Sunday 21 July 2013

பெண்ணியாவின் 'என் கவிதைக்கு எதிர்த்தல் என்று பெயர் வை '


லஸ்தீன கவி மஹ்மூத் தர்வீசின் கவிதைகளில் மிகைத்து நிற்கும் மூர்க்கம் போல் பெண்ணியாவின் கவிதைத்தொகுதியின் பெயர் அதிர வைக்கின்றது.

1994லிருந்து எழுதத்தொடங்கியவர் பெண்ணியா. சரிநிகரில் அவர் கவிதைகளை படித்த முன் அனுபவம். அதிகம் எழுதாவிட்டாலும் குறித்த காலப்பகுதியில் சில வீச்சான கவிதைகளை எழுதியவர்.

கவிதையின் மொழி ஆளுகை ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே முரண்பட்ட உணர்வுகளால் தனித்து நிற்கிறது. பெண் மொழி என சுயமாய் அடையாளப்படுத்தலுக்கும் இஃதோர் காரணமெனில் மிமையல்ல. 

ஆணின் மொழிக்குள் சிக்குப்படாத பல சூக்கும வலிகளையும், மௌன விசும்பல்களையும் சாசுவதப்படுத்தும் வசீகரம் கொண்டது பெண் மொழி. இரு பாலாருக்குமிடையான பொதுப்பண்புகள் உணர்வுகள் இங்கு விதி விலக்கு.
பெண்ணியாவின் கவிதைகளும் பெண் மனம் சார்ந்த பொதுக்குரலினை பிரதிபலிக்கின்றது.

பெண்களின் உணர்வு மானசீக அந்தரங்க சிக்கல்கள் குறித்து பெண்ணியா அதிக கவிதைகளை எழுதியிருக்கின்றார்.

நேசம் அல்லது நெல்லி மரம்,மாதாராய் பிறந்திட,கல்,வெறுமை,உன் நினைவு,மழை நீர் கண்ணீர்,உதிரும் இலைக்கனவு,ஓர் வானமும் ஓர் அருவமும் போன்ற பல கவிதைகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

பெண்களின் பிரபஞ்சம் தனித்து சஞ்சாரம் செய்யும் சந்தடிகளற்ற மௌனத்துள் புதைந்து போயுள்ள தருணங்களில் கவிதைகள் மூலம் தன் உரிமைகளை நிலை நிறுத்தவும் அதற்கான போராட்டத்தை முன்னனெடுக்குவுமான சமரில் இறங்குவதுண்டு.

பெண்ணியாவும் இவ்வலயமைப்பில் இலகுவாக இணைந்து கொள்கின்றார்.அவர் எதிர் கொண்ட ஆண்களின் முரண்பட்ட முகங்களும்,அடக்குமுறைகளும் பெண்ணியாவின் குரலினிடை வெடித்து வந்திருக்கின்றது.

ஓரு கால கட்டத்தில் சுதந்திரமாக இயங்கும் பெண் கைவிலங்கிடப்பட்டவளாக முடக்கப்படுவதன் மூர்க்கத்தை எதிர்த்து பெண்ணியா ஓர்மத்துடன் குரல் கொடுத்திருக்கின்றார்.

யார் முன்னும்பணிதலின்றி 
 எனது உணர்வுகளோடும் அவாக்களோடும் 
எவ்வகை வாழ்வெனப்புரியாத இது குழப்பமிகு வாழ்வேதாயினும்
வாழ்வேன் ....    வாழ்வேன் ....   வாழ்வேன் .

என்ற சூளுரைத்தலில் பெண்ணியாவின் அஞ்சாமை துலங்கி நிற்கிறது.
பெண்களுக்கெதிரான வன்முறைகள், ஆணாதிக்க அடக்குமுறைகள், கருத்துத்திணிப்புக்கள், அவர்களின் சுயதீனத்திற்கான சவால்கள் அனைத்தும் ஏகத்தில் எல்லை கடந்த மொழி கடந்த இனம் கடந்த அடிப்படை அம்சங்களாகும்.

மிக இலகுவாக ஆனால் ஓர்மத்துடன் இந்த போரட்டத்தில் பெண்ணியாவின் கவிதைகளும்  இணைந்து கொண்டதற்கு மேற்குறித்த காரணிகளே இசைவு எனில் மிகையல்ல.

பெண்ணியா கவிதைகளை வெளியிட ஊடறு பெண்கள் அமைப்பு (சுவிஸ்) பின்புலமாக உதவியிருப்பதுடன் மூன்றாவது மனிதன் பதிப்பகம் அச்சிட்டுள்ளது.சிறந்த வடிவமைப்பு,நேர்த்தியான அச்சு,கண்கவர் கருத்தாழமிக்க அட்டைப்படம் என பார்த்துப்பார்த்து செய்திருக்கின்றார்கள்.

தற்போது எழுத்துக்கு விடுப்பு விட்டிருக்கும் பெண்ணியா இத்தொகுதி மூலம் மீண்டும் முழு வீச்சுடன் கவிதைக்குள் நுழைய வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...