Monday 29 October 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்



தொடர்- 26

எது நடக்கக்கூடாது என்று ஆசைப்பட்டோமோ அது ஈற்றில் நடப்பதற்குரிய அட்டவணைகள் நடந்தேறின.யுத்தம் எழுப்பிய புழுதி சனங்களின் முகங்களில் மரணமாய் அப்பிக்கிடந்தது.தெருவெங்கும் மூட்டை முடிசு;சுகளுடன் ஓடிக்கொண்டிருந்தனர்.சிலர் எங்களை நின்று நிதானித்துப்பார்த்து விட்டு ஓடினர்.சிலர் தன்னையும் உறவினர்களையும் காப்பாற்றும் நோக்கில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஓடினர்.

பிள்ளைகளின் குய்யோ குய்யோ என்ற இரைச்சல் வேறு விதியை அடைத்தபடி நீக்கமற எங்கும் பரவியிருந்தது. வாகனங்கள் எதுவும் பாதையில் தென்படவில்லை.முஸ்லிம் கிராமமான காத்தான்குடியை அண்மித்து விட்டதாக எங்களுக்குள் இருந்து சத்தம் வந்தது. 

அந்தக்குரலில் மிகுந்த உற்சாகம் கரைபுரள்வதைக் கேட்டேன். காத்தான்குடிக்கு முன் ஆரையம்பதி இருக்கின்றது.தேற்றாத்தீவு இருக்கின்றது. மனம் கணக்குப்போட்டபடி கால்கள் விரைய தேற்றாத்தீவு வந்து விட்டது. 

  தேற்றாத்தீவுக்குள் நுழைந்தவுடன் சில இளைஞர்கள் எங்களை சுற்றி வளைத்தனர். மனம் அந்தரமாய் அடிக்கத்தொடங்கியது. முஸ்லிம்களின் நிழல் கூட வெளியில் உலவாத மரண நேரமது. எங்களை வழிமறித்த இளைஞர்களின் முகத்தில் எந்தச்சலனமும் இல்லை. 

“உங்கள சேர்ச்சுக்குள்ள கூட்டிவரச் சொன்னார்கள் வாங்க’ என்றனர்.மறுப்பதற்கும் ஓடித்தப்பிப்பிழைக்கவும் எந்த முகாந்திரமும் இல்லை.அல்லாஹ்வையன்றி காப்பாற்றும் அனுக்கிரகமும் இல்லை. எங்கள் மனங்களில் வாழ்வின் முற்றுப்புள்ளி இடப்பட்டதான அச்சம் மேலேக அதரங்கள் கலிமாவால் துடித்தன. மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பென நடந்தோம். சேர்ச்சுக்குள் மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது.

மரங்களால் நிரம்பியிருந்த சேர்ச்சில் வழி நெடுக பூமரங்கள் தலையாட்டியபடி நின்றன.வானத்தை மறைத்தபடி எழுந்து நிற்கும் மரங்களை இரசிக்க மனமின்றி உயிரைப்பாதுகாக்க என்ன வழி என்ற சிந்தனையில் நடக்கத்தொடங்கினோம். 

சேர்ச்சுக்குள் அகதிகள் என்பது சற்று நேரத்திற்குப்பின் தெரிய வந்தது. எங்களையும் ஒதுக்குப்புரமாக உள்ள ஓர் இடத்தில் அமரச்சொன்னார்கள். யார் எம்மை அழைத்தது? ஏனிந்த இரகசிய ஏற்பாடு ? இதற்குள் எங்களை ஏன் அடைத்து வைத்துள்ளார்கள்? ஆளையாள் ஐயத்துடன் கேட்டு விடை தெரியாமல் திருதிருவென்று தரையில் அமர்ந்திருந்தோம். 

தொப்பிகளை கழற்றுங்கள் என்றார்கள்.பின்னர் தேனீர் தந்து விட்டுப் போனார்கள்.

குடிக்கும்போது ஜாபிர் சொன்னார். இது கடைசி சொட்டு தேனீர் நம்மள ஆற்றங்கரைக்கு கொண்டு போய் வெட்டப்போறானுகள். …

அதைக்கேட்டு சிறியவர்கள் அழுதார்கள்.சிலர் சமாதானப்படுத்தினாலும் மனம் அடித்துக்கொண்டது.

எமக்கு முன் இலைகுழையால் மூடப்பட்ட ஒரு வேன் நின்றிருந்ததை அப்போதுதான் பார்த்தோம். 

சுடாரென அந்த வேனில் இருந்து கொத்துக்கள் உருவப்பட்டன.வெள்ளை வேன் பளிச்சென எமது கண்களில் பீதியாய் நின்றது.

அந்த வேனில் எங்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்கள்.பாதரும் கூடவே வந்தார். அப்பபோதுதான் அவரைப்பார்;த்தோம் எங்களை வேனிலிருந்து தலையை மேலே உயர்த்தாமல் இருக்கும் படி சைகை காட்டினார். ஏதோ விபரீதம் நடந்திருக்கின்றது. அல்லது நடக்கப்போகிறது.வழியில் யாரும் பேசவில்லை. மௌனமாய் வேனுக்குள் புதைந்திருந்தோம்.கடைசி சொட்டு உயிர் வாழ்தலின் அர்த்தம் மகா யுகமாய் எம்முன் விரிந்து சென்றது.

இளமையின் கனவுகள் எங்கேயோ ஒரு வனாந்திரத்தில் மண்ணில் புதையுண்டு போவதை நினைக்கையில் மனம் ஓவென்று அலறத்தொடங்கியது. எமது பிரிவால் கதறியழும் உம்மாக்களின் கண்ணீர்.

உறவினர்களின் தவிப்பு.நண்பர்களின் பதகளிப்பு.கிராமத்தின் சோக்காட்சி இதற்காகப் பலிக்குப் பலிவாங்க அப்பாவிகளை குறிவைத்துக்காத்து நிற்கும் எமதூரின் சில இளைஞர்களின் கோபாக்கினி எல்லாமே மனசுக்குள் வேகமாய் ஓடிக்கொண்டிருக்க கண்கள் என்னை அறியாமல் நீரை உகுத்தன. 

ஆறையம்பதி தாண்டியதும் வேனை நிறுத்தி, இரும்புத் தைக்காப் பள்ளிவாயலுக்கு விடும்படி சாரதியை பணித்தார்.அப்போதுதான் சுயநினைவுக்குத்திரும்பினோம். காத்தான்குடியை அண்மித்து விட்டோம். 

இதோ கண்தொடும் தூரத்தில் மினாராக்களில் எங்கள் உயிர் பறக்கவாரம்பித்தது.பாதரின் குரலில் மலக்குள் மௌத் இல்லை. கருணையும் அன்பும் ததும்பிய மனிதத்தின் குரலினைக்கேட்டோம்.

எங்கள் தேசம்     232                                                                                                     ஊஞ்சல் இன்னும் ஆடும்.....

Monday 15 October 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்



தொடர்- 25

நோன்பு காலத்தில் சாமத்தில் எழுப்ப வரும் பாவாமார்களை அச்சமூட்ட அக்காலத்தில் சில இளைஞர்கள் இருந்தனர்.சில்மிசம் செய்வதே இவர்களின் தொழில்.சில பாவாமார்களுக்கு நள்ளிரவில் நடமாடுவது அச்சம் என்பதை இவர்கள் எப்படியோ கண்டு பிடித்து  விடுவர்.ஆளரவமற்ற தெருக்களில் இந்த இளைஞர் கூட்டம் வெள்ளைத்துணியால் தங்களை முழுமையாக போர்த்தியபடி  நள்ளிரவில் மறைந்திருப்பர்.

ரபானை தட்டிக்கொண்டு வரும் பாவாமார்களின் முன் இவர்கள் திடீரென எழும்பியவுடன் ரபானை வீசி விட்டு விழுந்தடித்து ஓடிய பாவாமார்களின் கதைகள் அனந்தம். நோன்பு முடியும் வரை இந்தக்கதைகள் சுவாரஸ்யமாக தெருக்களில் பேசப்படும்.

2011 இல் முஸ்லிம் கிராமங்களில் கிறீஸ் மனிதனின் நடமாட்டம் பாவாமார்களின் பிரசன்னத்தை சற்று குறைத்து விட்டது.கிறீஸ் மனிதனின் பெயரால் பல தில்லுமுல்லுகள் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

பாவாவையும்,அப்துலையும் சுட்டுக்கொன்ற பின் இந்திய இராணுவம் பசாருக்கு வந்து காதர் டெக்ஸ்சின் முன் வராந்தாவில் சதா தைத்தபடி இருக்கும்  சீனட்டி டைலரையும் சுட்டுக்கொன்றது.   

அவர் ஜீவிதமே சாரம் மூட்டுவதிலும் பொலிதீன் தைப்பதிலும் போய்க்கொண்டிருந்தது. அவரையும் தையல் மெசினில் இருக்க சுட்டுக்கொன்றார்கள்.

வெறிபிடித்த மிருகங்களைப்போல் இந்திய இராணுவம் அந்நாட்களில் நடந்து கொண்டது. சொந்த தேசத்தின் மக்களை வேட்டையாடும் அந்திய படையை தடுக்கவியலா கையகலாத்தனத்தில் இலங்கை இராணுவமும் பொலிசும் முகாம்களுக்குள் முடங்கப்பட்டிருந்தனர்.

91 இலும் இப்படியொரு திகிலை எதிர்கொண்டது நினைவில் ஆடுகிறது.
கிழக்கில் பொலிஸ் நிலையங்களையும் இராணுவ முகாம்களையும் ஏக காலத்தில் புலிகள் முற்றுகையிட்டனர்.நிராயுதபாணியாக்கிவிட்டு பொலிசாரை சரணடையச் செய்தனர்.சரணடைந்த சிங்கள மற்றும் முஸ்லிம் பொலிசாரின் கதைகள் இன்னும் எந்த ஆணைக்குழுவிலும் கணக்குக் காட்டவில்லை.

முஸ்லிம் பொலிசாரில் சிலர் தப்பி வர, சிலருக்கு என்ன நடந்திருக்கும் என்பது சர்வதேசத்தின் ஊகத்திற்கு விட்டுவிடுவோம்.புலிகள் மனித குலத்திற்கு ஏதாவது நல்லது செய்திருப்பார்களா என்று நினைத்துப்பார்க்கின்றேன்.தமிழ் மக்களுக்கும் செய்யவில்லை,முஸ்லிம் மக்களுக்கும் செய்யவில்லை.இந்த நாட்டிற்கும் அப்பாவிகளுக்கும் தீயதைத்தவிர எதையும் செய்யவில்லை என்பதே மகா உண்மை.30 வருட போராட்டத்திற்கு அவர்கள் பெற்றுக்கொண்டது ஒரு முதலமைச்சர் ஒரு பிரதி அமைச்சர்.

முற்றுகை கலவரத்தில் நாடே கொதித்துக்கொண்டிருந்தது. நான் அட்டாளைச்சேனை விடுதியில் இருந்த காலம். எங்களுக்கு உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு இரண்டு நாட்களாக கடைகள் திறக்கவில்லை. விடுதியில் 100க்கு மேற்பட்ட மாணவர்களை சமாளிப்பதில் நிருவாகம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியது. தலையை பிய்த்துக்கொள்வதைத்தவிர இரண்டு நாட்களும் வேறொன்றும் செய்ய முடியவில்லை.

வாகனங்கள் ஓடவில்லை. வெளிமாவட்டங்களில் இருந்து சாமான்கள் கொண்டு வரும் லொறிகளும் வரவில்லை.அம்பாறைக்கு சென்று சாமான்கள் வாங்கி வரவும் எவ்வித முகாந்திரமுமில்லை. மூன்று நாட்களின் பின் விடுமுறை வழங்குவதென்ற தீர்மானத்திற்கு நிருவாகம் வந்தது. தென்னிலங்கை,மலைநாட்டு நண்பர்கள் அம்பாறை வழியாக ஊருக்குப் போவதென்று தீர்மானித்தாயிற்று.அவர்களை இரண்டு ட்ரக்டரில் ஏற்றி அம்பாறை டவுணில் கொண்டு போய் விட்டார்கள்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் விசிக்கும் எங்களுக்கு ஆபத்து காத்திருந்தது. கல்முனைக்கு  ஒரு வேனில் அடைப்பட்டு பதினைந்து பேர் புறப்பட்டுச் சென்றோம். காத்தான்குடி.ஏறாவூர், வாழைச்சேனை,மீராவோடை ஓட்டடாவடி என பல ஊர்களும் ஐக்கியப்பட்டு கல்முனையில் வந்து இறங்கினோம்.கல்முனை வெறிச்சோடிக் கிடந்தது.

மட்டக்களப்புக்கு வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. அங்கிருந்து மருதமுனைக்கு நடப்பதென்று முடிவாயிற்று. மருதமுனையிலிருந்து வாகனங்கள் கிடைக்கவில்லை. அன்றிரவு மருதமுனை எங்களை வரவேற்று பள்ளியில் உறங்குவதற்கு இடமும் ,உணவும் தந்து உபசரித்தது.அங்கும் இரவில் பதற்றம் நிலவியது எந்நேரமும் புலிகள் ஊருக்குள் ஊடுருவக்கூடும் என்ற அச்சம்.

இராணுவம் முன்னேறி வந்து கொண்டிருப்பதாக தகவல்.வந்தது. களுவாஞ்சிக்குடி இராணுவத்தின் கையில் விழுந்து விட்டதாக இரவில் பேசிக்கொண்டார்கள்.

மறுநாள் காலை சுபஹ் தொழுது விட்டு புறப்படுவதென்று தீர்மானித்தாயிற்று.காலையில்  களநிலையை கவனித்து வர நீலாவணை வரைக்கும் பள்ளி நிருவாகிகளில் ஒருவர் போய் பார்த்து விட்டு வந்தார்.

புலிகளின் நடமாட்டம் இல்லை. இருந்தாலும் சண்டை நடப்பது இப்ப ராணுவத்திற்கும் அவங்களுக்கும்தான் நம்மல ஒண்டும் செய்யமாட்டாங்க..நீங்க கவனமா போங்க தம்பியள் என்று வழியனுப்பி வைத்தார்கள்.

மூட்டை முடிச்சுக்களுடன் நடந்தோம்.அறுபது மைல்களை நடக்கவேண்டும் என்பதெல்லாம் அந்த வயதில் பெரும் சுமையாக அழுத்தவில்லை. ஊருக்குப்போக வேண்டும் என்பதே குறிக்கோள். இடையில் பதுங்கியிருந்த ஆபத்துக்களை சிந்தித்துப்பார்க்காத  பருவம்.

பெரிய நீலாவணை தாண்டியதும் மனிதர்களின் நடமாட்டத்தைக் காணவில்லை. ஆமியும் இல்லை புலியும் இல்லை சண்டையும் இல்லை.மௌனத்துள் புதைந்திருந்தன எல்லைகள். சண்டை நடந்து ஓய்ந்து களைத்துக் கிடந்தன கிராமங்கள்.வீதிகளில் ஷெல்கள் குத்திய பள்ளங்கள்.சாமான்கள் சிதறிக்கிடந்த கடைகள் திறந்தபடி ஆவென்று தெரிந்தன.

வீடுகளும் திறந்தபடி மின்விசிறிகள் சுழன்றபடி, தொலைக்காட்சிகள் சனல்கள் ஓடியபடி மக்கள் மட்டும் இல்லை.தெருவில் சில உயிரற்ற உடல்கள் கிடந்தன.பெரும்பாலும் ஆண்களுடையது. எங்களுடன் வந்த காத்தான்குடி தோழர் இம்தியாஸ்தான் மிகச்சிறிய வயதினர்.இந்தப் பேரழிவுகளைக்கண்டு அவர் ஓப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டார் .அவரை சமாதானப்படுத்தி நடந்தோம்.

வழியில் ஒரேயொரு கிராமத்தில் களுவாஞ்சிக்குடிக்கு அப்பால் சில தமிழ் சனங்கள் பாதையில் நின்று எங்களை வழிமறித்து கதை கேட்டனர்.தண்ணீர் தந்தனர்.

ஒரு வயோதிகத்தாயின் குரல் என் பின்னால் விழுந்தது. ஓங்களுக்கு தேத்தண்ணி தாரதுக்கு ஒரு சுரங்கச்சீனியும் இல்லயே தங்கம்காள்…

அந்தக்குரலின் மனிதத்துவத்தைத்தான் எரித்து சாம்பராக்கி புலிகளும் அவர்களின் அருவருடிகளும் குளிர்காய்ந்தனர்.என் செவிகளில் அந்தக்குரல் இன்னும் இதமாகவும் , ஏக்கமாகவும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

களுவாஞ்சிக்குடியிலிருந்து ஒரு மைல் தொலைவில் முதல் படையை சந்தித்தோம். மேஜர் மஜீத் என்பது இன்னும் நினைவில் உள்ளது. அவர்தான் இராணுவத்தை வழிநடத்தி முன்னேறிக்கொண்டு வந்தார்.கூட்டமாக எங்களைக்  கண்டதும் இராணுவம் அரண்டு போனது. துவக்குகள் எமை நோக்கி உயர்ந்தன.கைகளை உயர்த்தியபடி ஏறாவூர் ஜாபிர்தான் சென்றார்.அவர் ஆமியுடன் கதைத்தார்.பின்பு கைகளை கீழே விடும்படி கட்டளை வந்தது.

 மேஜர் மஜீத் அருகே வந்து ஆறுதலாக கதைத்து  வழியில் கவனமாக போங்கள் இனிப்பயமில்லை என்றார்.வழியில் சைக்கிள் கடைகள் திறந்து கிடக்கின்றன. ஆபத்துக்கு பாவமில்லை.இன்னும் பல மைல்கள் நீங்கள் போக வேண்டும். ஐசக்கிள்களை எடுத்துக்கொண்டு போங்கள் என்றனர்.

களுவாஞ்சிக்குடியில் சைக்கிள்கள் நிறைந்து கிடந்தன. சைக்கிளை மட்டுமல்ல ஒரு துளியளவு மண்ணைக்கூட கொண்டு செல்வதில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.கடைசிவரை நடப்பதென்று முடிவெடுத்தாயிற்று. நாய் வேசம் போட்டால் குரைத்துத்தானே ஆகவேண்டும்.

உச்சிவெயில்,மரண பயம், ஆள் அரவற்ற வீதிகள் மேலே சுழன்றபடி கண்கானிக்கும் ஹெலிகள்.தாழப்பறப்பதும்,மேலேகுவதுமாக ஹெலிகள் அச்சத்தை தந்தன. அச்சத்தில் நடந்தோம் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு.

அது நடந்தது விட்டது.  

எங்கள் தேசம்  -231                                                      ஊஞ்சல் இன்னும் ஆடும்..........

Tuesday 2 October 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


 தொடர்- 24

ஒவ்வொரு காலையும் இந்திய இராணுவம் வீதியில் ரோந்து செல்வது வழக்கம். 1987.12.03 இல் காலையில் புறப்பட்ட இராணுவம் ஓட்டமாவடிப் பாலத்திற்குள் நுழைந்தது.அங்கே ஜாவான்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் கிளைமோர் பாலத்திற்கப்பால் இருந்த வேப்ப மரத்தில் காத்திருந்தது.புகையிரதமும்,ஏனைய வாகனங்களும் போக்கு வரத்துச்செய்ய ஒரேயொரு பாலம்தான் அப்போது.2010 இல்தான் புதிய பாலம் திறக்கப்பட்டது. இப்போது புகையிரதத்திற்கு தனிப்பாலம்.

பாலத்திற்குள் பட்டாளம் நுழைந்ததும் எதிரே இருந்த வேப்ப மரத்திலிருந்து சீறி வந்த கிளைமோரில் துடிதுடிக்க அவ்விடத்திலேயே 15 இராணுவத்தினர் மாண்டனர். பலருக்கு காயம். ஊரே திகிலில் உறைந்து போய்விட்டது. கடைகள் அவசரமாக சாத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கொண்டனர்.

சி.இ.பி அமைந்துள்ள மாவடிச்சேனை சந்தியிலிருந்து இந்திய இரானுவத்தின் துப்பாக்கிகள் சகட்டுமேனிக்கு சுட்டுக்கொண்டு வந்தது.கண்ணில் அகப்படுவர்களை கண்மூடித்தனமாக சுட்டபடி வந்தனர்.இப்போது வாழைச்சேனை பொலிஸ் நிலையம் அமைந்துள்ள இடத்தில்தான் இந்திய இராணுவத்தின் பிரதான முகாம்.

முதல் பலி (உலக்க பாவா)  என்றழைக்கப்படும்.நூர் அலிஷா பிச்சை முகைதீன்,உசனார் அப்துல் லதீப்,ஆகிய இருவரையும் ரெயில்வே வீதியில் வைத்து இந்திய இராணுவம் சுட்டுக்கொன்றது. பாவாவும் அவர் குடும்பமும் ரெயில்வேக்கு பக்கத்தில்தான் வாழ்ந்தனர். ஏழைகள் வாழ்ந்த இடம். சத்தம் வந்தவுடன் என்னவென்று பார்ப்பதற்கு தலையை நீட்டியிருக்கிறார். தலையில் சுட்டிருக்கின்றார்கள். பாலம் வரை சுட்டபடி வந்ததில் கடைகளும் வீடுகளும் சேதாரம் ஆகின. 

எங்களுரில் பாவாமார்கள் குறிப்பிட்ட பகுதிகளில்தான் வாழ்ந்து வந்தனர். மாவடிச்சேனை,பிறைந்துறைச்சேனை,போன்ற இடங்களில் செறிவாக வாழ்ந்து வந்தனர். குறிப்பிட்ட தொழில் என்று அவர்களுக்கு கிடையாது. மக்கள் இவர்களுக்கு நிறைய தர்மங்களைகொடுத்து வந்தார்கள். வெள்ளிக்கிழமை பள்ளிகளில் கண்களுக்கு சுர்மா இடல், அத்தர் திரவியத்தை பஞ்சிலே நனைத்து காதுகளின் இடுக்கில் திணித்து விடல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருப்பர் பஞ்சிலே நனைத்த அத்தர் என் காதில் இரண்டு தினங்களுக்கு மணக்கும் சுர்மாவும் கண் வளையங்களின் கீழ் அசர் தொழுகை முதல் ஜொலிக்கும். 

சைக்கிள் கம்பியின் முனையை கூராக்கி சுர்மா டப்பாவுக்குள் தேய்த்து கண்களின் கீழும் இமைகளின் மேற்பரப்பிலும் ஒரு கோடு போடுவர் சில சமயம் கோடு போடும் போது இலேசாக கண்களுக்குள்ளும் சுர்மா தூள் சிதறி விழும் கண்கள் எறிந்து பின்னர் குளிர்ச்சியாக இருக்கும். சுர்மா இடுவது கண்ணுக்கு குளிர்ச்சி .

சில பாவாக்கள் கையில் ஈட்டி போன்ற வேலுடன் ஊருக்குள் வீடுவீடாக வருவார்கள் கையில் செம்பு தஸ்பீஹ் மாலை கழுத்தில் உருத்திராட்ச மாலையை நிகர்த்த மாலைகள் ஜடா முடி. பச்சைத்தலைப்பாகை,என அவர்களின் ஆடை அலங்காரங்கள் ஆர்ப்பாட்டமாக இருக்கும்.

பாவா வருகிறார் என்றால் ரபானும் கூடவே வரும்.தட்டி தட்டி இனிமையான குரலில் வாசலில் நின்று பாட்டுப்படிப்பார்கள்.நாகூர் ஹனீபாவின் பாடல்கள்,ஞானப்பேழையிலிருந்து சூபித்துவப்பாடல்கள் தூள் பரக்கும்.

தவிர நோன்பு காலங்களில் அதிகாலை இரண்டரை மணிக்கெல்லாம் பாவாமார்கள் எழுந்து ஊருக்குள் நுழைந்துவிடுவார்கள்.அலாரம்,மின்சாரம் இல்லாத காலத்தில் லாந்தரை ஏந்திக்கொண்டு தெருத்தெருவாய் சஹருக்கு மக்களை எழுப்புவார்கள்.கூட்டமாக வந்து ஒவ்வொரு தெருவிலும் ரபானை ஓங்கி அடித்து சஹருக்கு எழும்புங்கோ என சத்தம் வைப்பார்கள்.அந்தச்சத்தத்தில்தான் மக்கள் சஹருக்கு எழும்புதுண்டு.

ரமழானில் இருபத்தியேழில் வீட்டுக்குவீடு பாவாக்கள் ஆஜராகி விடுவர்.லாம்பென்ன காசிக்கு வந்து விடுவார்கள்.சஹருக்கு எழுப்பிய அன்பளிப்பாக பணமும் அரிசியும் வழங்கி மக்கள் மகிழ்விப்பர். லாம்பென்ன காசி என்பது அர்த்த சாமத்தில் லாந்தருடன் அவர்கள் வருகை தருவது வழக்கம். அதற்கு மண்னெய் ஊற்ற வேண்டுமே அதற்குத்தான் முழு ஊரையும் வடித்தெடுப்பார்கள். மிஞ்சிப்போனால் ஒரு மாதத்திற்கும் ஒரு இரண்டு போத்தல் என்ணெய் தீர்ந்து போகலாம். 

பாவாமார்கள் காதிரிய்யா தரீக்காவை பின்பற்றுபவர்கள்.முகைதீன் அப்துல் காதர் (ரஹ்) அவர்களின் சீடர்கள் என தங்களை சொல்லிக்கொள்பவர்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை முன்மாதிரிக்கும் அவர்களின் வாழ்வு முறைக்கும் துளியளவும் சம்பந்தம்  இருக்காது. 

முகைதீன் அப்துல் காதருக்கு நேர்ச்சை கேட்டு ஜெயிலானிக்கு போகவென வசூல் நடக்கும்.

இந்தக்காலங்களில் சிலர் பாவாமார்களை சீண்டிப்பார்ப்பதுண்டு. ‘ஜெயிலானிக்கு நேர்ந்து வச்சிருக்கிறன்’ பாவா என்றவுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் சொன்னவரின் வீட்டுக்குள் பாவா செல்வார்.அங்கே பெரிய பாறாங்கல்லை வெள்ளைத்துணியில் சுற்றி இதை கொண்டு ஜெயிலானிக்கு கொண்டு போய் குடுங்க பாவா என்பார்கள் பாவாவும் சந்தோசமாக குணிந்து தூக்குவார்.கல்லை இனங்கண்டவுடன் இயலாமல் தூசணம் பறக்கும். வெள்ளிக்கிழமைகளில் வெள்ளையுடுத்தி பளிச்சென அவர்கள் தென்படுவார்கள்.

பாவாமார்களின் வெட்டுக்குத்து சீனடி நிகழ்வுகள் அக்காலத்தில்    பிரபல்யமாக இருந்தது.இரவு நேரங்களில் முற்றவெளியில் இது நடக்கும்.பல விதமான வித்தைகளை செய்து களிப்பூட்டுவர். ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என பெருந்திரள் குழுமியிருக்கும்.வாண்டுகளான நாங்கள் பெரியவர்களுக்கிடையில் ஆட்டுக்குட்டிகள் போல் நுழைந்து முன் வரிசையில் நிற்போம். பாவாக்கள் கையில் ரபானுடன் கூட்டத்தின் நடுவே ஆடிப்பாடி நடனமிடுவர். எல்லோரும் பச்சைத்தலைப்பாகை கட்டியிருப்பர்.

 மல்லுக்கு நிற்கும் முரட்டுக்காளைகள் போல் பாடல்கள் உச்சஸ்தாயில் ஒலிக்கும். கைகளில் கூராயுத்தால் குத்தியபடி வலம் வருவார் சிலர் சிறு கம்பிகளால் கண்களில் குத்திக்கொண்டும் சிலர் நாக்கை இழுத்து அறுத்தபடியும் வித்தைகள் காட்டுவர். எப்படி வெட்டினாலும் இரத்தம் வராது.

 அப்படி வந்தால் வித்தையில் பிழை இல்லை.தொடக்குக்காரிகள் நிற்கிறாங்க என்ற கூச்சல் எழும். பெண்கள் ஆளையால் முகத்தைப்பார்த்தபடி நின்றிருப்பார்கள் பாவாமாருக்கு வித்தை வசியமாகாது. கூட்டம் அவதிப்படும். அவசரமாக வசூல் நடக்கும்.அன்றைய தினம் பாவாமார்களின் காட்டில் மழை பெய்வதை பார்த்தபடி வீடுகளுக்கு திரும்புவோம்.

பாவாமார்களை கண்டு பயப்படுவதற்கு இந்த குத்து வெட்டும் ஒரு காரணமாயிருந்தது. இரத்தம் சிந்தாமல் வலியெடுக்காமல் அவர்கள் ஆயுதத்தால் வெட்டுவதை சொல்லியே உம்மா பயம் காட்டுவா.போதாக்குறைக்கு வாசலில் வந்து நிற்கும் பாவா   “ஹேல்" என்று ஒரு சத்தம் வைத்து ரபானை உலுக்கி ஓங்கி அடிப்பார். இதயம் சாய்வுத்தம்பி மோதினார் அறுத்துப்போடும் கோழிபோல் கிடந்து துடிக்கும்.

அக்கரைப்பற்று நண்பர் அப்துல் ஹமீது மௌலவி மேடையில் ஏறி இந்த பாவாக்களின் வித்தைகளை புட்டு புட்டாக அவிழ்த்து விட்ட போது அட நம்மள ஏமாத்திட்டாங்கய்யா என்று மனம் வெட்கிப்போனது. 

காலவோட்டத்தில் பாவாமார்களின் சந்ததிகள் கல்வி கற்று பதவிகளில் அமர்ந்து கொள்ள சிலர் வியாபாரம், கைத்தொழில் என்று வளர்ந்து வர பாவாமார்களின் பராம்பரியங்கள் மங்கிப்போயின. சஹருக்கு எழுப்புவதற்கு பாவாவின் ரபானுக்கு முதல் செல்போனின் அலாறம் அலறுகிறது.விடியவிடிய தூங்காமல் இருக்கும் எப்.எம்களில் ரீங்காரமிடும் விசேட சஹர் நிகழ்ச்சிகள் மக்களை அடித்து எழுப்பி விடும்.

தராவீஹ் தொழுகைக்கு பள்ளிக்குப்போகும் இளைஞர்களின் வீடு திரும்புதல் பெரும்பாலும் சஹர் நேரத்தில்தான் நடக்கும் . கொழும்பில் புதுக்கடைபோல் கிராமங்களிலும் ரமழான் கடைகள் நோன்பு காலத்தில் களைகட்டும். சும்மா கிடக்கும் வீதியில் கிரிக்கெட்டும் பந்துமாக இளைஞர்கள் இபாதத்துக்களில் ஈடுபட்டு தூங்குபவர்களின் கண்ணியமான தூக்கத்தை கலைத்தபடி இருப்பர். சஹர் வரைக்கும் தெருவில் நின்றபடி வீட்டுக்குள் இருக்கும் யுவதிகளுக்கு இரவு வணக்கமாக செல் போனில் விளக்கம் நடக்கும்.

 நோன்பு காலங்கள் பெரும்பாலும் தலை நகரிலும் கிராமத்திலும் இப்படித்தான் கழியும். பாவாமார்கள் இக்காலத்தில் ரபானை தூக்கிக்கொண்டு  லாந்தருடன் வந்தால் ஓட ஓட விரட்டும் கூட்டம் முளைத்து விட்டது.

எங்கள் தேசம் 229                                                                          ஊஞ்சல் இன்னும் ஆடும்.....


  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...