Sunday 28 November 2010

வீடு போர்த்திய இருள்

வீடு மௌனத்துள் புதைந்திருந்தது. இருள் கவ்விய முற்றத்தில் இலைகளால் போர்த்திக்கொண்டு நின்ற மாமரம் அவ்வப்போது உயிருடன் இருக்கிறேன் என்பதை சலசலத்து உணர்த்திக்காட்டியது. “கொக்குகள் மலக்குள்” மூத்தம்மா சொல்வா. முதுகில் வௌளை கோடிட்ட கொக்குகள் மரக்கிளை முழுக்க நிரம்பி வழிந்தன. அடிக்கொரு தரம் இடம் மாற்றி தூங்க எத்தனிக்கும் இரைச்சல் வீட்டுக்குள் விழுந்தது.

வீட்டின் மௌனம் கிலி கொள்ளச்செய்தது. வியாபாரத்திற்குச் சென்றிருந்த வாப்பா செக்கலுக்குள் வீடடைந்து விட்டார். அவரும் பறவையைப்போல இந்த நாட்களில் வீடடைந்து தவித்து நிற்பது வலாயமாகிவிட்டது. வாப்புப்பா சாய்மணக்கதிரையில் சாவகாசமாக உடலைக் கிடத்தியிருந்தார். அவர் விழிகள் முகட்டில் குத்திட்டு நின்றன.

கதிரயைணீன் கீழ் படிக்கம். அவர் வெற்றிலை இடிக்கும் சின்ன உரலும் கூடவே இருந்தது. கழற்றிவிடப்பட்ட மூக்குக்கண்ணாடி நெஞ்சின்மேல் கிடந்தது. வாப்பா திண்ணைக்கும் வாசற் கதவிற்குமாய் பதற்றத்துடன் நடந்து கொண்டிருந்தார்.

இன்று வெளியிலிருந்து யார் வந்தாலும் கதவைத்திறப்பதில்லை என்பதில் எல்லோர் கவனமும் குவிந்திருந்தது. சமையலறையில் வேலையாய் இருந்த உம்மாவின் மேல் ரகசியமாய் விழிகளை மேயவிட்டபடி காத்திருந்தனர்.

இசாத் தொழுகைக்கான அதான் முடியுந்தருணம். மாமரத்தின் இலைகள் உக்கிரமாக அசைந்து மூர்க்கத்துடன் ஆடின. வீட்டின் வரைபடம் தாறுமாறாக கிழிபட்டுக்கொண்டிருந்தது. மரணத்தின் கொடிய கரங்கள் நீக்கமர எங்கும் வியாபித்திருக்கும் அச்சத்தில் உறைந்திருந்தனர்.

உம்மாவின் இயல்பு நெகிழத்தொடங்கியது. விழிகள் விறாந்தைக்கப்பால் ஊடுருவி எதையோ உற்றுப்பார்க்க ஆரம்பித்தன.

எங்கள் வீட்டின் முன் ஹாலுக்கு சுவர் இல்லை. பெண்கள் தூங்குவதும் இளைப்பாறுவதும் உள்ளறையில் எனில், ஆண்கள் வெளித்திண்னையில். முன் அறை கம்பிகளிலான கிராதியாக இருந்தது. முற்றத்தில் ஆட்களின் சிலமனை இங்கிருந்து இலகுவில் பார்த்து விட முடியும் .

உம்மாவின் பார்வை இரும்புக்கிராதிகளின் மேல் குத்திட்டு நின்றது.

” புள்ள கொஞ்சம் சுடு தண்ணி கொண்டு வா”

உம்மாவை உலுக்கி வாப்பா அனுப்பி வைத்தார். வாப்பாவை எரிச்சலுடன் பார்த்து விட்டு தண்ணீரை கொண்டு வந்து தொப்பென அவர் முன் வைத்தா. வாசலில் யாரோ நடமாடும் காலடி ஓசை. உம்மா கதவண்டை பாய்ந்து சென்றா.

வாப்பா சரோலென குறுக்கே பாய்ந்து “நான் பார்க்குறன் போ” என்றார். ஒரு திகில் நாடகத்தின் உச்சம் அரங்கேறும் தருணத்திற்கான வினாடிகள். வீடு பதற்றத்தில் தத்தளித்தது. எதிர்பார்த்த அந்த விபத்து எந்த ரூபத்திலும் நடப்பதற்கான சாத்தியங்கள் புனையப்பட்டுக் கொண்டிருந்தன.

உம்மா இரும்புக்கிராதிகளின் மேல் பார்வையைப்பதித்தபடி வரமாட்டேன் போ வென்று தலையை சிலுப்பிக்கொண்டிருந்தா. வாப்பா பழைய “எவரெடி”யின் ஒளியை ஜன்னலை நோக்கி பீச்சினார். யாருமே இல்லை. இருள் மட்டும் முற்றத்திற்கு அப்பால் நீண்டிருந்தது.

“யாரு புள்ள உன்ன கூப்பிர்ற?” வாப்பா உசுப்பியதில் உம்மா சுய நினைவிற்குள் விழுந்தா. உம்மாவின் அதரங்கள் உலர்ந்து வரண்டிருந்தன. முற்றத்தின் அமைதி குலைந்திற்று.

ஒரு பட்டியை அவிழ்த்து விட்டதைப்போல் மாடுகளின் மூச்சிரைப்பில் முற்றமே அவதிப்பட்டது. “அந்தா அவரு கூப்பிர்றாரு நான் போகனும்” உம்மா ஜன்னலின் பக்கம் பார்வையை வெறித்தபடி புலம்பத்தொடங்கினா. வாப்பாவுக்கு புரிந்து விட்டது. “அங்க யாருமில்ல நீ போய் உள்ள படு ” என்றார் காட்டமாக.

உம்மா உள்ளறைக்குள் தூங்கப்போனா. மண்னை அள்ளி வாசலில் யாரோ வீசிவிட்டுப்போனார்கள். வாப்பாவுக்கு தலைக்கு மேல் கோபம் எகிறியது. அவர் “உலவியம்” சொல்லித்திட்டியபடி டோர்ச்சின் ஒளியை பீச்சினார். யாருமே இல்லாத முற்றம் அச்சமூட்டியது. திங்கள் புதன் வௌளிகளில் அரங்கேறும் இந்த நாடகத்தின் உச்சத்திற்காக வீடு காத்திருந்தது.

மூன்று நாட்களிலும் திசையறியா காட்டில் சிக்கிக்கொண்டு தடுமாறும் சிறு பிள்ளைபோல் உம்மா பதகளித்துக்கொண்டிருப்பா. விழிகளில் தேங்கிக்கிடக்கும் கனிவு வௌளம் வற்றி, வெயில் உலர்த்திய ஏரியாக உம்மாவின் விழிகள் வெறிச்சென இருக்கும். பு+மரம் போல் மிருதுவான உம்மாவின் தேகம் இரும்புப்பாளமென கணத்துக்கிடக்கும். இந்நாட்களில் உம்மா மயங்கிச்சரிந்து விடுவா. கதவின் தாழ்ப்பாள் இறுக மூடப்படும் உம்மாவுக்கு பக்கத்தில் வாப்பா ஒரு மல் யுத்த வீரன் போல் காத்திருப்பார். அது ஒரு அமானு‘யமான கணங்கள். சற்றைக்கெல்லாம் கண் விழிக்கும் உம்மா கதவை நோக்கி தாவியோட எத்தனிப்பா. விழிகள் இரும்புக்கிராதிகளின் மேல் நிலை குத்தி நிற்கும். “என்ன வுடுடா என்ன வுடு” என்ற கர்ஜனையில் வீடே நடுங்கும். அப்படியொரு கடூரம். வாப்பா உம்மாவின் இடுப்பைச்சுற்றி வளைத்து சுவரில் கால்களை பதித்தபடி இறுக்கிப்பிடித்திருப்பார். திமிறிக்கொண்டிருக்கும் சிறுத்தையைப்போல் வாப்பாவின் பிடியில் உம்மா உறுமிக்கொண்டிருப்பா. ஆகிருதியான வாப்பால் மட்டுமே இதை அடக்கி பணிய வைக்க முடியும். வாப்பாவின் வியர்வை நெற்றியிலிருந்து தரையில் சிந்தும். அவரின் புஜங்கள் புடைத்து நரம்புகள் வெடித்து விடுமோ என்ற அச்சம் மேவும். அவ்வளவு பலத்தையும் உம்மா சோதித்துக்கொண்டிருப்பா. மாமரம் தலை விரி கோலத்துடன் சிலுசிலுவென ஆடும். முற்றத்தில் மிருகத்தின் மூர்க்கம் மிகுந்த பேரிரைச்சலுடன் காதில் அறையும். மயிர்கள் குத்திட்டு நிற்க அச்சம் கவ்விய நெஞ்சுடன் வாப்புப்பாவின் மேல் குவிந்திருக்கும் சின்னஞ்சிறுசுகளின் தலையை அவர் ஆதுரமாய் தடவி விட்டபடி உம்மாவையும் வாப்பாவையும் பாடத்துக்கொண்டிருப்பார்.

“நாசமத்த தூத்தேறி எங்கட சீதேவியப்படுத்துறபாடு. இவவுல இனி என்ன இரிக்கி, விட்டுப்போட்டு போவன்டா சைத்தான்” உம்மாவில் கண் பதித்து சலிப்புடன் கத்துவார்.

ஏன் வாப்புப்பா உம்மா இப்புடி உறுமுறா ?: பிள்ளைகளின் கேள்வி அந்தரத்தில் நிற்கும். வாப்புப்பா இரும்புக்கிராதிளை வெறித்தபடி பெரு மூச்செறிவார். உம்மாவின் சீற்றம் அரை மணி நேரத்திற்குள் அடங்கி விடும். மயக்கம் தெளிந்து கண் விழித்ததும் தண்ணி என்பா அடிக்குரலில்.

அது ஓரு கரடு முரடாண ஆணின் குரலை நிகர்த்தது. சிறு குவளைத்தண்ணீரைத்தானும் ஒரே மூச்சில் குடித்துவிட இயலாத உம்மா பெரிய அண்டாவில் வைக்கும் நீரை பசி கொண்மட மிருகம் போல் ஒரே மூச்சில் மடக்மடக்கென குடித்து முடிப்பா. தொப்பெண வெற்றுக்கோப்பையை தரையில் போட்ட மறு கணமே மயங்கிச்சரிவா. வாப்பா பிடியைத்தளர்த்தி பெரு மூச்செறிவார், கதவுகளைத்திறந்து விடுவார்.

சற்றைக்கெல்லாம் எதுவுமே நடவாதது போல் உம்மா எழுந்து கொண்டையை அள்ளி முடித்தபடி சமையலறைக்குள் நுழைவா. வாப்பா வாசற்படியில் குந்தியபடி வானத்தை அளந்து கொண்டிருப்பார்.

“ஏன்னடாம்பி இப்புடி எத்துன நாளக்கி மாயப்போறாய்.?

வாப்பாவின் முதுகில் வாப்புப்பாவின் கேள்வி விழுந்து சிதறும். பெரு மூச்சுடன் வாப்பாவின் குரல் உடைந்து சிதறும். “நான் என்ன செய்யிற வாப்பா, இது காட்டேறியாம் காட்டுல கொண்டு போய் ஏற்றிப்போட்டுத்தான் விடுமாம்”.

சாதுவான உம்மா எல்லோரையும் சாப்பிட அழைப்பா. அந்தக்குரலில்தான் எத்துனை பரிவும் குழைவும்.

இன்று உம்மாவை கதவண்டை அண்டவிடுவதில்லை என்பதில் வீடு உடன்பட்டிருந்தது, திண்ணையின் பிரதான வாயிலில் தலை வைத்தபடி வாப்பா ஒருக்களித்து படுத்திருந்தார்.

வாசற்கதவில் ஓங்கி அறையப்பட்டது வாப்பா திடுக்கிட்டு ஆரது என்றார்.

“நான்தான் இளய மாமி”

“ஓய் வாரன்” என்ற படி குரல் வந்த திக்கில் உம்மா பாய்ந்து வந்தா. வாப்பா ஒரு சாகசம் நிகழ்த்துபவரைப்போல் குறுக்கே பாய்ந்து சென்று கதவின் தாழ்ப்பாளில் கை பதித்து இறுகப்பற்றியபடி உம்மாவை உக்கிரமாகப் பார்த்தார்.

குப்பி லாம்பின் வெளிச்சத்தில் மாமி முற்றத்தில் நின்றிருந்தா. வௌளைப்பிடவையில் மாமியின் சாந்த சொரூபம் ஒளிப்பிழம்பாய் மின்னியது.

“என்ன மாமி இந்த நேரத்துல?” வாப்பா கதவைத்திறக்காமலேயே கேட்டார். “அவள் மூத்தவள்ர புள்ளக்கு சரியான வகுத்து வலி, புழுவப்போல துடிக்காள், கொஞ்சம் ஓமவட்டரு இருந்தா தாங்களன்”

“எங்க அந்தப்புள்ள? என்றா உம்மாவை நினைத்தபடி.

“அவ அந்தா உள்ளுக்க படுக்கா, நில்லுங்க மாமி தாரன்” என்றவர் ஓமத்திராவத்தை தேடியலைந்தார். மாமி முற்றத்தில் ஏகமாய் நின்றா. குப்பி லாம்பின் ஒளி வெளிச்சத்தில் மாமியின் முகம் பிளந்த வௌளரிப்பழம் போல் பளீரெனத்தெரிந்தது.

வாப்பா அடுக்களைக்குள் லாம்புடன் அலைந்தார். அங்குமிங்கும் சாமான்கள் ஒழுங்கின்றி சிதறிக்கிடந்தன. இன்றைய நாளின் பதற்றம் போல் சிம்னி விளக்கின் திரி முனை காற்றின் தாளத்திற்கு சதா ஆடிக்கொண்டிருந்தது. அடுக்களைக்குள் வைத்த சாமான்களைத்தேட உம்மாதான் வர வேண்டும். வாப்பா மருந்தை தேடிக்கொண்டே உம்மாவின் அறை நோக்கி குரல் வைத்ததார்.

சாப்பிட்டவுடன் சாய்மணக்கதிரையில் உடலைக்கிடத்திய வாப்புப்பாவின் குறட்டை ஒலி வீட்டின் மவுனத்தைக்கலைத்தது. அவர் காலடியில் தம்பியும் குட்டித்தங்கையும் குப்புறக்கிடந்து தூங்கிவிட்டிருந்தனர். வாப்பாவின் சலனம் மட்டும் அபூர்வ நிழலாய் ஆடித்திரிந்தது.

வாப்பாவின் குரலுக்கு உம்மா வரவேயில்லை. கை லாம்புடன் வாப்பா உம்மாவின் அறைக்குள் நுழைந்தார். வாப்பா பதகளிப்புடன் அடுத்த அறைக்குள் நுழைந்தார். வாப்பாவின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியா சிம்னி விளக்கின் இளஞ்சுடர் அணையப்போகிறேன் என வேறு அச்சுறுத்தியது.

“கொஞ்சம் நில்லுங்க மாமி” என்றவர் வாசலைப்பர்த்தார். அகலத்திறந்த கதவின் வழி முற்றம் இருளுக்குள் உறைந்திருந்தது.

05.10.2009
http://kaalammagazine.wordpress.com/2010/03/27/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D/

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...