Wednesday 10 July 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்.

                                                                          43

 முஸ்லிம் குரல் பத்திரிகை பௌசர் அவர்களின் முயச்சியினால் வந்து கொண்டிருந்தது.

அப்போது இலங்கை அரசிற்கும் புலிகளுக்கு மிடையே சமாதான ஒப்பந்தம் நிகழ்ந்தது. இலங்கை அரசுடன் பேசிக் கோண்டே விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் மீதான மோசமான அடக்குமுறையை பிரயோகித்து வந்த காலம். 

முஸ்லிம் காங்கிரஸ் நோர்வேயுடன் சேர்ந்து கொண்டு விடுதலைப் புலிகளின் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையை மௌனத்துடன் பார்த்து கொண்டிருந்தது.

 முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் அடக்குமுறையை எதிர்து முஸ்லிம் காங்கிரஸால் பேச முடியவில்லை. அந்த காலகட்டதில் முஸ்லிம்களின் குரலாக முஸ்லிம் குரல் பத்திரிகை துணிச்சலுடன் பேசியது.

வாழைச்சேனை பிரதேசத்தில் சமாதான ஒப்பந்த காலகட்டத்தில் முஸ்லிம்களை கடத்தி எரித்து கொள்ளுமளவிற்கு நிலைமை இருந்தது.

இது குறித்து சென்ற பகுதிகளில் விரிவாக எழுதியிருக்கின்றேன். முஸ்லிம் குரல் இந்த அடக்குமுறையை எதிர்த்து துணிச்சலாக குரல் கொடுத்தது. ரஷ்மி. அப்துல் போன்றவர்களுடன் நானும் பத்திரிகைக்கு பங்களித்து வந்திருக்கிறேன்.

கொழும்பில் பத்திரிகைக் காரியாலயம் ஆறு பேருக்கு மேல் முழு நேர பணியாளர்கள், வாடகை, மாதந்த கொடுப்பனவு, அச்சக செலவு என மோசமான நெருக்கடிகளை சந்தித்து பத்திரிகை வந்து கொண்டிருந்தது.

 இரு தடவை என நினைக்கிறேன். பத்திரிகை அச்சிட்ட அச்சகத்திற்கு பணம் கொடுக்க நானும் எனது காரியாலய பணத்தினை கடனாக கொடுத்து உதவி இருக்கிறேன்

முஸ்லிம் குரலை நடத்த முடியாத நிதி நெருக்கடியால் அப்பத்திரிகை நின்று போனது.வார இதழாக வந்து  இரு வார இதழாக வந்து .. இறுதியில் வராமலே போனது.

 இலங்கை முஸ்லிம்களின் பத்திரிகை வரலாற்றில் அப்பத்திரிகைக்கு மறுக்க முடியாத முக்கியத்துவம் உண்டு.

இக்காலகட்டத்தில்தால் அரசிற்கும் புலிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் இடம் மறுக்கப்பட்டது முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லை என கருத்துக்கள் எழுந்தன.

முஸ்லிம்ககளுக்கான தனித்தரப்பை வலியுறுத்தியும் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்கிற அடிப்படையை முன்வைத்தும் கோட்பாட்டு ரிதியாக முஸ்லிம்களுக்குள் இருந்து ஒரு பத்திரிகை வருவது முக்கியம் எனக் கருதியதால் சுயம் பத்திரிகை வந்தது. இப்பத்திரிகையில் நான் அப்துல்,பௌசர், முஹ்சீன்,சிராஜ்.ஆத்மா, பாரிஸ்,ரஷ்மி ஆகியோர் இருந்தோம்.
பொரல்லையில் தமிழ் பத்திரிகை மட்டும்தான் கிடைக்கும்.நூல்கள் கிடைக்காது. 103 பஸ் எடுத்தால் மருதானைக்கு வந்து வாசிகசாலையை தேடலாம் என்ற உதிப்பில் ஒரு சனிக்கிழமை மாலை மருதானைக்கு வந்தேன். 

கொடகே புத்தக நிலையம் என்ற பெயர் பலகையைக்கண்டு மலைத்து உள்ளே சென்றேன்.அனைத்தும் சிங்கள மொழி மூல நூல்கள்.இன்று கொடகே புக் எம்போரியம் சிறந்த தமிழ் நூல்களை தெரிவு செய்து வருடாந்தம் விருது வழங்குவதுடன்,தமிழ் மொழியிலான நூல்களின் தொகுதியையும் விற்பனைக்கு வைத்துள்ளது.

இந்த விருது தெரிவிலும் இலக்கியப்பெருச்சாளிகளின் கை வரிசை நிகழ்வதாக குற்றச்சாட்டும் இருக்கின்றது.

நேரே பொலிஸ் நிலையப் பக்கமாக நடந்து வந்தபோது சிலர் தீவிரமாகவே வாசிப்பில் இருப்பதைக்கண்டு அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.ஆர்வ மேலீட்டால் உள்ளே நுழைந்தேன்.

சுற்றும் முற்றும் பார்க்கவில்லை.யாரும் புத்தகம் படிப்பதைக்கண்டால் போதும் வாசிப்பவனின் மனம் பரபரக்க ஆரம்பித்து விடும்.எதிரே இருக்கும் முகம் தெரியாத சின்னக்குழந்தையுடன் அதன் அம்மாவுக்குத்தெரியாமல் கண்களால்,கைகளால் ஜாடைகாட்டி சிரிப்பதைப்போல் மனம் இறக்கை கட்ட ஆரம்பித்துவிடும்.
அவ்வாறான மன நிலைதான் அந்த பத்திரிகை விரித்துப்பார்க்கும் இடத்தைக்கண்டதும் ஏற்பட்டது.

பத்திரிகைகள் அதை வாசிக்கும் மனிதர்கள் இவர்களை நோட்டமிட்டுக்கொண்டே புத்தக அலுமாரிகள் உள்ளனவா என்று ஆராய்;ந்தேன்.ஒன்றுமில்லை. எல்லோரும் தீவிரமாக வாசிப்பதில் இருந்தார்கள் அதுவும் ஆங்கிலப்பத்திரிகை. என்னை வியப்புடனும் ஆச்சரியத்துடனும் சில விழிகள் பார்த்து விட்டு வாசிப்பதில் ஆர்வமாய் இருந்தன.

முஸ்லிம்கள் செறிந்து வாழும் மருதானை வாசிகசாலையில் தமிழ் பத்திரிகைக்கு தடையா? பத்திரிகைக்கு செய்தி கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் புலனாய்வு செய்யும் பணியில் இறங்கினேன். ஒருவரை அனுகி இங்க  தமிழ் பத்திரிகை இல்லையா? என்றேன். என்னவோ பியர்,பன்றி இறைச்சியைக்கேட்டு விட்ட மகா குற்றவாளியைப்பார்ப்பதைப்போல் என்னை உச்சி முதல் உள்ளங்கால் வரை அதிசயமாகப்பார்த்தார்.அவர் இதழோரம் எள்ளல் துளி எட்டி நின்று வேடிக்கைகாட்டியது.

என்னை நோக்கி காத்திரமாக ஆனால் மிக இரகசியமாக கத்தினார். மொழி முக்கியமல்ல ‘குதிரையின்ர பெயரை சொல்லுங்க கட்டிடுவோம்’ என்றார்.அப்போதுதான் மேலே திரையில் குதிரைகள் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

பந்தயக்குதிரை நிலையத்திற்கு நுழைந்திருக்கின்றேன்  என்பதை நினைக்கையில் மிகுந்த அவமானமாய் இருந்தது. அவர்கள் வாசிக்கவில்லை தேடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதும் புரிந்தது.நானே என் நிலையை எண்ணி சிரித்துக்கொண்டேன்.

பிற்காலங்களில் குதிரைப்பந்தய கசினோக்களை கடந்து செல்கையில் இதழோரம் முகிழும் புன்னகையை கட்டுப்படுத்த முடிவதில்லை. 2000ம்ஆண்டுக்குப்பின் கொழும்பில் நல்ல புத்தகங்களை படித்துப்பயன் பெற்றேன்.என்பது வேறு விடயம்.

நான் எழுதத்தொடங்கி கொஞ்சம் பெயர் அடிபடத்தொடங்கிய காலம்.சொந்தக்கிராமத்தில் அறிமுகம் இல்லை.படித்ததும் வெளியூரில்.படிப்பு முடிந்து வேலையும் வெளியூரில். பெயர் மட்டும்தான் சனங்களுக்குப் பரிச்சயம். அனேகருக்கு ஆளைத்தெரியாது.

இதனை சாதகமாகப் பயன்படுத்தியவர்களும் உண்டு. வில்லங்கமான எழுத்துக்கள் பிரசுரமாகும் போது மட்டும். 

அவர்கள் கழன்றுவிடுவார்கள்.புலிகள் உச்சத்தில் கோலோச்சிய காலத்தில் புலிகளுக்கெதிரான பதிவுகளை புனைப்பெயரில் அன்றி சொந்தப் பெயரிலேயே எழுதியதால் என் எழுத்துக்கு சொந்தம் கொண்டாடிய பலர் ‘கழுவுற நீருல நழுவுற மீனா’கிப்போனார்கள்.


தொடரும்......


  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...