Saturday 14 November 2015

மழை

   நெடுநாளாய் மழை பெய்து கொண்டிருக்கின்றது.மழை எப்போதும் என் உகப்புக்குரியது,வியப்பிலாழ்த்துவது.வீட்டின்  ஜன்னலோரம் அமர்ந்தபடி மழையின் தூரல்களை வருடிக்கொண்டிருக்கின்றேன்.இந்த மழை நாள் மட்டுமே வீட்டில் என்னை கட்டிப்போடும்.பிள்ளைகளுடன் விளையாடவும்,பழைய புத்தகங்களை கிளறவும்.எனது படிப்பறையை ஒழுங்குபடுத்தவும் கொஞ்ச நேரம் தொலைக்காட்சிப்பார்த்து, ரசிக்கவும் மணிக்கணக்காக வீட்டைச்சூழ மலர்ந்திருக்கும் மலர்களை வருடியபடி நடக்கவுமான அவகாசத்தினை மழை எனக்கு தருகிறது.
மழைக்காலம் எழுதுவதற்குறிய உந்துதல் கிளறும் காலம்.அனல் காலத்தின் நசநசப்புக்கிடையில் எழுத்தும் உன்னத மனமும் கருகிப்போகும்.அழகின் வாத்சல்யங்களையும்,அதிசயங்களின் அபிநயங்களையும் ஆரோகணிக்கும் இந்த மழைக்காலத்தின் முன் ஒரு குழந்தையாகிப்போகின்றேன்.
பொடுபொடுத்துப் பெய்யும் மழை மேலும் காதலை கிளறச்செய்யும். கிளர்ச்சிகளின் மாயங்கள் முடிச்சவிழ்க்கப்படமால் என்னை தாப்புக்காட்டும்.
காமத்தின் கிளைகள் துளிர்த்துப்பசளிக்கும் வண்ணங்களையும் மழைதான் தாளித்துக்கொட்டும்
எத்துனை தாளத்துடன் மழை  இந்த  மண்னை நனைக்கின்றது. மெல்லிய தூரலில் சைக்கிளில் செல்வது எனகுப்பிடித்தமானது.நீர்த்திவளைகள் நெஞ்சிலும் முகத்திலும் அடிக்கும் அழகில் சொக்கிப்போவேன்.
மழை நாட்களில் குளத்தின் கரையில் அமர்ந்து கொண்டு குளத்தினை ஊடுறுவிப்பார்த்திருக்கின்றேன்.
குளத்தின் மையத்தில் விழும் மழைத்துளியின் வீச்சம்தான் எத்துனை ஆரவாரமாய் இருக்கும்.மழை நாளில் காடுகளுக்குள் நின்றிருக்கன்றீர்களா அது ஒரு ஆனந்த உலகம்.வனத்தின் இடுக்குகளில் பட்டுத்தெறிக்கும் மழையின் உக்கிரத்தில் ஆகாயத்தின் ஜலக்கதவுகளின் ஊடே மழை ஆக்ரோசமாய் கொட்டும். 

திடுதிடுவென காடே அதிரும்.குரங்குகள் கொடுவிக்கொண்டு அடர் கிளைகளுக்குள் பதுங்கிக்கிடக்கும்.மேய்ச்சலுக்கு வந்த மாடுகளும் வாலைச்சுருட்டி பிருஷ்டத்துக்குள் சொருகிக்கொண்டு  அசைபோட்டபடி அப்படியே நிற்கும்.இயங்கும் அத்தனை வஸ்த்துக்களையும் அதனதன் இடத்தில் நிலைத்து நிற்கச்செய்யும் மாய  மந்திரம் மழை.

மழை அழிக்கவும் ஆக்கவுமான திறவுகோளை காவிக்கொண்டு இந்த மண்ணிற்கு வருகின்றது. விருப்பமற்றவர்களை மண்ணுக்குள் இழுத்துக்கொள்கின்றது. வீடுகளுக்குள் அழைக்காமல் வரும் விருந்தாளியாய் நுழைந்து துவம்சம் செய்கின்றது. கட்டுக்கடங்காமல் அணைகளை உடைத்து குதித்துப் பாய்ந்து வெறித்தனமாய் எல்லேரையும் தாக்கி அழிக்கின்றது.

வயல்நிலங்கள் குடியிருப்புக்கள் மரம் செடிகள் குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என சகட்டுமேனிக்கு மூா்க்கத்துடன் ஏப்பமிட்டு தன்பாட்டில் போய் கடலில் தஞ்சம் புகுந்து கொள்கின்றது.

என்னைக்கிளர்ச்சியு!ட்டிய மழை ஒரு கோழை. எல்லாவற்றையும் அழி்த்து விட்டு கடலில் போய் பதுங்கிக்கொள்கின்றது.பிரித்தெடுத்து தண்டிக்க முடியாத பலசாலியிடம் தன்னை சங்கமாக்கிக்கொண்டு ஆணவமாய் சிரித்துக்கொண்டு கரையை முட்டிவிட்டுச்செல்கையில் மழையின் மீது சினம் வருகின்றது.
தொண்டர்களை ஏவிவிட்டு எதிராளியை தாக்கும் சொரணையற்ற அரசியல்வாதியைப்போல் இந்த மழை தராதரம் பார்க்காமல் எதுவும் நடக்கவில்லை என்பது போல் மீண்டும் மண்ணில் விழுகிற போது மனம் குதூகளிப்பதை என்னவென்று சொல்ல .?

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...