Thursday 17 May 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

பகுதி-14

அவர்களின் சாமியாட்டம் என்பது திகில் நிறைந்த அனுபவத்தை தந்தது.பூசாரி சாமியாட்டம் நிகழும் இடத்தில் நின்றபடி மந்திரகளை உச்சரிப்பார்.உடுக்கை ஒலிகள் ஓங்கி ஒலிக்கும்.காடே அதிரும்.பறவைகள் கீச்சிட்டபடி மரத்திலிருந்து சிறகடித்துப் பறக்கும்.வெற்றுடம்புடன் நிற்கும் பூசாரியின் மேனியெங்கும் திருநூற்றை அள்ளிப்பூசுவார்கள்.

சாமியாட்டம் நிகழ்வது பெரும்பாலும் ஆலமரத்தின் கீழ்தான்.நெருப்புக்கங்குகள் மரத்தைச்சூழவும் தகித்துச்சுழழும். உடுக்கை ஒலி வெறிபிடித்து உயர உயர பூசாரி நிதானமிழந்து ஆடத்தொடங்குவார்.தலையை சிலுப்பி அவர் ஆடத்தொடங்க கூட்டம் ஆவென்று வாய் பிழந்து நிற்கும். அவரைச்சுற்றி ஆனால் சற்று கைதொடும் தூரத்தில் ஆண்களும் பெண்களும் வட்டமிட்டு நிற்பார்கள். நானும் இந்த நெரிசலுக்குள் நுழைந்து ஒரு ஆட்டுக்குட்டிபோல் தலையை மட்டும் நீட்டி சாமியாட்டத்தை பார்க்கத் தொடங்கினேன்.

சாச்சா பின்வரிசையில் நின்றபடி கடையில் ஒரு கண்ணும் சாமியில் ஒரு கண்ணுமாக இருப்பார்.
பூசாரி திடீரென கூவென்று அலறினார். அவர் காலடியில் கிடந்த பாணிச்சேவல் அச்சத்தால் கொக்..கொக் என்றது. 'தாடா ..தாடா ……' என்றார். அவர் குரல் இடிபோல் முழங்கியது.கண்கள் பெரிதாகி வட்டமிட்டு ஒரு மிருகம் போல் இரையை கவ்வும் வெறியுடன்அலைந்தன.  

கூட்டம் அச்சத்தில் உறைந்திருந்தது. உதவியாளர்கள் பூசாரியை இழுத்துப்பிடித்தபடி நிற்க, கற்பூர வெளிச்சத்தில் சேவலின் தலையிலிருந்து இரத்தம் சொட்டுவதை நடுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறு பிள்ளைகளும் பெண்களும் சற்று மிரண்டு அவசத்துடன் விலகினர்.பூசாரி கோழியை கையில் எடுத்து பச்சை இரத்தத்தை முகர்ந்தபின் கோழியை பிடித்து ஆலமரத்திற்கப்பால் வீசினார். ம்..ம்.. என்று சதா கர்ஜித்தபடி இருந்தார்.

ஓவ்வொருவராக அவர் முன் வந்து வணங்கி காணாமல் போன பொருட்கள் பற்றி கேட்கத் தொடங்கினர். கேள்வி கேட்க எனக்கும் ஆசையாக இருந்தது. வாப்பா ஆசையாக வாங்கி த்தந்த புதுச் செருப்பு வெள்ளிக்கிழமை பள்ளியில் வைத்து காணாமல் போய்விட்டது,களிசனில் மறைத்து வைத்த ஐம்பது சதமும், காணாமல் போன மர்மம் தெரியாது. பூசாரியிடம் கேட்டால் என்ன?

பிறகு ஒரு பயம் நெஞ்சுக்குள் குமிழிபோல் நடுங்க வைத்தது. எனது காணாமல் போன பொருட்களை கேட்கப்போய் நான் யாருக்கும் தெரியாமல் எடுத்த பொருட்களையும் பூசாரி சொல்லி அதையெல்லாம் குடுடா என்றால் நான் எங்கே போக?

வாப்பாவிடம் ஒரு எவரெடி டோர்ச் இருந்தது. அதன் பின் பக்க மூடி சரியாக மூடுப்படாது என்பதனால் ஒரு ரூபா அல்லது ஐம்பது சதக்குற்றியை பெற்றரியின் பின் பக்கம் வைத்து டோர்ச்சின் மூடியில் அண்டுமாற்போல் இறுக மூடுவார்.இந்த தங்க மலை இரகசியம் எனக்கு தெரிய வாப்பாவின் டோர்ச்சில் அடிக்கடி ஒரு ரூபா ஐம்பது சத நாணயங்கள் காணாமல் போகத்தொடங்கின. இன்று வரை பிச்சைக்காரர்களுக்கு உம்மாதான் சில்லரை இல்லாததால் அந்த குற்றிகளை கொடுத்திருப்பா என்று அவர் நினைத்துக் கொண்டிருப்பதால் பூசாரியிடம் ஏன் மாட்டுப்படவேண்டும்.

தவிர யாசீன் பாவாட தோட்டத்தில் அத்துமீறி பறித்த முந்திரி மா,விழாப்பழங்களின் சுவை வேறு கேட்க விடாமல் அரணாக தொண்டைக்குள் வந்து குறுக்காக நின்றது. பூசாரியை பார்க்காமலேலே நழுவி சாச்சாவிடம் வந்து நின்றேன்.யாசீன் பாவாவின் கையில் இருக்கும் காய்ந்த மூங்கில் தடியிலும் அச்சம் இருந்தது.

இன்றைக்கு அந்த பூசாரி இருந்திருந்தால் சாமியாடச்சொல்லி கிடாய் வெட்டிக்கொடுத்து காணாமல் போன பலரைப்பற்றி கேட்டிருக்கலாம். கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் காணாமல் போனோரின் புகைப்படங்களுடன் கண்ணீர் சிந்தி நிற்கும் பெண்களின் நெஞ்சில் குடம் குடமாய் பால் வார்த்திருக்கலாம். அமெரிக்காவின் சீல் படையினர் பாகிஸ்தானிலிருந்து கவர்ந்தெடுத்துச் சென்ற உசாமா பின்லேடனின் ஜனாசா எங்கிருக்கின்றது என்பதையும் வன்னியில் இறுதிக்கட்டப்போரில் கண்டுடெடுத்த தங்கக்குவியல்கள் யாருடைய கையில் இருக்கின்றது என்பதையும் கண்டுபிடித்திருக்கலாம். 

இது தவிர எதிர்கட்சிகளின் மண்டைக்குள் சீகிரிய குழவிகள் போல் சதா கொட்டிக்கொண்டிருக்கும் கே.பி என்ற புலிகளின் சர்வதேச தொடர்பாளர் இலங்கையில் எங்கே இருக்கின்றார் என்பதையும் அவர் ஓடவிட்ட கப்பல்கள் எங்கே என்பதையும் கண்டுபிடித்திருக்கலாம். அந்தப்பூசாரியும் சாமியாட்டமும் இருந்திருந்தால் நிறைய கேள்விகள் என்னிடம் இருக்கின்றது அவற்றையெல்லாம் அச்சமின்றி கேட்டிருக்கலாம். குறிப்பாக கிறீஸ் பூதங்களை ஏவி விட்டு வயிற்றைக்கலக்கியவர்களையும் கண்டுபிடித்திருக்கலாம். காலம் வெகு தூரம் எல்லோரையும் தொலைத்து விட்டு வேடிக்கை பார்க்கும் அழகே தனி அழகு.

நானும் இப்படித்தான் ஒரு நாள் காணாமல் போன ஒரு இள நெஞ்சின் ஆசையை கண்டுபிடித்துக்கொடுத்தேன். உறவினர் ஒருவரின் வீட்டிந்குப்போயிருந்தேன். புதினான்கு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிள்ளையைச்சூழ சனங்கள் நின்றிருந்தனர்.என்னவென்றேன்.இவக்கு ஜின் பிடிச்சிட்டு என்றனர். ஜின்னாவது மண்ணாவது விலகுங்கள் என்றேன். பிள்ளை வானப் பார்த்தபடி படுத்திருந்தாள். கண்களை அகலத்திறந்தபடி அவள் படுக்கும் தோரணை எனக்குள் சில முடிவுகளை எடுக்க தோதாக இருந்தது.


கூட்டத்தை அப்புறப்படுத்தி விட்டு எல்லோரும் சற்று அப்பால் போங்கள் நான் ஜின்னுடன் பேசப்பபோகின்றேன் என்றேன். பிள்ளையிடம் தனிந்த குரலில் ஜின்னே உனக்கு என்ன வேண்டும் கேள். பேசாமல் இருந்தால் அடிப்பேன் என்றேன். எனது கையில் பிரம்பும் இருந்தது.பிள்ளை முரண்பிடிப்பது தெரிந்தது. பிரம்பை ஆத்திரத்துடன் ஓங்கினேன். அடிக்கும் எண்ணமில்லை. பிள்ளை மெல்லிய குரலில் கீச்சிட்டது. எனக்கு அப்பிள் பழம் தாருங்கள் போய்விடுகிறேன். 

சரி நான் அப்பிள் வாங்கித்தருகின்றேன்.எழும்பு என்றேன். பிள்ளை எழும்பி தண்ணீர் வாங்கி குடித்து விட்டு எதுவும் நடவாதது போல் சென்றது.குடும்பத்தின் வறுமை.நீண்ட நாட்களாக அப்பிள் சாப்பிடும் ஆசை.இந்த உத்தியை கையாள வைத்துள்ளதே தவிர ஜின்னுமில்ல பேயுமல்ல. ஜின் வைத்தியத்தை தொழிலாக செய்யும் பலர் இந்த வித்தைகளை தெரிந்துதான் கொள்ளையிட்டு வருகின்றார்கள்.

நான் சாச்சாவிடம் போய் அண்டிக்கொண்டதும் சாமியாட்டம் முடியவும் சரியாக இருந்தது.பூசாரி இயல்பாக எழுந்து புதுக்குடத்திலிருந்த தண்ணீரை குடித்து விட்டு நடக்கத்தொடங்கினார். அவர் வீசியெறிந்த சேவலை நரி தூக்கிச்செல்லாமல் இருக்க அவர் வரம் கேட்டிருக்க வேண்டும். நான் கடைவேலைகளை கவனிக்கத்தொடங்கினேன்.

ஊஞ்சல் இன்னும் ஆடும் .........
எங்கள் தேசம்: 221



  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...