Thursday 6 January 2011

குருவிக்கூடும் சில குரங்குகளும்.

இதுவல்ல என்னிலம் 
உதிரமும், சதையுமாகி
குருவிச்சிரமமாய் 
புனரமைத்த  வீடு என்னது.

என் மனையோ மழலையின்
சிரிப்புத்ததும்பினது
 சொந்தங்களினதும், நண்பரினதும்
சகவாசம் சுமந்த தலைவாசல் என்னது.

அதனுள் என் பேடையுடன் இரவிலும்,பனி விசிறும் மாலையிலும்
முயங்கிக்கிடந்தேன் தனிமையில்.
என் வீட்டை என்ன செய்திருக்கிறாய் 
கொடியவனே
என் கவிதைகள் மூச்சுத்திணறி சாகும் வரை
தீ-நாக்கால் 
துளாவினாய் என் கூரையின் மேல்
நான் துடித்து நின்றேன்.

நான் பார்த்திருக்க 
என் சதையும், உதிரமும்
கரைந்தோடி உறைந்திற்றேன்  காலடியில்.
என் புறாக்களின்
மாடத்தை நீ-தகர்த்தெறிந்தாய் 
உன் - சாமாதானப்போரால்.

உருகி வழிந்து தரையுடன் உறைந்திருக்கும் 
மெழுகுவர்த்தி சிதைவென 
இதோ என்னிலம்.

கழுதைகள் சயனிக்கவும், நாய்கள் புணரவுமான 
மயானமாக்கினாய்
என்  வீட்டை.
என் பூவலில் 
நீ - கடித்துண்ட மனிதரின்
எலும்புகளை வீசிச்சென்றாய்.

பார் 
என்  வீட்டை
பெருவெளியில்
மழை கரைகிறது.
 வெய்யிலில் கருகிறது.

உன் நண்பர்களின் சப்பாத்தொலியிலும் 
எக்காளச்சிரிப்பிலும் சிறுத்து நிற்கிறது என் வீடு.
இனி எப்போதுமுள்ள 
என் வாழ்க்கையைப்போல.

 2000-06-08 சரிநிகர் 99






  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...