Sunday 21 July 2013

பொத்துவில் பைசாலின் ஆயிரத்தோராவது வேதனையின் காலை

“கவிதை என்றால் என்னவொன்று என்னிடம் கேட்டால் அது என்னவென்று எனக்குத்தெரியாது. கவிதை என்றால் என்ன என்பதை என்னிடம் கேட்காவிட்டால் கவிதை என்ன என்பது எனக்குத்தெரியும் ”
'கால்ட்ரிஜ்'

கவிதை  ஓர் அற்புத அனுப உணர்வு.விழிகளுக்கு வசியப்படாத நுண் உணர்வுகளைக்கண்டடைந்து ஆனந்திக்கும் இயல்பு கவிதைக்கு மட்டுமே வலாயப்பட்டது.தனி மனித வாழ்வில் புதைந்திருக்கும் துயரங்களையும் சமூகத்தின் ஆற்றொனா வலிகளையும் மனதின் அடியாழத்தில் இறாஞ்சி விட்டு துடிக்க வைக்கும் கலை கவிதைக்கே உண்டெனில் மிகையல்ல.

கவிதையை அதன் வேகத்தில் விட்டு விட வேண்டும். மலை முகட்டிலிருந்து விழும் அருவியின் ஆர்ப்பரிப்பை அடக்கினால் பரவசத்திற்கு பதில் அது மரண பயத்தையே தரும்.
கவிதை மன முகட்டிலிருந்து தாண்டவமாடும் தருணங்களில் கவிஞனின் அவஸ்தை சொற்களுக்குள் அடங்கா.அவன் நரம்புகளின் புடைப்பும்,மன அவசமும் கட்டுக்கடங்காமல் திமிறி வெடிக்கின்றது.

முயங்குதலின் உச்சத்தில் கண்களில் பீறிடும் இன்ப அதிர்வின் பரவச ஒளியை மொழிக்குள் இறக்கி வைக்கும் சிறந்த கவிதையில்  கவிஞன் அடைகின்றான்.

அத்தகைய சௌந்தர்ய தருணங்கள் பைசாலுக்கு  இயல்பாகவே வாய்த்திருக்கின்றது.பைசாலின் கவிதைகளின் உச்சமும்,மண்டியும் மனதின் கோடியில் சோகத்தை தூவுகின்றன.துயரம் இழப்பு இன்பத்திலும் ஒரு மின்னலைப்போல் வெட்டிச்செல்லும் வலி என  கவிதை முழுக்க மௌனமான தேம்பல் நம்மை வந்து கவ்விக்கொள்கின்றது.

என் விரிப்பு ஓய்ந்து பூரிக்கிறது
இன்னுமென்ன சொல்ல
வயல் வரம்புக்குள்
கோரி கட்டியிருக்கிறது வாழ்வின் மணி. (ஒரு கோப்பை மண்டி)

என்ற அங்கலாய்ப்பிலும்,

கத்தரித்தோட்ட இலைகளில் காது வைத்து
வாப்பாவின் வியர்வைத்துளிகளின்
ஓசை கேட்கும்.
(முட்டைக்கோதுக்கிராமமும் நான் எனும் கோடையும்)

என்ற ஏக்கத்திலும் பைசாலின் தனித்துவம் கவனம் பெறுகின்றது .வியர்வைத்துளிகளின் ஓசையைக்கேட்கும் அளவிற்கு அவரின் புலன் விழித்திருக்கின்றது.

பாட்டாளி மக்களின் வியர்வைத்துளிகளின் ஓசை திரண்டெழுந்தபோது ஆளும் வர்க்கம் ஒரு புரட்சியை எதிர் கொண்டது.அது சர்வதிகாரத்திற்கும் நிலபிரபுத்துவ அடிமைத்தனத்திற்கும் எதிரான சாவுமணியாக வியர்வைத்துளிகள் சக்தியுள்ளவையாக இருந்தன.

வறுமைமையோடு போராடும் ஒரு தொழிலாழியின் வியர்வையின் இதயத்துடிப்பை கவிஞன் என்ற சக்தியினால் துல்லியமாக உணரவும் பகிரவும் முடிகிறது.

வறுமையைக்கூட அற்;புதமாகவும் எள்ளலாகவும் சொல்லும் வல்லமை பைசாலுக்கு கைகூடியிருக்கின்றது.

என் தேசத்திற்குள் நீ திரி
அங்கு சன்னலுமில்லை கதவுமில்லை.
என்கிறபோது கவிதையின் அதரத்தில் வறுமையாய் ஒரு சிரிப்பு முகிழ்ந்து பின் உதிர்கிறது.

பைசாலின் கவிதைகளின் இன்னுமொரு முக்கிய அம்சம் அவர் பிரயோகிக்கும் மொழி.

மிக அந்தரங்கமானதும் ஆனால் துலாம்பரமானதுமான பயங்கரவாதத்தின் எத்தனங்களை தனக்கேயுரிய இயல்பு மொழியில் பைசால் பதிவு செய்திருக்கின்றார்.

பின்பு
என்னை ஏதும் கேள்
வீட்டில் துப்பாக்கியிருக்கும் இடத்தைச்சொல்கிறேன்.
உன்னைக்கண்டதும் வாலாட்டும்
நாய்க்குட்டியிருக்குமிடத்தை சொல்கிறேன். (நடுக்கம்)

அந்தரங்க நட்புடன் பழகியவர்கள் கையில் துப்பாக்கியுடன் பரிச்சயமானவர்களையே அழித்த வரலாறு நம்முடையது.கரைபடிந்த அவ்வரலாற்றுப்பக்கங்களை நிறைந்த வலியோடு புரட்டிப்பார்த்திருக்கின்றார் பைசால்.

காதலுக்குப்பின் என் அடையாளம்,பற்பசை உறை,உப்பேறிய ஆன்மா,நிறங்களின் சிறகுகள் பறவைகள், பலி,போன்ற கவிதைகளில் வெளிப்படும் அழுத்தமான அரசியல் வெறுமையும் அதன் பின்னணியில் இழையோடும் துரோகமும் ,துயரமும் நம்மை முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்கின்றன.

மாடு கட்டச்சென்ற
என் ஊர் ஒன்பது சகோதரர்களை
அறுத்து பெரிய பள்ளிவாயலில் குவித்தார்கள்
கத்தியின் காலம் கத்தியின் காலம்!
(உப்பேறிய ஆன்மா)

பைசால் வேதனையுடன் கத்தியின் துப்பாக்கியின் துரோக காலத்தை உருப்போடுகின்றார்.

என் பத்தினியே ! நீயும் எரிந்திருக்கலாமே
சுhம்பல் மேட்டுக்கு
மகனையும் கூட்டிக்கொண்டு வந்திருப்பேன்
உன் சாம்பலில் கால் பட
கொடுப்பனவு இல்லையெங்களுக்கு  ( ஒருத்தி)

என்கிற போது அபகரிக்கப்பட்ட ஓர் அப்பாவித்தாயின் பிரிவின் ஆற்றாமையால் ஓப்பாரி இடுகின்றது பைசாலின் கவிதைகள்.
இத்தொகுதியில் மிகுதமான கவிதைகள் காதலின் திவ்யத்தையும்,அது கைகூடாத தருணங்களுக்கான ஏக்கத்தையும் சுட்டும்  கவிதைகளாகும்.

பைசால் தன் சம காலத்துக்கவிஞர்களை விட மொழியை இயல்பாக பிரயோகிக்க கற்றிருக்கின்றார்.

மருதாணிப்புள்ளிகள்
அமர்ந்திருக்கும் உன் கரங்களில்
ஈச்சம் பழம் ஏந்திவா
சுவைத்து விட்டு
பள்ளிவாசல் சென்று நான் தொழ ( ஈத் முபாறக் மியுசிக்கல் கார்ட்)

அன்றைய தினத்தில்
எந்தன் புது ஆடை மணத்ததில்லை
உன்னை விட,
எந்த மிட்டாயும் இனித்ததில்லை
உன் பார்வைகளை விட

என்கிற போது பாசத்தின் மீதான அபரித வெளிப்பாடு துலங்குகின்றது.

மௌனத்தை ஆவேசமாய் உடைக்கப்பிரயத்தனமெடுக்கின்றார்.பெண்னின் மௌனம் இலேசில் உடைபடும் கண்ணாடியல்ல என்கிறது அவர் கவிதை.


ஏன் உன் வாய்க்குள்
மௌனத்தை சுருட்டி வைத்திருக்கிறாய்

ஒரு பானை மௌனம் குடித்துப்பிறந்தவள்.

சாதாரண மொழிதான். எனினும் சில கவிதைகள்  கிழக்கு மண்ணிற்குறிய நாட்டாரியலை நினைவுபடுத்துகின்றது. கிழக்கு மண்ணிற்குறிய தனித்துவமான சொற்களை கையாளுவதன் மூலமாகவும் பைசால் கவிதையில் புதிய பாய்ச்சலை நிகழ்த்த முனைந்திருக்கின்றார்.

எனினும் ஏக தளத்தில் சில கவிதைகளை சொல்ல வருவதன் மூலமாக வாசிப்பின் சுவையை சில தருணங்களில் அறுபட வைக்கின்றார்.
கவிதைகளுக்கான பின் புலத்தில் கரிசனைகாட்டிய அளவிற்கு கவிதை வெளிப்பாட்டு முறையில் இன்னும் அக்கறை செலுத்த வேண்டும்.

90க்குபின் முகிழ்ந்த கிழக்கின் இளைய தலைமுறையினர் சோலைக்கிளியின் சாயலின்றி கவிதை எழுதுவதென்பது சாத்தியமற்றது என்பதை நிரூபிக்குமாற்போல் பைசாலின் சில கவிதைகளில் சோலைக்கிளியின் தாக்கம் இருக்கின்றது.

எனினும் பிற்காலத்தில் பைசால் எழுதிய கவிதைகளில் அவர் தனித்துவம்  தெரிகிறது.சுய பரிசோதனையாக தனித்துவமிக்கவிதைகளையும்  தந்திருக்கின்றார்.

நள்ளிரவில் சிறுவன் கொக்குகளை உலர்த்துகின்றான்,நடுக்கம்,இனிக்கும் இயற்கை,உப்பேறிய ஆன்மா, போன்ற கவிதைகளை இதற்கு உதாரணமாய் குறிப்பிடலாம்.

“இலக்கு என்பது எப்போதும் தொடுவானம் போல் கைகள் தொட முடியாத தொலைவில் தெரிகின்றது.ஆனால் கண்களுக்கு மிக நெருக்கமாக இருக்கின்றது.பெரும் கவிஞர்கள் இந்த இலக்கை தொட்டு தழுவியிருக்கின்றார்கள்.உச்சம் கண்டு கொண்டாடியிருக்கின்றார்கள்.”

என அனார் தொகுதியின் பிற்குறிப்பில் குறிப்பிடுவதற்கொப்ப ஓர் இலக்கை மையப்படுத்தி பைசாலின் கவிதைகள் முன்னேறுகின்றன. என்பது அவரின் பின் நாட்களிலான கவிதைகளின் கண் விடுத்தல் காட்டுகின்றது.

ஓட்டு மொத்த கவிதைகளிலும் தேங்கி நிற்கும் வலி,வேதனை,துயரத்தில் புதைந்துள்ள விசும்பல்,நம்மை ஒரு கணம் மௌனமாய் அதிர வைக்கின்றது.இதுதான் பைசால் என்ற வளரிளம் கவிஞனின் கவிதைகளின் பலம் எனில் மிகையல்ல.

11.10.06
இரவு 11.48

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...