Friday 24 November 2017

கட்டுரை: புதுக்கவிதை- ஒரு வரலாற்றுப்பார்வை




பாரதிக்குப்பிறகு தனி வளர்ச்சி காட்டிய வசன கவிதை சிலரின் முயற்சியோடு குன்றி 1940களுக்கப்பிறகு ஒரு தேக்க நிலையை எய்திருந்தது. பல வருடங்களுக்குப்பின் “எழுத்து”இலக்கிய ஏடு தொடங்கியதும் புதுக்கவிதை புத்துயிர்ப்பும்,புது வேகமும் பெற்று ஓங்கி வளர்ந்தது.

புதுக்கவிதை என்ற பெயர் அனேகருக்கப்பிடிக்காத சொல்.இதன் உருவத்தையும் ,உள்ளடக்கத்தையும் பார்த்துக்குழப்பம் அடைகிறவர்கள் பலர்.
தமிழ்க்கவிதையில் மலர்ச்சி பெற்ற இப்புதுமைக்கு “புதுக்கவிதை” எனும் பெயர் 1960களில்தான் சேர்ந்தது. New poetry, Modern poetry  என்றும் ஆங்கிலத்தில் கூறப்படுவதை ஒட்டி,தமிழில் புதுக்கவிதை என்ற பெயர் இம்முயற்சிக்கு இடப்பட்டது.

எனினும் ஆரம்பத்தில் யாப்பு முறைகளுக்குக்கட்டுப்படாமல் கவிதை உணர்வுகளுக்கு சுதந்திரமான எழுத்து உருவம் கொடுக்கும் இப்படைப்பு முயற்சி வசன கவிதை என்றே அழைக்கப்பட்டது.பின்னர் யாப்பில்லாக்கவிதை,இலகு கவிதை ,கட்டிலடங்காக்கவிதை (Free verse) போன்ற பெயர்களை இது அவ்வப்போது தாங்க நேரிட்டது.

புதுக்கவிதை என்பதில் மிரட்சிக்கோ பரிகாசத்திற்கோ குழப்பத்திற்கோ எதுவும் இடம் இல்லை. முன்பு பழக்கத்தில் இருந்துவருகிற- மரபு ரீதியாக அமைந்த ஒன்றிலிருந்து மாறுபட்டு (அல்லது அதை மீறித்)தோன்றுவது புதுசு.(புதிய) மரபு ரீதியான,யாப்பு இலக்கணத்தோடு ஒட்டிய கவிதைகளிலிருந்து மாறுபடும் இக்கவிதைப்படைப்பு புதுக்கவிதை எனப் பெயர் பெற்றது பொருத்தமே ஆகும். பாரதி தனது எல்லாக்கவிதைகளையும் புதுக்கவிதை என்றே குறிப்பிடுகிறார்.

சுவை புதிது,பொருள் புதிது,வளம் புதிது,
சொற் புதிது,சோதிமிக்க
நவ கவிதை” 

என்று பாரதியார் தன் கவிதைகளைப்பற்றிப்பெருமையோடு பேசுகிறார்.
பாரதிக்குப்பிறகு புதுக்கவிதை முயற்சியில் ஆர்வத்துடன் முதன் முதலாக ஈடுபட்டவர் ந.பிச்சமூர்த்திதான்.

“சம்பிரதாயமான யாப்பு முறைகளுக்கு உட்படாமல்  கவிதையைக்காணும் புதுக்கவிதை முயற்சிக்கு யாப்பு மரபே கண்டிராத வகையில் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் எழுதிய ‘புல்லின் இதழ்கள்’ என்ற கவிதைத் தொகுப்புத்தான் வித்திட்டது.அதைப்படித்த போது கவிதையின் ஊற்றுக்கண் எனக்குத்தெரிந்தது.பின்னர் பாரதியின் வசன கவிதையை படிக்க நேர்ந்தது.  என் கருத்து வலுவடைந்தது.இவற்றின் விளைவாக என் உணர்ச்சிப்போக்கில் கவிதைகளை எழுதினேன் என ந.பிச்சமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு அதற்கும் அணி அலங்காரம் உண்டு. அதற்கும் தளையுண்டு, மோனையுண்டு. செய்யுள் எழுதுவதைக்காட்டிலும்  வசன கவிதை எழுதி வெற்றி பெறுவது சிரமம். செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைக்கும் ஒர் இசை இன்பத்தை ஊட்டி விடும். ஆனால் வசன கவிதையின் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் சொல்லில் தட்டினால்தான் கொஞ்சமாவது கவர்ச்சி கொடுக்கும்.சொல்லில் கவிதையின் அம்சம் இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது.வெறும் வசனம்தான்.

இந்த முறையில் வசன கவிதையைத்தமிழில் முதன் முதலாக கையாண்டவர் சுப்ரமணிய பாரதிதான். ‘காட்சிகள்’ என்று அவர் எழுதியிருக்கும் சித்திரங்களைப்படிப்பவர்கள் வசனம் எதுவொன்றும் வசன கவிதை எதுவென்றும் தெளிவாக அறியலாம்.எட்வெட் கார்ட்பெண்டரும்,வால்ட்வில்ட்மனும் ஆங்கிலத்தில் பெற்ற வெற்றிக்குப்பிறகு பாரதியே தமிழில் வெற்றி பெற்றான் என்பது மறுக்கவியலா யதார்த்தம்.

கவிதைக்கும் வசனத்திற்கும் உள்ள வித்தியாசம் உருவத்தினாலேயே ஏற்படுகின்றது என்பது பலரின் கருத்து. அக்கருத்தை மறுதலிக்கிறது எதிர்க்கட்சி.தத்துவ ரீதியாகப்பார்த்தால் மனிதனிடம் பல படிகள் இருக்கின்றன. ஊண்,உறக்கம்,புணர்ச்சி இவை ஒரு படியைச்சார்ந்தவை. உடல் அவைகளுக்கு வேர்.இவைகளைப்பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவது உள்ளம்.அது ஒரு படி.

இச்செய்கைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட உலக இரகசியத்தை அறியத்துடித்து நிற்கும்  அறிவு வழி ஒன்று உண்டு.உணர்ச்சி வழியும் ஒன்றுண்டு.வசனத்தின் வழி அறிவு நிலை சார்ந்தது.கவிதையின் தர்க்கப்பாதை உணர்விலேயே ஒடும். அறிவின் வரம்பை மீறி வசனம் போகுமானால் அந்த நிமிசத்திலேயே அது கவிதையாகி விட்டது என்று நிச்சயிக்கலாம். 

“தீ இனிது” என்று பாரதி சொல்கிறான்.இனிது என்ற சொல் ருசியைசார்ந்தது. ‘தீ சுடும்’ என்பது வசனம். தீ இனிது என்பது கவிதை.உவமைப்போல் உணர்விடம் பேசுமானால் கவிதை பிறந்து விடும்.
இதனை கம்பனிடமும் காணலாம்.

“அமுதம் நிறைந்த பொற்கலசம்
இருந்தது இடை வந்து எழுந்த தென
எழுந்த தாழி வெண் திங்கள்.”

இதை வசனம் என்று நோக்கினால் பொற் கலசம் கடலில் மிதக்குமோ ? நினைத்த போது கடலில் அது எழுந்து வருமோ என்ற ஐயங்கள் எழும்.இந்த வார்த்தைகள் உணர்ச்சியின் வெளியீடு. உணர்வின் உலகிற்கு சமர்ப்பிக்கப்பட்டவை. ‘கடலில் முழுமதி எழும்பொழுது உணர்வு வயப்பட்ட மனிதனின் மகிழ்ச்சிப்பெருக்கைத்தான் கம்பன் அப்படிச்சொல்கிறான்.’ 

-2-
புதுப்புது உருவங்களை தோற்றுவித்தல் புதிதல்ல.இதுவரை வெளி வந்த சந்தப்பாடல்கள் எத்தனையோ புதிய உருவங்களைத்தந்துள்ளன.எனவே புதிய உருவத்தில் எழுதுவதும் மரபானதே! ஒரே படைப்பில் பல்வகை உருவங்களைப்புகுத்துவதும் புதிதல்ல . இணைக்குறள்,ஆசிரியப்பா,வஞ்சி விருத்தம்,வெண்டுறை,கட்டளைக்கலித்துறை,என்னும் பல உருவங்களால் இயல்வது கலம்பகம். எனவே இதுவும் மரபானதே! இக்கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும் போது புதுக்கவிதை மரபானதே!

ஒரு மொழியோ ஒரு காலமோ இலக்கியச்சிறப்பு மிக்கதாக ஆக வேண்டும் என்றால் அந்த மொழியிலோ காலத்திலோ நிறைய செய்யுள் தோன்றிப்பயனில்லை.நிறைய பாடல் தோன்றியும் பயனில்லை.நிறைய கவிதை தோன்ற வேண்டும்.ஏனென்றால் பாவகை மூன்றிலும் தலை சிறந்தது கவிதைதான்.

இன்று கவிதை வடிவம் எப்படி அமையவேண்டும் என்ற வினா எழுகிறது.உணர்வை ஊட்டும் ஒரு நிகழ்ச்சியானது அந்த நிகழ்ச்சி பொருட்களால் இயன்ற காரணத்தால் ஒரு வகை ஒலி நயம் கொண்டே இருக்கும் இந்த ஒலி நயமானது மிக நுட்பமாக இருப்பினும் அதை கவிஞன் மனம் கிரகித்துக்கொள்ளும். இதனால் உணர்வு வெளிப்பாட்டில் இவ்வொலி நயமும் இணைந்து கொள்கிறது. 

இவ்வொலி ஓட்டமே புதுக்கவிதையின் ஒலி ஒழுங்காக அமைகிறது எனலாம். செய்யுள் நடையானது ஓசையோடிருக்கும் காரணத்தால் படிப்பவன் உள்ளத்தில் பரவசத்தை ஏற்படுத்தும் சக்தி படைத்ததாக இருக்கிறது. இதற்கீடான மேலான சக்தியை புதுக்கவிதை எப்படி பெறுகிறது எனவும் நோக்க வேண்டும். 

விழிப்புலப்படிமங்கள் பழைய நினைவோவியங்கள் குறியீடுகள் மூலம் உணர்வு வெளிப்பாடு நிகழ்ந்து படிப்பவன் மனதில் பரவசத்தை உண்டாக்குகிறது.படித்து முடித்த பின்னரும் மனக்கண்முன் நிலைபெற்று நினைதொரு நயம் பயப்பது,நவில்தொறும் நயம் பயப்பது யாப்பு வழிக்கவிதை, நினைதொறும் நயம் பயப்பது புது வழிக்கவிதை
சொற்களைக்கையாள்வதில் புதிய முறைகளை ஆக்கிக்கொண்டால்தான் இன்று கவிதை வளர முடியும்,வாழ முடியும்.

இன்றை பிரச்சினைகளை தீர்க்கும்பணியில் கவிதை ஈடுபடாத வரை புதுக்கவிதையும் முழுமைபெற முடியாது. கருத்து இன்னதென்று புலப்படாத வெறும்படிமப்படையல்கள் பெரும் புதிராக அமைந்து சமுதாயத்திற்கு பெரும் புதிராக அமைந்து விடும்.

பழைய உவமானங்கள், உருவகங்கள்,குறியீடுகள்,படிமங்கள் ஆகியவற்றை கடன் பெற்று கவிதை அதன் சீர்குலைவையே எடுத்துக்காட்டும். சமுதாயத்தில் அவ்வப்போது நிகழும் செயல்களும் , நினைவுகளும் பேச்சு மொழியுமே கவிஞனுக்கு கை கொடுக்க வேண்டும்.

கவிதை கனவு மாத்திரமல்ல,கனவுப்பார்வை மாத்திரமல்ல.அது கனவு காணும் மனசின் வாழ்வு.
மனித ஜாதியின் வாழ்க்கை தனக்குத்தானே வகுத்துக்கொண்ட சட்டதிட்டங்களை மீறி, அணையுடைத்து வெள்ளம் போலப்பெருகி ஓடிக்கொண்டு வருகிறது. மேலும் பெருக்கெடுத்து ஓடப்பார்க்கிறது. மனிதன் தனக்குள் ஏற்படுத்திக்கொண்ட கட்டுப்பாடுகள்  வழி வந்த மரபுகள் எல்லாம் ஒவ்வொன்றாக தகர்ந்து கொண்டிருக்கின்றன.தன் சரித்திரத்திலேயே அனுபவத்தறியாத சுதந்திரத்தைப்பல்வேறு துறைகளில் இன்று மனிதன் அனுபவித்துக்கொண்டிருக்கின்றான். அதில் ஒரு அலை புதுக்கவிதை.

மனிதன் புற உலகத்தையும் பிற மனிதர்களின் செயல்களையும் கனவுப்பார்வையாகக்கவித்தது போதாதென்று தன் அகத்தூடும் அப்பார்;வையை பிரயோகிக்கத்தொடங்கியிருக்கின்றான். அறிவுலகத்தில் இதை செய்து கொண்டு வருவதைப்போல கலையுலகத்திலும் செய்யப்பார்க்கிறான்.

 இவ்வாறு செய்யும் போது,சில சமயம் பழைய முறைகள் தடையாக இருப்பதாலோ அல்லது அவைகளால் இவனுக்கு தேவையானபடி செய்ய இயலாமல் போவதாகவோ உணர்கிறான். புது வழிகளை வகுத்துக்கொள்ளப்பார்க்கிறான். இதில் ஒர் அலைதான் புதுக்கவிதை.

பல பக்கங்கள் கொண்ட  வைரக்கல் போன்றது புதுக்கவிதை. ஒரு பக்கம் புது மாதிரியான அழகு. வியக்கும் அழகு. ஒரு பக்கம் ஏக்கம், மனமுறிவு, பெருமூச்சு காதல், தத்துவம், கோபம், சந்தேகம், அறைகூவல்,சமகால விமர்சனங்கள், தன் மனத்தையே தேர்ந்தெடுத்து ஆராயும் நேர்மை, இப்படி பல பக்கங்கள் உண்டு. சுருங்கச்சொன்னால் இன்று நம்மிடயே இருக்கும் உணர்ச்சிகள் அனைத்தின் பிரதிப்பையும் நாம் புதுக்கவிதையில் காண்கிறோம்.

வரைமுறையற்ற தன்மை, நூதனப்படிமங்கள், மயக்க நிலையையும் வெளிப்படுத்தும் நிலை,கொச்சை மொழிப்பிரயோகங்கள் எப்படி புதுக்கவிதைக்கு வலுவேற்றுகின்றனவோ, அதைப்போல அவை புதுக்கவிதை பலவீனப்படுத்தும் சாதனங்களாவும் அமைவதற்குச் சந்தர்ப்பங்கள் உண்டு என்பதை உணர்ந்து கவிஞன் விழிப்போடு இருக்க வேண்டும்.

இவ்வாறு எழுதப்பட்டுள்ள கவிதைகளில் பல வடிவங்களில் உள்ள கவிதைகள் காணப்படுகின்றன.முக்கியமாக கருத்து எதையும் சொல்லாத வேடிக்கை எழுத்துக்கள். குழப்பம் உண்டாக்குபவை.எளிதில்புரிந்து கொள்ள முடியாதவை. இரு பொருள் கொண்டவை, நடப்புப்பாங்கானவை. கனவுகள் மன வக்கிரங்களை உணர்த்துபவை போன்றவை.

புதுக்கவிதைக்கு கிடைத்த வரவேற்பையும்,புதுக்கவிதை என்று எழுதப்பட்ட எதையும்  பிரசுரிக்கத்தயாராக இருக்கின்ற பத்திரிகைகளின் போக்கையும் கண்டவர்கள் எதையாவது எழுதி எப்படியாவது அச்சில் தங்கள் பெயரைப்பார்த்து விட வேண்டும் என்ற ஆசையும், அரிப்பும் கொண்டவர்கள் மூன்று வரிகளும் நான்கு வரிகளும் ஒரு சில வரிகளும் எழுதி சுலபத்திலேயே பெயரும் கவனிப்பும் பெற்றுவிட முனைந்தார்கள்.சிரமமும், பயிற்சியும் பாடுபடலும் இல்லாமலே         ‘எழுத்தாளர்’ என்ற கீர்த்தியை அடைந்து விட விரும்பியவர்களுக்கும்  புதுக்கவிதை எழுதுவது லட்சியப்போக்கு சுலப மார்க்கமாகத் தோன்றியது. கவிதைகளில் ஆங்கிலச்சொற்களையும், வார்த்தை அலங்காரங்களையும் இணைத்து கவிதை என்ற பெயரில்  கோமாளித்தனம் செய்தனர்.

இதற்கு மின்னல் என்ற கவிதை ஒரு பதச்சான்று
‘……பூமியெனும் காதலி
மழையெனும் Shower ல்
குளிப்பது கண்டு
வானமெனும் காதலன்
மின்னலே கடயளா டiபாவ ஆக
‘கிளிக்’ என்றே ஒரு flash light  எடுத்தான்.”

சாதரண நடப்புக்களையும் சந்தேகங்களையும் சில பிரச்சினைகளையும் உரை நடையாக நேரிடையாக எழுதாமல் வார்த்தைக்கு கீழ் வாhத்தையாக அடுக்கி ஒரே வாக்கியத்தை “புதுக்கவிதை”யாகக்காட்ட முயல்கிற வேலைகளும் நடைபெற்றுள்ளன.

புதுமையாக எழுத வேண்டும் கருத்து -கற்பனை –அழகு ஆழம் முதலியன அமையக்கவிதை எழுத வேண்டும் என்ற உணர்வு பத்திரிகைகளுக்கு கவிதை எழுதும் அனேகரிடம்  இல்லை.நாமும் கவிதை எழுதுகிறோம். நம் பெயரும் அச்சில் வர வேண்டும். என்ற எண்ணத்துடனேயே மிகப்பலர் எழுதுகிறார்கள். முன்பு பலர் எழுதிய விடயங்களையே திரும்பத்திரும்ப பலரும் எழுதுகின்றார்களே தவிர புதிதாக சிந்திக்க தவறிவிடுகிறார்கள். 

சாரமற்ற உணர்ச்சியற்ற உரை நடையிலேயே கவிதைகள் வருகின்றன. அவை கவிதை என்று சில பத்திரிகைகளால் அடையாளமிடப்படுவதுதான் வேதனையும் வேடிக்கையும்.
இதனால் கவிதைக்கலை ஒரு தேக்க நிலையை அடைந்து விட்டது போல் தெரிகிறது.


புதுக்கவிதையை பாதிக்கும் காரணிகள் பல :

முன்னொரு கால் பத்திரிகையுலகின் வேண்டாத பெண்டாட்டியாக இருந்து வந்த புதுக்கவிதை இன்று ‘இடம் நிரப்பி’யின் இடத்திற்கு இறங்கி விட்டமை.
புதுக்கவிதை மொழி பெயர்ப்பில் வரும் பொழுது கவித்துவ வீர்யத்தை இழந்து மூலக்கவிஞனின் உள்ளடக்கத்தை மட்டுமே வாக்கிய அமைப்பில் பேணி வருதல் புதுக்கவிதைப்படைப்பாளியின் வெளியீட்டு நிலை அதுவெனக்கொள்ளும் மயக்கம். அவ்வழியே தம் கவியனுபவங்களையும் வெளியிட முயலுதல்.

ஓவ்வொரு காலகட்டத்திலும் மேனாடுகளில் அல்லது தாய்ட்டில் உச்ச நிலை பெறும் அரசியல்,பொருளாதார சமூக நடத்தைகளும் அவற்றினடியாக எழும் தத்துவப்பார்வைகளும் அவர் தம் கவிதைகளில் இடம் பெற்றிருக்கும். அவற்றை தற்போது தமிழில் படிப்போர் அக்கவிதைகள் எழுந்த நாடுகள்-காலங்கள் என்பவற்றை மறந்து விட்டுப் படிப்பதால் தமக்கும் தமது வாழ் நாள் அனுபவங்களுக்கும் இக்கவிதைகளுக்கும் இடையில் பொருத்தப்பாடு ஏற்படாமை.

எனினும் இவற்றையெல்லாம் மீறி தமிழ்க்கவிதை வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.மெது மெதுவாக சில நல்ல கவிதைகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன என்ற வகையில் கவிதைகளை நேசிப்போர் ஆறுதலடையடைவோம்.



உசாத்துணை நூல்கள்:

புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும்- வல்லிக்கண்ணன்
‘கவிதை’ இதழ்கள் 1994 ஆனி-ஆடி,ஆவணி- புரட்டாதி,ஐப்பசி-கார்த்திகை 
அ.யேசுராசா


நன்றி : 
தமிழ் நயம் இலக்கிய சஞ்சிகை
கொழும்பு ரோயல் கல்லூரி 125 வது கலைவிழா சிறப்பு மலரில் பிரசுரம் பெற்றது 


No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...