமானது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்லி வருகிறார்கள்.

புலிகளுடனான சண்டைமுடிவுக்கு வந்த வேளை,  யானைகளுடனான சண்டை ஆரம்பம்.எங்கள் வாழ்விடங்களிலிருந்து 2 கிலோ மீற்றர் தூரத்தில் யானைகளின் குடியிருப்பு. எங்களுர் மக்களுக்கு யானைகளுடன் தீராப்பகை.ஒவ்வொரு வருடமும் யானைகள் பலரின் உயிரைப் பறித்து விடும். இந்தச்சூழலில் யானை டாக்டர் கதை எங்களை எவ்வாறு பாதித்திருக்கும் என நான் சொல்லத்தேவையில்லை.

இலங்கையில் எழுத்தாளர்கள் என்று கோலம் போடுபவர்களின் அடியேனும் ஒருவன். மூன்று  சிறு கதைத்தொகுதிகளைக் கொண்டு வந்திருக்கின்றேன்.அதில் அடையாளம் பதிப்பகம் ” உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி “ என்ற தொகுதியைக் கொண்டு வந்திருக்கின்றது. அந்தத் தொகுதியிலிருந்து இரண்டு கதைகளை உங்களுக்கு அனுப்புமாறு எஸ்.எல்.எம் வேண்டிக்கொண்டார்.உங்கள் பார்வைக்கு அனுப்புகின்றேன்.
உங்களைக்காண இன்ஷா அல்லாஹ் பார்வதிபுரம் வருவேன்.
அன்புடன்
அறபாத்- இலஙகை


அன்புள்ள அறபாத்

 ஜெயமோகன் பதில்

நான் ஆபிதீனின் பக்கங்களில் உங்கள் கதைகளையும் கடிதங்களையும் ஏற்கனவே வாசித்திருக்கிறேன்.  தொகுப்பு வாசித்ததில்லை. அடையாளம் சாதிக் நல்ல நண்பர்தான். பெரும்பாலான நூல்களை அனுப்பித் தருவார். இந்நூலையும் அனுப்பச் சொல்கிறேன்.

உங்கள் கதைகளில் உள்ள சாதாரண மனிதனின் வாழ்வுக்கான ஏக்கத்தை மிகுந்த நெருக்கத்துடன் உணர்ந்தேன். குறிப்பாக ரெயில்வே ஸ்டேஷன் கதையில் சரசரவென வந்துமறையும் முகங்கள். காலம் ஒரு ரயில் போல ஜன்னல்முழுக்க முகங்களுடன் ஓவென அலறி இரும்புப்பேரொலியுடன் கடந்து மறைந்ததைக் காட்டிய கதை அது.

ஒரு எழுத்தாளன் அவன் கைக்குள் சிக்கக்கூடிய ஒரு வாழ்க்கைக்குள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் காட்ட முயலவேண்டும் என நான் நினைக்கிறேன். வாழ்க்கையின் அளவும் அகலமும் அல்ல அது எதைச்சுட்டி நிற்கிறது என்பதே நல்லகதைகளை அடையாளப்படுத்துகிறது.

வீடு போர்த்திய இருள் கதையும் என்னைத் தனிப்பட்டமுறையில் பாதித்தது.  காலம் இதழில் நான் அக்கதையை வாசித்திருக்கிறேன். கிட்டத்தட்ட அதே தளத்தில் ஒருகதை ‘அம்மன் மரம்’எழுதியிருக்கிறேன்.

நாம் சந்திக்கும்போது சிறுகதை பற்றி இன்னும் நிறையப் பேசமுடியுமென நினைக்கிறேன்.  தொடர்ந்து உங்கள் படைப்புகளை வாசிக்கவேண்டும்
எழுதுகிறேன்
ஜெ




அன்புமிகு ஜெயமோகன்
உங்கள் கடிதம் என்னை உற்சாகப்படுத்தியது.ஒரு கட்டத்தில் வாழ்க்கை வெறுத்துப்போய்விடுகிறது. எழுதி என்ன செய்ய என்று மனம் அலுத்துக்கொள்ளும்.உங்களைப்போன்ற சிகரங்களின் எழுத்துக்கள் அதை மீண்டும் புத்துயிரூட்டும். நெரிசல்மிகு வாழ்க்கையில் வாசிப்பும் எழுத்தும்தான் புனித ஜிஹாத் என்பேன்.நான் அந்தப் புனித யுத்தத்தைத்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக நடாத்திக்கொண்டிருக்கின்றேன்.

என்னுடைய கதைகள் பற்றிய தங்கள் மதிப்பீடு மிகுந்த மன எழுச்சியைத்தருகிறது.என்னைப்போன்றவர்களின் படைப்புக்களை நீங்கள் வாசிப்பதற்கு அவகாசம் கிடைக்காது என்பது என் எண்ணமாக இருந்தது,

நேற்று என் தோட்டத்தில் இருந்த போது மாமரத்திலிருந்து நழுவி என் கையில் விழுந்த புழு ஒரு கைக்குழந்தையாகத் தவழ்ந்தது. என்ன ஒரு  உயிர்ப்பான வார்த்தைகள். உங்களின் யானை டாக்டரைப்படித்த பின் நான் இப்படித்தான் புழுக்களைப் பார்க்க ஆரம்பித்துள்ளேன். இன்னும் அந்தக்காட்டிலிருந்து மீளவும் என் கிராமத்திற்கு வரமுடியவில்லை.

இலங்கையில் தற்போது புழக்கத்தில் இருக்கும் 1000 ரூபா நோட்டில் யானையுடன் ஒரு பாகனும் இருப்பார்கள். அது எங்கள் ஊருக்குப்பக்கத்திலுள்ள கிராமத்து  முஸ்லிம் ஒருவரால் தலதா மாளிகைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட யானை. பாகன் தலையில் குல்லாய் போட்டிருப்பார் .கிடைத்தால்  பாருங்கள் புரியும்.
நூற்றாண்டுகள் கடந்தாலும் மஹிந்த அரசு அந்த வரலாற்றைப்பேணி வருவதற்கு காரணம் அது அவர்களின் பவுத்த மதத்தின் அடையாளம் என்பதால்.
அன்புடன்
அறபாத்.




 ஜெயமோகன் பதில்



அன்புள்ள அறபாத்
உங்கள் மனநிலை எனக்குப்புரிகிறது.
எழுத்தாளனுக்குச் சோர்வு புறச்சூழல்களினால் ஏற்படும். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குமேல் அது நீடித்தால் அது அவனுடைய பிழை. நீண்டகாலத்துக்கு நீடித்தால் அவனுடைய குற்றம்.

எழுத்துத்திறன் என்பது ஒரு இயற்கைக் கொடை. அல்லா உங்களுக்கு அதை ஒரு காரணத்துக்காகவே அருளியிருப்பான். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதற்கான விளக்கத்தை அல்லாவிடம் கோர உரிமை கிடையாது.

ஆக, முடிந்தவரை தீவிரத்துடன் ,உத்வேகத்துடன் எழுதிக்கொண்டிருப்பதே முக்கியமானது. அத்துடன் நம் கடமை முடிகிறது. எழுதுங்கள்.
ஜெ

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...